சனி, 28 பிப்ரவரி, 2009

நாட்டு நடப்பு – 1

உலகத்தில் எல்லோரும் தனக்கு எல்லாம் தெரியும்; தனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணத்தினால் அடுத்தவர் சொல்லும் நல்லதைக் கேட்க விருப்பப் படுவதில்லை. ஆனால் யாராவது துர்புத்தி சொன்னால் அதை மட்டும் கேட்டுக்கொள்வார்கள். இது உலக வழக்கம்.
தனக்குத் தெரிந்தது ஒன்றுமில்லை என்ற தெளிவு 75 வயதுக்கு மேல்தான் வருகிறது. ஆனால் அப்போது இந்த அறிவு வருவதினால் அவனுக்கு பெரிதாக நன்மை ஒன்றும் விளையப்போவதில்லை. ஆனால் ஒரு நன்மை உண்டு. முன்னால் கேட்பவர்கள் கேட்காதவர்கள் எல்லோருக்கும் இலவச அறிவுரை கூறி வந்ததை இப்போது நிறுத்திக்கொள்ளலாம். அப்படி நிறுத்துபவர்கள் புத்திசாலிகள். பெரும்பாலானவர்கள் அவ்வாறு நிறுத்துவதில்லை. அவர்கள்தான் தங்கள் குடும்பத்தினரால் ஒதுக்கப்படுகிறார்கள்.
வயதானால் அவர்களை அறியாமலேயே அதிகமாகப்பேச வேண்டும் என்கிற அவா தங்களை அறியாமல் வந்து விடுகிறது. இதை கவனமாக இருந்து தவிர்க்க வேண்டும். இது மிக மிக முக்கியமானது. ஒவ்வொரு வயதானவரும் இந்த எச்சரிக்கையை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். ....தொடரும்....

வியாழன், 26 பிப்ரவரி, 2009

சு.சாமியும் வக்கீல்களும்

சுப்பிரமணியசாமி என்கிற கோமாளி எதற்காக உயர்நீதி மன்றத்திற்கு வந்தார் என்று ஆராய்ந்தால் பல காரணங்கள் கூறலாம். சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் அரசு ஆணையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால் அதற்கு ஆதரவு கொடுக்கட்டும். ஏன் தன்னையும் ஒரு கட்சிக்காரனாக சேர்த்துக்கொள்ள விண்ணப்பம் போட்டு அதற்காக நேரில் ஆஜராக வேண்டும். நீ ஒரு பார்ப்பானாக இருப்பதினால் தானே இதற்கு தலைப்பட்டிருக்கிறாய்?
ஜனநாயக நாட்டில் இதற்கு கூட உரிமை இல்லையா என்று கேட்கலாம். உங்கள் ஜனநாயக உரிமையை யாரும் மறுக்கவில்லை. ஆனால் உயர் நீதிமன்றத்தில் நின்று கொண்டு பார்ப்பனரல்லாதாரை திட்டுவதற்கு இவருக்கு யார் உரிமை கொடுத்தார்கள்?
பிறகு குய்யோ முறையோ என்று கத்துவது எதற்காக? இதைப்பற்றிய ஒரு வலைப்பதிவில் சில பார்ப்பனர்கள் பார்ப்பனர்களல்லாதாரை இஷ்டத்திற்கும் திட்டியிருக்- கிறார்கள். இந்த சமாசாரத்தை விரிவாகப்பேசி பட்டி மன்றம் நடத்த எனக்கு ஆசையில்லை. ஆனால் ஏதோ இவர்களுக்குத்தான் கணக்கு தியரமும் கெமிஸ்ட்ரி பார்முலாவும் வரும் என்று சொல்லியிருப்பதுதான் வேடிக்கை. போன நூற்றாண்டில் வேண்டுமானால் அது உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று பார்பானைத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு பார்ப்பனல்லா -தவரும் இருக்கிறார்கள்.
ஆனால் இந்த வலைப்பதிவில் கூறியிருப்பதை வைத்து பார்க்கும்போது என்ன தெரிகிறதென்றால், இந்த பார்ப்பனர்கள் இன்னும் அவர்களுடைய அடிப்படை குணங்களை மாற்றிக்கொள்ளவில்லை என்பதுதான். ஒரு பெரியார் இல்லையென்றால் நம்மை எந்த அளவு கீழே தள்ளியிருப்பார்கள் என்று நாம் யோசிக்க வேண்டும்.
தொடரும்.....

புதன், 25 பிப்ரவரி, 2009

பொது சேவை-3

இந்திய தேசீய குணங்களில் ஒன்று செம்மறியாட்டு மனப்பான்மை. கூட்டமாக இருக்கும்போது தலைவன் என்ன சொன்னாலும் அதைப்பற்றி சிறிதும் சிந்தியாது உடனே காரியத்தில் இறங்குவார்கள். நூறு பேர் சேர்ந்து ஒரு கோஷம் போட்டால் இவனும் அவர்களுடன் சேர்ந்து கோஷம் போடுவான். என்ன, ஏது என்று கொஞ்சம் கூட யோசிக்க மாட்டான். ஆஹா நம் தலைவர் சொல்லிவிட்டார், அந்த காரியத்தை உடனே செய். அவ்வளவுதான்.அதிலும் இன, மதம், மொழி, ஜாதி விவகாரம் என்று வந்து விட்டால் அவ்வளவுதான், வேறு எதையும் பார்க்கமாட்டான். தலைவன் என்ன சொல்லுகிறானோ அதுதான் வேதவாக்கு. வெட்டு என்றால் வெட்டுவான், அடி என்றால் அடிப்பான், கொல் என்றால் கொலவான். அதன் பின் விளைவுகளைப் பற்றி கொஞ்சம்கூட யோசிக்க மாட்டான். தலைவன் தன் ஆபீஸ் ரூமின் பாதுகாப்பில் உட்கார்ந்து கொண்டு மக்களை பகடைக்காய்களாக நகர்த்திக்கொண்டு இருப்பான்.அரசியல் கட்சித்தலைவர்கள் தங்கள் கட்சிகளை வளர்ப்பது இவ்வாறுதான். அவர்கள் சூழ்நிலையை கவனித்துக்கொண்டே இருப்பார்கள். ஏதாவது ஒரு காரணம் கிடைத்தால் போதும். உடனே போராட்டம் ஆரம்பித்து விட வேண்டியதுதான். உதாரணத்திற்கு இலங்கைத்தமிழர் பிரச்சினை. இந்த பிரச்சினை பல ஆண்டுகளாக இருந்து கொண்டு இருக்கிறது.ஆயிரக்கணக்கான தமிழர்கள் இங்கு வந்து அகதிகளாக வருடக்கணக்கில் முகாம்களில் பல இன்னல்களுக்கு இடையே தங்கியிருக்கிறார்கள். இப்போது பல விதமான போராட்டங்கள் நடத்தும் அரசியல் கட்சித்தலைவர்கள் அந்த முகாம்களுக்குப் போயிருப்பார்களா என்பது சந்தேகமே.ஆனால் இப்போது இலங்கையில் விடுதலைப்புலிகளின் மேல் இலங்கை அரசு போர் தொடுத்தவுடன் இங்கே இருக்கும் அத்தனை அரசியல் தலைவர்களுக்கும் தமிழர்களின் பேரில் அப்படி ஒரு பாசம் பொத்துக்கொண்டு போராட்டங்களில் இறங்கியிருக்கிறார்கள். இந்தப் போராட்டங்களினால் இலங்கைத்தமிழர்களுக்கு என்ன பயன் இருக்கிறதோ இல்லையோ, இங்கேயுள்ள அரசியல் கட்சிகள் தங்களை நன்றாக வளர்த்துக்கொள்ளும். தொடரும்........

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

பொது சேவை-2

பொது சேவை-2
ஒவ்வொரு நாட்டிற்கும் தேசீய குணம் என்று ஒன்று உண்டு. உதாரணமாக ஜப்பான் நாட்டை ஒடுத்துக்கொண்டால் அந்த நாட்டு மக்கள் உழைப்பிற்கு பெயர் போனவர்கள். ஜெர்மனி நாட்டவர்கள எடுத்துக்கொண்டால் தரமான பொருட்களை தயாரிப்பதில் வல்லுநர்கள். ஐரோப்பியர்களை எடுத்துக்கொண்டால் ஒழுக்கத்திற்கும் எந்த சூழ்யிலையிலும் மனம் தளராமல் கடமையை செய்வதில் முனைப்பாக இருப்பார்கள். இப்படி ஒவ்வொரு நாட்டிற்கும் தனிப்பட்ட குணாதசியங்கள் இருக்கிறது.
ஆனால் இந்தியர்களை எடுத்துக்கொண்டால் அவர்களுடைய குணாதசியங்கள் என்று எதைக்கூறுவது என்பது பெரிய கஷ்டமான சமாசாரம் ஆகும். முக்கியமான ஒன்றை மட்டும் இங்கே சொல்கிறேன். நாடும் மற்றவர்களும் எக்கேடு வேண்டுமானாலும் கெட்டுப்போகட்டும்; நான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்ற பரந்த மனப்பான்மை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
மற்ற எல்லா நாட்டு மக்களும் என்ன நினைக்கிறார்கள் என்றால் நாடும் மற்ற மக்களும் நன்றாக இருந்தால்தான் நானும் நன்றாக இருக்க முடியும் என்று எண்ணி அதற்காக தங்கள் கடமைகளை சரியாகச்செய்கிறார்கள்.

ஆனால் இந்திய நாட்டு மக்களோ என்றால் எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம் என்று செயல்படுபவர்கள். அப்படி ஏதும் வீடு எரியவில்லை என்றால் அவர்களே வீட்டிற்கு தீ வைப்பதற்கும் தயாராக இருக்கிறார்கள். அபெபடு வைத்த தீயைத்தான் சமீபத்தில் சின்னத்திரைகளில் விரிவாக்கஃ காட்டினார்கள்.
சட்டத்தின் பாதுகாவலர்கள் என்று மக்கள் நம்பிக் கொண்டிருக்கும் காவல் துறையினரும் சட்ட வல்லுனர்களும் உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் நடத்திய போராட்டம் ஒரு உச்ச கட்ட ஜனநாயகப் படுகொலை. அநாகரிகத்தின் எல்லைக்கோடு. அதுவும் ஒரு நீதிபதிக்கும் கூட தலையில் காயம் பட்டிருக்கிறது. தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற போக்கு எல்லா இடங்களிலும் பரவி விட்டது. எதிர்காலத்தில் மக்கள் வீதிகளில் சுதந்திரமாக நடமாடுவது கூட அச்சத்துடன்தான் செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகியிருக்கிறது.
இப்படி ஏன் நடக்கிறது என்று யோசித்தால் அதற்கு காரணம் நமது நாட்டிற்கு என்று ஒரு தேசிய குணம் கிடையாது. தேசப்பற்று கிடையாது. நாட்டின் உச்ச ஸ்தாபனமான நாடாளுமன்ற சபையிலே மக்களின் நடவடிக்கைகளுக்கு முன் உதாரணம் இருக்கிறது. இந்த நாட்டின் தலை விதியையே நிர்ணயிக்கும் நாடாளுமன்ற உருப்பினர்களின் நடத்தையைப் பார்க்கும்போது உயர்நீதி மன்றத்தில் நடந்தவை மிகவும் சாதாரணமானவையே. இப்படிப்பட்ட நாட்டில் வாழ்வதற்கு நாம் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
தொடரும்.....

புதன், 18 பிப்ரவரி, 2009

பொது சேவை-1

பொது சேவை-1
ஆகவே எப்படியாவது இந்த சமூகத்தை சீர்திருத்தி விடுவது என்று தீர்மானம் செய்தாகிவிட்டது. அதை எப்படி செய்யலாம் என்று யோசித்தபோது இந்த வலைத்தளத்தை அதற்கு பயன்படுத்தலாமே என்ற எண்ணம் உதித்தது. உடனே அதை நடைமுறைப்படுத்துகிறேன்.
ஆனால் உலகத்தில் நடைமுறை எப்படியென்றால் யாரும் அடுத்தவர் சொல்லும் அறிவுரையை ஏற்றுக் கொள்வதில்லை.நேற்றுப்பிறந்த குழந்தை முதல் நாளை சாகப்போகும் கிழவன் வரை யாரும் பிறர் சொல்வதை, அது நன்மையே பயக்குமென்றாலும் தான் நினைத்ததுதான் சரி, எனக்கு யாரும் சொல்லவேண்டியதில்லை என்றுதான் நினைக்கிறார்கள்.
இது மனிதனின் இயற்கை குணம். இதை யாராலும் மாற்ற முடியாது. பிறகு ஏன் எல்லோரும் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்க முற்படுகிறார்கள் என்றால் தனக்கு மற்றவர்களை விட அறிவு அதிகம் என்று காட்டிக் கொள்ளத்தான். அவன் சொல்வதை அடுத்தவன் கேட்க மாட்டான் என்று அவனுக்கு நன்றாகத்தெரியும். ஆனால் ஏன் அறிவுரை கூற முற்படுகிறான் என்றால் பின்னால் மற்றவன் ஒரு கஷ்டம் என்று சொல்லும்போது ‘’ நான் அன்றே சொன்னேனே கேட்டியா?’’ என்று குத்திக் காட்டுவதற்- காகத்தான்.
இவ்வளவு பேசும் நீ எதற்காக இப்போது அறிவுரை கூற முற்பட்டிருக்கிறாய் என்று நீங்கள் கேட்கலாம். எனக்கோ வேறு வேலை இல்லை, மற்றவர்களுக்காக நீ என்ன செய்தாய் என்று வருங்கால சந்த்தியினர் என்னைக் குற்றம் சொல்லக்கூடாது அல்லவா? அதற்காகத்தான். ஊதற சங்கை ஊதி வைத்தால் விடியும்போது விடியட்டும் எனகிற பரந்த நோக்கில் இந்த தளத்தைப்பயன்படுத்துகிறேன்.
தொடரும்.....

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

நதிமூலம்-5

நதிமூலம்-5
உலகம் உய்வதற்காக பல அவதாரபுருஷர்கள் நம் நாட்டில் அவதரித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தற்காலத்திற்கு பொருத்தமானவர்கள் அல்ல. தற்கால சமூகத்தை புணருத்தாரணம் செய்ய அவதரித்துள்ள அவதார புருஷர்கள் இன்றைய இன்டர்நெட் வலைத்தளங்களில்தான் இருக்கிறார்கள்.
அவர்கள் செய்யும் சேவையை நீங்களே அனுபவித்தால்தான் அதனுடைய பூரண இனபத்தைப்பெற முடியும். இருந்தாலும் என்னால் முடிந்த வரையில் விவரிக்கிறேன்.
மனிதனுக்கு எப்போதும் அடுத்தவர்களின் அந்தரங்கங்களை அறுந்து கொள்வதில் அலாதி ஆனந்தம். இந்த வலைத் தளங்கள் இந்த ஆசையை பூரணமாக நிறைவேற்றுகின்றன.
உதாரணத்திற்கு ஒரு தளத்தில் என்ன சொல்லியிருக்- கிறார்கள் என்று சொல்கிறேன்.
‘’நான் இன்று காலையில் எழுந்தேன். பல் விளக்கினேன். காபி குடித்தேன். நாயைக்குளிப்பாட்டினேன். நானும் குளித்தேன். டிபன் சாப்பிட்டேன். என் சமையல் அறையில் கரப்பான் பூச்சி வந்தது. கம்ப்யூட்டரில் இதை எழுதினேன். ........ இப்படியே இரவு தூங்கப்போவது வரை விலாவாரியாக விவரித்து விட்டு, பிறகு தூங்குவார்கள் (என்று நினைக்கிறேன்)’’
நல்ல வேளை அதற்குப்பிறகு நடப்பவற்றை தற்சமயம் விவரிப்பதில்லை. அதைப்பற்றியும் விவரிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அல்லது அப்படி எழுதியவை என் கண்ணில் படாது போயிருக்கலாம்.
ஆஹா தேச சேவை செய்ய இப்படியும் ஒரு வழி இருக்கிறதா, இத்தனை நாள் நமக்கு தெரியாமல் போய்விட்டதே, நம் ஓய்வு நாளை பயனுள்ளதாய் கழித்து போகுமிடத்திற்கு புண்ணியம் தேடிக்கொள்வோம் என்று முடிவு செய்து இந்த வலைத்தளத்தை ஆரம்பித்துள்ளேன்.
எவ்வளவு நாள் நடக்கும், எத்தனை பேர் இதைப்பார்ப்பார்கள் என்றெல்லாம் எனக்கு யோசனை இல்லை. எப்படியோ, பொழுது போவதற்கு ஒரு வழி பிறந்தது. மேலும் என் மாமனார் வீட்டார் நான் பஞ்சமாபாதகத்திலிருந்து மீண்டு விட்டேன் என்ற சந்தோஷமும் அடையவும் இந்த வேலை காரணமாய் அமைந்தது. ஆகவே எல்லோருக்கும் சந்தோஷம் கொடுக்கலாம் என்று இந்த வலைத்தளத்தை ஆரம்பித்திருக்கிறேன். இது சந்தோஷத்தை கொடுக்குமா அல்லது கஷ்டத்தை கொடுக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும்.
இதுதான் இந்த வலைத்தளத்தின் நதிமூலம்..............தொடரும்..

சனி, 14 பிப்ரவரி, 2009

நதிமூலம்-4

காலை 3 மணிக்கு எழுந்திருந்து கணிணி முன்பு உட்கார்ந்து மின்னஞ்சல் உருவாக்கி இன்டர்நெட்டுக்குள் போனால் ஒரு நிமிடத்திற்குள் இந்த மின்னஞ்சல் போய்விடும். பிறகு மீதி உள்ள 14 நிமிடத்தை என்ன செய்வது? ஏதாவது செய்யலாம் என்று வலைத்தளங்களுக்குள் பிரவேசித்தேன். சிறிது காலம் ஒன்றும் திசை தெரியாமல் குழம்பி பிறகு ஒருவாறாக இன்டர்நெட்டின் நுணுக்கங்களை புரிந்து கொண்டேன். குறிப்பாக கூகுள் தேடுதளம் மிகவும் உபயோகமாக இருந்தது. பலவிதமான பொருள்களைப்பற்றி தேடியதில் பல விஷயங்கள் தெரிந்துகொண்டேன்.
இளைஞர்கள் (60+) எவ்வாறு உடல்நலத்தை பேணுவது என்பதில் இருந்து விமானம் எப்படி பறக்கிறது என்பதுவரை பார்த்தபிறகு வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்போதுதான் என் நண்பர் ஒருவர் ஒரு துண்டு பிரசுரம் எங்கள் குழு கூட்டத்தில் விநியோகித்தார். அதில் அவர் ஆரம்பித்து நடத்திவரும் ஒரு வலைத்தளம் (வலைத்தளமா அல்லது வலைப்பூவா, எனக்கு சரியாகத்தெரியவில்லை) பற்றி குறிப்பிட்டிருந்தார். அதைத்தேடி கண்டுபிடித்து பார்த்தேன். மிகவும் அழகான மலர்களின்(?!) படங்கள் (நம் தமிழ் கலாசாரப்படி பெண்களும் மலர்கள்தானே) மற்றும் பல செய்திகள் சுவையாக வெளியிட்டிருந்தார்.
சில காலம் இதைப்பார்த்த பிறகு சலிப்பு ஏற்பட்டு இது மாதிரி வேறு தளங்கள் இருக்கிறதா என்று தேடினேன். தேடும்போதுதான் தெரிந்தது – உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் இந்த வேலைதான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று. இவர்கள் எல்லாம் சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள், அவர்களுக்கு குடும்பம் உண்டா, அப்படி இருந்தால் அதை யார் கவனிக்கிறார்கள், இந்த கணிணி நோண்டுவேலை செய்வதற்கு யார் செலவு செய்கிறார்கள் இப்படிப்பட்ட அபத்தமான கேள்விகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு இந்த தளங்களில் என்னதான் இருக்கிறது என்று பார்த்தேன். பார்த்ததில்.....
வளரும்....

வியாழன், 12 பிப்ரவரி, 2009

நதிமூலம்-3

அமெரிக்கா ஒரு சொர்க்கபுரிதான். ஆனால் என்னதான் சொர்க்கமாய் இருந்தாலும் பேசுவதற்கு ஆள் இல்லாவிட்டால் அது நரகம்தானே. என் நண்பருக்கு இந்த விஷயம் நன்றாகத்தெரியும். ஆகவே அமெரிக்கா போவதற்கு முன்பே என்னிடம் ஒரு எழுதா ஒப்பந்தம் போட்டு விட்டுத்தான் போனார். அது என்னவென்றால் தினமும் நான் அவருக்கு ஒரு மின்னஞ்சலில் இங்குள்ள நாட்டு நடப்புகளை அனுப்ப வேண்டும். நானும் இதற்கு ஒப்புக்கொண்டேன். ஆனால் இந்த மின்னஞ்சல் அனுப்புவதற்கு நான் பட்ட கஷ்டங்களை பிறகு எழுதுகிறேன்.
என்னுடைய கணிணியில் இன்டர்நெட் தொடர்பு இல்லை. என் மகளுடைய இன்டர்நெட் தொடர்பில் கொஞ்ச நாள் மின்னஞ்சல் அனுப்பி வந்தேன். பிறகு அதில் சில நடைமுறைச் சிக்கல்கள் வந்தபடியால் நானே ஒரு இன்டர்நெட் இணைப்பு வாங்கிக்கொள்ளலாம் என்று முடிவு செய்து நமது அரசு வழங்கும் இணைப்பை வாங்கினேன். நீண்ட நாள் பழக்கத்தினால் எது மலிவாக கிடைக்குமோ அதைத்தான் வாங்கிப்பழக்கம். அப்படி வாங்கியதுதான் 280 ரூபாயில் ஒரு வருடத்திற்கு 50 மணி நேர பேக்கேஜ். இன்டர்நெட் பேக்கேஜில் இரண்டு விதமான செலவுகள் உண்டு. ஒன்று உபயோகிக்கும் நேரத்திற்கான செலவு. தாவது இந்த 50 மணி நேரத்திற்கு 280 ரூபாய் என்றால் ஒர் மணி இன்டர்நெட் உபயோகித்தால் ரூபாய் 5.60 அம்பேல். இரண்டாவது நாம் இன்டர்நெட் உபயோகிக்கும் நேரத்திற்கு உண்டான தொலைபேசி கட்டணம். இது பகலில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.9.60 ஆகும். அதாவது 71/2 நிமிடத்திற்கு ஒரு யூனிட் சார்ஜ்.
என்னைப்போன்ற தாராள மனசுக்காரங்களுக்காக அரசு பெரிய மனசு பண்ணி இதில் இரண்டு வசதிகள் செய்து கொடுத்திருக்கிறது. உபயோகித்தவர்களுக்கு தெரியும். ஒன்று இரவு 11 மணியில் இருந்து காலை 8 மணி வரையிலும் இன்டர்நெட் உபயோகித்தால் இன்டர்நெட் சேவைக்கான கட்டணம் இல்லை. மேலும் இரவு 10.30 மணியிலிருந்து காலை 7.30 மணி வரை இன்டர்நெட் உபயோகித்தால் தொலைபேசி கட்டணம் பாதிதான் ஆகும் அதாவது ஒரு மணிக்கு ரூ.4.80 தான். 15 நிமிடங்களுக்கு ஒரு யூனிட் சார்ஜ். நான் என்ன செய்திருப்பேன் என்று யூகிப்பது ஒன்றும் அப்படி கடினமான விஷயம் அல்ல.
வழக்கமாகவே எனக்கு காலையில் 3 மணிக்கு விழிப்பு வந்துவிடும். ஆகவே இந்த சலுகைக்கட்டணத்தை உபயோகிப்பதில் எனக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை.
பிறகு....

புதன், 11 பிப்ரவரி, 2009

நதிமூலம்-2

கணிணியில் சீட்டு விளையாடுவதைப்பற்றி போன பகுதியில் எழுதியிருந்ததின் தொடர்ச்சி. ஒரு நாள் போனில் என் மனைவி வழி உறவினர் யாரோ என்னைக் கூப்பிட்டிருக்கறார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டதற்கு என் மனைவி, அவர் சீட்டு விளையாடிக்கொண்டு இருக்கிறார் என்று சொல்ல ஒரே கூத்தாகிப்போய்விட்டது. சீட்டு விளையாடுவது என்பது பஞ்சமா பாதகங்களில ஒன்றாக கருதப்படும் சமூகத்தில் பிறகு என் மாமனார் வகை உறவில் என் மதிப்பு என்ன ஆகி இருக்கும் என்பதை உங்கள் ஊகத்திற்கு விட்டு விடுகிறேன்.
சரி இந்த வம்பு வேண்டாம், ஆனால் வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.
இப்படி இருக்கும்போது என் நண்பர் ஒருவர் அமெரிக்காவுக்கு தன்னுடைய மகன் வீட்டிற்கு 6 மாத தங்கலுக்காக சென்று விட்டார். அவரும் என்னைப்போலவே ஓய்வு பெற்றவர். அவர் இங்கே இருக்கும்போது அவருக்கு என்ன வேலை என்றால் தினமும் காலையில் டிபன் சாப்பிட்டு முடிந்த்தும் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு ஏதாவது ஒரு நண்பர் வீட்டிற்கு செல்வார். அவருடன் ஒரு இரண்டு மணி நேரம் பேசி உலக நடப்புகளைத் தெரிந்து கொள்வார். உலக நடப்பென்றால், திருவிளையாடல் சினிமாவில் சிவாஜி கணேசன் பாணியில் ‘நடந்தது, நடவாதது, நடப்பது, நடக்கப்போவது அனைத்தும்’ அவருக்கு தெரிந்தாகவேண்டும். இல்லையென்றால் அன்று இரவு அவருக்கு தூக்கம் வராது.
இப்படியாக தினமும் காலையில் ஒரு நண்பர், மாலையில் ஒரு நண்பர் என்று முறை வைத்துக்கொண்டு நான்கு நாட்களுக்கு ஒரு சுற்று வீதம் வலம் வந்து செய்திகளை தெரிந்து கொள்வார். இது தவிர காலையிலும் மாலையிலும் இரண்டு குழுவினருடன் நடைப்பயிற்சியும் போவார். நடைப்பயிற்சியை விட அவருக்கு நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்வதில்தான் ஆர்வம் அதிகம். இப்படிப்பட்ட அகோர செய்திப்பசி கொண்டவர் அமெரிக்காவில் போய் சிக்கிக்கொண்டால் எப்படியிருக்கும் ?
பொறுத்திருக்கவும்...

நதிமூலம்-1


நான் இந்த வலைப்பதிவு விளையாட்டுகளுக்கு புதியவன். என்னுடைய மகள் தனக்கு ஒரு கணிணி புதிதாக வாங்கிக்கொண்டு தான் வைத்திருந்த பழைய கணிணியை எனக்கு தானம் கொடுத்தாள். எனக்கு கணிணியில் முன்பே சிறிது பழக்கம் உண்டு. ரொம்ப காலத்திற்கு முன்பு நான் வேலையில் இருந்தபோது அலுவலகத்தில் ஒரு கணிணி என்னுடைய அறையில் வைத்திருந்தார்கள். அது கணிணிகள் (குறிப்பாக மேஜை மாடல்கள்) வரத்தொடங்கிய காலம். என்னுடைய அறையில் இருந்த மாடலில் நிலையான சேமிப்பு சாதனம் இல்லை. இரண்டு தகடு அறைகள் இருந்தன. ஒன்றில் (A drive) மென்பொருள் தகட்டைப்போட்டுவிட்டு இன்னொன்றில் (B drive) நமக்கான தகட்டைப் போட்டுக்கொண்டு கணிணியில் நம் சித்து வேலைகளைக் காட்டவேண்டும்.
நான் வகித்த பதவி காரணமாக கணிணியை உபயோகிப்பது எப்படி என்று யாரிடமும் பாடம கேட்கமுடியாத சூழ்நிலை. ஆனாலும் இதை விடக்கூடாது என்ற எண்ணம் மனதில் விழுந்து விட்டது. மாலை 5 மணிக்கு மேல் கணிணி முன்பு உட்கார்ந்து நேரம் காலம் பார்க்காமல் ஒவ்வொரு படியாகப்படித்து முன்னேறி இன்று கணிணியைப்பிரித்து மேயும் அளவுக்கு முன்னேறியுள்ளேன்.
இப்போது ஓய்வு பெற்று வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும்போது இந்த கணிணி கிடைத்தது ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விட்டது. கணிணி உபயோகிப்பது என்னைப்போன்ற இளைஞர்களுக்கு (அதாவது 60 வயதுக்கு கீழே உள்ளவர்கள் குழைந்தைகள், அதற்கு மேல் உள்ளவர்கள்தான் இளைஞர்கள். என்னுடைய வயது வெறும் 75 தான்) அதிகமாக பரிச்சயம் இல்லாததால் ஏதாவது விளையாட்டு விளையாடலாம் என்று முடிவு செய்து என்ன விளையாடலாம் என்று பார்த்தேன்.
கணிணிக்குள் பார்த்தபோது ஒரு சீட்டு விளையாட்டு கிடைத்தது. (Spider Solitaire). சில நாட்கள் விடாமுயற்சி செய்து இந்த விளையாட்டை கற்றேன். என்ன ஆயிற்று என்றால் இந்த விளையாட்டு என்னைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. தூங்கும் நேரம் போக மீதி உள்ள நேரமெல்லாம் இதே பைத்தியமாக போய்விட்டது. என் மனைவி சாப்பிடுவதற்கு பல முறை கூப்பிட்டாலும் பிறகு வருகிறேன் என்று கூறி விட்டு இந்த சீட்டு விளையாட்டில் மூழ்கியிருந்தேன். இப்படி இருக்கையில் ஒரு நாள் ...
(தொடரும்)