ஞாயிறு, 27 டிசம்பர், 2015

பதிவுகளும் பின்னூட்டங்களும்.

பதிவுகளுக்கு யார் பின்னூட்டம் போடுகிறார்கள்? உங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள், வேண்டியவர்கள், அல்லது நீங்கள் பின்னூட்டம் போட்டிருக்கும் பதிவர்க்ள, இப்படி. இவை தவிர பின்னூட்டங்கள் அதிகமாக எந்தப் பதிவுகளுக்கு வருகிறது என்று என் பதிவுகளை வைத்து சிந்தித்துப் பார்த்தேன்.

ஒரு வித்தியாசமான கருத்து அல்லது பலரும் பல வகையான கருத்துகள் வைத்திருக்கும் ஒரு பிரச்சினை, இப்படிப்பட்ட பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் நிறைய வருகின்றன. அதில் பல வசை பாடுகின்றனவாக இருக்கும். அப்படிப்பட்ட வசைகளைக் கேட்க விரும்பாதவர்கள் அப்படிப்பட்ட பதிவுகள் எழுத மாட்டார்கள். எந்த விதமான கருத்து வேறுபாடுகளும் வரமுடியாத பதிவுகளாக எழுதுவார்கள்.

எனக்கு அப்படிப்பட்ட உப்புச் சப்பு இல்லாத பதிவுகள் எழுதுவதில் அவ்வளவு விருப்பமில்லை. பதிவுகள் காரசாரமாக இருக்கவேண்டும். பலருடைய சிந்தனைகளைத் தூண்டி விடவேண்டும். மாற்றுக்கருத்துகளும் வசைகளும் வரத்தான் செய்யும். அவைகளை நீங்கள் எப்படிக் கையாளுகிறீர்கள் என்பதில்தான் உங்கள் தனித்துவம் இருக்கிறது.

இந்த ஆள் இப்படித்தான் வம்பில் மாட்டிக்கொள்வார் என்று பலரும் சொல்லலாம். சண்டை வேண்டாம் என்று சொல்லலாம். ஆனால் ஆழமான விவாதம் செய்ய யாரும் முன் வருவதில்லை. இப்போது வரும் பதிவுகளில் பெரும்பாலும் அப்படித்தான் வருகின்றன. நிஜவாழ்க்கையில் இருக்கும் அக்கப்போர்களே போதும், பதிவுகளில் வேறு அக்கப்போர் எதற்கு என்று பல பதிவர்கள் பதிவுலகை விட்டே போய்விட்டார்கள். இருக்கும் கொஞ்ச நஞ்சம் பதிவர்களும் ஆன்மீகப் பதிவுகள், சமையல் குறிப்புகள், கை வைத்தியம், கணினி பராமரிப்பு இப்படி பதிவுகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படி நான் எழுதக் காரணம் இன்று ஒருவர் என் பழைய பதிவிற்கு பின்னூட்டம் போட்டிருந்தார். எனக்கு அந்தப் பதிவே மறந்து போயிருந்தது. தலைப்பைப் பார்த்ததும் யாரோ எழுதிய பதிவு போல என்று நினைத்தேன் கடைசியில் பார்த்தால் அது நான் எழுதிய பதிவு.

அதைப்போய் படித்தேன். அந்த பதிவின் தலைப்பு -

காதலர் தினமும், தொடரும் அமில வீச்சுகளும்.

அந்தப் பதிவு மிகவும் காரசாரமாய் இருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் சென்று படித்துப் பாருங்கள். அதில் பதிவை விட பின்னூட்டங்கள்தான் காரம் கொண்டவை. அது மாதிரி விஷயங்கள் சமீப காலமாகக் கிடைப்பதில்லை.
இனிமேல் பதிவுகள் எழுதினால் அந்த மாதிரிதான் எழுதவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.