புதன், 28 டிசம்பர், 2016

கவலை ஏன்?

நண்பர் என். கணேசன் அவர்கள் பதிவிலிருந்து அவரைக் கேட்காமல் எடுத்துப் போட்டது. நன்றிகள் கணேசனுக்கே உரியன.

வெள்ளி, 23 டிசம்பர், 2016

சர்க்கரை நோயைக் கையாளும் வழிகள்

இது ஒரு மீள் பதிவு


சர்க்கரை நோயைக் கையாளும் வழிகள்


சர்க்கரை நோயைப் பற்றி பல மருத்துவர்கள் குறிப்பாக டாக்டர் முருகானந்தம் பல பதிவுகள் எழுதியிருக்கிறார். அந்தப் பதிவுகள் மருத்துவ ரீதியில் மிகவும் துல்லியமானவை. பல மருத்துவ ஆராய்ச்சிகளின் முடிவுகளைத் தொகுத்து அதன் சாராம்சங்களை கொடுத்துள்ளார்.

ஆனால் சாதாரண சர்க்கரை நோய் உள்ள, சாதாரண மனிதனுக்கு அந்த குறிப்புகளை மனதில் வாங்கி நடைமுறைப் படுத்துவது கொஞ்சம் சிரமமான சமாச்சாரம். அதற்காக, என்னைப் போல் உள்ள பாமர மக்களுக்கும் புரியும்படி சிறு குறிப்புகள் கொடுத்திருக்கிறேன். இவைகளைச் சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்கிறதென்று கேட்கிறீர்களா? 20 வருடகாலம் சர்க்கரை நோய் அனுபவம் எனக்கு இருக்கிறது. அதைவிட வேறென்ன வேண்டும்.

இவை யாவும் நான் கற்றுக்கொண்ட நடைமுறை உண்மைகள். ஆனால் இவைகளைக் கடைப்பிடிக்கும்போது ஏதாவது சிக்கல்கள் வருகிற மாதிரி தோன்றினால் உடனே உங்கள் வழக்கமான டாக்டரைப் பார்த்து விடுங்கள்.

1. நீங்கள் சர்க்கரை நோயாளி என்பதை முதலில் மறந்து விடுங்கள். கவலை சர்க்கரை நோயை அதிகரிக்கும்.

2. எப்போதும் போல் எல்லா உணவுகளையும் சாப்பிடலாம். ஆனால் பழைய அளவில் பாதி மட்டும் சாப்பிடவேண்டும். அதாவது முன்பு ஒரு டஜன் இட்லி சாப்பிடுபவராக இருந்தால் இப்போது அரை டஜன் மட்டும் சாப்பிடவும்.

3. நீங்கள் காப்பிப் பிரியரா? சர்க்கரை இல்லாத காப்பி குடிப்பதற்குப் பதிலாக விஷத்தை குடித்து விடலாம். நல்ல காப்பி குடிக்காமல் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? என்ன இரண்டு ஸ்பூன் சர்க்கரைக்குப் பதிலாக ஒரு ஸ்பூன் போட்டுக் கொள்ளுங்கள். ஒரு மாதத்தில் பழகி விடும்.

அதற்குப்பிறகு ஒரு ஸ்பூனுக்குப் பதிலாக அரை ஸ்பூன் சர்க்கரை மட்டும் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்த ஒரு மாதத்தில் இதுவும் பழகி விடும்.

அப்புறம் மற்றவர்கள் குடிக்கும் காப்பி பாயசம் மாதிரி இருக்கும். என்னய்யா காபி குடிக்கறீங்களா, இல்லை பாயசம் குடிக்கிறீங்களா என்று மற்றவர்களைக் கலாய்க்கலாம்.

4.கல்யாணம் மாதிரி விசேஷங்களுக்குப் போனால் விருந்தில் நன்றாக ஒரு வெட்டு வெட்டுபவரா நீங்க? கவலையே படாதீங்க. கல்யாணங்களுக்குப் போவதை அடியோடு நிறுத்துங்கள்.

5. டாக்டர் சொல்லும் மருந்துகளைத் தவறாது டாக்டர் சொன்ன முறைப்படி சாப்பிட்டுவிடுங்கள். இதில் எந்த மாற்றமும் கூடாது.

6.பசி வந்தால் உடலில் சர்க்கரையின் அளவு குறைந்து "லோ சுகர்" ஆகிவிடும். அப்போது கைகால்களில் ஒரு மாதிரி நடுக்கம் வந்து விடும். இதை கவனிக்காமல் விட்டு விட்டால் மயக்கம் கூட வரலாம். இந்த நிலை வராமல் காத்துக்கொள்ள வேண்டும்.

7. மாதம் ஒரு முறை தவறாமல் ரத்தத்தின் சர்க்கரை அளவை சோதித்துக் கொள்ளுங்கள். வெறும் வயிற்றில் எடுக்கப்படும் சர்க்கரையின் அளவு 150 க்கு கீழ் இருந்தால் கவலைப்பட ஒன்றுமில்லை. 100 இருந்தால் அன்று நீங்கள் ஒரு ஸ்வீட் சாப்பிடலாம்.

8. எங்கேயாவது ஸ்வீட் அல்லது ஐஸ்கிரீம் சாப்பிட நேர்ந்தால் இரண்டாக சாப்பிட்டு விடுங்கள். அப்போதுதான் உங்கள் மனதில் குற்ற உணர்வு அதிகரித்து அப்புறம் கொஞ்ச நாளைக்கு ஸ்வீட் பக்கம் போகாமலிருப்பீர்கள்.

9. வீட்டில் மற்றவர்கள் எல்லாம் வக்கணையாக, விதம் விதமாக ஸ்வீட்டுகள் செய்து சாப்பிடுவார்கள். அவர்கள் மேல் வரும் கொலைவெறியை எப்படியாவது கட்டுப் படுத்துங்கள். ஜெயில் களி ரொம்ப மோசமாயிருக்கும்.

10. தினமும் தவறாமல் முக்கால் மணி நேரம் நடைப் பயிற்சி செய்யுங்கள். இது மிகவும் அவசியம்.

அவ்வளவுதானுங்க. ஜாம் ஜாமுன்னு சர்க்கரையில்லா வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

மாவுச்சத்து உடலில் சக்தியாக மாறும் அதிசயம்

இது ஒரு மீள் பதிவு


மாவுச்சத்து சக்தியாக மாறும் அதிசயம்


இந்த மாவுச் சத்து உடலுக்குள் போய் எப்படி சக்தியாக மாற்றமடைகிறது என்பதை பார்ப்போம்.

அனைத்து மாவுச்சத்துக்களும் அடிப்படையில் சர்க்கரையே. நூற்றுக்கணக்கான சர்க்கரை மூலகங்கள் பிணைந்து மாவுச்சத்தாக உருவெடுத்திருக்கிறது. இந்த மாவுச்சத்து திரும்பவும் சர்க்கரையாக மாறினால்தான் மனிதனுக்கு உபயோகமாகும். இந்த மாற்றம் மனிதனுடைய இரைப்பையிலும் சிறுகுடலிலும் ஏற்படுகிறது. இவ்வாறு மாவுச்சத்து சர்க்கரையாக மாறியபின் அந்த சர்க்கரை இரத்தத்தினால் உறிஞ்சப்பட்டு உடலின் எல்லாப் பாகங்களுக்கும் செல்கிறது.


சாப்பிட்டவுடன் இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவது இதனால்தான். வெறும் சர்க்கரையைச் சாப்பிட்டால்தான் இரத்தத்தில் சர்க்கரை கூடும், இட்லி, தோசை, சாதம் முதலானவை சாப்பிட்டால் அவ்வாறு சர்க்கரை கூடாது என்று இன்றும் பல சர்க்கரை நோயாளிகள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அது தவறு என்று அவர்கள் உணரவேண்டும்.


சர்க்கரை சக்தியாக மாறுவது எப்படி?

(இந்தத் தலைப்பை Ctrl + click செய்தால் இதைப் பற்றிய விரிவான ஆங்கிலக் கட்டுரைக்கு செல்லலாம்.) 


மாவுச்சத்து இரைப்பையை அடைந்தவுடன் பல என்சைம்களினால் ஜீரணமாகத் தொடங்குகிறது. இந்த ஜீரணம் சிறுகுடலிலும் தொடர்கிறது. இதன் காரணமாக மாவுச்சத்து குளுகோஸ் ஆக மாறி, இரத்தத்தினால் உறிஞ்சப்படுகிறது. சாப்பிட்டவுடன் இந்த சர்க்கரையின் அளவு இரத்தத்தில் அதிக அளவில் இருக்கும். அத்தனை சர்க்கரையும் உடலுக்கு உடனடியாகத் தேவைப்படுவதில்லை. ஆகவே அதிக அளவில் இருக்கும் சர்க்கரையை, உடல் கல்லீரலில் சேமித்து வைத்துக்கொள்ளுகிறது. பிறகு இரத்தத்தில் குளுகோஸ் குறையும்போது கல்லீரலில் இருந்து சர்க்கரை இரத்தத்திற்கு வருகிறது. கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்ட சர்க்கரை முழுவதும் குறைந்து போனால் அப்போது பசி ஏற்படுகிறது. இது "உடலில் சர்க்கரை குறைந்து விட்டது, நீ உணவு சாப்பிடவேண்டும்" என்று இயற்கை விடுக்கும் எச்சரிக்கையாகும். இது இயற்கை மனிதனுக்கு அளித்த ஒரு வரப்பிரசாதம்.

இந்த மாதிரி குளுகோஸ் கல்லீரலுக்குள் போவதற்கும் திரும்ப வெளியில் வருவதற்கும் இன்சுலின் என்னும் ஹார்மோன் தேவைப்படுகிறது. சிலருக்கு இந்த இன்சுலின் போதிய அளவு சுரக்காவிட்டால் இந்த வேலை நடை பெறாது. அப்போது சாப்பிட்டவுடன் இரத்தத்தில் அதிகமாக சேரும் குளுகோஸுக்கு தேவை இல்லாததினால், இந்த அதிகப்படியான குளுகோஸை உடல் வெளியேற்றி விடும். ஏனென்றால் அந்த அதிக அளவு குளுகோஸ் இரத்தத்தில் இருந்தால் பல அவயவங்களுக்கு கெடுதல் விளைவிக்கும். குறிப்பாக கண்கள் பாதிப்படையும். தேவைக்கு அதிகமாக எது இருந்தாலும் உடல் அதை கழிவுப்பொருள் என்றே எடுத்துக்கொள்ளும்.


இந்த அதிக குளுகோஸை வெளியேற்றும் பொறுப்பு சிறுநீரகங்களின் மேல் சுமத்தப்படுகிறது. உடலில் சேரும் கழிவுப்பொருட்கள் எதுவானாலும் அவைகளை வெளியேற்றுவது சிறுநீரகங்கள்தான். தன்னுடைய வழக்கமான பொறுப்புகளுடன் இந்த சர்க்கரையை வெளியேற்றும் பொறுப்பும் கூடினால் சிறுநீரகங்கள் என்ன செய்யும்? ஸ்ட்ரைக் செய்யும். டாக்டர்கள் சர்வ சாதாரணமாக "கிட்னி பெயிலியர்" என்று சொல்லி விடுவார்கள். சரியான சமயத்தில் இதைக் கண்டுபிடித்து வைத்தியம் செய்தால் தப்பிக்கலாம். நோய் முற்றிய பிறகு வைத்தியம் செய்தால் குணம் காண்பது சற்று கடினம். இதுதான் நீரிழிவு நோய் என்று கூறப்படுகிறது.


இரத்தத்தில் சேரும் குளுகோஸ் எப்படி சக்தியாக மாறுகிறது என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.  

என்ன, இந்த ஆள்  இந்தப் பதிவை 
டிவிக்களில் வரும் மெகாத் தொடர்கள் போல் நீட்டிக்கொண்டு போகிறானே என்று சலிப்படைய வேண்டாம். ஒரு பதிவில் ஒரு செய்தியை மட்டும் கொடுத்தால்தான் அது மனதில் நன்றாகப் பதியும். அதனால்தான் இந்த ஜவ்வு மிட்டாய் விவகாரம். 

புதன், 14 டிசம்பர், 2016

உலகில் பணமே பிரதானம்


பணம் என்று ஒன்றை மனிதன் கண்டு பிடித்த நாளிலிருந்து இன்று வரை பணத்தினால் மயங்காதவர்கள் யாரும் இல்லையென்றே சொல்லலாம். இல்லறத்தானில் இருந்து முற்றும் துறந்த துறவி என்று சொல்கிறவர்கள் வரை இந்தப் பணம் பிரதானமாய் விளங்குகிறது.

காரணம் என்னவென்றால் பணத்தைக் கொண்டு எதையும் சாதிக்க முடியும். யாரையும் விலைக்கு வாங்க முடியும். எந்த குற்றமும் செய்து விட்டு தண்டனையில்லாமல் திரியலாம்.

ஆகவேதான் பணத்தின் மீதான மனிதனின் ஆசைக்கு அளவே இல்லை. ஆனாலும் இந்தப் பணத்தில் ஒரு சிக்கல். இதை தன் உபயோகத்திற்காக பயன்படுத்தத்  தெரியாதவர்களின் கையில் இது ஒரு விலங்கேயாகும்.

பழங்காலத்து ராஜாக்கள் முதல் இந்நாளைய அரசியல்வாதிகள் வரை பணம் சேர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். இதை எப்படி சேர்த்துவது என்பதற்கு வரையறை எதுவும் இல்லை. பணம் சேரவேண்டும், அவ்வளவுதான். யார் சாப்பிட்டால் எனக்கென்ன, சாப்பிடாவிட்டால் எனக்கென்ன? என்கிற கொள்கைதான் இன்று ஆட்சி புரிகிறது.

தமிழ்நாட்டில் இன்று அரசியல்வாதிகளை ஆட்டுவிப்பது பணம், பணம் மட்டும்தான் என்று அனைவரும் புரிந்திருப்பீர்கள். பணம் முட்டாளையும் அறிவாளியாகக் காட்டும். அரசியலுக்கு சம்பந்தமில்லாதவர்களை அரசியலுக்கு வரவழைக்கும். பணம்  இருந்தால்  பதவி தானாகத் தேடி வரும். பணம் படைத்தவர்களை  அனைவரும் போற்றுவார்கள்.

ஆகவே, மக்களே, எப்படியாவது பணம் சேருங்கள். அப்போதுதான் உங்களை ஒரு மனிதன் என்று அனைவரும் போற்றுவார்கள்.

சனி, 10 டிசம்பர், 2016

இனிமையான வியாதி

இது ஒரு மீள் பதிவு.


                                     Image result for sugar patient
இனிப்பானதெல்லாம் இன்பமானதல்ல. அதில் ஒன்றுதான் சர்க்கரை நோய். உலகில் பெரும்பாலானவர்கள் வைத்திருக்கும் நோய். இந்திய நாடு இதில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆயுர்வேதத்தில் “மதுமேகம்” என்று அழைக்கப்படுகின்ற இந்த நோய் இந்தியர்களுக்குப் பல காலமாகப் பரிச்சயமான நோய். இந்த நோயைப் பற்றிய சரியான விழிப்புணர்வு அவசியம்.


முதலில் புரிந்து கொள்ளவேண்டியது – இது ஒரு நோய் அல்ல. உடலில் ஏற்படும் ஒரு குறைபாடு. வயது ஆகிவிட்டால் தலை நரைக்கிறது. பல் விழுகிறது. பசி குறைகிறது. காது கேட்பதில்லை. அந்த மாதிரிதான் சர்க்கரை வியாதியும். இது ஒரு ஜீரண மாறுபாடு. இந்நோய் பற்றிய மருத்துவத் தகவல்கள் டாக்டர் முருகானந்தம் அவர்கள் ஒரு பதிவில் அருமையாக விளக்கியுள்ளார். தையும் படியுங்கள்.

தங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்று முதன்முதலில் தெரியும்போது எல்லோரும் அதிர்ச்சியடைவது இயல்பு. அவர்கள் கற்பனை சிறகடித்துக்கொண்டு பறக்கும். ஓ, இனி ஆயுளுக்கும் இனிப்பு சாப்படக்கூடாது, காப்பிக்கு சர்க்கரை போடாமல் குடிக்கவேண்டும், சப்பாத்தி மட்டுமே சாப்பிடவேண்டும், இப்படி வாழ்வது என்ன வாழ்க்கை, செத்துப் போய்விடலாமா என்றெல்லாம் கற்பனை பண்ணுவார்கள். இந்தக் கற்பனைகள் எல்லாம் தேவையற்றவை. நீங்களும் எல்லோரையும் போல் வாழலாம். நல்ல காப்பி குடிக்கலாம். கல்யாண வீட்டில் வெளுத்துக் கட்டலாம். அரிசிச் சாப்பட்டை விட வேண்டியதில்லை. எப்படி என்று பார்க்கலாம்.

நம் உடம்பின் அவயவங்கள் இயங்குவதற்கும், நாம் வேலை செய்வதற்கும் சக்தி தேவைப்படுகிறது. (ஆபீசில் வேலை செய்பவர்கள் இதிலிருந்து விதிவிலக்கு - ஏனென்றால் அவர்கள் வேலை என்பது தூங்குவதுதானே). இந்த சக்தியானது நாம் சாப்பிடும் உணவிலிருந்துதான் கிடைக்கிறது. ஆனால் நாம் சாப்பிடும் சாப்பாடு அப்படியே சக்தியாவதில்லை. பலவிதமான வேதியல் மாற்றங்கள் ஏற்பட்டுத்தான் உணவு சக்தியாக மாறுகின்றது. அப்படி ஏற்படும் மாற்றங்களில் முக்கியமானது நம் உணவிலுள்ள ஸ்டார்ச்சு சத்து குளுகோஸ் சர்க்கரையாக மாறுவது. இது நமது இரைப்பையில் நடக்கிறது.

இந்த குளுகோஸ் சர்க்கரை குடல்களில் உள்ள குடல் வால்களின் மூலமாக உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் சேருகிறது. இந்த குளுகோஸ் சர்க்கரைதான் உடலின் பல பாகங்களுக்கும் சென்று அந்த திசுக்களுக்கு சக்தியைத் தருகிறது. குளுகோஸ் திசுக்களில் எப்படி சக்தியாக மாறுகிறது என்பதை வேறு ஒரு பதிவில் பார்ப்போம். ( நான் படிச்சதையெல்லாம் உங்களுக்குச் சொல்லி கட்டாயம் உங்கள் கழுத்தை அறுக்கப் போகிறேன்.)

நாம் எல்லோரும் பொதுவாக ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுவோம். அதற்கு அதிகமாகச் சாப்பிடுபவர்களைக் கணக்கில் சேர்க்க வேண்டாம். நாம் சாப்பிட்ட உணவு ஏறக்குறைய ஒரு மணி நேரத்தில் ஜீரணமாகி, அந்த குளுகோஸ் முழுவதும் ரத்தத்தில் சேர்ந்து விடும். அப்போது ரத்தத்தில் குளுகோஸின் அளவு அதிகமாக இருக்கும். அப்படி அதிகமாக இருப்பது நல்லதல்ல. ஏனென்றால் நமது உடம்புக்கு சக்தி ஒரு அளவில் நீடித்து, அதாவது அடுத்த வேளை உணவு உண்ணும் வரை வேண்டும். ஆகவே ரத்தத்தில் இருக்கும் அதிக சர்க்கரையை ஓரிடத்தில் சேமித்து வைத்துப் பிறகு உடலுக்குத் தேவையான அளவு கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தால் நல்லதல்லவா? கடவுள் இதற்கான ஒரு வழியை ஏற்பாடு செய்திருக்கிறார்.

ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும்போது, அந்த சர்க்கரையானது கல்லீரலில் சேமிக்கப்பட்டு, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது, கல்லீரலிலிருந்து ரத்தத்திற்கு திரும்பவும் கொடுக்கப்படுகிறது. அதாவது ஆறுகளில் வெள்ளம் வரும்போது அதை அணைக்கட்டுகளில் சேகரித்து ஆற்றில் நீரை ஒரே அளவில் விடுகிறோம் அல்லவா? அதே போல் கல்லீரல் சர்க்கரைக்கு ஒரு அணைக் கட்டாக செயல்படுகிறது. இப்படி இல்லாவிட்டால் ஆற்று வெள்ளம் அது பாயும் இடங்களிலெல்லாம் சேதம் விளைவித்து விடும் அல்லவா? அது போல்தான் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தால் உடலின் பல அவயவங்களுக்குத் தீமை வந்து சேரும். இவ்வாறு நடக்காமல் இருக்க கல்லீரல் ஒரு அணையாக வேலை செய்கிறது.

இன்னொரு சமாச்சாரம். சர்க்கரை ரத்தத்திலிருந்து கல்லீரலுக்குள் போவதற்கும் மறுபடி கல்லீரலுக்குள் இருந்து ரத்தத்திற்கு வருவதற்கும் இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப்படுகின்றது. பல காரணங்களினால் இந்த இன்சுலின் பலருடைய உடம்பில் பற்றாக்குறையாகி விடுகிறது. அப்போது சாப்பிட்டவுடன் ரத்தத்தில் அதிக அளவில் இருக்கும் சர்க்கரை கல்லீரலுக்குள் போகாமல் ரத்தத்திலேயே இருந்து விடுகிறது. அதனால்தான் இதை சர்க்கரை நோய் என்று அழைக்கிறோம்.

சரி, அப்படி ரத்தத்தில் அதிக சர்க்கரை இருந்தால் இருந்து விட்டுப் போகட்டுமே என்று நினைப்பவர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி. அதிக சர்க்கரை ரத்தத்தில் இருந்தால், கிட்னி அதை வெளியேற்றப் பார்க்கும். அப்போது சிறுநீரில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இப்படி சர்க்கரை சிறுநீர் வழியாக வெளியேறிவிட்டால் கொஞ்ச நேரம் கழித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்போது கல்லீரலிலிருந்து சர்க்கரை ரத்தத்திற்கு வராது. வேலை செய்ய சக்தி குறையும். அதை ஈடுகட்ட மூளை சாப்பிடு என்று சொல்லும். பசி எடுக்கும். அப்போது சாப்பிடவேண்டும்.

இப்படி சாப்பிடுவதும் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் இருந்து சிறுநீர் வழியாக சர்க்கரை வெளியேறுவதுமாக இருந்தால் உடல் நிலை க்ஷீணித்து பல உடல் நலக் கோளாறுகள் ஏற்படும். இதற்கு தீர்வு உடலில் இன்சலின் செயலை அதிகரிக்கவேண்டும். இதை இரண்டு விதத்தில் டாக்டர்கள் செய்வார்கள். ஒன்று மாத்திரைகள், இரண்டு இன்சுலின் இஞ்செக்ஷன். ஆனால் இவை முழுமையான தீர்வுகள் அல்ல. டாக்டர் முருகானந்தம் சொல்லியுள்ள வழி முறைகளை தவறாமல் கடைப்பிடிக்கவேண்டும்.

வியாழன், 8 டிசம்பர், 2016

முதுமை ஒரு வரம்.




முதுமை ஒரு வரம்தான். எந்த சூழ்நிலையில் என்பதுதான் கேள்வி? இளமையில் ஒழுங்காக வாழ்ந்திருந்தால் முதுமை ஒரு வரமே.

"ஒழுங்காக" என்பதற்கு பலவிதமாக வியாக்யானம் கொடுக்கலாம். நான் "ஒழுங்காக" என்று நினைப்பது மற்றவர்களுக்கு ஒழுங்கற்றதாகத் தெரியலாம். அதை பின்னூட்டங்களில் விவாதித்துக் கொள்ளலாம்.

"ஒழுங்காக" என்பதற்கான இலக்கணங்கள்.

1. படிக்கவேண்டிய வயதில் நன்றாகப் படிக்கவேண்டும்.

2. படித்து முடித்தவுடன் தன் தகுதிக்கேற்ப ஒரு வேலை தேடிக்கொள்ள வேண்டும்.

3. வேலையில் செட்டில் ஆனவுடன் ஒரு கல்யாணம் செய்துகொண்டு குடும்பத்தை விருத்தி செய்யவேண்டும்.

4. வரவிற்குள் செலவை அடக்கி சேமிப்பும் செய்யவேண்டும்.

5. தன் வாரிசுகளுக்கு நல்ல படிப்பும் நல் ஒழுக்கமும் கற்றுத் தரவேண்டும்.

6.அவர்களுக்கு காலா காலத்தில் ஆணாக இருந்தால்   நல்ல வேலையில் அமர்த்த வேண்டும், பெண்ணாக இருந்தால் ஒரு கல்யாணம் செய்து வைக்கவேண்டும்.

7. ரிடையர் ஆன பிறகு கிடைக்கும் தொகைகளை பத்திரமாகப் பாதுகாத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

இப்படியெல்லாம் வாழ்ந்திருந்தால் முதுமை ஒரு வரமே.

எல்லோரும் இப்படி வாழ முடியுமா என்று பலரும் நினைக்கலாம். எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் இப்படித்தான் வாழ்ந்தேன். இன்று முதுமையில் கவலை இல்லாமல் இருக்கிறேன்.

என் அனுபவத்தைச் சொல்வதன் மூலம் ஒரு சிலராவது பலனடைந்தால் அது என் எழுத்திற்கு கிடைத்த சன்மானம்.

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

மிளகாய் ஊறுகாய் செய்யும் முறை.



முதலில் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். மிளகாய் என்றதும் காய்ந்த மிளகாயை நினைத்தவர்கள் அனைவரும் "ஒன் ஸடெப் பேக்". ஊறுகாய் போடுவதற்கு உகந்தது பச்சை மிளகாயே.

போன பதிவில் "நான் படித்த படிப்பென்ன" என்று எம்ஜியார் பாணியில் பாடினேன் அல்லவா? அப்படி நான் என்ன படித்தேன் என்று அறிய ஆவல் கொண்டிருப்பீர்கள் என்று அறிவேன். ஆகவே நான் படித்த பெருமைகளைச் சிறிது கூறிவிட்டுப் பிறகு ஊறுகாய் சமாச்சாரத்திற்குப் போவோம்.

நான் படித்தது விவசாய வேதியல் படிப்பு அதாவது "கெமிஸ்ட்ரி".  இந்த வார்த்தையை பல சந்தர்ப்பங்களில் கேட்டிருப்பீர்கள். சினிமாவில் குறிப்பாக "கெமிஸ்ட்ரி" வொர்க்அவுட் ஆகலைன்னு இப்ப அடிக்கடி சொல்றாங்களல்லவா? அதுக்கு அர்த்தம் அவுங்க எதிர்பார்த்த மாதிரி அந்தப் படம் வெற்றி பெறவில்லை அல்லது அந்தக்காட்சி எதிர் பார்த்த மாதிரி வரவில்லை, இப்படி பல அர்த்தங்கள்.

உலகம் முழுவதும் இந்த "கெமிஸ்ட்ரி" யினால்தான் இயங்குகிறது என்றால் நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள். "கெமிஸ்ட்ரி" இயங்காத இடமே இல்லை. ஊறுகாய் போடுவதும் சுத்தமான "கெமிஸ்ட்ரியே" தவிர வேறு ஒன்றும் இல்லை.

இப்போது மிளகாய் ஊறுகாய்க்குத் தேவையான பொருட்களின் லிஸ்ட்டைப் பார்ப்போம்.

1. நல்ல புதிதாகப் பறித்த பச்சை மிளகாய் -
       நன்றாக கழுவி  ஒரு வெள்ளைத் துணிமேல் பரப்பி
       பேஃனுக்கு அடியில் வைத்து ஈரம் போகும் அளவிற்கு             உலர்த்தியது                                                               -  500 கிராம்.
2. தோல் நீக்கி சுத்தம் செய்த இஞ்சி                -   250 கிராம்.
3. தோல் நீக்கிய பூண்டு                                        -    250 கிராம்
4. பொடித்த கல்லுப்பு                                             -   100 கிராம்
5.  பெருங்காயப் பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்
6.  நல்ல நல்லெண்ணை - 100 மில்லி
7.  கடுகு   - ஒரு டேபிள் ஸ்பூன்
8. சீரகம்  - அரை டேபிள் ஸ்பூன்
9. கருவேப்பிலை - ஒரு இணுக்கு
10. இரண்டு எலுமிச்சம்பழத்திலிருந்து எடுத்த சாறு.

செய்முறை.

முதலில் பச்சை மிளகாயை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து  
ஈரம் இல்லாமல் துடைத்து வைத்த ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். இதே போல் இஞ்சியையும் பூண்டையும் அரைத்து அதே பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
நன்றாக கலக்கவும். உப்பைச் சேர்க்கவும். எலுமிச்சை சாறையும் சேர்க்கவும். (எலுமிச்சை இல்லாவிட்டால் 100 மில்லி வினிகர் சேர்த்துக்கொள்ளலாம்)

பாத்திரத்தை மூடி மூன்று நாட்கள் வைத்திருக்கவும். மூன்றாம் நாள் அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணையை ஊற்றி காயவைக்கவும். நன்றாக காய்ந்தவுடன் கடுகைப் போடவும். கடுகு பாதி பொரிந்து கொண்டிருக்கும்போது சீரகத்தைப் போடவும். உடனே கருவேப்பிலையைப் போடவும். பத்து செகன்ட் கழித்து வாணலியை இறக்கி வைத்து பெருங்காயத்தைப் போடவும், பிறகு தாளித த்தை மிளகாய் அரைத்து வைத்திருப்பதின் மேல் கொட்டி நன்றாக கிளறி விடவும்.

ஊறுகாயை உங்களுக்கு விருப்பமான (நன்கு கழுவி, வெயிலில் இரண்டு மணி நேரம் காயவைத்த) ஜாடி அல்லது பாட்டிலில்  போட்டு வைத்துக்கொள்ளவும்.

அவ்வளவுதான். சுவையான காரசாரமான மிளகாய் ஊறுகாய் ரெடி. தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள, தயிர் சாதம் அமிர்தமாய் சுவைக்கும். ஒரு குறிப்பு - பொரியல் சாப்பிடுகிற மாதிரி வழித்து நாக்கில் வைக்காதீர்கள். ஒரு விரலால் நொட்டு நாக்கில் வைத்தால் போதும்.

ஒரு எச்சரிக்கை; வயிற்றில் அல்சர் இருப்பவர்கள் தங்கள் டாக்டரிடம் கலந்தாலோசித்த பிறகு இந்த ஊறுகாயை உபயோகிக்கவும். அப்படிச்செய்யாமல்   இந்த ஊறுகாயைச் சாப்பிட்டால் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பில்லை.

பிற்சேர்க்கை: இதோ நான்கு மாதங்களுக்கு முன் நான் போட்ட மிளகாய் ஊறுகாய்.




வெள்ளி, 2 டிசம்பர், 2016

ஒரு காரசாரமான பதிவு

                                 
                                     Image result for மிளகாய்ஊறுகாய்

மனிதன் சாப்பிடுவது ருசிக்காகத்தான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள். அப்படி ஒப்புக்கொள்ளாதவர்கள் தயவு செய்து வேறு பதிவிற்குச் சென்று விடுங்கள். உங்கள் நேரத்தை இங்கு விரயப்படுத்த வேண்டாம். ATM க்யூவில் நின்றாலாவது இரண்டாயிரம் ரூபாய் செலவிற்குக் கிடைக்கும்.

ருசியை அறிவது நாக்கில் உள்ள ருசி அறியும் திசுக்களே. இவை 60 வயதாகும்போது பாதிக்கு மேல் செயலிழந்து போகின்றன என்று மருத்துவம் படிக்கும் என் பேரன் சொல்கிறான். அது உண்மைதான் என்று என் மனைவியும் சொல்கிறாள். அவள் எதை வைத்து அப்படி சொல்கிறாளென்றால், நான் தினமும் சாப்பிடும்போது சாப்பாட்டில் ருசியே இல்லை என்று சொல்வதை வைத்து அப்படி சொல்கிறாள்.

இப்படி இருக்கையில் ஒரு நாள் கடைக்குப் போனபோது "மிளகாய் ஊறுகாய்" என்ற ஒன்றைப் பார்த்தேன். ஒரு பாக்கெட் வாங்கி வந்தேன். பிரித்து ஒரு பாட்டிலில் போட்டு, சாப்பிடும்போது தயிர் சாப்பாட்டுக்கு அதை வைத்து சாப்பிட ஆரம்பித்தேன். தொட்டு வாயில் வைத்தவுடன், ஆஹா, அந்த அனுபவத்தை எப்படிச் சொல்வேன்?

உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையில் அப்படியே ஒரு சிலிர்ப்பு. அடுத்த வினாடியே ஒரு கவளம் தயிர் சாதம், எப்படி எடுத்தேன், எப்போது வாயில் போட்டேன், எப்படி விழுங்கினேன் என்பது ஒன்றும் நினைவில் இல்லை. இப்படியாக ஒரு அரை ஸ்பூன் ஊறுகாயில் தயிர் சாதம் முழுவதும் மறைந்தது.

ஆஹா, இந்த ஊறுகாய்தான் நமக்கு உகந்தது என்று முடிவு செய்து, இன்னும் இரண்டு பாக்கெட் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று அடுத்த நாள் அந்தக் கடைக்குப் போனால், சார், அந்த ஊறுகாய் நேற்றே தீர்ந்து விட்டது, ஆர்டர் போட்டிருக்கிறோம், வந்து விடும். அடிக்கடி வந்து பார்த்து விட்டுப் போங்கள், என்றார்கள். வியாபார தந்திரம் எப்படி, பாருங்கள்.

பின்பு பல முறை போய்ப்பார்த்தும் அந்த ஊறுகாய் வரவேயில்லை. முதலில் வாங்கினது தீர்ந்து விட்டது. அந்த ஊறுகாய் இல்லாமல் தயிர் சாதம் உள்ளே போகமாட்டேனென்கிறது. என்ன பண்ணலாம் என்று யோசித்தேன்.

அப்போதுதான் ஒரு யோசனை வந்தது. நாம் படித்த படிப்பென்ன, லேசான படிப்பா, வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தும் சொல்லிக்கொடுத்திருக்கிறார்களே, இந்த மிளகாய் ஊறுகாய் என்ன, ஆர்ய வித்தையா? என்று முடிவு செய்து செயலில் இறங்கினேன். என்ன செய்தேன் என்று அடுத்த பதிவில் பாருங்கள்.

திங்கள், 28 நவம்பர், 2016

பதிவுலகைப் புதுப்பிப்போம் வாரீர் !



பதிவுலகம் க்ஷீணித்துக் கொண்டு வருகிறது என்பதை பதிவர்கள் எல்லோரும் அறிவார்கள். காரணம் என்னவென்று சிந்தித்ததில் ஒன்று புலனாகியது.

அதாவது பதிவுலகில் விறுவிறுப்பு இல்லாமல் போயிற்று. ஏதோ என்னைப்போல் ஓரிருவர் மட்டுமே விறுவிறுப்பான பதிவுகள் எழுதுகிறோம். மற்றவர்கள் அன்வரும் எங்க ஊட்ல மாடு கண்ணு போட்டது, நான் சாமி கும்பிட்டேன், தெரு முனைல ஒரு பாட்டி போண்டா சுடுகிறாள், இந்த மாதிரி பதிவுகளே எழுதுகிறார்கள்.

இந்த மாதிரிப் பதிவுகளை யார் படிப்பார்கள்?

செய்தித்தாள் துறையில் ஒரு பழைய ஜோக் உண்டு. அதாவது நாய் மனிதனைக் கடித்தால் அதில் என்ன செய்தி இருக்கிறது? மனிதன் நாயைக் கடித்தான் என்றால் அதுதான் செய்தி என்பார்கள்.

உதாரணத்திற்கு நமது தேசீய நெடுஞ்சாலைகளில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. தினத்தந்தியில் தினமும் "நேற்று இரண்டு லட்சத்தி முப்பத்தியைந்தாயிரம் வாகனங்கள் நம் தேசீய நெடுஞ்சாலையில் பயணித்தன, எல்லோரும் பத்திரமாக அவரவர்கள் போக வேண்டிய இடங்களுக்குப் போய்ச் சேர்ந்தார்கள்" என்று செய்தி வருகிறதென்று வைத்துக் கொள்ளுங்கள்.எவனாவது தினத்தந்தி பேப்பரை வாங்குவானா?

நேற்று ஒரு சொகுசு காரும் அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. காரில் பயணம் செய்த ஆறு பேரும் ஸ்தலத்திலேயே மரணம். இப்படி ஒரு செய்தியை பிரசுரம் செய்து அதை முக்கிய செய்தியாக வால்போஸ்டில் போட்டால் விற்பனை பிச்சுக்கிட்டுப் போகும்.

அந்த மாதிரி பதிவுலகிலும் பதிவுகள் விறுவிறுப்பாக வரவேண்டும். அப்போதுதான் அதிகப்பேர் பதிவுலகிற்கு வருவார்கள். புதிய பதிவர்கள் தோன்றுவார்கள். வலைச்சரம் மீண்டும் பிரசுரமாகும்.

இரண்டொரு உதாரணங்கள் கொடுத்தால்தான் நம் பதிவர்களுக்கு நன்றாக விளங்கும்.

ஒரு ஆன்மீகப் பதிவு.  நேற்று நான் அங்காளம்மன் கோவிலுக்குப் போயிருந்தேன். அங்கு அர்ச்சகரும் அங்காளம்மனும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்ததை நான் என் இரு கண்களாலும் பார்த்தேன்.
இப்படி எழுதலாம்.

இல்லாவிட்டால் இன்னொரு உதாரணம். காளிகாம்பாள் கோவிலுக்குப் போய் கண்ணை மூடி தியானித்துக்  கொண்டிருந்தபோது யாரோ என்னைத் தொட்ட மாதிரி இருந்தது. கண்ணைத் திறந்து பார்த்தால் சாட்சாத் அம்மனேதான் என் முன் நிற்கிறாள்.

பயணக் கட்டுரைகளில் நான் பத்ரினாத் போனேன். பத்ரிநாதரைப் பார்த்துக் கும்பிட்டேன். இந்த மாதிரி எழுதினால் அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கும். நான் பத்ரிநாத் போகும்போது நாங்கள் போய்க்கொண்டிருந்த பஸ் கங்கை ஆற்றில் விழுந்தது என்று எழுதினால் பலர் சுவாரஸ்யமாகப் படிக்க வருவார்கள்.

அடுத்த பதிவில் பஸ் போகும்போது நான் தூங்கி விட்டேன் அப்போது பஸ் ஆற்றில் விழுவது மாதிரி கனாக் கண்டேன் என்று சமாளித்து விட்டால் போகிறது.

ஆகவே பதிவர்களே, உங்கள் எழுத்து பாணியை மாற்றாவிட்டால் பதிவுலகம் நசித்துப் போய் காணாமல் போகும் என்று எச்சரிக்கிறேன்.


வெள்ளி, 25 நவம்பர், 2016

உயிர் ஏன் உடலை விட்டு பிரிகிறது.

bala murugan உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"உயிர் போனால் என்ன ஆகும்?": 



உயிர் ஏன் உடலை விட்டு பிரிகிறது. 

இப்படி ஒருவர் பின்னூட்டத்தில் கேள்வி கேட்டிருக்கிறார். பதில் சொல்லாவிட்டால் நம் மதிப்பு என்ன ஆவது? ஆகவே இதோ பதில் எழுதுகிறேன்.


இந்த வாக்கியத்தை நன்றாக கவனியுங்கள்.


உயிர் ஏன் உடலை விட்டுப் பிரிகிறது ?


அதாவது உயிர் என்ற ஒரு வஸ்து உடல் என்ற வஸ்துவை விட்டுப் பிரிகிறது என்பது இதில் மறைந்திருக்கும் பொருள். காலம் காலமாக மக்கள் இவ்வாறுதான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். உடல் என்பதுவும் உயிர் என்பதுவும் வெவேறு வஸ்துகள். ஒரு கால கட்டத்தில் உயிர் உடலை விட்டுப் பிரிகிறது, அப்போது அந்த உடலை சவம் என்கிறோம், அதை மண்ணில் புதைக்கிறோம் அல்லது எரிக்கிறோம்.


இது ஒரு மாயை. மனிதன் பிறக்கிறான், வளர்கிறான், வாழ்கிறான், பின்பு இறக்கிறான். இது வாழ்க்கையில் நிதரிசனமாகப் பார்க்கிறோம். ஆனால் இறப்பு என்றால் என்ன என்று சிந்திப்பதில்லை. காரணம் இறப்பைக் கண்டு இனம் தெரியாத ஒரு பயம். யாரும் தங்களுடைய இறப்பைப் பற்றி சிந்திப்பதில்லை. தான் இறக்க மாட்டோம் அல்லது தன்னுடைய இறப்பிற்கு இன்னும் வெகு காலம் இருக்கிறது என்றே ஒவ்வொருவரும் நம்பிக்கொண்டு இருக்கிறோம்.


இந்த காரணத்தினால்தான் இறப்பு என்றால் என்ன? இறப்பிற்குப் பின்னால் என்ன? என்று யாரும் வெளிப்படையாகப் பேசப் பயப்படுகிறார்கள். எனக்குப் புரிந்த சில தத்துவங்களை இங்கே கூறுகிறேன்.
முதலாவது உயிர் என்பது ஒரு வஸ்துவே அல்ல. அது ஒரு செயற்பாட்டு நிலை. மனிதன் பிறக்கும்போது அவனுடைய அவயவங்கள் செயல்பட ஆரம்பிக்கின்றன. அவன் வளரும்போது அந்த செயல்கள் தொடர்கின்றன. இந்த நிலையை அவன் உயிருடன் இருக்கிறான் என்று குறிப்பிடுகிறோம். அவன் முதுமை அடையும்போது இந்த செயற்பாடுகள் குறைந்து ஒரு நிலையில் முற்றிலுமாக நின்று போகிறது. அந்த நிலையில் அவன் உயிருடன் இல்லை என்று கூறுகிறோம்.


செயல்பாடுகள் நிற்பதுதான் இயற்கையின் விதி. மனிதனின் உடலில் உயிர் என்று தனியாக ஏதும் இல்லை. அவன் செயல்கள் முற்றிலுமாக நின்று விடும்போது அவன் உயிர் பிரிந்தது என்று கூறுகிறோமே தவிர, வேறு எந்த மாற்றமும் நடைபெறுவது இல்லை.


ஆனால் நம் ஆன்மிக வாதிகள் இந்த உயிர் என்று வழக்கத்தில் உள்ள வார்தையை ஆன்மா என்று கூறி, ஒருவன் இறக்கும்போது அவனுடைய ஆன்மா அந்த உடலை விட்டு வெளியேறி வேறு ஒரு உடலில் புகுந்து ஒரு புதுப் பிறவி எடுக்கிறது என்று சொல்லி வருகிறார்கள். இது முற்றிலும் ஒரு புனைவே ஆகும். மனித மனத்திற்கு ஒரு ஆறுதல் தரவே இவ்வாறு சொல்லப்படுகிறது.


மற்றபடி, ஆன்மா என்பது ஒரு பொய்யான கற்பனை. அப்படி ஆன்மா பிரிந்து வேறு ஒரு உடலுக்குள் புகுகின்றது என்பதுவும் ஒரு மாபெரும் பொய்யே. இறப்பிற்குப் பின் எதுவும் இல்லை. சொர்க்கம், நரகம் என்பது எல்லாம் கற்பனையே தவிர வேறொன்றுமில்லை. இவை எல்லாம் மக்களின் அறியாமையை வைத்து ஆன்மீக வாதிகள் நடத்தும் வியாபாரமேயாகும் .

செவ்வாய், 22 நவம்பர், 2016

நல்லா காதுல பூச்சுத்தறாங்கையா

                               Image result for 2000 ரூபாய் நோட்டு

இன்று ஒரு பதிவில் படித்தது.

இன்று டாக் ஆப் த டவுன் என்னவென்றால் அந்த 2000 ரூபாய் நோட்டை திருப்பினால் மங்கள்யான் செயற்கைக் கோள் தெரிகிறது. அதை குறிப்பிட்ட ஆப் பயன்படுத்தி செல்பேசியில் பார்த்தால் அதில் மோடி பேசுவது நேரடியாக ஒளிபரப்பாகிறது.


ஆனால் அந்தப் பதிவில் அந்த "ஆப்" என்னவென்று கொடுக்கவில்லை. நான் கூகுளில் தேடிப்பார்த்தேன். அப்படி எந்த "ஆப்" ம் இல்லை. இது சுத்தமான     காதில் பூச்சுற்றும் வேலை என்று நினைக்கிறேன். எத்தனை பேர் இந்த மாதிரி கிளம்பியிருக்காங்க என்று தெரியவில்லை.


சனி, 19 நவம்பர், 2016

இரண்டு வயிற்றெரிச்சல் சம்பவங்கள்

                        Image result for car accident at night
சிவகங்கை மாவட்டத்திலிருந்து நான்கு பேர் புறப்பட்டு கோவை வந்தார்கள். அவரகளில் இருவருடைய உறவுப் பையன்கள் கோவையில் பொறியியல் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்துவிட்டு ஒரு இரண்டாம் கையாக கார் ஒன்றை வாங்கியிருக்கிறார்கள்.

இதற்குள் மாலை 7 மணி ஆகி விட்டது. அன்றே சிவகங்கை திரும்புவது என்று முதலிலேயே முடிவு செய்திருந்தார்கள். சரி, சாப்பிட்டு விட்டுப் போகலாம் என்று ஒரு நல்ல ஓட்டலில் (அநேகமாக அசைவமாக இருக்கலாம்) நன்றாக சாப்பிட்டுவிட்டு ஊருக்குத் திரும்பினார்கள்.

அந்த நாலு பேரில் ஒருவன் கார் ஓட்டத்தெரிந்தவன். இரண்டு பேர் ஜோசியர்கள். கார் ஓட்டத்தெரிந்தவன் நான் தூங்காமல் கார் ஓட்டுவேன் என்று பெருமையாகச்சொல்லி இருக்கவேண்டும். அதை மற்ற மூவரும் நம்பி 9 மணிக்கு கோவையிலிருந்து சிவகங்கை புறப்பட்டிருக்கிறார்கள்.

பல்லடம் - தாராபுரம் சாலையில் குண்டடம் என்னும் ஊருக்குப் போகும்போது அநேகமாக இரண்டு மணி நேரம் ஆகியிருக்கும். சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாகி உணவுக்குழாயிலிருந்து ரத்தத்தில் சேரும் நேரம். அப்போது மூளைக்கு ரத்தம் குறைவாகச் செல்லும். ஒரு மாதிரியாக கண்ணைச் சொருகி வரும்.

இந்த நிலையில் கார் ஓட்டுனர் ஒரு நிமிடம் கண்ணை மூடி விட்டார். எதிரில் அரசு பஸ் வந்து கொண்டிருக்கிறது.  காரும் பஸ்சும் 80 கிமீ வேகத்தில் ஓடிக்கொண்டிருந்திருக்க வேண்டும். கார் பஸ்ஸுக்குள் புகுந்து அப்பளமாகப் பொடிந்தது. நான்கு பேரும் சிவகங்கை போவதற்குப் பதிலாக யம பட்டணம் போய்ச்சேர்ந்தார்கள்.

என் கேள்விகள் இரண்டு.

1. பயண அசதியுடன் ஏன் இரவில் கார் ஓட்டவேண்டும்? கோயமுத்தூரில் இரவு தங்கி விட்டு காலையில் ஏன் புறப்பட்டு இருக்கக் கூடாது?

2. அந்த நாலு பேரில் இரண்டு பேர் ஜோசியர்கள். அவர்களுக்கு இந்த மாதிரி குண்டடத்தில் யமன் காத்துக்கொண்டு இருக்கிறான் என்பது தெரியாமல் போனது எப்படி?

அடுத்த சம்பவம்.

                  Image result for new 2000 rupee note

நாமக்கல் என்ற ஊரில் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திலிருந்து
ஓய்வு பெற்ற ஒருவர் தன்னுடைய மகளை அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு மருத்துவப் பரிசோதனைக்கு கூட்டிப் போயிருக்கிறார். மகளை மருத்துவ மனையில் விட்டு விட்டு பக்கத்திலுள்ள பேங்கிற்குப் போய் 22000 ரூபாய் எடுத்து அதை ஒரு பையில் வைத்து தன்னுடைய காரில் வைத்து ஆஸ்பத்திருக்குத் திரும்பி வந்தார்.

கார் கண்ணாடிகளை எல்லாம் ஏற்றி விட்டு காரைப் பூட்டி விட்டு ஆஸ்த்திரிக்குள் போய் வேலையை எல்லாம் முடித்து விட்டு மகளுடன் காருக்கு வந்தார். காரைப் பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி. கார் கண்ணாடியை உடைத்து பணப்பையை யாரோ திருடிக் கொண்டு போய் விட்டார்கள்.

இங்கு என் சந்தேகம் ஒன்றே ஒன்றுதான். அதாவது 22000 ரூபாய் ( பதினொரு  2000 ரூபாய் நோட்டுகள்) ஒரு சில டன் எடை கொண்டிருக்குமா? அவ்வளவு கனத்தை கையில் தூக்க முடியாமல் காரிலேயே விட்டு விட்டுப் போனாரா? அல்லது 22000 ரூபாய் அவருக்கு ஒரு பொருட்டு இல்லையா?

செவ்வாய், 15 நவம்பர், 2016

ஒரு முக்கிய யுத்த தந்திரம்.

Swiss castles, beautiful, travel

அந்தக் காலத்தில் ராஜாக்கள் இருந்தார்கள் என்று சரித்திரப் பாடத்தில் படித்திருக்கிறோம். அவர்கள் யுத்தத்திற்காக படைகள் வைத்திருந்தார்கள் என்றும் படித்திருக்கிறோம்.

அப்படி படைகள் வைத்திருக்கும்போது அந்த படை வீரர்களுக்கு சம்பளம் கொடுக்கவேண்டுமல்லவா? அவர்களைச் சும்மாவே வைத்துக் கொண்டு சம்பளம் கொடுப்பது எந்த ராஜாவிற்கும் சாத்தியமில்லை.

ஆகவே ஒவ்வொரு ராஜாவும் அண்டை நாடுகளின் மிது படையெடுக்கவேண்டிய அவசியம் இருந்திருக்கிறது. இந்தப் படையெடுப்பில் முக்கியமானது எதிரி ராஜாவின் கோட்டையைப் பிடிப்பது.

இப்படி எதிரியின் கோட்டைக்குள் புகும்போது ஒரு முக்கியமான யுத்த தந்திரம் இருக்கிறது. அதாவது கோட்டைக்குள் எதிரிப் படையின் பலம் அதிகமாக இருந்து தாக்குபவர்களின் பலம் குறைவாக இருந்தால் தபித்து ஓடி வரவேண்டுமல்லவா? அதற்காக ஒரு தப்பிக்கும் வழியைத் தயார் செய்து விட்டே கோட்டையின் உள்ளே புகுவார்கள்.

இந்த யுக்தி ராஜாக்களின் சண்டைகளுக்கு மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கைக்கும் தேவையானது ஆகும். எந்த ஒரு ரிஸ்க்கான காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும்போதும் ஒருக்கால் அந்தக் காரியம் வெற்றியடையாவிட்டால் எப்படி சேதமில்லாமல் வாபஸ் வாங்குவது என்று திட்டமிட்டு விட்டே அந்தக் காரியத்தை ஆரம்பிக்கவேண்டும்.

இந்த யுக்தியை சாணக்ய நீதி என்றும் சொல்லலாம். சர்க்கார் உத்தியோகம் பார்த்து ரிடையர் ஆகி பென்ஷன் வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் எனக்கே இவ்வளவை கயுக்தியான அறிவு இருந்தால், அந்த அரசையே நடத்துபவர்களுக்கு எவ்வளவு குயுக்தி இருக்கும்?

பின்குறிப்பு: ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விவகாரத்திற்கும் இந்தப் பதிவிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. அப்படி சம்பந்தப்படுத்துபவர்கள் ராஜத்துரோக சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்.

சனி, 12 நவம்பர், 2016

என் பதிவுத் தளத்தை வாடகைக்கு விடுகிறேன்.


                      Image result for for rent sign

பதிவு எழுத விஷயங்களைக் கண்டு பிடிப்பது வர வர மிக கஷ்டமாக இருக்கிறது. இந்தக் கஷ்டத்தை எப்படிப் போக்கவது என்று யோசித்ததில் ஒரு வழி புலனாகியது.

இந்த ஞானோதயம் எப்படி வந்தது என்றால், சமீபத்தில் என் ஆப்த நண்பர், திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஒரு பதிவில் போட்டிருந்த பின்னூட்டம் என் மனதைக் கவர்ந்தது.

சுட்டி- http://engalblog.blogspot.com/2016/10/blog-post_18.html
கேட்டு வாங்கிப் போடும் கதை :: தானம் 

இந்தப் பின்னூட்டம் எல்லோருடைய சிந்தனைக்கும் விருந்தாகட்டுமே என்று அதை என் தளத்தில் பதிவிட்டேன். அந்தப் பதிவில் என்னுடைய பங்களிப்பு மூன்றே மூன்று வரிகள்தான்.

நான் பதிவிடும்போது அதன் விளைவுகளைப் பற்றி சிந்திக்கவில்லை. 

எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் 
எண்ணுவம் என்பது இழுக்கு. 

இந்தக் குறளைப் பலமுறை படித்திருந்தும் பதிவு போடும்போது நினைவிற்கு வரவில்லை. விளைவு என்னவென்றால் என் தளம் ஹைஜாக் செய்யப்பட்டு விட்டது. 

திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் பதிவுலகில் மிகப் பிரபலமானவர் என்று முன்பே தெரியும். ஆனாலும் அவர் இவ்வளவு பிரபலம் என்று நான் நினைக்கவில்லை.

எவ்வளவு பின்னூட்டங்கள் ! அதற்கு அவர் பதிலளித்திருக்கும் விதம். இவை என்னை ஆச்சரியப்படுத்தி விட்டன. 

பொதுவாக பதிவர்கள் (நான் உட்பட) பின்னூட்டங்களை ஆழ்ந்து படிப்பதில்லை என்று அறிவேன். ஆனால் திரு வை.கோபாலகிருஷ்ணன் ஒவ்வொரு பின்னூட்டத்தையும் கவனமாகப் படித்து பொருத்தமான பதில்கள் கொடுத்திருக்கிறார்.

மொத்தப் பதிவையும் பிடிஎப் பைலாகத் தரவிறக்கி உள்ளேன். மொத்தம் 100 பக்கத்திற்கு மேல். பின்னூட்டங்கள் 107. இதன் மொத்தத்தையும் வேண்டுபவர்கள் எனக்கு தங்கள் மெயில் விலாசத்துடன் பின்னூட்டம் போடவும்

இவ்வாறு என் தளத்தை மேன்மைப் படுத்திய திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு என் நன்றி.

வேறு பதிவர்கள் தங்கள் படைப்புகளை என் தளத்தில் வெளியிட ஆசைப்பட்டால் என் தளம் வாடகைக்கு கிடைக்கும் என்று அன்புடன் கூறிக்கொள்கிறேன்.

செவ்வாய், 8 நவம்பர், 2016

போச்சு, போச்சு, எல்லாமே போச்சு



இப்படி மோடி என் தலைல கல்லைத் தூக்கிப் போடுவார்னு நான் நினைக்கவேயில்லை. என் சொத்தையெல்லாம் காசாக்கி ஆயிரம் ரூபாயாகவும் ஐந்நூறு ரூபாயாகவும் வைத்திருந்தேனே? அதெல்லாம் செல்லாதாமே? கடவுளே நான் இனி என்ன செய்வேன்?

மொத்தம் இருப்பதை எண்ணிப்  பார்த்தேன். ஆயிரம் ரூபாய் நோட்டு ஒண்ணும் ஐந்நாறு ரூபாய் நோட்டுகள் நான்கும் இருக்கின்றன. இவைகளை நான் என்ன செய்வேன்? ஐயோ, கடவுளே என்னை இப்படி சோதிக்கலாமா?

வியாழன், 3 நவம்பர், 2016

இன்று ஒரு பொன்னான தினம்


என் மொபைல் போனுக்கு அழைப்புகள் வருவது அபூர்வம். 23000 ரூபாய் கொடுத்து ஒரு ஸ்மார்ட் போன் வாங்கியிருக்கிறேன்? அழைப்புகள் வருவதில்லை என்றால் என் மனம் எப்படி வேதனைப் படும் என்று இந்த உலகத்தில் கவலைப் படுபவர்கள் யாரையும் காணோம்.

இதில் இன்னொரு சங்கடம் என்னவென்றால் நான் வெகு ஆபூர்வமாகத்தான் வெளியில் செல்கிறேன். ஏதாவது விசேஷங்களுக்குப் போவதோடு சரி. அதுவும் மிக நெருங்கிய உறவினர் நண்பர்கள் வீட்டு விசேஷங்களுக்கு மட்டும்தான் போவேன். நான் வைத்திருக்கும் ஒரு டப்பா காரில் நானே ஓட்டிக்கொண்டு போவதுதான் வழக்கம்.

என் ராசி என்னவென்றால் இப்படி எப்போதாவது அபூர்வமாக வெளியில்  கார் ஓட்டிக்கொண்டு போகும் சமயங்களில்தான் என் மொபைலுக்கு அழைப்புகள் வரும். (திரு ஆர்ஆர்ஆர் மன்னிக்கவேண்டும்). இதில் உள்ள சங்கடம் என்னவென்றால், நான் ஒரு சமயத்தில் ஒரு வேலை மட்டுமே செய்து பழகியவன். அந்த வேலையைச் செய்யும்போது அதிலேயே ஆழ்ந்து விடுவேன்.

உதாரணத்திற்கு கம்ப்யூட்டரில் இன்டர்நெட் பார்த்துக் கொண்டிருக்கும்போது யார் என்ன கேட்டாலும் அது என் காதில் விழாது. அப்படி வேலையில் ஆழ்ந்து போகும் எனக்கு நான் கார் ஓட்டும்போது என் மொபைலில் அழைப்பு வந்தால் அந்த அழைப்பு மணிச்சத்தம் என் காதில் விழுவதில்லை. வயசானத்துக்கு அப்புறம் உங்களுக்கு காது மந்தமாகிக் கொண்டு வருகிறது, வேலையில் மூழ்கி விடுகிறேன் என்பது எல்லாம் சும்மா கதை என்று என் மனைவி சொல்கிறாள். அதை நம்புவதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

இப்படி இருக்க, நேற்று  காலையில் நான் ஒரு கல்யாணத்திற்குப் போய்விட்டு அப்படியே இன்னொரு விசேஷத்திற்குப் போகவேண்டி இருந்தது. கார் ஓட்டிக்கொண்டு போகும்போது மொபைலில் அழைப்பு மணி அடித்தது. வீட்டுக்காரிதான் மொபைல் மணி அடிக்கிறது என்று சொன்னாள். காரை ஒரு ஓரத்தில் நிறுத்தி விட்டு (ஒரு சமயத்தில் ஒரு வேலைதான் செய்வேன் என்று நான் முன்பு கூறியிருந்ததை நினைவு கொள்ளவும்) போனை எடுத்து ஆன் செய்தேன்.

அதிசயமாக பதிவுலக நண்பர் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி போன் செய்தார். குசலம் விசாரித்து விட்டு அவரிடம் கூசாமல் ஒரு பொய் சொன்னேன். நான் டிரைவிங்கில் இருக்கிறேன், அப்புறமாக உங்களைக் கூப்பிடுகிறேனே என்றேன். அவரும் சரி என்று போனை அணைத்து விட்டார்.

மதியம் விசேஷத்திற்குப் போய்விட்டு சாப்பிட்டு விட்டு (சாப்பிடுவதுதான் அந்த விசேஷம் - வளைகாப்பு என்றால் அதுதானே) வீட்டிற்கு வந்து தூங்கி எழுந்த பிறகு அவருக்கு போன் செய்தேன். அவர் கிடைத்தார். வழக்கமான உரையாடல்களுக்குப் பின் எவ்வளவு நாள் கோவையில் இருப்பீர்கள் என்றேன். இன்னும் இரண்டு நாள் இருப்பேன் என்றார். அப்படியானால் நீங்கள் தங்கியிருக்கும் இடத்தைச் சொல்லுங்கள், நாளைக்காலை உங்களை வந்து சந்திக்கிறேன் என்றேன். அவர் ரேஸ்கோர்ஸ் ஏரியாவில் ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்கியிருக்கிறேன் என்றார்.

சரி, அங்கே உங்களை நாளைக்காலை 8.30 மணிக்கு சந்திக்கிறேன், அங்கிருந்து பக்கத்தில் உள்ள ஒரு அன்னபூர்ணா ஹோட்டலுக்குப் போய் ஒன்றாக டிபன் சாப்பிடுவோம் என்று சொல்லி விட்டு பேச்சை முடித்தேன். எனக்கு ஒரு குணம் என்னவென்றால் ஏதாவது ஒரு காரியத்திற்கு ஒரு டைம் சொல்லி விட்டால் அந்த டைமை கண்டிப்பாக கடைப் பிடிக்கவேண்டும் என்ற குணம். போகும் வழியில் ஏதாவது இடைஞ்சல் ஏற்படலாம் என்பதால் அந்தக் குறிப்பிட்ட நேரத்திற்கு அரை மணி நேரம் முன்பாகவே அங்கு சேரும்படியாக வீட்டிலிருந்து புறப்பட்டு விடுவேன்.

காலை நேரம் என்பதால் சாலைகள் காலியாகவே இருந்தன. ஆதலால் அரை மணி நேரம் முன்பாகவே, அதாவது எட்டு மணிக்கே அங்கு போய்விட்டேன். என்னுடைய திட்டம் என்னவென்றால் அரை மணி நேரம் அங்கு உலாவி விட்டு சொன்ன நேரத்திற்கு அவரைப் பார்க்க ரூமுக்குப் போகலாம் என்று நினைத்தேன். காரை நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்தால் தம்பதி சமேதராக திருஆர்ஆர்ஆர் காலை வாக்கிங்க் போய்விட்டு திரும்புகிறார்கள். அவர்கள் பார்வையில் பட்டாயிற்று. இனி வேறு வழியில்லை.

அவர்களுடன் அவர்கள் ரூமிற்கு போய் வரவேற்பு ஏரியாவில் உட்கார்ந்து அளவளாவினோம். தம்பதிகள் ஒவ்வொருவராக குளித்து ரெடியானார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு அங்கே பக்கத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஹோட்டலுக்குப் போனோம். அங்கு டிபன் சாப்பிட்டு விட்டு நான் கை கழுவப்போனேன். நான் கை கழுவி விட்டு டேபிளுக்கு திரும்பும் சமயத்தில் சர்வர் பில் கொண்டு வந்து கொடுத்தார். அந்த சர்வரிடம் ஆர்ஆர்ஆர் சொல்லி வைத்திருப்பார் போல இருக்கிறது. பில்லை அவரிடத்தில் கொடுத்து விட்டார்.

நான் எவ்வளவோ மன்றாடிப்பார்த்தும் பில்லை அவர் என்னிடம் கொடுக்காம்ல் அவரே செட்டில் பண்ணி விட்டார். நீங்கள் பெரியவர் என்று ஒரு சப்பைக்கட்டு வேறு. இவரேதான் கெஸ்ட் ஹவுசில் பேசிக்கொண்டிருக்கும்போது உங்களைப் பார்த்தால் வயதானவராகத் தெரியவில்லையே என்று ஐஸ் வைத்தவர். மனிதர்கள் எப்படியெல்லாம் பேச்சு மாறுகிறார்கள் என்று பாருங்கள்.

பிறகு அவர்களை கெஸ்ட் ஹவுசில் திரும்பக் கொண்டு போய் விட்டு விட்டு வீட்டிறகுத் திரும்பினேன். அவர்களுக்கு வேலை இருந்ததால் வீட்டிற்கு அழைத்து வரமுடியவில்லை.  இப்படியாக இன்று ஒரு பொன்னாளாக அமைந்தது.

செவ்வாய், 1 நவம்பர், 2016

வாழ்வியல்

ஒரு பதிவில் திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் போட்ட பின்னூட்டம்.  இந்தப் பின்னூட்டத்தில் வாழ்வின் ஆதாரங்களைத் தெளிவாக விளக்கியிருக்கிறார். இதில் கூறப்பட்ட கருத்துகளை ஆழமாக சிந்தித்து பயன் பெற வேண்டுகிறேன்.

குறிப்பாக  பிழைத்தார்-செத்தார் இந்த இரண்டு சொற்களை அவர் பிரயோகித்த விதம் மிகவும் பாராட்டுக்குரியது. 


வை.கோபாலகிருஷ்ணன் said...

அவரவர் வசதிப்படி, செளகர்யப்படி, மத நம்பிக்கைப்படி, மன சாட்சிப்படி யோசிக்க வைக்கும் ஒரு சிறு நிகழ்வு பற்றி கதைஎன்ற பெயரில் இங்கு சொல்லப்பட்டுள்ளது. 

இருப்பினும் பின்னூட்டங்கள் என்ற பெயரில் பலரும் நன்றாகவே இங்கு கதைவிட்டுள்ளார்கள். 

எந்த ஒரு ஜீவனும் எதற்கும் பிறரை நம்பி இழுத்துக்கொண்டு நாறக்கூடிய அவல நிலை ஏற்படாமல், மணக்க மணக்கச் சட்டுப்புட்டுன்னு போகும் பாக்யம் செய்திருக்க வேண்டும். இதை சொல்வது மிகவும் எளிது. ஆனால் அதுபோல எல்லோருக்கும் பாக்யம் கிடைத்து நடப்பது மிகவும் கஷ்டம். 

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக, அவர்களின் சிறுவயதில் செய்யும் தியாகங்களும் கடமைகளும் முற்றிலும் வேறு. 

அதை பிரதிபலனாக பிள்ளைகளிடமிருந்து தங்களின் முதுமையில் எதிர்பார்ப்பது போன்றதொரு முட்டாள்தனம் இருக்கவே முடியாது. 

இன்றைய சூழ்நிலையில் யாருக்கும் எதற்கும் நேரமோ, பொறுமையோ, சகிப்புத்தன்மையோ, சேவை மனப்பான்மையோ, உண்மையான பாசமோ இருப்பது இல்லை. எல்லாமே வெளி வேஷம் மட்டுமே என்ற கசப்பான உண்மையை இங்கு ஆணித்தரமாக வலியிறுத்திச் சொல்லிக்கொள்கிறேன். 

அழுகை உள்பட அனைத்துமே போலியானவைகள் மட்டுமே. ஆங்காங்கே அழவும் ஒப்பாரி வைக்கவும் கூட ஆள் போட்டு விடுகிறார்கள் என்பதையும் நம்மால் இன்று மிகச்சுலபமாகப் பார்க்க முடிகிறது.

பலரிடம் இன்று செலவழிக்கப் பணம் மட்டும் உண்டு. எதற்கெடுத்தாலும் காண்ட்ராக்ட் போல ஆளை நியமித்து கவனித்துக்கொள்ளப் பார்க்கிறார்கள். பொருத்தமான தகுந்த ஆட்களும் அவ்வளவு எளிதில் கிடைப்பது இல்லை. அப்படியே ஆள் கிடைத்தாலும், பணத்துக்காகவும் கடன் எழவுக்காகவும் வேலை செய்பவராகவே பெரும்பாலும் அமைகிறார்கள். அவர்களிடம் உண்மையான அன்பையோ, அரவணைப்பையோ நாம் எதிர்பார்க்க முடியாது. ரத்த சம்பந்தமுள்ள நமக்கே இல்லாத அன்பும் அக்கறையும் கூலிக்கு மாரடிக்க வந்திருப்போரிடம் மட்டும் எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்? 

எனவே எதற்கும் பிறர் உதவியை எதிர்பார்த்து முடியாமல் 
படுத்துவிடும் நிலைக்கு வந்த ஒருவர் ................... 

அடுத்த மூன்று நிமிஷத்திலோ அல்லது 

அடுத்த மூன்று மணி நேரத்திற்குள்ளோ அல்லது 

அடுத்த மூன்று நாட்களுக்குள்ளோ அல்லது 

அடுத்த மூன்று வாரங்களுக்குள்ளோ அல்லது கடைசி பக்ஷமாக 

அடுத்த மூன்று மாதங்களுக்குள்ளோ 

டிக்கட் வாங்கிக்கொண்டு புறப்படும் பாக்யம் வாய்த்தவராக இருந்தால் மட்டுமே ..... 

பி--ழை--த்--தா--ர். :)

இல்லாதுபோனால் 

செ--த்--தா--ர். :)

oooooooooooooooooooooooooo

இன்றைய உலக யதார்த்தங்களை யோசிக்க வைக்கும் நிகழ்வினை எழுதியவருக்கும், வெளியிட்டுள்ளவரும் நன்றிகள்.
October 19, 2016 at 4:42 AM

ஒரிஜினல் பதிவில் பிரசுரமான சில பின்னூட்டங்களையும் வாசகர்கள் சௌகரியத்திற்காக இங்கே கொடுத்திருக்கிறேன்.  அந்தத் தளத்தின் ஆசிரியருக்கு நன்றி.

காமாட்சி said...
வயோதிகம் ஒரு சாபம்தான். நாலுங்கிடக்க நடுவில் போய்விடுகிரார்களே அவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள். வயோதிகத்திலும் வியாதிகள் இல்லாது இருப்பவர்களும் கொடுத்து வைத்தவர்கள். அனாயாஸேன மரணம் கிடைத்தால் அதைவிட பாக்கியம் கிடையாது. மற்றபடி நேரம்,காலம், பொழுது எல்லாம் பார்த்து எதுவும் வருவதில்லை. நீங்கள் எழுதியிருப்பதுபோல ஒவ்வொரு முதியவர்களும் நினைப்பார்கள். கிடைத்தால் பரலோக ஸாம்ராஜ்யம்தான். எல்லாம் எழுதுவதற்கு நன்றாக உள்ளது. அவரவர்கள் வினைப்பயன் அனுபவித்தே தீரவேண்டும். பெற்ற பிள்ளைகளோ, மற்றவர்களோ கருணையுடன் நடந்து கொள்ளுங்கள் முதியவர்களிடம் என்று வேண்டுமானால் கேட்டுக் கொள்ளலாம். நீயாரையா இதெல்லாம் சொல்வதற்கு என்று பதில் வரும். இது தொடர்கதைதானே தவிர பலவும் நல்லது,கெட்டது என எல்லா வகைகளையும் உள்ளடக்கியது.கொஞ்சம் வயதானவர்களை சிந்திக்க வைத்துவிட்ட உண்மைப் பதிவு இது. அன்புடன்
ஜீவி said...
'மனைவியின் ஒத்துழைப்பு இருந்தால்தான், ஒரு பிள்ளை அவனது கடமையைச் செவ்வையாய்ச் செய்யமுடியும்.' என்று காமாட்சி அம்மா சொன்னதை எடுத்துச் சொன்னீர்கள், ஸ்ரீராம்!

இது யதார்த்தமான உண்மை. சாமவேதத்தில் இந்த யதார்த்த உண்மைக்கும் ஒரு முடிச்சுப் போட்டு வைத்திருக்கிறது. மனைவி இருந்தால் தான் சாமவேதம் சார்ந்தோருக்கு தன் முன்னோர்களூக்கு
சிரார்த்தம் செய்யும் யோக்கியதையே இருக்கிறது என்று அந்த வேத்ததில் வரையறுத்து வைத்திருக்கிறது.
மருமகளுக்கு அவ்வளவு உரிமை. தாம்பாளத்தில் தணல் கொண்டு வந்து ஹோமத்தையே ஆரம்பித்து வைப்பவள் அவள் தான்.
Geetha Sambasivam said...
இந்தப் பதிவுக்கு என் கருத்தை இடுவதற்கு முன் ரொம்ப யோசித்தேன். மனம் புண்படும்படி எழுதிடுவோமோ என்ற பயம் தான். ஆனால் இப்போத் தான் ஶ்ரீராம் இங்கே வந்திருக்கும் கருத்துகளைப் படிக்கச் சொன்னார். பலரும் நான் நினைத்தாற்போலவே எழுதி இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே அறுபதைக் கடந்தவர்கள் என்பதும் புரிகிறது. இப்போது என் கருத்தைத் தாராளமாய்ச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
Geetha Sambasivam said...
தவறாக நினைக்க வேண்டாம். ஒரு கட்டத்தில் பெற்றோரைப் பார்த்துக் கொள்ள ஆள் நியமிப்பது தவறில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. அந்த மகனோ, மகளோ குடும்பத்தில் அதிகம் வேலை செய்பவர்களாகவோ அல்லது அவர்களும் வயதானவர்களாகவோ அல்லது நோயாளிகளாகவோ இருக்கலாம் இல்லையா? ஒன்றுமே இல்லை என்றாலும் வேலை நிமித்தம், பணி நிமித்தம் வெளியே செல்ல நேரிடும். எப்போதும் வயதான தாய், தந்தையைக் கவனிப்பது என்பது இயலாது என்பதே யதார்த்தம்! குறைந்த பட்சமாக சாமான்கள் வாங்கவானும் வெளியே செல்ல வேண்டி இருக்கும். ஆகவே வீட்டோடு இருக்கும்படி நம்பிக்கையான ஆள் கிடைத்தால் போடுவதில் தவறில்லை என்பது என் கருத்து. வீட்டில் இருப்பவர்கள் அவங்க வீட்டு வேலையை முடிச்சுட்டு வந்து தான் வயதான பெற்றோரின் கழிவுகளை அகற்ற முடியும். அதே ஆளைப் போட்டு விட்டால் உடனடியாகச் சுத்தம் செய்வார்கள். பிரச்னைகளும் வராது இல்லையா! //

இது தான் நான் ஶ்ரீராமுக்கு இந்தக் கதை குறித்து அனுப்பிய கருத்து! நீங்களே சொல்லுங்கனு ஶ்ரீராம் சொன்னதாலே இங்கே கொடுத்திருக்கேன். ஆனால் இதைச் சொல்லும் முன்னர் ரொம்பவே தயங்கினேன். :)
Geetha Sambasivam said...
அநாயாசமான மரணமே அனைவரும் எதிர்பார்ப்பது! ஆனால் அதுக்கும் அதிர்ஷ்டம் பண்ணி இருக்கணும். மற்றபடி சிராத்தம் செய்வதோ, தானங்கள் செய்வதோ அவரவர் மனோநிலையையும் குடும்ப நிலையையும் பொறுத்தது. இந்தக் கதையில் வரும் பிள்ளை/பெண் தாயிடம் பற்று இருந்ததால் தான் தாயின் நிலை அலங்கோலமாக இருக்க வேண்டாம் என்று ஆளைப் போட்டாவது கவனிக்கச் சொல்லி இருக்கார். என்ன ஒரு குறைனால் அம்மாவிடம் அருகே அமர்ந்து தினம் பத்து நிமிஷமாவது செலவிட்டிருக்கலாம். அதற்கு அவருக்கு நேரமில்லை போலும்! அல்லது மனசு வரலையோ! எதுவோ தெரியலை. ஆனாலும் பெற்ற தாய் கடைசியில் இப்படிச் சொல்லிட்டுச் செத்திருக்கவும் வேண்டாம். நம் பிள்ளைகளுக்கு நாம் செய்துவிட்டு அதைத் தியாகம் என்று சொல்வது சரியில்லை. பிள்ளை நன்றாக இருக்கணும்னு தானே பாடுபட்டுப் பிள்ளையை வளர்க்கிறோம். நாம் மட்டுமா? எல்லாப் பெற்றோரும் செய்வது தான் இது! பிள்ளை ஒண்ணும் தெருவிலே விட்டுடலையே! தன்னோடு வைத்துக் கொண்டு ஆளைப் போட்டுத் தானே பார்த்துக்கொள்ளச் செய்தார். அதுக்கும் பணம் செலவு செய்யணும் இல்லையா? அந்த மனசு பிள்ளைக்கு இருந்திருக்கு இல்லையா?
Geetha Sambasivam said...
ஆகவே தானங்கள் செய்வதோ, சிராத்தத்தை விமரிசையாகச் செய்வதோ அவரவர் வசதிப்படி. ஒண்ணுமே கொடுக்க முடியாதவங்க சிராத்தம் செய்யாமலே இருக்காங்களா என்ன? அதுக்குத் தகுந்தாற்போல் நம் சாஸ்திர சம்பிரதாயங்கள் வளைந்து கொடுக்கிறதே தவிர கட்டாயப்படுத்த வில்லை. செய்யாமலே இருப்பவர்களை வற்புறுத்திச் செய்ய வைப்பதும் இல்லை. அவரவர் மன விருப்பம், பண வசதி பொறுத்தே தானங்கள் கொடுப்பது எல்லாம் நடைபெறும். ஒரு சில இடங்களில் புரோகிதர்கள் கேட்பதாகச் சொல்கின்றனர். ஆனால் எனக்குத் தெரிந்து புரோகிதர்கள் வசதி இல்லாதவங்களுக்குக் குறைவான செலவிலேயே முடித்துத் தருவதையும் பார்த்திருக்கேன்.
Geetha Sambasivam said...
//மனைவி இருந்தால் தான் சாமவேதம் சார்ந்தோருக்கு தன் முன்னோர்களூக்கு
சிரார்த்தம் செய்யும் யோக்கியதையே இருக்கிறது என்று அந்த வேத்ததில் வரையறுத்து வைத்திருக்கிறது.
மருமகளுக்கு அவ்வளவு உரிமை. தாம்பாளத்தில் தணல் கொண்டு வந்து ஹோமத்தையே ஆரம்பித்து வைப்பவள் அவள் தான்.//

எல்லா வேதங்களிலும் ஔபாசனம் சிராத்தம் செய்யும் குடும்பத் தலைவரின் மனைவியால் தான் ஆரம்பித்து வைக்கப்படும். அதைத் தொடர்ந்து சிராத்தம் ஆரம்பிக்கும் முன்னும் கணவன் மனைவியின் அனுமதி வாங்கித் தான் செய்ய ஆரம்பிப்பார். இது பொதுவானது. ஆனால் சாமவேதத்தில் மனைவி உயிருடன் இல்லை என்றாலோ, உடல்நலமின்றிப் படுத்த படுக்கையாக இருந்தாலோ, வீட்டுக்கு விலக்காக இருந்தாலோ, வெளிஊர் சென்றிருந்தாலோ கணவனுக்கு ஹோமம் வளர்த்து சிராத்தம் செய்யும் அருகதை கிடையாது. ஹோமம் இல்லாமல் வெறும் சிராத்தம் மட்டுமே நடக்கும். அதே போல் இரு பிராமணர்கள் பிதுர்க்களாகவும், ஒரு மஹாவிஷ்ணுவும் உண்டு. சமையலும் சிராத்த சமையல் தான் செய்யணும். ஆனால் ஹோமம் மட்டும் இருக்காது. இது நான் இல்லாத சமயங்களில் என் கணவர் செய்திருக்கார். என் கடைசி மைத்துனர் அவர் மனைவிக்கும், தந்தைக்கும் செய்து வரும் சிராத்தத்தில் ஹோமம் இல்லாமலேயே செய்து வருகிறார். இரணிய சிராத்தம் எனப்படும் சிராத்தத்தில் தான் யார் செய்தாலும் எந்த வேதக்காரர்களாக இருந்தாலும் ஹோமம் இல்லை. சிராத்த மந்திரங்களும் அதற்குத் தனியாக உண்டு.
Geetha Sambasivam said...
சாமவேதத்தில் மனைவி இல்லைனா கணவன் சிராத்தமே செய்யக் கூடாது என்றெல்லாம் சொல்லபப்டவில்லை! சிராத்தம் செய்! ஆனால் மனைவி இல்லாமல் ஹோமம் வளர்க்காதே! என்பது தான் சொல்லப்பட்டிருக்கிறது.
ஞா. கலையரசி said...
எத்தனை நாளுக்குத்தான் இப்படி இழுத்துக்கொண்டு இருக்கப்போகுதோ

தெரியல? வேலைக்குப் போக முடியல, நிறைய செலவு, எப்பதான் முடியுமோ தெரியல”. இப்படிப்பட்ட வார்த்தைகளை அம்மா காதுபட மகன் பேசுவது தான் தவறு. முதுமையில் படுக்கையில் விழுந்தால் நமக்குமே இதே கதிதான். திரு கோபு சார் சொல்லியிருப்பது போல பெற்றோர் நன்றிக்கடனைப் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் தான். பல வீடுகளில் இது தான் இன்றைய நிலைமை. யதார்த்தமான கதைக்குப் பாராட்டுக்கள் வெங்கட்!
RAVIJI RAVI said...
அம்மா செய்தவற்றிற்கு பிரதி பலன் எவராலும் செய்துவிடமுடியுமா? ஒரு விழுக்காடாவது...? சுத்தம் செய்யவாவது ஒரு ஆளை ஏற்பாடு செய்தவரையில்...சரிதான். ஒருவரின் மறைவிற்குப்பிறகு இதை செய்திருக்கலாமே ...விட்டுவிட்டோமே என்ற எண்ணம் மேலிடுவதும் இயல்புதான். பெத்த மனம் பித்து...பிள்ளை மனம் கல்லு...ஒத்துக்கொள்ளத்தானே வேண்டும்! சற்றே உணர்ச்சிகரமான பதிவுதான். நன்றி!!!
Geetha Sambasivam said...
அதே போல் சாம வேதத்தில் மூத்த பிள்ளைக்கு மனைவி இல்லை என்றாலோ அல்லது மனைவியால் சிராத்தத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனாலோ அடுத்த பிள்ளையின் மனைவி இருந்தால் கூட ஹோமம் பண்ணி சிராத்தம் என்பது இல்லை. மூத்த பிள்ளையின் மனைவி இருந்தால் மட்டுமே மூத்த பிள்ளை செய்யும் சிராத்தத்தில் ஹோமம் உண்டு. தம்பி மனைவி இருந்தால் கூட ஹோமம் இல்லை. மூத்த பிள்ளை, மூத்த மருமகள் இருவருமே இல்லை என்றால் மட்டுமே அடுத்த பிள்ளை தன் மனைவியுடன் சேர்ந்து ஹோமம் வளர்த்துப் பெற்றோரின் சிராத்தம் செய்யலாம்.
ஜீவி said...
கீதாம்மா, வேதங்களில் கூட யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதைச் சொல்வதற்காக நான் அழுத்தமாக எடுத்துக்காட்டிய ஒரு விஷயத்தை ரொம்பவே dilute பண்ணி விட்டீர்கள்.
வெங்கட் நாகராஜ் said...
கதையல்ல நிஜம்.....

சில விஷயங்கள் நம்மைப் பாதிக்கும் விதமாகவே இருக்கின்றன. ஆள் வைத்து பார்த்துக் கொள்வதில் தவறில்லை - இருந்தாலும் பெற்ற குழந்தைகளும் கொஞ்சம் அனுசரணையாக இருக்கலாமே என்பதைச் சொல்லத்தான் இந்தப் பகிர்வு.

தங்களது கருத்துகளைச் சொன்ன அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி. எனது பகிர்வையும் இங்கே வெளியிட்ட “எங்கள் பிளாக்” ஆசிரியர் குழுவிற்கு மனம் நிறைந்த நன்றி.

அலுவலக வேலைகள், தமிழகப் பயணம் என சில நாட்களாக பதிவுலகம் பக்கம் வர இயலாத சூழல்..... கருத்துச் சொன்ன அனைவருக்கும் தனித்தனியாக பதில் சொல்ல முடியவில்லை. அனைவருக்கும் மீண்டும் நன்றி!
Thulasidharan V Thillaiakathu said...
ஹை நம்ம வெங்கட்ஜி! அவர்களின் கதை! அருமையான கதை. ஜிக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்.

துளசி, கீதா...

கீதா: பொதுவாக கருத்திடும் முன்னர் பிற பின்னூட்டங்களைப் பார்ப்பது இல்லை. கருத்திட கீழே அழுத்திக் கொண்டே வரும் போது சுப்புத்தாத்தாவின் கருத்தில் ஒரு வரி கண்ணில் படவும் உடனே வாசித்தேன்.அப்படியே நான் அடிக்கடிச் சொல்லும் கருத்து. நானும் எனது மகனுக்குச்சொல்லியிருப்பது அதுதான்..தாத்தாவின் அம்மா சொல்லியிருப்பது போல். அந்தத் தினம் என்றில்லாமல் எப்போதுமே...

அருமையான கருத்துடனான கதை. முடிவும் கண்ணில் கண்ணீஈர் வரவஹைத்துவிட்ட்து. எங்கள் ப்ளாகிற்கு மிக்க நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் said...
இந்தப்பதிவினில் நான் எழுதியுள்ள பின்னூட்டத்தைப் படித்து, மகிழ்ந்து, வியந்து, பாராட்டி ‘வாழ்வியல்’ என்ற தலைப்பினில் இன்று நம் பெரியவர் .. முனைவர் கந்தசாமி ஐயா அவர்கள் தனது ‘மன அலைகள்’ என்ற வலைத்தளத்தினில் தனிப்பதிவே வெளியிட்டுள்ளார்கள்.

இதோ அதற்கான இணைப்பு:

http://swamysmusings.blogspot.com/2016/11/blog-post.html

இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
Anonymous said...
//அவை என்னுடைய தியாகங்களுக்கு
ஈடாகுமா//

பெற்றோருடைய அன்பு, பாசம், தியாகம் என்பது அரித்தால் சொரிந்துகொள்வது போல. Basic instinct. அடுத்த வீட்டு குழந்தைக்கு செய்தால்கூட கொஞ்சம் ஒத்துக்கொள்ளலாம். ஆனால் அதுவும் Basic instinct தான். சுயநலத்துடன் குழந்தையை வளர்த்தால், குழந்தைகளும் வளர்ந்த பிறகு சுயநலத்துடன்தான் இருக்கும். முற்பகல் செய்யின்.