திங்கள், 4 ஜனவரி, 2016

80 வயதிலும் இளமை !

                                         Image result for tnau campus
நான் விவசாயக் கல்லூரியில் சேர்ந்து படித்து பட்டம் பெற்ற வருடம் 1956. ஜூன் மாதம் பரீட்சைகள் முடிந்தன. ஜூலை மாதம் முடிவுகள் வந்தன. முடிவுகள் தெரிந்த பதினைந்து நாளில் கவர்ன்மென்ட் வேலைக்கான உத்திரவு வந்து விட்டது. ஆகஸ்ட் மாதம் வேலைக்கு சேர்ந்தேன். விவசாந ஆராய்ச்சிப் பண்ணையில் ஆய்வு உதவியாளன் என்னும் உத்தியோகம்.

என்ன பெரிய உத்தியோகம்? நான் முதல் மாதம் வாங்கிய சம்பளத்தைச் சொன்னால் என் பேரன் என்னை கேவலமாகப் பார்க்கிறான். ரூ.100 சம்பளம். ரூ. 24 பஞ்சப்படி. மொத்தம் 124 ரூபாய்.

அப்போது கோவையில் நூற்பாலைகளில் பணி புரிந்தவர்கள் மாதம் 150 ரூபாய் சம்பளம் பெற்றார்கள். வருடத்தில் ஆறு மாத போனஸ். இத்தனைக்கும் அவர்களில் பெரும்பாலானோர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். நான் 16 வருடம் படித்து பட்டம் வாங்கி, அவர்களைவிட குறைவான சம்பளம் வாங்குவது கேவலமாகப் பட்டது. பேசாமல் அந்த வேலைக்கே போய்விடலாமா என்று கூட ஒரு கட்டத்தில் யோசித்தேன்.

எப்படியோ விதி வசத்தால் அதே கவர்ன்மென்ட் உத்தியாகத்தில் தொடர்ந்து இருந்து படிப்படியாக உயர்வுகள் பெற்று ஒரு பேராசிரியராகப் பதவி ஓய்வு பெற்றேன். இன்று கணிசமான ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு பதிவுலகில் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறேன்.

இப்போது நான் சொல்ல வந்த விஷயம் வேறு. நான் விவசாயப் பட்டப்படிப்பில் சேர்ந்த போது, என் வகுப்பில் மொத்தம் 96 பேர் சேர்ந்தோம். மூன்று வருடங்கள் கழித்து 82 பேர் படிப்பு முடிந்து வெளியில் வந்தோம். இதில் சுமார் 45 பேர்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் கேரளா, கர்னாடகத்தைச் சேர்ந்தவர்கள். அப்போது அந்த இரு மாநிலங்களிலும் விவசாயக்கல்லூரிகள் இல்லை.

இந்த 86 பேர்களும் பல வேலைகளில் பணி புரிந்து ஓய்வு பெற்றிருந்தனர். ஓரிருவர் மட்டும் சொந்தத் தொழிலில் இருந்தார்கள். இப்படி இருக்கையில் கடந்த 2006 ம் ஆண்டு, எங்களில் ஒருவருக்கு நாம் வகுப்புத்தோழர்கள் எல்லாம் ஒன்று கூடி அளவளாவினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் வந்தது. அவர் நான் உட்பட சில நண்பர்களைக் கலந்து ஆலோசித்தார். நாங்களும் இந்தக் கருத்துக்கு ஒப்புதல் தரவே, அவர் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தார். பெருமுயற்சிக்குப் பின் ஏறக்குறைய 60 நபர்களைத் தேடிக்கண்டு பிடித்து விட்டார்.

மீதி நபர்கள் மேல் லோகத்தில் சௌக்கியமாக இருக்கிறார்கள் என்று தெரிந்தது. இந்த 60 பேருக்கும் செய்தி அனுப்பி, விழா ஏற்பாடு செய்து 2006 ம் ஆண்டில் "பொன் விழா" கொண்டாடினோம். 50 பேர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தார்கள்.



இந்த வருடம், அதாவது 2016 ம் வருடம் நாங்கள் பட்டம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆகவே இந்த ஆண்டில் வைர விழா கொண்டாடலாம் என்று முடிவு செய்தோம். சென்னை நண்பர் எங்கள் வகுப்புத் தோழர்களின் கணக்கை எடுத்தார். பொன் விழாவின்போது இருந்தவர்களில் இன்னும் 20 பேர் காணவில்லை. சரி இருக்கும் 40 பேரை வைத்து விழா எடுப்போம் என்றால் அதில் பாதிப்பேர் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்ற நிலையில் இருக்கிறார்கள்.

எப்படியோ ஒரு 20 பேரைத் தேத்தியிருக்கிறோம். விழா வருகிற பெப்ரவரி மாதம் 27 ம் தேதி கோயமுத்தூர் விவசாயப் பல்கலை வளாகத்தில் நடைபெறுகிறது. ஏறக்குறைய எல்லோருக்கும் 80 வயதிற்கு மேல் ஆகிறது. அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்கும் ஆவல் வளர்கிறது.

விழா முடிந்தவுடன் விபரமான கட்டுரை வெளியாகும்.