சனி, 30 ஜனவரி, 2016

இணையமும் புத்தகங்களும்

                                  இன்று எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அநேகமாக உங்களில் பலருக்கும் இந்த மின்னஞ்சல் வந்திருக்கலாம்.


இந்தக் கட்டுரையை தமிழாக்கம் செய்து த.சீனிவாசன் tshrinivasan@gmail.com என்பவர் மின்னஞ்சலாக அனுப்பியிருக்கிறார்.

இந்தக் கட்டுரை ஒரு பெரிய உண்மையை நமக்கு உணர்த்துகிறது. அதில் 

கூறப்பட்டுள்ளவை அனைத்தும் நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.

நான் சிறுவயதில் ஏறக்குறைய என்னுடைய பத்தாவது வயதில் விகடனுக்கு அறிமுகமானேன். பக்கத்து வீட்டில் விகடன் வாங்கினார்கள். அதை ஓசியில் வாங்கிப் படிப்பேன். அப்போது இரண்டாம் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அதைப் பற்றிய செய்திகள் விகடனில் வந்து கொண்டிருந்தன. 

விகடனை ஒரு உச்சிக்குடுமி முகமாகவும் அந்த யுத்தச் செய்திகளைத் தரும் நிருபரை ஒரு குரங்காகவும் சித்தரித்து படங்கள் போடுவார்கள். இன்றும் அந்த உச்சிக்குடுமி படம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

எனக்குப் பதினைந்து வயதாக இருக்கும்போதுதான் குமுதம் பத்திரிக்கை வெளி வர ஆரம்பித்தது. அந்தப் பத்திரிக்கையின் கோவை ஏஜன்ட் எங்கள் வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ தூரத்தில் இருந்தார். குமுதம் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டவுடன் கமுதம் வரும் நாளில் அந்த ஏஜன்ட்டின் வீட்டிற்கே காலையில் ஆறரை மணிக்குப் போய்விடுவேன். குமுதம் பார்சல் வந்து பிரித்தவுடன் முதல் பிரதியை நான் வாங்கி படித்துக்கொண்டே வீட்டிற்கு வருவேன். வீட்டிற்கு வருவதற்குள் ஏறக்குறைய முழுக் குமுதத்தையும் படித்து விடுவேன்.


அப்போது அவ்வளவு ஆர்வத்துடன் படித்த விகடன் எப்போது உருமாறியதோ அப்போதே அதில் ஆர்வம் போய்விட்டது. குமுத த்தின் பாணியும் மாறி விட்டது. அது தவிர இப்போது வரும் வாரப் பத்திரிக்கைகளில் சினிமா செய்தி தவிர வேறு எதையும் காணோம். இப்போது வாரப் பத்திரிக்கைகளைப் பார்த்தால் எடுத்துப் புரட்டிப் பார்க்கக் கூடத் தோன்றுவதில்லை.

கொஞ்ச நாளில் நாவல்களைப் படிக்க ஆரம்பித்தேன். வடுவூர் துரைசாமி அய்யங்கார் எழுதிய/மொழிபெயர்த்த துப்பறியும் நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்துப்போயின. ஜே.ஆர். ரங்கராஜு என்வரும் அப்போது துப்பறியும் நாவல்கள் எழுதிக்கொண்டிருந்தார். இந்த இரண்டு பேரின் நாவல்களையும் ஏறக்குறைய எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். அந்தக் காலத்தில் என் வாசிப்பின் வேகம் மணிக்கு நூறு பக்கம். ஒரு நாவலைப் படிக்க ஆரம்பித்தால் முடிக்காமல் அதை கீழே வைக்க மாட்டேன். பள்ளியில் டெஸ்க்குக்கு கீழே வைத்துப் படித்ததும் உண்டு. 


பிற்காலத்தில் ஆங்கில நாவல்களையும் அதே ஆர்வத்துடன் படிப்பேன். வேலையில் சேர்ந்து அதில் மூழ்கிய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் படிக்கும் வழக்கம் குறைந்து போனது. அதுவும் இந்த இணையம் வந்த பிறகு புத்தகம் என்று ஒன்று இருப்பதையே மறந்து போனோம். நான் மேலே குறிப்பிட்டுள்ள கட்டுரையில் சொல்லப்பட்ட அனைத்தும் உண்மையே.

ஆனால் சமீப காலமாக இணையத்தில் மீதுள்ள ஆர்வம் குறைந்துள்ளது. பதிவு எழுதுவதற்கு கற்பனை ஓடமாட்டேனென்கிறது. ஆனால் புத்தகம் படிக்க ஆர்வம் வந்துள்ளது. இணையத்தில் கோடிக்கணக்கான புத்தகங்கள் கிடைக்கின்றன. அவைகளை தரவிறக்கி ஒவ்வொன்றாகப் படித்துக்கொண்டு வருகிறேன்.

அதே போல் நல்ல பாட்டுகளையும் தரவிறக்கி வைத்துக்கொண்டு கேட்கிறேன். சமீபத்திய ஆங்கிலத் துப்பறியும் நாவல்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. எனக்கு அன்பளிப்பாக க் கிடைத்த "டேப்" பில் புத்தகங்களை சேமித்து வைத்துக் கொண்டு படிக்க வசதியாக இருக்கிறது. அதுவும் அமேசான் காரன் இலவசமாகவும் மிக சலீசான விலையிலும் நிறைய புத்தகங்கள் கொடுக்கிறான். எல்லாவற்றையும் வாங்கி வைத்திருக்கிறேன். படித்துக்கொண்டும் வருகிறேன்.

கொஞ்சம் கொஞ்சமாக பதிவுகள் எழுதுவதில் ஆர்வம் குறைந்து கொண்டு வருகிறது. காரணம் பதிவுலகம் நலிந்து விட்டது. நல்ல பதிவுகள் எழுதுபவர்களைக் காண முடிவதில்லை. போட்டி இருந்தால்தானே எதுவும் சோபிக்கும்.