புதன், 15 நவம்பர், 2017

23. புத்தகம் படிக்கும்போது கண் சொருகுதல்


 இதே போல புத்தகம் படிக்க முடியாமல் கண்கள் கனமாவதற்கும் ஒரு விளக்கம் கொடுத்தால் அந்தக் குற்ற உணர்வும் நீங்கும்.

நண்பர் ஸ்ரீராம் அவர்கள் புத்தகம் படிக்கும் போது கண்கள் கனமாவது அதாவது கண்கள் சொருகுவது பற்றி ஒரு விளக்கம் கேட்டிருக்கிறார். கேளுங்கள், கொடுக்கப்படும் என்பதுதானே நம் கொள்கை. அதன்படி இதோ விளக்கங்கள்.

நம் உடல் கோடிக்கணக்கான உயிரணுக்களினால் ஆக்கப்பட்டது என்று அறிந்திருப்பீர்கள். இந்த உயிரணுக்களின் ஆயுள்காலம் மூன்று வாரங்கள்தான். ஆனால் எல்லா உயிரணுக்களும் இவ்வாறு மூன்று வாரத்தில் அழிந்து போவதில்லை. சில மாதக்கணக்கிலும் அழியாமல் இருக்கும். குறிப்பாக மூளையின் உயிரணுக்கள் ஒருவனின் ஆயுட்காலம் முழுவதும் அழிவதில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

எது எப்படிப் போனாலும் நம் உடலில் உள்ள உயிரணுக்களினால்தான் நாம் வாழ்கிறோம். அவைகள் செயல்படுவதினால்தான் நாம் உயிருடன் இருக்கிறோம். ஆனாலும் இந்த உயிரணுக்கள் நாள்பட நாள்பட தங்கள் செயல் திறனை இழக்கின்றன. நாம் இளமையில் ஐந்து நிமிடத்தில் செய்த வேலையை வயதானபின் செய்ய ஒரு மணி நேரம் தேவைப் படுகிறது.

முக்கியமாக இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் வசிப்பவர்களுக்கு இந்த மாற்றம் சீக்கிரமே ஏற்பட்டு விடுகிறது. குளிர் பிரதேச நாடுகளில் இருப்பவர்களுக்கு இந்த மாற்றம் மெதுவாகவே நிகழ்கிறது.

வயதானவர்கள் இந்த மாறுதலை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. 80 வயதான ஒருவர் நான் 80 வயது வாலிபன் என்று மார் தட்டிச் சொல்லிக் கொள்கிறார். இருக்கலாம். மனதளவில் அவர் வாலிபனாகவே இருந்து கொள்ளட்டும். ஆனால் அவரது உடல் அவர் மனதுடன் ஒத்துழைக்காது.

எந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தாலும் சில மணித்துளிகளிலேயே உடல் ஆயாசமடைந்து விடும். அப்படியே புத்தகம் படிப்பதுவும். புத்தகம் படிப்பது என்பது மூளை செய்யும் ஒரு வேலையே. வயதானபின் மூளையும் சீக்கிரத்தில் சோர்வடைந்து விடும். அப்படி மூளை சோர்வடைந்தால் முதலில் கொட்டாவி வரும். அடுத்ததாக கண்கள் தானாக மூடிக்கொள்ளும். தூக்கம் தன்னையறியாமல் வரும்.

இது எல்லாம் வயதாவதின் விளைவுகள் என்று அறிந்து மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டியதுதான். அதை விட்டு விட்டு பழைய நினைப்பில் முடியாத வேலைகளுக்குத் தலைப்படாதீர்கள்.

                                              Image result for வயதானவர்கள்