திங்கள், 24 பிப்ரவரி, 2014

உங்கள் கணக்கில் இருந்து பணம் எடுப்பது எப்படி? - பாகம் 5


உங்கள் கணக்கிலிருந்துதான் நீங்கள் பணம் எடுக்க வேண்டும்.  அடுத்தவர் கணக்கிலிருந்து நீங்கள் பணம் எடுக்கக் கூடாது. அது தப்பு. சாமி கண்ணைக் குத்திடும்.

பேங்கில் நீங்கள் தொடங்கியிருக்கும் சேமிப்புக் கணக்கு ஒரு வசதிதானே தவிர அது பணங்காய்ச்சி மரமல்ல. கையில் பணம் அதிகமாக இருந்தால் வீண் செலவு செய்வோம். அதை ஓரளவு கட்டுப்படுத்த சேமிப்புக் கணக்குகள் உதவும். ஆனால் சேமிக்கவேண்டும் என்ற அடிப்படை உந்துதல் இல்லாவிட்டால் சேமிப்புக் கணக்கினால் பயன் ஏதுமில்லை.

ஒருவனுடைய மாத வருமானத்தில் குறைந்தது பத்து சதம் சேமிக்கவேண்டும். அப்போதுதான் அந்தப் பணம் தேவைப்படும்போது கை கொடுக்கும். இப்போது பல தொழிற்சாலைகள், அரசு மற்றும் உள்ளாட்சி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை வங்கிக் கணக்கிலேயே செலுத்துகின்றனர். இது அவர்களின் சேமிப்பு வழக்கத்தை ஊக்கப்படுத்த உதவும். ஆனால் பெரும்பாலானோர் இந்த வசதியை முறையாகப் பயன்படுத்துவதில்லை என்பது ஒரு வருத்தத்திற்குரிய விஷயம்.

இப்படி சேர்த்த அல்லது சேர்க்கப்பட்ட ஊதியத் தொகை அல்லது சேமிப்புத் தொகையை எப்படி எடுப்பது? பேங்கில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இது பற்றி நன்கு அறிந்திருப்பது அவசியம்.

1. சாதாரண முறை:

பேங்கில் போடப்படும் தங்கள் சம்பளத்தை பேங்கில் இருந்து எடுப்பதை மட்டும் செய்யும் நபர்களுக்கு இந்த முறைதான் உகந்தது. அதற்கு பேங்கில் கிடைக்கும் "வித்டிராயல் ஸ்லிப்" எனப்படும் பணம் எடுக்கும் படிவத்தை உபயோகப்படுத்த வேண்டும். இது மிகவும் எளிமையான படிவம். ஆனால் இதை பூர்த்தி செய்யக்கூடத் தெரியாதவர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள்.

அவர்களுக்கென்றே சில பேங்குகளில் ஒரு ஊழியரை நியமித்திருப்பார்கள். அவர்களிடம் இந்தப் படிவத்தை பூர்த்தி செய்து கையெழுத்து அல்லது கைநாட்டு வைத்து கவுன்டரில் கொடுத்தால் பணம் கொடுப்பார்கள். ஆனால் இந்தப்படிவத்துடன் பேங்க் பாஸ்புக்கையும் அவசியம் கொடுக்கவேண்டும். பாஸ்புக்கில் ஒட்டப்பட்டுள்ள புகைப் படத்துடன் உங்கள் உருவத்தை ஒப்பிட்டுப் பார்த்து பிறகே பணம் கொடுப்பார்க்ள.

இந்தப் படிவத்தின் மூலம் பணம் எடுக்க யார் கணக்கு வைத்திருக்கிறார்களோ அவர்களேதான் பேங்கிற்கு நேரில் செல்லவேண்டும். அடுத்தவர் இந்த படிவத்தின் மூலம் பணம் எடுக்க முடியாது. ஒரு விதி விலக்கு. பேங்கில் பணி புரிபவர்கள் யாராவது நேர்மையற்றவர்களாக இருந்து விட்டால், சில சமயம் நீண்ட காலமாக பணப் பரிவர்த்தனை நடக்காத கணக்குகளில் இருந்து பணம் திருடப்படுவது உண்டு. ஆனால் இது மிகவும் அபூர்வம். ஆனாலும் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கை நீண்ட காலம் பரிவர்த்தனை இல்லாமல் வைப்பது கூடாது. அப்படி வைத்திருந்தால் பல பேங்குகள் அபராதம் கூட விதிக்கிறார்கள்.

2. செக் மூலம் பணம் எடுப்பது.

பேங்கில் கணக்கு ஆரம்பிக்கும்போதே செக் புக் வேண்டுமென்றால் கொடுப்பார்கள். ஆனால் இத்தகைய கணக்குகளில் குறைந்த இருப்புத் தொகை கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். அதுவும் தவிர ஒரு 10 செக் கொண்ட ஒரு செக் புத்தகத்திற்கு ஏறக்குறைய 30 ரூபாய் பிடித்துக்கொள்வார்கள்.

அந்தக் காலத்தில் அதாவது நான் இளைஞனாக இருந்தபோது ஒரு வெள்ளைக் காகிதத்தில் "இந்தக் காகிதத்தைக் கொண்டு வரும் நபருக்கு பத்தாயிரம் ரூபாய் என்னுடைய கணக்கில் இருந்து கொடுக்கவும் என்று எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தனுப்பினால் பணம் கொடுத்து விடுவார்கள். அது மக்கள் நாணயமாகவும் அரசு நேர்மையாகவும் இருந்து மாதம் மும்மாரி பெய்த காலம்.

இப்போது செக்குகள் மிகவும் முன்னேற்றமடைந்து "சிடிஎஸ்" செக்குகள் என்று அழைக்கப்படுகின்றன. அனைத்து பேங்க் செக்குகளும் ஒரே மாதிரி சைஸ், மற்றும் விவரங்கள் அடங்கியதாக இருக்க வேண்டும். இந்த வகை செக்குகளில் எந்த விதமான அடித்தல்களும் திருத்தல்களும் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் செக் பாஸ் ஆகாது. உங்களுக்கு 100 ரூபார் தண்டம். நீங்கள் செக் கொடுத்தவருக்கும் 100 ரூபாய் தண்டம். தவிர செக்கின் விலை 3 ரூபாயும் தண்டம்.

செக்குகள் மூலம் நீங்கள் அடுத்தவர்களுக்கு பணம் கொடுக்கலாம். செக் எழுதுவது என்பது ஒரு கலை. இதை நன்றாக கற்றுக்கொண்டுதான் செக்கை உபயோகிக்க ஆரம்பிக்கவேண்டும். செக் கணக்கு உள்ளவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய சில ஜாக்கிரதைக் குறிப்புகள்.

1. செக் புஸ்தகத்தில் உங்கள் மாதிரிக் கையெழுத்தைப் போட்டு வைக்கவேண்டாம்.

2. செக் புஸ்தகம் எப்போதும் உங்கள் வசம் பூட்டுப்போட்ட பெட்டிகளில் வைத்திருக்கவேண்டும்.

3. நிரப்பப் படாத செக்குகளை எக்காரணம் கொண்டும் யாருக்கும் கொடுக்கக் கூடாது. (பொண்டாட்டியாயிருந்தாலும் சரி வைப்பாட்டியாயிருந்தாலும் சரி)

4. வெற்றுச் செக்கில் கையெழுத்து மட்டும் போட்டு வைக்கக் கூடாது.

5. முன்பின் தெரியாதவர்கள் பணம் கொடுத்து உங்கள் செக்கைக் கேட்டால் கொடுக்கக் கூடாது.

6. உங்கள் கணக்கு எண். கணக்கில் உள்ள இருப்புத் தொகை இவைகளை யாருக்கும் சொல்ல வேண்டாம்.

இப்படியெல்லாம் இருந்தீர்களானால் உங்கள் பணத்தை நீங்கள் அனுபவிக்கலாம். இல்லாவிடில் யாரோ அனுபவிப்பார்கள். பட்டினத்தார் பாடலை நினைவு கொள்ளவும்.

பாடு பட்டுத் தேடி பணத்தை புதைத்து வைக்கும் பாவிகாள் கூடு விட்டிங்கு உயிர்தான் போனபின் யாரே அனுபவிப்பார் அந்தப் பணம்.

திங்கள், 17 பிப்ரவரி, 2014

பேங்கில் பணம் போடும் இதர (நேர்) வழிகள் - பாகம் 4


இது வரை ரொக்கமாக அல்லது செக்/டிராப்ட் மூலமாக உங்கள் கணக்கில் பணம் செலுத்துவது எப்படி என்று பார்த்தோம். இதுதான் பழைய காலத்திலிருந்து வரும் பாரம்பரிய முறை. சிக்கலில்லாதது. நேரடி முறை. நம் கண்ணுக்கு முன்னால் நடப்பது. இதற்கு அதிகார பூர்வமான அத்தாட்சிகள் வைத்துக்கொள்ளலாம். பத்து வருடங்கள் கழித்து கூட ஏதாவது சந்தேகம் வந்தால் இந்த அத்தாட்சிகள் மூலமாக அவைகளை சரி பார்க்கலாம்.

ஆனால் தற்போது கலி முற்றிக்கொண்டு வருகிறது. அதற்கேற்றார்ப்போல பல கலியுக சமாச்சாரங்களும் பேங்கில் புகுந்துள்ளன. அவைகளில் முக்கியமானது இன்டர்நெட் பேங்கிங்க் என்ற மாயப்பிசாசு. "பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசு" என்ற பட்டினத்தார் பாடலை அறிந்திருப்பீர்கள். அறிந்திராதவர்களுக்காக லிங்க் கொடுத்திருக்கிறேன்.

"இன்டர்நெட்" அல்லது வெறும் "நெட்" அல்லது தூய தமிழில் "இணையம்" என்று அழைக்கப்படும் கம்ப்யூட்டர் உத்தியை  அனைவரும் அறிவீர்கள். ஏறக்குறைய பேங்க் நடவடிக்கைகள் அனைத்தும் இதன் மூலமாகத்தான் தற்போது நடக்கின்றன. எல்லாம் ஒரு நொடிப்பொழுதில் நடந்து விடும். இது எல்லோருக்கும் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லாம்..

குறிப்பாக பேங்க் திருடர்களுக்கு. முன் போல் கடப்பாரை, மம்முட்டி (கேரள சினிமா நடிகர் அல்ல) + கூட்டாளிகளுடன்/அல்லது துப்பாக்கி, கத்தி சகிதம் பேங்க்கிற்குப் போய் கொள்ளையடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு கம்ப்யூட்டரும் இணைய இணைப்பும்தான். அவர்கள் வீட்டிலிருந்தவாறே, படுக்கையில் படுத்துக் கொண்டே சௌகரியமாகத் திருடலாம்.

இந்த வம்பெல்லாம் நமக்கு வேண்டாம். இணையத்தின் மூலமாக நாம் செய்யக்கூடிய சட்த்திற்குட்பட்ட காரியங்களைப் பார்ப்போம்.

இன்டர்நெட் பேங்கிங்க் வசதி வாங்குவதற்கு முன் ஒருவர் நன்றாக யோசித்து முடிவு செய்யவேண்டும். வீட்டில் ஒரு நல்ல கம்ப்யூட்டர் வேண்டும். நெட் வசதி வேண்டும். (பிராட் பேண்ட் ஆக இருந்தால் நல்லது) இந்த சாதனங்களை நன்கு பயன்படுத்தும் அனுபவம் வேண்டும். இவை இல்லாமல் நெட் பேங்கிங்க் வசதி பெறுவது வீண் வம்பை விலை கொடுத்து வாங்குவதற்குச் சமம்.

ஒருவர் தன்னுடைய பேங்க் கணக்கில் இன்டர்நெட்  பேங்கிங்க் வசதி வேண்டுமென்றால் பேங்கிற்கு அதற்குரிய படிவத்தில் விண்ணப்பிக்கவேண்டும். அப்படி விண்ண்ப்பித்த பிறகு ஒரு பத்து இருபது நாளில் உங்களுக்கு ஒரு தபால் அல்லது கூரியர் தபால் வரும். அதில் உங்களது உபயோகிப்பாளர் பெயரும் கடவுச்சொல்லும் இருக்கும். அதாவது யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டு இருக்கும்.

இவை இரண்டும் மிக முக்கியமானவை. அவைகளை யாரிடமும் சொல்லாமல் இருக்கவேண்டும். தவிர அந்த பாஸ்வேர்டை முதல் முறை இன்டர்நெட் உபயோகிக்கும்போது மாற்றிவிடவேண்டும்.

அடுத்தது நீங்கள் அந்த பேங்கின் இன்டர்நெட் பேங்கிங்க் தளத்திற்கு சொல்லவேண்டும். அங்கு சென்று உங்களுக்கு பேங்க் கொடுத்துள்ள யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டைக்கொண்டு அந்த தளத்திற்கு உள்ளே செல்லவேண்டும். உள்ளே சென்றதும் முதல் வேலையாக உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளவேண்டும்.

இந்த இரண்டும் ஓரளவிற்கு பாதுகாப்பானதாக இருக்கவேண்டும். மற்றவர்கள் எளிதில் யூகிக்கும்படியாக, உங்கள் பெயர் அல்லது உங்கள் குழந்தைகள் பெயர் இவைகளை உபயோகப்படுத்தாமல் இருப்பது நலம். இந்த யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டை எங்கும் எழுதி வைக்காதீர்கள் என்று பேங்க்கில் சொல்லுவார்கள். அதற்கு காரணம் வேறு. அதை பிற்பாடு சொல்கிறேன். இப்போதைக்கு நான் சொல்வதை கேளுங்கள். அந்த யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை ஒரு தனி நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது அந்த தளத்திலிருந்து லாக்அவுட் செய்யுங்கள். பிரவுசரை குளோஸ் செய்துவிட்டு திரும்பவும் ஓபன் செய்யுங்கள். பேங்க்கின் தளத்திற்கு சென்று இன்டர்நேட் பேங்க்கிங்க் தளத்திற்கு செல்லவும். யூசர்நேம் பாஸ்வேர்டு உபயோகித்து தளத்தினுள் செல்லவும். இப்போது தளத்தினுள் சென்று விட்டீர்கள் என்றால் நீங்கள் ஒரு சாதனையாளர் என்று மார் தட்டிக்கொள்ளலாம். இப்போது நீங்கள் உங்கள் கணக்கின் விபரங்கள் அனைத்தும் பார்க்கலாம்.

ஒரு முக்கியமான விஷயம். பொது இடங்களில் உள்ள பிரவுசிங்க் சென்டர்களில் அல்லது உங்கள் அலுவலக கம்ப்யூட்டரில் அல்லது உங்கள் நண்பர்கள் கம்ப்யூட்டர்களில் இந்த இன்டர்நெட் பேங்கிங்க் வேலைகளை செய்யவேண்டாம். ஒரு நாள் இல்லாவிட்டால் இன்னொரு நாள் நீங்கள் வம்பில் சிக்கிக்கொள்வீர்கள்.

அடுத்தது. எப்போதும் இன்டர்நெட் பேங்கிங்க் வேலைகள் முடிந்தவுடன் மறக்காமல் லாக்அவுட் செய்து விட்டே பிரவுசரை மூடவேண்டும். வீட்டில் குழந்தைகள் இருப்பவர்கள் தயவு செய்து அவர்களுக்கு இந்த இன்டர்நெட் பேங்கிங்க் முறைகளை கற்றுக்கொடுக்காதீர்கள். அவர்கள் சம்பாதிக்கும்போது கற்றுக்கொள்ளட்டும்.

இந்த இன்டர்நெட் பேங்க்கிங்க் வசதி பெற்றபின் நீங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கிய சமாசாரம் என்னவென்றால் உங்கள் உயிரே போவதானாலும் இந்த பாஸ்வேர்டை யாரிடமும் சொல்லக்கூடாது. நீங்கள் பாஸ்வேர்டு எழுதிவைத்துள்ள நோட்டுப்புத்தகம் யார் கையிலும் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதற்காகத்தான் பேங்க் ஆட்கள் இந்த யூசர்நேம், பாஸ்வேர்டை எங்கும் எழுதி வைக்காதீர்கள் என்று சொல்கிறார்கள்.

இப்படி எழுதி வைக்காமல் பாஸ்வேர்டை நீங்கள் மறந்து விட்டால் பாஸ்வேர்டை மாற்றியமைக்க நீங்கள் பேங்க்கின் உதவியை நாடவேண்டி வரும். அதற்கு அவர்கள் ஒரு கட்டணம் வசூலிப்பார்கள். பேங்கின் வருமானத்தைப் பெருக்க இது இன்னுமோர் வழி. ஏன் பேங்க்குக்காரர்கள் யூசர்நேம், பாஸ்வேர்டை எழுதி வைக்கவேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று புரிந்ததல்லவா.(திரு நடனசபாபதி கண்டனம் தெரிவிக்க மாட்டார் என்று நம்புகிறேன்)

மொபைல் பேங்க்கிங்க் பற்றியும் இப்போதே சொல்லிவிடுகிறேன். இதுவும் இன்டர்நெட் பேங்க்கிங் மாதிரியேதான். என்ன, இதற்கு மொபைல் போன் வேண்டும். அதுதான் இப்போது மொபைல் போன் எல்லோரும் ஒன்றுக்கு இரண்டாக வாங்கி  வைத்திருக்கிறார்களே.

இதில் இரண்டு வகை உண்டு. உங்கள் மொபைல் போன் நெம்பரை பேங்கில் ரிஜிஸ்டர் செய்து விட்டால் உங்கள் கணக்கில் நடக்கும் அனைத்து பரிமாற்றங்களும் எஸ்எம்எஸ் மூலமாக உங்கள் மொபைல் போனுக்கு வந்து விடும். இது ஒரு நல்ல சௌகரியம். இது சாதாரண மொபைல் போன் வைத்திருக்கும் ஏழைகளுக்கு ஏற்படுத்தப்பட்ட உதவி.

இன்னொரு வகை - நீங்கள் ஸ்மார்ட் போன் வைத்திருந்தால் மொபைல் பேங்க்கிங்க் வசதிக்கு விண்ணப்பிக்கலாம். இன்டர் நெட் போன்றே யூசர்நேம், பாஸ்வேர்டு தருவார்கள். உங்கள் மொபைலில் உங்கள் பேங்கிகிற்கான App ஐ மொபைல் ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்து, அந்த App மூலம் இந்த யூசர்நேம், பாஸ்வேர்டு உபயோகித்து உங்கள் கணக்கில் நுழையலாம். இந்த வசதி மூலம் நீங்கள் இன்னொருவருக்கு பணம் அனுப்பலாம், மொபைல் ரீசார்ஜ் செய்யலாம், DTH  க்கு டாப்-அப் செய்யலாம், ரயில், சினிமா டிக்கட்டுகள் வாங்கலாம், இன்னும் என்னென்னமோ  .....லாம்.

ஒன்றை மட்டும் நன்றாக கவனம் வைத்துக்கொள்ளுங்கள். இன்டர்நெட் சமாச்சாரம் முழுவதும் சர்க்கஸில் கம்பி மேல் நடக்கிறார்களே அதே மாதிரிதான். கரணம் தப்பினால் மரணம்தான். நாளைக்கு உங்கள் பணத்தை யாராவது லவட்டிக்கொண்டு போன பிறகு பழனி. கந்தசாமியைக் குறை கூறிப் பயனேதுமில்லை.

இப்படி இன்டெர்நெட் கணக்கும் மொபைல் பேங்கிங் கணக்கும் வைத்திருப்பவர்கள் அவர்கள் கணக்கில் இருந்து உங்கள் கணக்கிற்கு பணம் போடலாம். அதேபோல் ஏடிஎம் கார்டு உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் இருந்தால் ஒருவர் கணக்கிலிருந்து இன்னொருவர் கணக்கிற்கு பணபரிவர்த்தனை செய்யலாம்.

இதுவரை உங்கள் கணக்கில் பணம் எந்தெந்த வகைகளில் போடலாம் என்று பார்த்தோம். அப்படி போட்ட பணத்தை எப்படி எடுப்பது என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.

சனி, 15 பிப்ரவரி, 2014

Actual Practical experience.

இது ஒரு இடைச்செருகல். இந்தக் கதை எனக்கு மெயிலில் வந்தது. உங்களுக்கும் வந்திருக்கலாம். ஆனால் கதையின் நீதி நம் அன்றாட வாழ்க்கைக்கு உதவும். பேங்க் பதிவு வழக்கம்போல் திங்கட்கிழமை வெளியாகும்.


Once a group of 50 people was attending a seminar.

Suddenly the speaker stopped and started giving each one a balloon. Each one was asked to write his/her name on it using a marker pen. Then all the balloons were collected and put in another room.
Now these delegates were let in that room and asked to find the balloon which had their name written, within 5 minutes. Everyone was frantically searching for their name, colliding with each other, pushing around others and there was utter chaos.

At the end of 5 minutes no one could find their own balloon.
Now each one was asked to randomly collect a balloon and give it to the the person whose name was written on it.

Within minutes everyone had their own balloon.

The speaker began--- Exactly this is happening in our lives. Everyone is frantically looking for happiness all around, not knowing where it is. 

Our happiness lies in the happiness of other people. Give them their happiness, you will get your own happiness.

And this is the purpose of human life. 

திங்கள், 10 பிப்ரவரி, 2014

பேங்க் கணக்குகள் - பாகம் 3


பேங்குகளில் உங்கள் கணக்கில் பணம் கட்டுவது எப்படி என்று போன பதிவில் பார்த்தோம். அதில் முக்கியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிட மறந்து விட்டேன். அதாவது பேங்கில் கட்டுவதற்கு உங்களிடம் பணம் இருக்கவேண்டும்.

பணம் இல்லாமலும் பேங்குகளில் பணம் கட்டுவதற்கும் வழி முறைகள் இருக்கின்றன. ஆனால் அதற்கு நீங்கள் முதலில் ஒரு எம்.பி. ஆகவேண்டும். அப்போது பேங்கில் உங்கள் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பணம் எடுக்கலாம். பணம் இல்லாமலும் உங்கள் கணக்கில் பணம் போடலாம். (திரு.நடனசபாபதி கவனிக்கவும்)

ஆகவே வரும் பார்லிமென்ட் தேர்தலில் நின்று எப்படியாவது ஒரு எம்.பி. ஆகிவிடுங்கள். அப்புறம் நீங்கள் முடி சூடா மன்னனேதான்.

நிற்க, இப்போது உங்கள் கணக்கில் பணம் போடுவது பற்றி தொடர்வோம். உங்களுக்கு வர வேண்டிய பணம் சில சமயம் காசோலை மூலமாகவும் வரலாம். அதுதாங்க செக் மூலமாகவும் வரலாம். செக்கில் இரண்டு வகை உண்டு. கிராஸ் செய்தது அல்லது கிராஸ் செய்யாதது.

கிராஸ் செய்யாத செக்குகளை அதன் பின்புறம் உங்கள் கையெழுத்து மற்றும் போன் நெம்பர் எழுதி, அது எந்த பேங்க் செக்கோ அந்த பேங்கில் போய் கொடுத்தால் உங்களை நன்கு விசாரித்து விட்டு பணம் கொடுப்பார்கள். கொஞ்ச நஞ்சம் சந்தேகம் வந்தாலும் பணம் கொடுக்கமாட்டார்கள். இது ஒரு பாதுகாப்பு ஏற்பாடு. கணக்கு வைத்திருப்பவர்களின் நலன் கருதி இதில் ஜாக்கிரதையாக இருப்பார்கள். ஏதாவது தவறு நேர்ந்து விடக்கூடாதல்லவா.

கிராஸ் செய்வதில் இரண்டு வகை உண்டு.

1. சாதாரண கிராஸ் - இந்த வகை செக்குகளை ஏதாவது ஒரு அக்கவுன்ட்டில் (உங்களுடையதாக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை) போட்டு பணம் பண்ணிக்கொள்ளலாம்.


2. "அக்கவுன்ட் பேயீ" கிராஸ் - இவ்வகை செக்குகளை செக் யார் பெயரில் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவருடைய அக்கவுன்ட்டில்தான் செலுத்த முடியும்.


செக்குகளை அக்கவுன்ட்டில் போடுவதற்கும் செலான் பூர்த்தி செய்யவேண்டும். ரொக்கப் பணம் கட்டுவதற்கு உபயோகிக்கும் அதே செலான்தான். விவரங்களை தவறு இல்லாமல் பூர்த்தி செய்யவேண்டும். குறிப்பாக கணக்கு எண் மாறிவிட்டால் பணம் வேறு ஒருவர் கணக்கிற்கு போய்விடும். அப்புறம் அதை மீட்பது சிரமம்.

செலான் படிவத்தைப் பூர்த்தி செய்து அதன் கௌன்டர்பாயிலை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அந்த படிவத்துடன் உங்கள் செக்கை ஒரு குண்டூசி மூலம் இணைத்து பேங்கில் உள்ள ஒரு பெட்டியில் போடவேண்டும். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் - செக் மேலேயும் செலான் படிவம் கீழேயும் இருக்கவேண்டும். குண்டூசியால் மட்டுமே இணைக்கவேண்டும். ஸ்டேப்ளர் பின்னால் இணைக்கக் கூடாது.

இப்படி செக்கை பேங்கில் போடுவதற்கு cheque presentation  என்று சொல்வார்கள்.
செக்கைப் போட்டு மூன்றாவது நாள் உங்கள் கணக்கில் பணம் சேர்ந்து விடும். அப்படி சேர்ந்து விட்டதா என்று சரி பார்த்துக்கொள்வது அவசியம். ஏனெனில் சில சமயம் உங்களுக்கு செக் கொடுத்தவர் கணக்கில் போதிய பணம் இல்லாவிட்டால் செக் திரும்பிவிடும். அப்படி செக் திரும்பி விட்டால் உங்களுக்கு அபராதம் போடுவார்கள். ஒவ்வொரு பேங்கிலும் ஒவ்வொரு தொகை அபராதமாகப் போடுவார்கள். இது 300 ரூபாய் வரை போகலாம்.

இந்த மாதிரி கணக்கில் பணம் இல்லாமல் செக் கொடுப்பது என்பது வியாபாரத்தில் ஒரு முக்கியமான அம்சம். வியாபாரிகளினால் சர்வ சாதாரணமாக கடைப்பிடிக்கப்படும் ஒரு நடைமுறை. பணம் கொடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும்போது எந்த மனச்சாட்சி உறுத்தலும் இல்லாமல் செக் கொடுத்து விடுவார்கள். கொஞ்ச நஞ்சம் மனச்சாட்சி பாக்கி உள்ளவர்கள், செக்கை வாங்கின ஆள் போன ஐந்தாவது நிமிடத்தில் அந்த கம்பெனிக்கு போன் பண்ணி, இப்போது உங்கள் ஆளிடம் ஒரு செக் கொடுத்திருக்கிறேன், அதை நான் சொன்ன பிறகு பேங்கில் போடுங்கள் என்று சொல்லிவிடுவார்கள்.

மனச்சாட்சியை சுத்தமாக துடைத்து வைத்திருப்பவர்கள் இதையும் சொல்ல மாட்டார்கள். அந்த செக் பேங்கிற்குப் போய் பணம் இல்லாமல் திரும்பி விட்ட பிறகு, அந்தப் பார்ட்டி கூப்பிட்டு கேட்டால் இவர்கள் ஏதாவதொரு நொண்டி சமாதானம் சொல்லுவார்கள். நீங்கள் அந்தச் செக்கை திரும்பவும் போடுங்கள், பணம் வந்து விடும் என்பார்கள். இப்படியே இந்த விளையாட்டு தொடரும்.

தன் கணக்கில் பணம் இல்லாமல் செக் கொடுப்பது இன்றைய சட்டப்படி ஒரு கிரிமினல் குற்றம். அப்படி செக் கொடுத்தவரை ஜெயில் வரைக்கும் கொண்டு போக சட்டத்தில் வழி இருக்கிறது. ஆனால் அது எல்லாம் வம்பை விலை கொடுத்து வாங்கும் சமாச்சாரம். சாதாரண மனிதனுக்கு உதவாது. ஆகவே உங்களுக்கு யாராவது செக் கொடுத்தால் அந்த நபர் நம்பிக்கைக்கு உகந்தவரா என்று ஆராய்ந்து அந்த செக்கை வாங்கவும்.

பேங்க் டிராப்ட் என்று ஒரு முறை இருக்கிறது. இது 99.9 சதம் நம்பிக்கையானது. இது ஒருவர் பேங்கில் பணம் கட்டி இன்னொருவர் பெயருக்கு வாங்குவது. பேங்க் டிராப்ட் ஏறக்குறைய செக் மாதிரிதான். ஆனால் இதற்கு பேங்க் கேரண்டி உண்டு. பணம் கண்டிப்பாய் வந்து விடும் என்று நம்பலாம்.

ஏன் 0.1 சதவிகிதம் தொங்கல் வைத்திருக்கிறேன் என்றால் பேங்க் டிராப்டிலும் பம்மாத்து வேலை செய்யக்கூடிய கில்லாடிகள் இருக்கிறார்கள். 1000 ரூபாய்க்கு பேங்க் டிராப்ட் வாங்கி அதை கோடி ரூபாய்க்கு மாற்றக்கூடிய ஜகஜ்ஜால மந்திரவாதிகள் நம்ம ஊரில் உண்டு. ஆனால் இப்போது இன்டர்நெட் வசதிகள் முன்னேறிவிட்டபடியால் இத்தகைய புரட்டர்களுக்கு கஷ்ட காலமாய் இருக்கிறது.

இந்த பேங்க் டிராப்ட் பொதுவாக வெளியூர்களுக்கு அனுப்பும்போதுதான் தேவைப்படும். உள்ளூரிலேயே செல்லுபடியாக வேண்டியதாயிருந்தால் அதற்கு பேங்கர்ஸ் செக் என்று ஒன்று நடைமுறையில் இருக்கிறது. இரண்டும் ஏறக்குறைய ஒன்றேதான். இரண்டுக்கும் பேங்க் கமிஷன் வாங்குவார்கள்.

பேங்க் முறை மிகவும் சௌகரியமானதுதான். ஆனால் அது இரண்டு பக்கமும் தீட்டப்பட்ட கத்தி போன்றது. ஏமாந்தால் உங்களையும் வெட்டிவிடும்.

உங்கள் கணக்கில் பணம் போட இன்னும் சில வழி முறைகள் இருக்கின்றன. அடுத்த பதிவில் பார்ப்போம்.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

பேங்க் கணக்குகள் - பாகம் 2


ஆகக்கூடி பேங்க்கில் கணக்கு ஆரம்பித்து விட்டீர்கள். ஆகவே நீங்கள் அந்த பேங்க்கின் மிகுந்த மரியாதைக்குரிய கஸ்டமர். நீங்கள் போகும்போதெல்லாம் அந்த பேங்க்கின் மேனேஜர் எழுந்து வந்து உங்களை வரவேற்பார் என்ற கற்பனையெல்லாம் வைத்துக் கொள்ளாதீர்கள. "கஸ்டமர் டே" என்று ஒரு நாள் இருக்கிறது. அன்று மட்டும் உங்களுக்கு மிட்டாய் கொடுத்து வரவேற்பார்கள். மற்ற நாட்களில் நீங்களே ராஜா, நீங்களே சேவகன்.

பேங்கில் முதல் முதலாக நுழையும்போது கொஞ்சம் பிரமிப்பாக இருக்கும். எதற்கு எங்கே போகவேண்டும் என்ற விவரம் புரியாது. கொஞ்ச நாளில் சரியாகிவிடும்.

முதல் வேலையான உங்கள் கணக்கில் பணம் கட்டுதல் எப்படி என்று பார்ப்போம்:. பணம் கட்டினால்தான் பின்னால் தேவைப்படும்போது எடுக்க முடியும். பணம் கட்டாமலேயேயும் பணம் எடுக்கலாம். அது ஒரு தனிக்கலை. அதை பின்னால் சொல்கிறேன்.

உங்கள் கணக்கில் பணம் கட்ட ஒரு "பணம் செலுத்துப் படிவம்" (செலான் = chalan) உபயோகப்படுத்த வேண்டும். இதை சரியாக பூர்த்தி செய்வதே ஒரு கலை. இந்தப் படிவம் ஏறக்குறைய எல்லா பேங்குகளிலும் கொசகொசவென்றே இருக்கும். வேண்டுமென்றே இப்படி வைத்திருக்கிறார்களோ என்று எனக்கு அடிக்கடி தோன்றுவதுண்டு.

எழுத்துக்கள் மங்கலாகவும் மிகச்சிறியதாகவும் இருக்கும். இந்த மாதிரி அச்சடிப்பதற்கென்றே தனி அச்சகங்கள் இருக்கும் என்பது என் சந்தேகம். ஓரிரு முறை உபயோகப் படுத்தின பிறகு தெளிவு பிறக்கும். கணக்கு ஆரம்பிக்கும்போதே சில படிவங்களை வாங்கிக்கொண்டு போய் வீட்டில் நேரம் இருக்கும்போது பயிற்சி எடுத்துக்கொண்டீர்களானால் சுலபமாக இருக்கும்.

இதில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒரு பகுதி பெரிதாகவும் இன்னொரு பகுதி சிறியதாகவும் இருக்கும். சிறிய பகுதி உங்களுக்குக் கொடுப்பதற்காக. இதை கவுன்டர்பாயில் - counterfoil  என்பார்கள்.

இந்தப் படிவங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கும். சில சமயம் நமது தேசீய மொழியான இந்தியிலும் இருக்கும். எங்க ஊர் மாதிரி கேரளாவிற்குப் பக்கத்தில் உள்ள ஊரானால் மலையாளத்திலும் இருக்கும். கேரளப் பெண்கள் அழகானவர்கள் என்று பாரதியார் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். எனக்கு நேரடி அனுபவம் இல்லை. ஆனால் மலையாள எழுத்துக்கள் ஜிலேபி மாதிரி இருக்கும்.

ஆனால் நான் ஒரு போதும் தமிழில் அச்சடிக்கப்பட்ட படிவங்களைப் பார்த்த தில்லை. ஆனால் நாம் இதில் தமிழிலும் எழுதலாம். ஒப்புக்கொள்வார்கள். இந்தப் படிவத்தை வீட்டிலேயே பூர்த்தி செய்து எடுத்து வருவது நல்லது. இதில் எழுத வேண்டிய முக்கியமான விவரங்கள்.

1. தேதி

2.உங்கள் கணக்கின் எண் - இது மிகவும் முக்கியம். தவறாக எழுதிவிட்டால் உங்கள் பணம் கோவிந்தாதான்.

3. உங்கள் பெயர் - இதில் தவறு நேரும் வாய்ப்பு குறைவு.

4. எவ்வளவு பணம் கட்டப்போகிறீர்கள் என்ற விவரம். எண்ணிலும் எழுத்தாலும்.

5. நீங்கள் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் (அது எப்படியிருக்கும்?) கட்டினால் உங்கள் பேன் கார்டு (தலையிலிருக்கும் பேன் அல்ல - PAN கார்டு) எண்ணைக் குறிப்பிடவேண்டும்.

6. நீங்கள் கட்டும் பணத்தின் விவரங்கள். அதாவது பத்து ரூபாயில் எவ்வளவு, நூறு ரூபாயில் எவ்வளவு, ஐந்நூறில் எவ்வளவு, இப்படியான விவரங்கள். ஒவ்வொன்றிலும் எவ்வளவு எண்ணிக்கை, அதன் மொத்த மதிப்பு எவ்வளவு என்பதை எல்லாம் விலாவாரியாக குறிக்கவேண்டும். அதற்கென்றே ஒரு தனி இடம் கட்டம் போட்டு அச்சடித்திருப்பார்கள். கடைசியில் மொத்த தொகை எவ்வளவு என்று குறிப்பிடவேண்டும்.

8. பேங்கிற்கு பணம் கட்டப் போகும்போது ரூபாய் நோட்டுகளை ஒழுங்காக அடுக்கிக் கொண்டு போகவேண்டும். ஒவ்வொரு வகைக்கும் தனித்தனியாக ரப்பர் பேண்ட் போட்டு ஒரு ஒழுங்கில் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கணக்கர் உங்களைத் திட்டுவார். இந்த திட்டு ஒவ்வொரு ஊருக்கும் வேறுபடும். "சாவு கிராக்கி" என்பது எல்லா ஊருக்கும் பொது.

7. உங்கள் கையெழுத்து.

8. உங்கள் போன் நெம்பர்.

9. சில படிவங்களில் பேங்க் கிளையின் பெயரை காலியாக விட்டிருப்பார்கள். அதில் அந்தக்கிளையின் பெயரை எழுதுவது உத்தமம்.

இதையெல்லாம் பால் பாயின்ட் பேனாவாலோ அல்லது இங்க் பேனாவினாலோ எழுத வேண்டும். பென்சிலால் எழுதக்கூடாது. கருப்பு அல்லது நீலக் கலர் பேனாதான் உபயோகப் படுத்தவேண்டும்.  சிகப்புதான் எனக்குப் பிடித்த கலர் என்று அதிலெல்லாம் எழுதக்கூடாது. அந்த மாதிரி கலர்களில் எழுதுவதற்கு பேங்க் அதிகாரிகள் மட்டுமே காப்புரிமை பெற்றிருக்கிறார்கள்.

இதையெல்லாம் சரியாக செய்து பேங்கிற்குப் போனால் அங்கு கூட்டம் அலைமோதும். அதைக் கட்டுப்படுத்த இப்போது டோகன் சிஸ்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த டோகனை எடுத்துக்கொண்டு காத்திருக்கவேண்டும். இந்த டோகனைக் கொடுப்பதற்கென்றே ஒரு மிஷின் இருக்கிறது. அதை வழக்கமாக யாருக்கும் சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் வைத்திருப்பார்கள். இதை நீங்கள் விசாரித்து அறிந்து கொள்ளவேண்டும்.

டோகன் எடுத்துக்கொண்டு ஒரு மூலையில் உட்கார்ந்து ஒரு குட்டித்தூக்கம் போட்டீர்களானால் உங்கள் முறை வந்துவிடும். உங்கள் முறை வந்து விட்டதா என்று காண்பிப்பதற்கு ஒரு எலெக்ட்ரானிக் அறிவிப்புப் பலகை இருக்கும். அதில் டோகன் நெம்பர், கவுன்டர் நெம்பர் காண்பிக்கும். அந்தக் கவுன்டருக்குப் போய் உங்கள் டோகன், செலுத்துப் படிவம், பணம் எல்லாவற்றையும் கொடுத்தீர்களானால் அவைகளை வாங்கி சரி பார்த்து செலானில் சீல் குத்தி ஒரு கிறுக்கல் கையெழுத்துப் போட்டு கவுன்டர்ஃபாயிலை உங்களுக்கு கொடுப்பார்கள்.

அவ்வளவுதான். ஆஹா, நீங்கள் ஒரு வெற்றி வீரர்!

மற்ற வேலைகளை அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.