புதன், 12 அக்டோபர், 2016

"வந்து" எனும் அசைச்சொல்

                            Image result for பேச்சாளர்

மேடைகளில்  தமிழில் நீங்கள் பேசுவதுண்டா? இதோ இந்தப் பதிவு உங்களுக்காகத்தான்.

நான் மதுரை விவசாயக்  கல்லூரியில் இணைப் பேராசிரியராக வேலை பார்த்த காலத்தில் (அது ஒரு பழைய கற்காலம் - 1976-80)
அங்கு பல பயிற்சி நிறுவனங்களிலிருந்து எனக்கு பேச அழைப்புகள் வரும். நான் அப்போது ஓரளவு மேடைப்பேச்சுகளில் திறமை பெற்றிருந்தேன். மேலே கொடுத்துள்ள பேச்சாளர் சுகி சிவம் அளவு இல்லையென்றாலும் அவர் திறமையில் நூற்றில் ஒரு பங்கு திறமை கொண்டிருந்தேன்.

மதுரையிலுள்ள ஒரு தொழிற்பயிற்சிப் பள்ளியில் என்னை விவசாயத்தைப் பற்றிப் பேச அழைத்திருந்தார்கள். இரண்டு மணி நேரம் உரையாற்றவேண்டும். ஒரு மணி உரையாடலுக்குப் பின் பத்து நிமிடம் இடைவெளி. நான் முதல் சொற்போழிவை முடித்து விட்டு உட்கார்ந்தேன். அந்த தொழில் பயிற்சி நிலையத்தின் முதல்வர், உங்களுடைய உரை நன்றாக இருந்தது. ஆனால் இடையிடையே "வந்து" என்கிற அசைச் சொல்லை அதிகமாக உபயோகிக்கிறீர்கள், அதைத் தவிர்த்தால் உங்கள் உரை மேலும் சிறப்பாக இருக்கும் என்றார்.

அடுத்த உரையின்போது மிக க் கவனமாக அந்தச் சொல்லைத் தவிர்த்தேன். அதன் பிறகு எப்போது மேடையில் பேசுவதாக இருந்தாலும் இந்த கவனம் இருந்து கொண்டிருந்தது.

உதாரணத்திற்கு:

இப்போ வந்து நீங்க என்ன பண்ணறீங்கன்னா, அங்க கடைக்குப் போய் வந்து நான் சொன்ன சாமானை வாங்கறீங்க, அப்புறம் வந்து வீட்டுக்கு வர்றீங்க.

பலர் இது மாதிரி அடிக்கடி இந்த வார்த்தையைத் தங்கள் பேச்சில் உபயோகப் படுத்துவதைக் கேட்டிருப்பீர்கள்.

கீழே கொடுத்திருக்கும் விடியோ பேச்சைக் கேளுங்கள். அதில் ஐந்து நிமிடம் பேசுவதற்குள் பத்து தடவை இந்த "வந்து" எனும் வார்த்தையை உபயோகப் படுத்தியிருப்பார். இந்த வார்த்தைக்கு அர்த்தம எதுவும் இல்லை. இது வெறும் அசைச் சொல்லே.



மேடைகளில் பேசும் வாய்ப்புள்ள பதிவர்கள் இந்த நுணுக்கத்தை மனதில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

7 கருத்துகள்:

  1. மீண்டும் மீண்டும் வந்து, வந்ததை, வந்து, வந்து, வந்து, வந்து படித்தும் கேட்டும் மகிழ்ந்தேன்.

    பதிவு வழக்கம்போல் தங்கள் பாணியில் நகைச்சுவை + நையாண்டி ஏதும் இல்லாமல் ஏனோ ‘சப்’ என்று உள்ளது.

    எனினும் பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. இதெல்லாம் பழக்க தோஷம் என்றே நினைக்கிறென் இனி பேசும்போது தேவையில்லாத வார்த்தைகளை நீக்க முயல வேண்டும்

    பதிலளிநீக்கு
  3. இயல்பாக வந்து என்ற சொல்லைப் பலர் பயன்படுத்தப் பார்த்திருக்கிறேன். எங்கள் தமிழ் ஆசிரியர் (10ஆம் வகுப்பு)கேட்டா கேட்டீங்கன்னா என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துவார். எங்களில் சிலர் அவர் எவ்வளவு முறை சொன்னார் என்று எண்ணிக் கொண்டிருப்பர். நீங்கள் கூறுவது போல கவனமாக இருந்தால் இதனைத் தவிர்க்கமுடியும்.

    பதிலளிநீக்கு
  4. ‘வந்து’ என்ற சொல்லையும் ‘சும்மா’ என்ற சொல்லையும் சொல்லாத தமிழனைக் காண்பது அரிது ஐயா.
    காணொளியில் வரும் ‘வந்து’ என்ற அசைச் சொல்லை இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  5. மேடையில் பேச நினைக்கும் சிலருக்கு பயனுள்ள பகிர்வு ஐயா நன்றி
    த.ம.1

    பதிலளிநீக்கு
  6. வந்து எனும் அசைச் சொல்.... பலர் சாதாரணமாகப் பேசும்போதே இப்படி பேசுவது வழக்கமாயிற்றே....

    மேடைப் பேச்சில் வந்து வார்த்தையை தவிர்ப்பது நல்லது!

    பதிலளிநீக்கு