புதன், 26 நவம்பர், 2014

அரசியல்வாதிகள்- அன்றும் இன்றும்



இப்படி ஒரு பின்னூட்டம் என் ஒரு பதிவிற்கு வந்தது.

அய்யா அவர்களே 

ஒரு பதிவில் இதை படித்தேன். நம்பவே முடியவில்லை.
இத்தகைய அரசியல்வாதியையும் இன்றைய அரசியல்வாதிகளையும் compare செய்து ஒரு பதிவிடுங்களேன். இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு புதிய பாடமாக இருக்கும்.

அன்பரின் வேண்டுகோளை நிறைவேற்றும் அளவிற்கு எனக்கு அரசியல் ஞானம் இல்லை. ஆகவே அவர் பின்னூட்டத்தை மட்டும் அப்படியே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். கூடவே என் அனுபவங்கள் சிலவற்றையும் பகிர்கிறேன்.

முதலமைச்சர் காமராசரும் பிரதமர் நேருவும் கூட்டமொன்றில் பங்கேற்க மதுரையைத் தாண்டி மகிழுந்தில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

உரையாடலின் நடுவே நினைவு கூர்ந்தவரான நேரு ‘மிஸ்டர் காமராஜ்... உங்க சொந்த ஊர் இந்தப் பக்கம்தானே...?’ என்று கேட்கிறார்.

‘ஆமாங்க. இங்ஙனதான். இன்னும் கொஞ்ச தூரத்தில் வரப்போகிறது’ என்று கூறுகிறார் காமராசர்.

‘அப்படியானால் உங்கள் வீட்டுக்குப்போய் உங்கள் தாயாரைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டுச் செல்லவேண்டும் அல்லவா...’ என்று நேரு கேட்க ‘அது எதுக்குன்னேன். இப்பவே கூட்டத்துக்கு நேரமாயிட்டு...’ என்று காமராசர் மறுக்கிறார்.

‘நோ நோ... இவ்வளவு தூரம் வந்துவிட்டு உங்கள் தாயாரைப் பார்க்காமல் சென்றால் நன்றாக இருக்காது. நீங்கள் பார்க்க நினைக்காவிட்டாலும் பரவாயில்லை. நான் அவர்களைப் பார்த்தேயாக வேண்டும். என்னை அவர்களிடம் கூட்டிச் செல்லுங்கள்’ என்று அன்புக் கட்டளையிடுகிறார் நேரு.

‘விடமாட்டேன்னுதீகளே...’ என்ற காமராசர்., வண்டி சற்று தூரம் சென்றதும் ஓட்டுநரிடம் ‘ஏப்பா. வண்டிய இப்படி ஓரங்கட்டு...’ என்று நிறுத்தச் சொல்கிறார்.

அது வீடுகளே இல்லாத பகுதி. சாலையின் இருமருங்கிலும் விவசாய நிலங்கள். அந்நிலங்களில் அப்பகுதிப் பெண்கள் களை பறித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தாயாரைப் பார்க்க வீட்டுக்கு அழைத்துச் செல்லச் சொன்னால் இப்படி அத்துவான வெயிலில் வண்டியை நிறுத்தியிருக்கிறாரே என்ற வினாவுடன் வண்டியை விட்டிறங்குகிறார் நேரு.

காமராசர் களை பறிக்கும் பெண்டிர் கூட்டத்திலிருந்து வயதான பெண்மணி ஒருவரை அழைக்கிறார் ‘ஆத்தா... நான்தான் உன் மகன் காமராசு வந்திருக்கேன். உன்னப் பார்க்க நேரு வந்திருக்காரு...’ என்று கூவியிருக்கிறார்.

புன்செய்க் காட்டுப் புழுதியுடன் உழைத்து வியர்த்த முகத்துடன் ‘ஏ காமராசு... வந்திட்டியாப்பா... நல்லாருக்கியா...’ என்று தன் மகனைக் கண்ட மகிழ்ச்சியில் உள்ளம் நெகிழ அருகில் வருகிறார் காமராசரின் தாயார்.

தாயும் மகனும் அளவளாவிக் கொள்கிறார்கள். நேருவைக் காட்டி அறிமுகப்படுத்துகிறார்.

நேருவால் தன் முன்னால் நடந்துகொண்டிருப்பதை நம்ப முடியவில்லை. சிலையாகி நிற்கிறார் !

அவர்தான் நம் அய்யா காமராசர்! 

சேலம் குரு


என் அனுபவம் ஒன்று:

என் நினைவில் நின்ற  அன்றைய ஒரு அரசியல்வாதி பற்றிய நினைவு. எல்லா அரசியல்வாதிகளும் காமராஜர் அல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

நான் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு !956 ல் படித்தபோது நடந்த நிகழ்வு. நான் மாணவ மன்ற செயலாளராக இருந்தேன். மாணவ மன்றத்திற்காக ஒரு கூடுதல் ஹால் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவிற்கு அன்றைய முதல் அமைச்சரைக் கூப்பிட்டிருந்தோம்.

முதல் அமைச்சர் அடிக்கல் நாட்டுவதற்காக புதிதாக ஒரு கலவைச்சட்டியும் ஒரு கொத்தனார் கரண்டியும், இரும்பில், வாங்கி வைத்திருந்தோம். விழாவிற்கு இரண்டு நாள் முன்பு விழா ஏற்பாடுகளைப் பார்வையிட வந்த ஒரு முக்கிய மாவட்ட அதிகாரி இந்த கரண்டியைப் பார்த்துவிட்டு, இது சரிப்படாது, முதல் அமைச்சர் பயன்படுத்தும் கரண்டி வெள்ளியில் இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

நான் என்ன இது, கொத்தனார் கரண்டி வெள்ளியில் கிடைக்குமா என்று சந்தேகப்பட்டுக்கொண்டு நகைக் கடைக்குப் போனால் அங்கு வெள்ளியில் ரெடிமேடாக இந்தக் கரண்டி வைத்திருந்தார்கள். விசாரித்ததில் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும் விழாக்களில் இது சகஜம் என்று சொன்னார்கள். அரசியல்வாதி வந்து போனபிறகு இந்தக் கரண்டியைத் திருப்பிக்கொண்டு வந்தால் வாங்கிக்கொள்வீர்களா என்று கேட்டேன். அந்தக் கடைக்காரர்கள் சிரித்தார்கள். 

எனக்கு அப்போது வயது 21. உலகம் என்றால் வீடு, கல்லூரி மட்டுமே. அவர்கள் ஏன் சிரித்தார்கள் என்று எனக்குப் புரியவில்லை. மந்திரி வந்து போனபிறகு கொண்டு வாருங்கள், வாங்கிக்கொள்கிறோம் என்று சொன்னார்கள்.

சரியென்று ஒரு கரண்டி வாங்கி வந்து வைத்திருந்தோம். விழாவிற்கு மந்திரி வந்து அடிக்கல் நாட்டினார். நான் மேஸ்திரியிடம் மந்திரி போனவுடன் அந்த வெள்ளிக் கரண்டியை பத்திரமாக என்னிடம் கொண்டு வந்து கொடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்தேன். 

விழா முடிந்து மந்திரி போன பிறகு மேஸ்திரியிடம் அந்தக் கரண்டி எங்கே என்று கேட்டேன். தம்பி, அடிக்கல் நாட்டின உடனே மந்திரி அந்தக் கரண்டியை தன் உதவியாளரிடம் கொடுத்தார். அவர் வாங்கி தன் பையில் போட்டு கொண்டு போய் விட்டாரே  என்றார்.  

அப்போதுதான் எனக்கு அந்த நகைக் கடைக்காரர் ஏன் சிரித்தார் என்று புரிந்தது.

அன்றைய அரசியல்வாதி வெள்ளியில் கரண்டி கேட்டார். இன்றைய அரசியல்வாதிகள் தங்கம் அல்லது பிளாட்டினத்தில் கரண்டி கேட்பார்கள் என்று நினைக்கிறேன். இதுதான் அன்றைய அரசியல்வாதிக்கும் இன்றைய அரசியல்வாதிக்கும் உள்ள வித்தியாசம்.

அனுபவம் இரண்டு:

நான் முதல் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது நடந்த நிகழ்ச்சி.

அன்றைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவை எங்கள் கல்லூரிக்கு அழைத்திருந்தார்கள். அனைத்து முதுகலை மாணவர்களும் ஆசிரியர்களும் அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அனைத்து மாணவர்களும் நேரு கோட் அணிந்து வரவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். எல்லோரும் புதிதாக அந்த கோட் தைத்தோம். அதனுடன் போட்டோ எடுத்துக்கொண்டோம். இது ஒன்றும் பெரிதல்ல.

அவருக்கு உணவு தயாரிக்க டில்லி அசோகா ஓட்டலில் இருந்து ஒரு சமையல்காரரை விமானத்தில் தருவித்தார்கள். அவருக்கு ஒரு நாளைக்கு 1000 ரூபாய் சன்மானம். அன்றைய (1958) ஆயிரம் ரூபாய் இன்றைக்கு லட்சம் ரூபாய்க்கு சமம். அவர் செய்த ஆர்ப்பாட்டத்தில் எங்கள் கல்லூரியில் உள்ள அனைத்து பெரிய ஆபீசர்களும் ஆடிப்போய்விட்டார்கள். நேருவுக்குக் கூட அவ்வளவு பயப்படவில்லை. எப்படியோ விழா வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

அனுபவம் மூன்று:

கேரளாவில் நடந்த ஒரு செமினாருக்குப் போயிருந்தேன்.  கேரள விவசாய மந்திரி கலந்து கொள்வதாக ஏற்பாடு. விழா ஆரம்பிப்பதற்கு ஐந்து நிமிடம் முன்பாக ஒரு அம்பாசிடர் கார் வந்து முகப்பில் நின்றது. வேட்டி சட்டை போட்டவர்கள் இருவர் இறங்கினார்கள். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை. எந்தப் போலீசும் இல்லை. விழா அமைப்பாளர்கள் அவர்களை வரவேற்று மேடைக்கு அழைத்துச்சென்றார்கள். ஒருவர் மேடையில் அமர்ந்தார் மற்றவர் கீழே முதல் வரிசையில் அமர்ந்தார்.

இவர்கள் யார் என்று விசாரித்தேன். மேடையில் அமர்ந்தவர்தான் விவசாய மந்திரி. கீழே அமர்ந்தவர் அவருடைய உதவியாளர் என்றார்கள். அந்த எளிமையைக் கண்டு நான் அதிசயித்தேன்.

திங்கள், 24 நவம்பர், 2014

இது என்ன வியாதி?

இரண்டு நாட்களாக தமிழ்மணம் திரட்டியில் இருந்து சில தளங்களை பார்வையிடும்போது கீழ்க்கண்ட படத்தில் இருப்பது போல் இருட்டிக்கோண்டு வருகிறது. கூடவே ஒரு சுட்டியும் தெரிகிறது. பதிவை மேலும் படிக்க பக்கத்தில் இருக்கும் விளம்பரத்தை சுட்டுங்கள் என்கிறது. ஆனால் பக்கத்தில் எந்த விளம்பரமும் இல்லை.

சில பதிவுகளில் மட்டுமே இவ்வாறு ஆகிறது.

வேறு யாருக்காவது இந்த அனுபவம் உள்ளதா?


படத்தின் மேல் கர்சரைக் கொண்டு போனால் படம் பெரிதாகத் தெரியும்.

சனி, 22 நவம்பர், 2014

VGK 11 ] நாவினால் சுட்ட வடு




இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.


விமர்சனம்.

தமிழ் நாட்டு சமூக வழக்கங்களில் ஒன்று, ஒரு வீட்டில் யாருக்காவது கல்யாணம் ஆகி இருந்தால் கல்யாணம் முடிந்து ஆறாவது மாதத்திலிருந்து “விசேஷம் ஒன்றும் இல்லையா” என்று பெண்ணைப் பெற்றவர்களையும் புகுந்த வீட்டிலுள்ளவர்களையும் துளைத்தெடுப்பது. இன்னும் சில ஜன்மங்கள் பெண்ணையே நேரில் கேட்டு அந்தப் பெண்ணின் மனதை நோகடிப்பார்கள். இது காலம் காலமாகத் தொடரும் வேதனைக் கதை.

இந்த நிலைக்கு பெண் மட்டுமே பொறுப்பு என்பது அநேகரின் கருத்து. ஆனால் ஆணும் இதற்கு பொறுப்பாகிறான் என்பது விஞ்ஞானம் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. ஆனாலும் இந்தக் கதையில் வரும் ஆண்மகன் தன் மனைவியை மட்டுமே பொறுப்பாக்குகிறான். இது இன்னும் வேதனைக்குரிய நிலை.

தவிர அவன் அவளை குழந்தைப் பாசம் என்னவென்று தெரியாது என்று குற்றம் சுமத்துமிடம் மனதுக்கு கஷ்டமாயிருக்கிறது. ஏதோ அவனுக்கு மட்டும்தான் குழந்தைப் பாசம் இருக்கிற மாதிரி அவன் பேசுகிறான். தவிர அவன் அவனுடைய முன்னாள் காதலியிடம் இன்னும் காதல் வைத்திருப்பது போல் கதாசிரியர் காட்டியிருக்கிறார். இந்த இரண்டு குணாதிசியங்களும் கதாநாயகனை மிகவும் கீழே தள்ளுகிறது. இந்த இடத்தில் ஆசிரியர் செய்தது முள்ளாக குத்துகிறது.


பழனி. கந்தசாமி.

புதன், 19 நவம்பர், 2014

ஆன்மீகத்தில் ஒரு பக்கம்.


இந்தக் கருத்துக்கள் உங்கள் சிந்தனைகளைத் தூண்டுவதற்காக மட்டுமே
.
நாம் பிறக்கும்போது என்ன கொண்டு வந்தோம்? ஒன்றுமில்லை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். செல்வந்தர் வீட்டில் பிறந்திருந்தால் பெற்றவர்களுடைய செல்வம் ஒருவருக்கு கிடைக்கிறது. ஏழையின் வீட்டில் பிறந்திருந்தால் அவர்களின் வறுமை அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால் எதுவும் அவன் கொண்டு வரவில்லை.

அவன் வளர்ந்து வாழும்போது அவன் சேர்க்கும் செல்வங்களெல்லாம் இந்த உலகில் இறைவன் படைத்த பொருள்களிடமிருந்து கிடைக்கிறது. ஆனால் இதில் அவனுடைய முயற்சியும் சேர்ந்திருக்கிறது. அப்போதும் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். முயற்சி செய்பவர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரி செல்வம் கிடைப்பதில்லை. கைப்பொருளை இழப்பவர்களும் உண்டு. அதிக செல்வம் ஈட்டுபவர்களும் உண்டு.

இங்கு ஒன்றை யோசிக்கவேண்டும். ஒரே வகையான முயற்சியில் இந்த வித்தியாசமான பலன்கள் ஏன் கிடைக்கின்றன? இதற்கு ஆன்மீகத்தில் “வினைப்பயன்” என்று சொல்லி விடுகிறார்கள். அதாவது ஒவ்வொருவரும் அவர்கள் பூர்வ ஜன்மத்தில் செய்த வினைகளின் பயன் இந்த ஜன்மத்தில் பலனளிக்கிறது என்று சொல்கிறார்கள்.

இது உண்மையோ, பொய்யோ, ஆனால் இந்த விளக்கம் மனதிற்கு சாந்தி அளிக்கிறது. இந்த வினைப்பயன் எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்தவர் யாரும் இல்லை.

ஒருவன் ஒரு சமயத்தில் வைத்திருக்கும் கைப்பொருள் அவனால் முழுமையாக ஈட்டப்பட்டது என்று சொல்வது சரியல்ல. அவனுடைய வினைப் பயனே அந்த பொருளை அவனுக்கு ஈட்டித் தந்திருக்கிறது. ஆகவே அவன் அந்தப் பொருளின் மீது முழு உரிமை கொண்டாடுவது தவறல்லவா?
மேலும் அவன் இவ்வுலகை விட்டுப் போகும்போது அந்தப் பொருளில் கடுகளவாவது தன்னுடன் எடுத்துச் செல்ல முடிகிறதா? இல்லையே. பின் ஏன் உலகில் மாந்தர்கள் செல்வத்திற்காக இப்படி போராடுகிறார்கள்?

அதே மாதிரிதான் ஒருவன் பெறும் கல்வி அல்லது ஞானம். அதை அவன் பல ஆசிரியர்களிடமிருந்து பெறுகிறான். அது எப்படி அவனுடைய முழு உரிமையாகும்? அவன் அந்த ஞானத்திற்கு காப்பாளன் மட்டுமே. அவனுடைய கடமை அந்த ஞானத்தை எல்லோருக்கும் பகிர்ந்தளிப்பது ஆகும்.

நாம் பதியும் பதிவுகளெல்லாம் நமக்கு தூக்கத்தில் ஞானோதயத்தில் உதித்த கருத்துகளா? நாம் பலரிடமிருந்து கற்றவற்றை நமக்கு தோன்றியவாறு பதிகிறோம். இதற்கு நாம் முழு உரிமை கோண்டாடுவது சரியா?


ஆனால் மனிதர்கள் இந்த உண்மையை உணர்வதில்லை. தான் ஈட்டிய பொருளும் கல்வியும் தன்னுடையது மட்டுமே. அடுத்தவர்களுக்கு அதில் உரிமை இல்லை என்றே நினைக்கிறார்கள். இதுதான் மாயை. இதிலிருந்து விடுபட வேண்டும். அதுவே முதிர்ச்சிக்கு அறிகுறி.

திங்கள், 17 நவம்பர், 2014

கடவுளுடன் ஒரு பேட்டி

இந்த விடியோவைப் பார்க்கவும். இது மாதிரி விடியோக்கள் யுட்யூப்பில் ஏகப்பட்டது இருக்கின்றன. இதைப் பார்த்து இரு பதிவர்கள் பதிவிட்டால் ஒருவர் இன்னொருவரை காப்பி அடித்தார் என்றுதான் தோன்றும். இந்த மாதிரி ஒரு விவகாரம்தான் சமீபத்தில் தோன்றி அதற்கு நானும் ஒரு பதிவு போட்டேன். பதிவர்கள் மேல் தவறு ஏதும் இல்லை. புரிதலில்தான் தவறு ஏற்பட்டுள்ளது.

ஞாயிறு, 16 நவம்பர், 2014

டாக்டர் ஜெகில் மற்றும் மிஸ்டர் ஹைடு

எச்.ஜி.வெல்ஸ் எழுதிய இந்தக் கதையை பலரும் படித்திருப்பீர்கள். இது ஒரு விஞ்ஞான கற்பனை.

ஒரு மனிதனுக்குள் இரு வேறு மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது இந்தக் கதையின் அடிப்படை. ஒருவன் நல்லவன். இன்னொருவன் கெட்டவன். அதாவது எல்லோருக்குள்ளும் இந்த இரண்டு குணங்களும் இருக்கிறது என்பது ஒரு சித்தாந்தம்.

ஒரு டாக்டர் தன் பரிசோதனைகளின்போது ஒரு புது மருந்தை அகஸ்மாத்தாக கண்டு பிடிக்கிறார். அந்த மருந்தை சாப்பிட்டால் மனிதன் முற்றிலும் மாறி விடுகிறான். அப்போது அவனுடைய வக்கிர குணங்களெல்லாம் தலை தூக்கி இருக்கின்றன. அதற்குள்ள மாற்று மருந்தை சாப்பிட்டால் பழையபடி நல்ல மனிதராக ஆகி விடலாம்.

இந்த மருந்தை உபயோகித்து அந்த டாக்டர் தன்னை அடிக்கடி மாற்றிக்கொள்கிறார். பிறகு ஒரு மாற்றமுடியாத நிலைக்குப்போய் மாண்டு போகிறார்.

இந்தக் கதையை என் இளமைக் காலத்திலேயே படித்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஒரு கற்பனை என் மனதில் தோன்றும். நமக்குள்ளும் இப்படி ஒரு கெட்ட மனிதன் இருப்பானா என்று தோன்றும். அன்றைய காலகட்டத்தில் இதை சோதனை செய்து பார்க்கும் அளவிற்கு தொழில் நுட்பங்கள் வளரவில்லை.

சமீபத்தில் நான் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கினேன். அதில் இரு பக்கமும் கேமரா இருக்கிறது. ஆனால் அவைகளை முழுமையாக பயன்படுத்தும் அளவிற்கு நான் தேர்ச்சி பெறவில்லை. ஒரு நாள் ஒரு எக்சிபிஷனில் இந்த போனை வைத்து சில படங்கள் எடுக்க முயற்சி செய்தேன். அப்போது திடீரென்று என் முகம் ஸ்கிரீனில் தெரிந்தது. எதையோ அழுத்த அந்த படம் போனில் பதிவாகிவிட்டது.

வீட்டிற்கு வந்து சாவகாசமாக நான் எடுத்த படங்களைப் பார்த்துக்கொண்டு வரும்போது இந்தப் படமும் தெரிந்தது. அதில் என்ன விசேஷம் என்றால் நான் எச்.ஜி.வெல்ஸ் கதையைப் படித்த போது ஏற்பட்ட ஆசை இந்த படத்தில் நிறைவேறி விட்டது. என்னுடைய மறுபக்கம் இதில் தெளிவாக பதிவாகியுள்ளது.

இதை நீங்களும் பார்க்கவேண்டாமா? அதனால் உங்கள் பார்வைக்கு, என்னுடைய இரண்டு பக்கங்களையும் வைக்கிறேன்.  அநேகமாக இந்தப் படங்களைப் பார்த்த பிறகு என்னுடைய தளத்திற்கு வரும் அன்பர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடும் என்று எதிர்பார்க்கிறேன்.



எது என் நல்ல பக்கம், எது என் கெட்ட பக்கம் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

புதன், 12 நவம்பர், 2014

பதிவுலகில் ஏற்படும் அவலங்கள்.

பதிவுலகில் ஏற்படும் அவலங்கள்.
இன்று ஒரு பதிவரின் புலம்பல் பதிவை வாசித்தேன். அவரின் புலம்பல் என்னவென்றால் அவருடைய ஒரு பதிவை அப்படியே காப்பி எடுத்து இன்னொரு பதிவர் தன் தளத்தில் போட்டிருக்கிறார் என்பதே.
அந்த இரு பதிவுகளையும் இங்கே கொடுத்திருக்கிறேன். அவைகாப்பி ரைட்பெற்றவையல்ல. ஆகவே அவைகளை இங்கு பயன் படுத்தியிருக்கிறேன். பதிவர்கள் பெயர் இங்கு தேவையில்லை என்பதால் அவைகளை விட்டு விட்டேன்.
இப்படி ஒருவர் பதிவை அடுத்தவர் காப்பியடிக்கலாமா, கூடாதா என்பதைப்பற்றி எனக்குத் தெரியவில்லை. பதிவர்கள் தாங்களே ஒரு கருத்துக்கு வரலாம்.


Nov.12, 2011

கடவுளோடு ஒரு உரையாடல்....

                               கடவுளோடு ஒரு உரையாடல்..
                              --------------------------------------------
(
கனவொன்று கண்டேன்.அதில் கடவுளைக் கண்டேன். 
 
அவருடன் உரையாடினேன். விழித்துப் பார்த்தேன். கண்டது 
 
அனைத்தும் தெளிந்தும் தெளியாமலும் உள்ளத்தில் ஓட, 
 
காகிதத்தில் எழுதி வைத்தேன்.உங்களிடம் பகிர்கிறேன். ) 


கடவுள்:-என்னைக் கூப்பிட்டாயா.?

நான் :-    கூப்பிட்டேனா.? இல்லையே...யார் நீங்கள் .?

கடவுள்:-நான் தான் கடவுள். உன் வேண்டுதல்கள் எனக்குக்
                  கேட்டது.உன்னுடன் கொஞ்சம் உரையாடலாமே
                  என்று வந்தேன்.

நான்:-    நான் அவ்வப்போது வேண்டுவது உண்டு. வேண்டும்
                போது மனம் லேசானதுபோல் தோன்றும். இப்போது
                 நான் மும்முரமாய் ( BUSY )இருக்கிறேன்


கடவுள்:-நீ எதில் மும்முரமாய் இருக்கிறாய்.? எறும்புகளும்தான்
                  வேலையில் மும்முரமாய் இருக்கின்றன..

நான்:-    தெரியவில்லை. ஆனால் எனக்கு நேரம் கிடைப்பது
                 இல்லை. வாழ்க்கை எப்போதும் ஒரே ஓட்டமாய்
                 இருக்கிறது

கடவுள்:-உண்மைதான். செயல்பாடுகள் (ACTIVITIES )உன்னை
                 மும்முரமாக்கும். பயன்பாடுகள் (PRODUCTIVITY )பலனை
                 தரும்.செயல்பாடுகள் நேரத்தைக் குடிக்கும். பயன்பாடு
                 அந்தத் தளையிலிருந்து விடுவிக்கும்.

நான்:-    புரிகிறார்போல் இருக்கிறது. இருந்தாலும் பூராவும்
                 விளங்க வில்லை. எப்படியானாலும் நீங்கள் பேசவருவீர்.
                கள் என்று நான் எண்ணவில்லை.

கடவுள்:-உன் நேரத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தீர்வு
                 காணவும்,சில தெளிவுகளைச் சொல்லவும் வந்துள்ளேன்

நான்:-    வாழ்க்கை ஏன் இவ்வளவு சிக்கலாக இருக்கிறது.?

கடவுள்:-முதலில் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்வதை நிறுத்து.
                  வாழ்க்கையை வாழ். அதை ஆராய்ச்சிசெய்வதே அதை
                  சிக்கலாக்கும்.

நான்:-    ஏன் வாழ்க்கை எப்போதும் சந்தோஷமாக இல்லை.?

கடவுள்:-உன்னுடைய இன்று பற்றி, நேற்றின் நாளையாய் இருந்த
                  போதேஆராயத் தொடங்கி விட்டாய்.ஆராய்ந்து கவலைப்
                  படுவதே உன் வாடிக்கையாகிவிட்டது அதுவே நீ மகிழ்ச்சி
                  யாக இல்லாததன் காரணம்.

நான்:-     இவ்வளவு நிச்சயமில்லாத்தன்மை இருக்கும்போது
                  எப்படிக் கவலைப்படாமல் இருக்க முடியும்.?

கடவுள்:-நிச்சயமின்மை தவிர்க்க இயலாதது. கவலை தேவை
                  இல்லாதது; தேடிக்கொள்வது.

நான்:-     நிச்சயமின்மை வலி தருகிறதே.

கடவுள்:-வலி தவிர்க்க முடியாதது; ஆனால் வேதனையாக
                  எண்ணுவது நாமே தேடுவது. ( PAIN IS INEVITABLE. BUT
                  SUFFERING IS OPTIONAL )

நான்:--  வேதனையால் வாடுவது நாம் தேடுவதென்றால் ஏன்
                 எப்போதும் நல்லவர்கள் கஷ்டப் படுகிறார்கள்.?

கடவுள்:-வைரம் அறுக்கப்படாமல் பளபளப்பாகாது,மின்னாது.
                  தங்கம் நெருப்பில் புடம் போடாமல் புனிதமாகாது.
                  நல்லவர்கள் சோதனைக்கு உள்ளாவார்கள்,ஆனால்
                  வேதனைப்பட மாட்டார்கள். வாழ்வின் அனுபவங்கள்
                 அவர்களை சிறப்பிக்கும். கசப்பிக்காது.

நான்:-    இந்த வெதனைகளும் சோதனைகளும் உதவும் என்று
                 சொல்கிறீர்களா.?

கடவுள்:-அனுபவம் ஒரு ஆசான். அவன் முதலில் தேர்வு வைத்து
                  பின் அதன் மூலம் பாடம் கற்பிக்கிறான்.

நான்:-    இருந்தாலும் நாம் ஏன் இந்த சோதனைகளுக்கு உட்பட
                 வேண்டும். ?இவற்றிலிருந்து விடுபட முடியாதா.?

கடவுள்:-சோதனைகள் என்பது, மனோதிடத்தை அதிகரிக்க 
                 
உதவும் ,விதிக்கப்பட்ட தடைக் கற்கள் தரும் 
                 
பாடங்களே. போராட்டங்களிலும் சகிப்பிலுமே மன
                  வலிமை வரும். சோதனைகள் இல்லாதபோது அல்ல.

நான்:-    உண்மையில், இவ்வளவு வேதனைகளுக்கு உள்ளாகியும்
                 எங்குதான் போகிறோம் என்பதே புரிவதில்லை.

கடவுள்:-புறமே தேடினால் போகுமிடம் தெரியாது. உன் அகத்தில்
                  தேடு. வெளியே தேடினால் கனவாய்த் தெரியும். உள்ளே
                  தேடினால் காட்சிகள் விரியும். கண்களால் காண்பது
                  பொருட்களின் காட்சி. இதயக் கண் காட்டும்
                  பொருண்மையின் மாட்சி.

நான்:-     நேரான வழியில் செல்வதைவிட, வேகமாக வெற்றி
                  கிடைக்காதிருப்பதே நோகிறது. இதற்கு என்ன செய்ய.?

கடவுள்:-வெற்றி என்பது மற்றவர் தரும் குறியீடு. கடக்கப்போகும்
                   பாதையை உணர்ந்து, நீ நிர்ணயிக்கும் திருப்தி எனும்
                  வெற்றியின் அளவுகோல் கடந்துவந்த பாதையினால்
                  ஏற்பட்டதைவிட சிறப்பாக இருக்கும்.நீ திசைமானியை
                  உபயோகி. மற்றவர்கள் கடிகாரத்தை உபயோகிக்கட்டும்.

நான்:-     கஷ்ட காலங்களில் எப்படி திசை நோக்கி நிற்பது.?

கடவுள்:-கடக்கப்போகும் பாதையைவிட கடந்து வந்த பாதையை
                  கணக்கில் கொள்.உனக்குக் கிடைத்த வரங்களை
                  எண்ணில் கொள்.கிடைக்காததையும் தவறவிட்டதையும்
                  நினைத்துத் தளராதே.

நான்:-     மக்களிடம், உன்னை ஆச்சரியப் படுத்துவது எது.?

கடவுள்:-கஷ்டங்களை அனுபவிக்கும்போது ஏன் எனக்கு
                  என்பவர்கள் வளர்ச்சி யடைகையில்எனக்கு ஏன் என்று
                  கேட்பதேயில்லை. உண்மை அவர்கள் பக்கம் இருப்பதை
                  விரும்புவோர் அநேகர். உண்மையின் பக்கம் இருப்பதை
                  விரும்புவோர் சிலரே.

நான்:-   சில நேரங்களில் நான் யார்.? நான் ஏன் இங்கிருக்கிறேன்?
                 என்று கேள்வி எழுகிறது. பதில்தான் கிடைப்பதில்லை.

கடவுள்:- நீ யார் என்று கேள்வி கேட்டு வீணாகாதே. நீ யாராக
                   வேண்டும் என்று தீர்மானி. ஏன் வந்தேன் என்று
                   கேட்காதே. காரணத்தை ஏற்படுத்து. வாழ்க்கை என்பது
                   கண்டுபிடிப்புகளின் ( DISCOVERY ) தொகுப்பல்ல.
                  தோற்றுவிப்பின் செயல்பாடே. (WORK OF CREATION.)

நான்:-      வாழ்வில் ஏற்றமளிக்க ,பலன் கிடைக்க என்ன செய்ய
                   வேண்டும்.?

கடவுள்:-கடந்த காலத்தை கலக்கமில்லாமல் உணர்ந்து கொள்.
                 
நிகழ் காலத்தை ஊக்கத்துடன் அணுகு. வருங்காலத்தை
                  தைரியமாக எதிர்கொள்.

நான்:-     கடைசியாக ஒரு கேள்வி சில நேரங்களில் என் வேண்டு
                 தல்களுக்கு விடை கிடைப்பதில்லை என்று
                 உணர்கிறேன்.

கடவுள்:-விடை கிடைக்காத பிரார்த்தனைகள் என்று சொல்வதை
                  விட, விடை இல்லை என்பதே பதிலாயிருக்கும்.

நான்:-    உங்கள் வரவுக்கும் அறிவுரைக்கும் நன்றி.புதுப்பொலி
                வுடன் ஒவ்வொரு புது நாளையும் எதிர் கொள்வேன்.

கடவுள்-நன்று. பயத்தைக் களை. நம்பிக்கையை தக்கவை.
                  சந்தேகங்களை நம்பாதே. நம்பிக்கையை
                  சந்தேகிக்காதே.
                  -----------------------------------------------------------------------      



Feb 29,2012

கடவுளுடன் ஒரு உரையாடல்

கடவுளுடன் ஒரு உரையாடல்
கடவுள்: ஹலோ! என்னை கூப்பிட்டாயா?
மனிதன்: கூப்பிட்டேனா? உன்னையா? இல்லையே? யார் நீ?
கடவுள்: நான்தான் கடவுள். உன் பிரார்த்தனை காதில் விழுந்தது; பேசிவிட்டுப் போகலாம் என்று வந்தேன்.
மனிதன்: நீ சொல்லுவது சரி. நான் தினமும் பிரார்த்தனை செய்கிறேன். அது என் மனதுக்கு பிடித்திருக்கிறது; இப்போது எனக்கு பேச அவகாசமில்லை; வேலையில் மும்முரமாக இருக்கிறேன்.
கடவுள்: எறும்பு கூடத்தான் வேலையில் மும்முரமாக இருக்கிறது.
மனிதன்: எறும்பு ஈயைப் பற்றி எனக்குத் தெரியாது; எனக்கு இப்போது உன்னுடன் பேச அவகாசம் இல்லை; வாழ்க்கை மிகவும் அவசரமானதாகி விட்டது; எப்போதுமே அவசரம் தான்; எப்போதும் நெருக்கடி தான்.
கடவுள்: உண்மைதான். ஏதாவது செய்து கொண்டே இருந்தால் வாழ்க்கை மும்முரம் தான். செயல்பாடு உன்னை மேலும் மேலும் உழைக்கச் செய்கிறது; உழைப்பினால் கிடைக்கும் பலன் உனக்கு நல்ல முடிவுகளைக் கொடுக்கிறது. உழைக்கும்போது நேரத்திற்கு அடிமையாகும் நீ, பலனை அனுபவிக்கும் போது அந்த அடிமைத்தனத்தில் இருந்து  விடுபடுகிறாய்.
மனிதன்: நீ சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனாலும் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று சரிவர புரிவதில்லை. அது இருக்கட்டும்; இணையதள உடனடி தகவல் chat-ல் நீ என்னைக் கூப்பிடுவாய் என்று எதிர்பார்க்கவில்லை.
கடவுள்: என்ன செய்வது? நீ நேரத்துடன் போராடிக்கொண்டு இருப்பதைப் பார்த்து உதவலாம் என்று வந்தேன். சில விஷயங்களை தெளிவுபடுத்த ஆசைப் பட்டேன். இது இணையதளத்தால் செய்யப்பட உலகம் ஆகிவிட்டது. இணையதளத்தை விட்டுப் பிரியாமல் இருக்கும் உன்னை இணையதளம் மூலமாக சந்திக்க வந்தேன்.
மனிதன்: சரி, என் கேள்விகளுக்கு பதில் சொல்லு. ஏன் வாழ்க்கை சிக்கலாக இருக்கிறது?
கடவுள்: முதலில் வாழ்க்கையை அலசி அலசிப் பார்ப்பதை நிறுத்து. வாழ்க்கையை வாழ கற்றுக் கொள். ரொம்பவும் அலசுவதால் தான் வாழ்க்கை சிக்கலாகிறது.
மனிதன்: நாங்கள் ஏன் எப்போதுமே வருத்தத்தில் இருக்கிறோம்? சந்தோஷம் என்பதே இல்லையா?
கடவுள்: நேற்று நீ கவலைப் பட்ட நாளை என்பது தான் இன்று இந்த நாள். இந்த நாளை வாழாமல் நாளையைப் பற்றிக் கவலைப் படுவதே உன் வழக்கமாகிவிட்டது. அதனால் வருத்தமே வாழ்க்கை ஆகிவிட்டது.
மனிதன்: ஆனால் வாழ்க்கை என்பதே நிச்சயமில்லாத போது வருத்தப் படாமல் என்ன செய்வது?
கடவுள்: நிச்சயமின்மை என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. ஆனால் வருத்தப் படுவது நீ தெரிவு செய்வது.
மனிதன்: நிச்சயமின்மையால் வாழ்வில் எத்தனை வலிகள்……
கடவுள்: வலிகள் தவிர்க்கமுடியாதவை; அதனால் ஏற்படும் துன்பம் தவிர்க்கப்பட வேண்டும்.
மனிதன்: துன்பம் தவிர்க்கப் படவேண்டுமானால்  மக்கள் ஏன் துன்ப படுகிறார்கள்?
கடவுள்: வைரத்தை உரசாமல் மின்ன வைக்க முடியாது; தங்கத்தை நெருப்பில் புடம் போடாமல் சுத்தப் படுத்த முடியாது. நல்லவர்கள் வாழ்க்கையில் சோதனைக்கு ஆட்படுவார்கள். ஆனால் துன்ப பட மாட்டார்கள். சோதனைகள் அவர்கள் வாழ்க்கையை  வளமாகும். நலிவடையச் செய்யாது.
மனிதன்: இந்த வருத்தப் பட வைக்கும் அனுபவங்கள் எங்களுக்குத் தேவையா?
கடவுள்: ஆமாம். அனுபவம் ஒரு தேர்ந்த ஆசிரியை. முதலில் பரீட்சை வைப்பாள். பிறகு பாடம் கற்றுத் தருவாள்.
மனிதன்: ஆனால் நாங்கள் ஏன் இப்படிப்பட்ட சோதனைகளுக்கு ஆளாக  வேண்டும். கவலைகளில் இருந்து விடுதலை அடைய முடியாதா?
கடவுள்: வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினையும் உனக்கு பயன் தரக் கூடியவை. பாடம் புகட்டக் கூடியவை. அவை உன்னைப் புடம் போட்டு உன்னை எல்லா வகையிலும் மேம்படச் செய்கின்றன. மனவலிமை படைத்தவனாக ஆக்குகின்றன. மன வலிமை போராட்டங்களிலிருந்தும், சகிப்புத் தன்மையிலிருந்தும் வருகிறது. உனக்கு பிரச்சினைகள் இல்லாத போது இவை உனக்குக் கிடைப்பதில்லை.
மனிதன்: உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இத்தனை பிரச்சினைகளுக்கு நடுவில் நாங்கள் எங்கே போகிறோம் என்பதே புரியவில்லை.
கடவுள்: நீ உனக்கு வெளியில் பார்த்தால், நீ எங்கே போகிறாய் என்று தெரியாது. உனக்கு உள்ளே பார். வெளியில் பார்ப்பது கனவு காண்பது போல. உள்ளே பார்ப்பது உனக்குள் ஒரு விழிப்பை ஏற்படுத்தும். கண்கள் பார்வையைக் கொடுக்கும். மனம் விழிப்புணர்வை உண்டாக்கும்.
மனிதன்: சில சமயங்களில் சரியான பாதையில் போகிறோமா என்பதை விட, சீக்கிரம் வெற்றி பெறவில்லையே என்பது மிகவும் வலிக்கிறது.
கடவுள்: வெற்றி என்பது பிறர் உன்னைப் பற்றி அறிய உதவும்  ஒரு அளவுகோல். திருப்தி என்பது உன்னால் தீர்மானிக்கப் படுகிறது. நீ போகும் பாதையைத் தெரிந்து கொள்ளுவது உனக்கு அதிகத் திருப்தியைக் கொடுக்கும். நீ திசை காட்டியை வைத்துக் கொண்டு வேலை செய். மற்றவர்கள் கடியாரத்தை வைத்துக் கொண்டு வேலை செய்யட்டும்.
மனிதன்: கடினமான நேரத்திலும் நான் எப்படி உற்சாகம் குறையாமல்  இருப்பது?
கடவுள்: எப்போதும் நீ எத்தனை தூரம் பயணித்து இருக்கிறாய் என்று பார். இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்று யோசிக்காதே. உனக்குக் கிடைத்த நல்லவற்றை எண்ணிப் பார். எதையெல்லாம் இழந்தாய் என்று எண்ணாதே.
மனிதன்: நான் எதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறேனோ அதையே சொல்லுகிறாய். மனிதனின் எந்த குணம் உனக்கு வியப்பூட்டுகிறது?
கடவுள்: கஷ்டங்கள் வரும்போது எனக்கு ஏன் என்று சொல்லுபவர்கள் சுகப் படும் போது எனக்கு ஏன் என்று கேட்பதே இல்லை. ஒவ்வொருவரும் தன் பக்கத்தில் உண்மை இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்களே தவிர உண்மையின் பக்கத்தில் அவர்கள் இருக்க ஆசைப் படுவதில்லை.
மனிதன்: வாழ்க்கையில் மிகச் சிறந்தவைகளை எப்படி அடைவது?
கடவுள்: நடந்து போனவைகளைப் பற்றி வருந்தாதே. இன்றைய நாளை தைரியமாக எதிர் கொள்; இன்றைய நாள் நல்ல நாள் என்ற நம்பிக்கை இருக்கட்டும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் இல்லாமல் வரப் போகும் வாழ்க்கைக்கு உன்னை தயார் செய்து கொள்.
மனிதன்: கடைசியாக ஒரு கேள்வி: சிலசமயங்களில் ஏன் பிரார்த்தனைகளுக்குப் பதில் கிடைப்பது இல்லையே, ஏன்?
கடவுள்: பதில் கிடைக்காத பிரார்த்தனை என்று எதுவுமே இல்லை. சில சமயங்களில் பதில் இல்லைஎன்றும் இருக்கலாம்;
மனிதன்: உனக்கு பல கோடி வந்தனங்கள். உன்னுடன் பேசிக் கொண்டே ஒரு புது நாளைத் தொடங்குகிறேன். ஒரு புதிய உற்சாகம் பிறந்திருக்கிறது.
கடவுள்: நல்லது. நம்பிக்கையை வளர்த்துக் கொள். பயத்தை விட்டுவிடு. உன்னுடைய சந்தேகங்களை நம்பாதே. நம்பிக்கைகளை சந்தேகப் படாதே.வாழ்க்கை என்பது புதிர் அல்ல; விடுவிப்பதற்கு. பிரச்சினையும் அல்ல, விடை  கண்டுபிடிக்க. என்னை நம்பு. வாழ்க்கை என்பது மிக அழகானது அதை வாழத் தெரிந்தவர்களுக்கு!
published in oorooo.com