புதன், 29 பிப்ரவரி, 2012

செயல் திட்டம் (புராஜெக்ட் வொர்க்) என்றால் என்ன?


நேற்று நடைப் பயிற்சிக்காக போகும்போது தெரு முனையில் ஒரு பது விளம்பரத்தைப் பார்த்தேன். Final Year Projects இங்கே கிடைக்கும் என்று எழுதியிருந்தது. என்னவென்று விசாரித்தேன். அந்த விசாரணையில் தெரிய வந்ததை உங்கள் பார்வைக்காக வைக்கிறேன்.

இப்போதுள்ள பாடத்திட்டங்களின்படி ஏறக்குறைய எல்லா தொழில் நுட்பப் படிப்புகளுக்கும் அந்தப் படிப்பின் கடைசி வருடத்தில் ஒரு புராஜெக்ட் வேலை கொடுத்து அதை முடித்து வருமாறு சொல்வார்கள். முன்பெல்லாம் இது முதுகலைப் பட்டப் படிப்புகளுக்குத்தான் இருந்தது. அதை தீஸிஸ் சமர்ப்பித்தல் என்று சொல்லுவார்கள்.

அந்த தீஸிஸ் வேலை என்றால் என்னவென்றால், ஒவ்வொரு மாணவனும் ஒரு ஆராய்ச்சி செய்து அதன் முடிவுகளை ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையாக சமர்ப்பிக்க வேண்டும். இதை ஒரு ஆய்வாளர் பரிசீலித்து, படிக்கும் படிப்புக்கு ஏற்றதாக இருக்கிறது என்றால்தான் அந்த மாணவனுக்கு அந்தப் பட்டம் கிடைக்கும். இந்த தீஸிஸ் வேலையில் அந்த மாணவனை வழி நடத்த ஒரு அனுபவம் உள்ள ஆசிரியரை வழிகாட்டியாக நியமிப்பார்கள். அவர் அந்த மாணவர் எழுதும் தீஸிஸ் அவராகவே புள்ளிவிபரங்கள் சேகரித்து அவராலேயே எழுதப்பட்டது என்று சான்று கொடுக்கவேண்டும். அப்போதுதான் அந்த தீஸிஸ் முழுமையானதாகக் கருதப்படும்.

இந்த வேலை எதற்காக என்றால், ஒரு முதுகலைப் பட்டப்படிப்பு படித்த மாணவனிடம் ஒரு வேலை கொடுத்தால், அந்த வேலையை எவ்வாறு திட்டமிட்டு, அதற்கு வேண்டிய உபகரணங்களைச் சேகரித்து அந்த வேலையை முடித்து அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்கும் திறமையை வளர்ப்பதற்காகத்தான். அப்போதுதான் அவன் எந்த வேலையில் சேர்ந்தாலும் தன்னம்பிக்கையுடன் அந்த வேலையைச் செய்வான்.
நமது கல்வித் திட்டங்களில் மாற்றங்கள் அவ்வப்போது கொண்டு வருவார்கள். அது எதற்காக என்றால் அப்போதுதான் நமது மாணவர்களின் கல்வித்திறன் அதிகரிக்குமாம். இந்த மாற்றங்களில் எல்லா வித தொழில் படிப்புகளுக்கும் இந்த செயல் திட்டத்தை கட்டாயமாக்கினார்கள். நல்ல, உயரிய நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட மாற்றம்தான் இது.

ஆனால் கால ஓட்டத்திலே இந்த முறை சீரழிந்து, வெறும் சடங்காக மாறிவிட்டது. இது மிகவும் பரிதாபத்திற்குரிய விஷயமாக தற்போது இருக்கிறது. ஒவ்வொரு கல்லூரிக்குப் பக்கத்திலும் இருக்கும் கம்ப்யூட்டர் சென்டர்கள் இந்த செயல்திட்ட அறிக்கையை ரெடிமேடாக தயார் செய்து ஒரு விலை போட்டு கொடுக்கிறார்கள். மாணவர்களும் அதை வாங்கி அப்படியே கல்லூரியில் கொடுத்து விடுகிறார்கள். அவர்களை மேற்பார்வை பார்க்கும் ஆசிரியர்களும் சான்று கொடுத்து விடுகிறார்கள்.  

ஆக மொத்தம் செயல் திட்டத்தின் நோக்கம் நிறைவேறுவதில்லை. காலத்தின் மாற்றத்தினால் ஏற்படும் சீரழிவு இது. எங்களைப் போல் வாழ்வின் இறுதியில் இருக்கும் ஆசிரியர்கள் புலம்பத்தான் முடியும்!




செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

இரண்டு யோசிக்க வைக்கும் செய்திகள்.


ஒன்று.

திருநெல்வேலி ஆலங்குளம் அருகே ஒரு காரும் லாரியும் மோதினதில் எட்டு பேர் பலியாகி இருக்கிறார்கள். இரண்டு பேர் சீரியசாக இருக்கிறார்கள். மிகவும் பரிதாபமான செய்தி. படிப்பதற்கே கஷ்டமாக இருந்தது.

இந்தக் கஷ்டம், பரிதாபம் இவைகளை விட்டுவிட்டு செய்தியை அலசினால் தெரியக்கூடிய கருத்துகள்.
  
  1. ஒரு குடும்பத்தினர் பணத்தை மற்றும் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக இன்னொரு உறவினர் வந்த வாடகைக் காரில் ஏறியிருக்கிறார்கள். கார் சக்திக்கு மீறிய அதிக பாரத்தை ஏற்றியிருக்கிறது.
  2.   கார் கொண்டு வந்த உறவினர், எல்லோரும் ஏறினால் இட நெருக்கடி ஏற்படும் என்று சொன்னதை அவர்கள் பொருட்படுத்தவில்லை.
  3.   கார் டிரைவர் 22 வயதுப் பையன். அவன் இப்படி அதிக பாரம் ஏற்றினால் என்ன நடக்கும் என்பதை சிந்திக்கவில்லை.
  4.   கார் ஓட்டுபவர்களுக்குத் தெரியும், காரில் அதிக பாரம் இருக்கும்போது காரை ஓட்டுவதும் வளைப்பதுவும் எவ்வளவு கடினம் என்று.
  5.   டிரைவருக்கு இரவு சீக்கிரம் ஊர் போய்ச் சேரவேண்டிய அவசியம் இருந்திருக்கலாம். ஆகவே வேகமாக காரை ஓட்டியிருக்கிறார்.
  6.   அதிக பாரத்தினாலும், அதிக வேகத்தினாலும் வளைவில் திரும்பும்போது எதிரே வரும் வண்டிக்கு இடம் கொடுக்க முடியவில்லை.
  7.   லாரிக்காரனும் அதே மாதிரி வளவில் இடம் கொடுக்காமல் வந்திருக்கலாம்.
  8.   விபத்து நடந்துவிட்டது. 8 உயிர்கள் நஷ்டம். எத்தனை அழுது புரண்டாலும் உயிர்கள் மீளப்போவதில்லை.

காரில் போகும்போது சில கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். டிரைவர் ஓட்டினாலும் கூட செல்பவர்கள் கண்காணிப்பாக இருந்து செயல்படவேண்டும். அதிக வேகம் போகும்போது டிரைவரை கண்டிக்கவேண்டும். அதற்கு தைரியம் இல்லாவிடில் காரில் போகக்கூடாது. அதிக பாரம் ஏற்றுவதில் கண்டிப்பு வேண்டும். தயவு தாட்சண்யம் கூடாது. விபத்து ஏற்பட்டபின் வருத்தப்படுவதில் எந்த பலனும் இல்லை.

இரண்டு.

வேளச்சேரியில் மனித உரிமைக் கழகத்தினரை பொது மக்கள் நன்றாக மட்டம் தட்டியிருக்கிறார்கள். எப்போதும் இவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்காக எதுவும் செய்வதில்லை. திருட்டுக் கொடுத்தவனுக்கு ஒன்றும் சொய்ய மாட்டார்கள். திருடனைப் பிடித்து தண்டித்தால் இவர்களுக்கு உடனே மனித நேய உணர்வு பொங்கிக்கொண்டு வரும்.

கொலை நடந்துவிட்டால் கொலையுண்டவனின் குடும்பத்தைப் பற்றி இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். கொலைகாரனுக்காக பரிந்து பேசிப் போராட்டம் நடத்துவார்கள். இவர்களை எல்லாம் சுண்ணாம்புக் காளவாயில் வைத்து வேகவைக்கவேண்டும்.

திங்கள், 27 பிப்ரவரி, 2012

உலகமே ஒரு நாடக மேடை


நாடகத்தில் நடிகர்கள் பலப்பல வேஷங்கள் கட்டுகிறார்கள். அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்கும் அந்த வேடத்திற்கும் சம்பந்தமிருக்காது. நல்ல குணசீலரான ஒருத்தர் வில்லனாக வேஷம் கட்டியிருப்பார். அவர் அப்படி நடிக்கும்போது, பார்க்கும் ரசிகர்கள் அவர் மீது அதீத வெறுப்பைக் காட்டினால் அது அவருடைய நடிப்புக்கு வெற்றி என்று கூறுகிறோம். பெரிய பணக்காரர் பிச்சைக்காரனாக வேஷம் போட்டிருப்பார். அவர் அந்த வேடத்திற்குப் பொருத்தமாக நடிப்பார்.

நிஜ வாழ்க்கையிலும் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை நாம் ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப நடந்து (நடித்து) கொண்டிருக்கிறோம். பல சமயங்களில் நாம் வேஷத்தை மாற்ற வேண்டியிருக்கிறது. வீட்டில் ஒரு வேஷம். அலுவலகத்தில் வேறொரு வேஷம். பஸ்சில் போகும்போது இன்னொரு வேஷம். இப்படியாக ஒரு நாளில் பல வேஷங்களில் நாம் உலா வருகிறோம். ஆனால் அதை நாம் வேஷம் என்று உணர்வதில்லை.

அரசில் பெரிய பதவியில் எல்லோரையும் கிடுகிடுக்க வைக்கும் அதிகாரி, தன்னுடைய மேலதிகாரி முன் கூழைக் கும்பிடு போடுவார். அலுவலகத்தில் கீழ்மட்ட நிலை ஊழியர் வீட்டுக்குப் போனவுடன் பெரிய தர்பார் பண்ணுவார்.

இவையெல்லாம் சாதாரணமாக நடப்பவை. இணையம் வந்த பிறகு, ஒரு காலகட்டத்தில் பிளாக்குகள் வந்தன. பிளாக்குகள் இன்னொரு மாதிரியான நாடகமேடை. நம் ஒவ்வொருவருடைய எண்ணங்களுக்கும் வடிகாலாக இந்த பிளாக்குகள் அமைந்தன. மனித இயல்பு என்னவென்றால், நம்மை யாரும் பார்க்காதபோதுதான் அவரவர்கள் இயற்கைக் குணங்கள் வெளிவரும். இந்த பிளாக்குகளில் யாரும் தங்கள் சொந்த விவரங்களைக் கூறவேண்டிய அவசியம் இல்லை. அதனால் என்ன வேஷம் கட்டிக்கொண்டாலும் யாரும் கேட்க மாட்டார்கள். இது ஒரு மாபெரும் சௌகரியம். பிளாக்குகள் பிரபலமாக இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்யாரும் எதைப் பற்றியும் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். இதுதான் மிகச்சிறந்த நடிப்பு ஆகும். எவ்வளவு சௌகரியம் பாருங்கள்

இதனால்தான் உலகமே ஒரு நாடக மேடை என்று சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். இப்போது நமது ஆன்மீகவாதிகளின் மிகப் பிரியமான கேள்விக்கு வருவோம்.

நான் யார்?” என்று கண்டுபிடித்தால் முக்தி அடையலாம் என்று காலம் காலமாகச் சொல்லி வருகிறார்கள்இந்த நாடக உலகில் எல்லோரும் வேஷம் போட்டுக் கொண்டிருக்கும் போது நான் யாரென்று எப்படி சொல்வது? என் மனைவிக்கு புருஷன் என்று சொல்வதா? என் மகனுக்கு நான் தகப்பன் என்று சொல்வதா? நான் ஒரு ஆபீசர், பியூன் இப்படி எதைச்சொன்னாலும் அது ஒரு பகுதி உண்மைதானே தவிர முழு உண்மையும் ஆகாது. ஆனால் நான் யார் என்று தேடு, நீ முக்தி அடைவாய், அல்லது ஞானம் பெறுவாய் என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படி நடைமுறைக்கு பொருந்தாத வேதாந்தக் கருத்துகளினால்தான் இந்து சமயம் சாதாரண நிலையில் உள்ள மக்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது