வியாழன், 23 ஏப்ரல், 2009

அரசு நிறுவனங்களின் செயல்பாடுகள்

மனிதன் இயற்கையில் மிகவும் நல்லவன். ஆனால் சூழ்நிலை அவனைப்பலவாறாக மாற்றுகிறது. குறிப்பாக அவன் அரசு நிறுவனங்களில் பணிக்குச் சேர்ந்த பின் அவன் வெகுவாக மாறிப்போகிறான்.
நேற்று வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு வேலை. ஒன்றுமில்லை. என்னுடைய மகளின் கார் பேங்க் லோனில் வாங்கியிருந்தாள். காரின் RC புத்தகத்தில் அந்த காரின் மேல் கடன் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்த்து. கடன் கட்டி முடிந்தாகிவிட்டது. இந்த விபரம் அந்த காரின் RC புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இதற்கு ஒரு படிவம் இருக்கிறது. அந்த படிவத்தைப்பூர்த்தி செய்து அதனுடன் காரின் புகை சான்று, காரின் RC புத்தகம், இன்ஷூரன்ஸ் சான்று, பாங்கிலிருந்து கொடுத்த NOC, ஒரு ரிஜிஸ்டர் தபால் கவர் (30 ரூபாய்) இவைகளையெல்லாம் சேர்த்து பின் பண்ணி ரூபாய் 125 பணம் கட்டி அதற்கு உண்டான எழுத்தரிடம் கொடுக்கவேண்டும்.
ரொம்பவும் எளிதாக தோன்றுகிறதல்லவா! நேரில் அனுபவித்தால்தான் அதனுடைய சிரமம் தெரியும். பணம் கட்டுவதற்கு மட்டும் சுமார் பத்து பேரைக் கேட்டிருப்பேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கவுன்டரைக்காட்டினார்கள். எல்லா கவுன்டர்களிலும் கூட்டம். இதனிடையில் கம்ப்யூட்டர் ஒத்துழைக்க மாட்டேனென்கிறது. காலை 10 மணியிலிருந்து 11 மணி வரை இவ்வாறு அலைந்த பின்பு ஒரு கவுன்டரில் ஒருவாறாக பணத்தைக்கட்டி முடித்தேன். பின்பு இந்த பாரங்களை தபால் செக்சனில் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அங்கு சொன்றால் தபால் வாங்குபவர் அங்கு இல்லை. வேறு அலுவல் பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்று சொன்னார்கள். எப்போது வருவார் என்பது ஒருவருக்கும் தெரியவில்லை.
அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்த போது அந்த ஆபீஸை சேர்ந்த ஒருவர் அந்த வழியில் போய்க்- கொண்டிருந்தார். அவரை வழிமறித்து ஒரு பெரிய வணக்கம் போட்டு ‘’சார், இந்த பாரத்தை தபால் செக்ஷனில் கொடுக்க வேண்டும். அங்கு அவரைக்காணவில்லை, என்ன செய்வதென்று தெரியவில்லை’’ என்று அழாக்குறையாக சொன்னேன். அவர் இந்த உலகில் தப்பிப்பிறந்தவர். என்னுடைய பார்த்தை வாங்கிக்கொண்டு உள்ளே சென்று விட்டு ஐந்து நிமிடங்கள் கழித்து என்னிடம் வந்து ‘’சார், நீங்கள் நாளை மாலை 4 மணிக்கு வந்து ஈ.4 செக்ஷனில் ஆனந்த் என்பவரிடம் இதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினார். அவருக்கு மிகுந்த நன்றி சொல்லிவிட்டு அடுத்த நாள் மாலை 4 மணிக்கு ஈ.4 ஆனந்தைப்பார்த்தேன். அவர் பேரைக்கேட்டுவிட்டு ஆமாம், பாரம் இங்கேதான் இருக்கிறது, காலையில் பார்த்தேன், கொஞ்சம் உட்காருங்கள், தேடி எடுக்கிறேன் என்று சொல்லி விட்டு, சொன்ன மாதிரியே 2 நிமிடத்தில் பாரத்தை எடுத்து விட்டார். ஆனால் அதில் ஒரு வேலையையும் செய்யவில்லை.
சார், கொஞ்சம் இருங்கள், என்று சொல்லிவிட்டு உடனே பழைய ரிஜிஸ்டரைத்தேடி எடுத்து என்ட்ரி போட்டு ஒரு 5 நிமிடத்தில் பாரத்தை என்னிடம் கொடுத்து ‘’ சார், இதை மேலே உள்ள தபால் செக்ஷனில் கொடுத்து என்ட்ரி போட்டு வாங்கிக்கொள்ளுங்கள்’’ என்றார். அதை வாங்கிக்கொண்டு தபால் செக்ஷனுக்கு போனேன். அவர் இருந்தார். அவருக்கு ஒரு சலாம் போட்டுவிட்டு இந்த பாரங்களைக்கொடுத்தேன். அவர் அதில் என்னுடைய கையெழுத்தை வாங்கிக்கொண்டு காரின் RC புத்தகத்தையும் இன்சூரன்ஸ் சர்டிபிகேட்டையும் கொடுத்தார். ஒரு பெரிய சலாம் போட்டுவிட்டு வந்த வேலை முடிந்த சந்தோஷத்துடன் வீட்டுக்கு வந்தேன்.
Ph.D. படித்து ஒரு அரசுப் பணியில் 38 வருடங்கள் வேலை பார்த்த எனக்கே இந்த RTO ஆபீஸ் வேலையில் இவ்வளவு அலைச்சல் பட வேண்டியிருந்ததென்றால் சாதாரண படிப்பு அதிகமில்லாத மக்கள் எப்படி இந்த மாதிரி காரியங்களைச் செய்வார்கள் என்று யோசித்தேன். அப்போது ஒரு உண்மை தெரிந்தது. RTO ஆபீசுக்கு வெளியே சின்ன சின்னதாக டேபிள் போட்டுக்கொண்டு பலர் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பலவிதமான பாரங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இந்த பாரங்களை நிரப்பிக்கொடுத்தும் RTO ஆபீஸ் விவகாரங்களில் அனுபவம் இல்லாதவர்களுக்கு உதவி செய்துகொண்டும் இருக்கிறார்கள். மேலும் நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருப்பவர்களுக்கும் இவர்கள் உதவி செய்கிறார்கள். செய்யும் உதவிக்காக உதவிபெற்றவர்கள் கொடுக்கும் நன்றியை (பணம்) வைத்துக்கொண்டு ஜீவனம் செய்கிறார்கள். இவர்களின் பணி மகத்தானது. ஆனால ஜனங்களும் அதிகாரிகளும் இவர்களை ‘’புரோக்கர்கள்’’ என்று கேவலமாக சித்தரித்து இவர்கள் ஏதோ தீவிரவாதிகள் என்பது போல் நடத்துகிறார்கள். என்னுடைய பார்வையில் இவர்கள் செய்வது உண்மையான மக்கள் சேவை. வாழ்க இவர்கள் தொண்டு.
தொடரும்.....

வெள்ளி, 17 ஏப்ரல், 2009

வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தல்

கோடை விடுமுறையில் பலரும் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். அப்போது தங்கள் வீட்டைப்பூட்டி விட்டு செல்வார்கள். இப்படி பூட்டியிருக்கும் வீடுகளை திருடர்கள் நோட்டம் போட்டு, அந்த வீடுகளில் இரவு நேரங்களில் (பல சமயங்களில் பகலிலேயே கூட) பல வகைகளில் உள்ளே புகுந்து திருடுகிறார்கள். தினமும் இந்த செய்திகள் செய்தித்தாள்களில் வருகின்றன.
குறிப்பாக திருட்டு போகும் பொருட்கள் நகைகளும் பணமும்தான். அதுவும் அதிக அளவில். இதில் புரியாதது என்னவென்றால், வெளியூர் போகிறவர்கள் ஏன் அவ்வளவு நகைகளையும் பணத்தையும் வீட்டில் வைத்துவிட்டுப் போகிறார்கள் என்பதுதான்.
வடநாட்டில் வீடுகளை வெளியில் பூசுவதில்லை. வெறும் செங்கல் சுவர் மட்டும்தான் வெளியில் தெரியும். வீட்டுக்குள் எல்லா வசதிகளும் இருக்கும். ஆனால் வெளியில் ஒன்றும் தெரியாது. இது ஏனென்றால் அங்கே பல நூற்றாண்டுகளாக முகலாயர்கள் படையெடுத்து எல்லோருடைய சொத்துக்களையும் கொள்ளையடித்து சென்றிருக்கிறார்கள். ஆகவே அங்குள்ள மக்களின் மனோபாவம் மிகவும் மாறுபட்டது. சொத்துக்களைச் சேர்த்து திருட்டுக்கொடுப்பதை விட அதை நாமே அனுபவித்து விட்டுப்போகலாமே என்ற எண்ணம் வலுவாக ஊறியிருக்கிறது. ஆகவே அவர்கள் தாங்கள் சம்பாதிப்பதை தாங்களே அனுபவிக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தன் மகனுக்கு, தன் பேரனுக்கு, தன் கொள்ளுப்பேரனுக்கு என்று சேர்த்து வைக்கிறார்கள். அப்படி சேர்த்து வைத்ததை எவனோ கொள்ளையடித்துக்கொண்டு போகிறான்.
ஓரளவிற்கு சேமிப்பு அவசியம்தான். ஆனால் பலரும் செய்வது என்னவென்றால் தான் சரியாக சாப்பிடாமல் கூட வருங்கால சந்ததியினருக்கு சேமிக்கிறார்கள். இது தேவையில்லாதது. ஆனால் மக்கள் எப்போது மனம் மாறுவார்கள் என்று செரியவில்லை.
தொடரும்...

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

விபத்துகளின் எண்ணிக்கை

கோவையில் மட்டும் கடந்த மாதம் தெரு விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 32 என்று செய்தித்தாள்களில் பிரசுரமாகியிருந்தது. இது தமிழ்நாட்டிலேயே அதிக பட்ச இறப்பு என்றும் கூறப்பட்டிருந்தது. இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இந்த விபத்துக்களுக்கு காரணம் அரசு போக்குவரத்து வாகனங்கள்தான். நல்ல சேவை.
இந்த விபத்துக்களை செய்தித்தாள்களில் காலையில் படித்து மாலையில் மறந்து போகிறோம். ஆனால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு இந்த விபத்து ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பைப் பற்றி நம்மில் யாரும் கவலைப்படுவதில்லை. ஆனாலும் இத்தகைய விபத்துக்கள் ஏன் ஏற்படுகின்றன என்று ரோடில் செல்லும் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். நாமும் ஒரு நாள் இந்த மாதிரி செய்தியாகலாம்.
வேகம், வேகம், வேகம். இதுவே நம் ஒவ்வொருவரின் தாரக மந்திரம். எதிலும் வேகம். எல்லாவற்றிலும் வேகம். யமலோகத்திற்கு போவதற்கும் வேகம். என்ன செய்ய முடியும்? மக்கள் சிந்தக்க வேண்டும்.
தொடரும்....

திங்கள், 6 ஏப்ரல், 2009

பஸ்களும் விபத்துக்களும்

மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் போக்கு வரத்து தேவைகளும் அதிகரித்து விட்டன. பஸ்கள், லாரிகள், மினிபஸ்கள், வேன்கள், கார்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள், ஸகூட்டர்கள் என்று பல விதமான வாகனங்கள் பல மடங்கு அதிகமாகி விட்டன. இந்த வாகனங்கள் அதிகரிப்புக்கு ஈடாக ரோடுகள் அதிகரிக்கவில்லை. அதனால் அடிக்கடி ரோடுகளில் விதவிதமான விபத்துக்கள் நடக்கின்றன.
வாகனங்கள் ஓட்டுவதற்கு லைசன்ஸ் வேண்டும். கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு தனியாக ஸ்பெஷல் லைசன்ஸ் வேண்டும். இப்படியெல்லாம் சட்ட புத்தகத்தில் இருக்கிறது. ஆனால் நடைமுறையில் இவை எந்த அளவுக்கு கடைப்பிடிக்கப்படுகின்றன என்று யாரும் பார்க்கிறார்களா என்பது ஒரு கேள்விக்குறியே?
குறிப்பாக அரசு நடத்தும் பஸ் நிறுவனங்களில் இருக்கும் பஸ் டிரைவர்கள் பெரும்பாலும் அனுபவம் குறைந்தவர்கள். அவர்களிடம் ஒரு பெரிய பஸ்ஸைக்கொடுத்து ஓட்டச்சொன்னால் அவர்கள் அவர்களுடைய திறனுக்குத் தக்கவாறுதான் ஓட்டுவார்கள். சிக்கலான சூழ்நிலையில் அவர்கள் செய்யும் தவறுகளினால்தான் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களோ ரோடு முழுவதும் அவர்களுக்காகவே இருக்கிறது என்ற எண்ணம். பின்னால் வரும் கனரக வாகனங்களை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. மேலும் இந்த வாகனங்களில் எவ்வளவு பேர் போகமுடியும் என்ற உணர்வும் கிடையாது. ஒரு TVS 50 மொபட் வண்டியில் தன் குடும்பம் முழுவதையும் (5 பேர்) ஏற்றிக்கொண்டு போகிறார்கள். வண்டி இழுக்கமாட்டேன் என்கிறது. முக்கி முனகிகுகொண்டு மேட்டில் ஏறும்போது பின்னால் வேகமாக வரும் பஸ் அல்லது லாரி இந்த மொபட்டின் மேல் லேசாகப்பட்டால் போதும். மொபட்டில் போகிறவர்கள் அந்த லாரியின் முன்னால் விழுந்து.... பிறகு என்ன நடந்தது என்பதைத்தான் தினமும் பேப்பரில் பார்க்கிறோம்.
ஆக மொத்தத்தில் இரண்டு பக்கத்திலும் தவறு இருக்கிறது. ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.
தொடரும்.....