வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

ஸ்ரீலட்சுமி தேவி பிரசன்னமானாள்


              

சீக்கிரம் கோடிக்கணக்கில் பணம் பண்ணும் பலவிதமான வித்தைகளைப் பற்றிய செய்திகளை வாசித்து வாசித்து, இரவில் கொஞ்ச நாளாகவே அது சம்பந்தமான கனவுகளே வந்து கொண்டிருக்கின்றன. அது தவிர மனதிற்குள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாமும் ஒரு நூறு, இருநூறு கோடி தேத்தியிருக்கலாமே என்ற அங்கலாய்ப்பும் அவ்வப்போது வந்து போய்க்கொண்டிருக்கிறது.

இப்படி தூக்கம் வராமல் யோசித்துக்கொண்டு இருக்கையில், நேற்று இரவு சாட்சாத் ஸ்ரீலட்சுமிதேவி, என் கனவில் தரிசனம் தந்தாள். கையில் ஒரு பைரவரைப் பிடித்துக்கொண்டு இருந்தாள். மகனே, உன் அங்கலாய்ப்பைக் கேட்டேன். இன்னும் காலம் கெட்டுப் போய்விடவில்லைதமிழ்நாட்டு மக்கள் இன்னும் எத்தனை தடவை வேண்டுமானாலும் மொட்டை போட்டுக்கொண்டு நெற்றியில் நாமம் போட்டுக் கொள்வார்கள். நீ கவலைப்படாதே. இந் பைரவரை வைத்துக்கொண்டு உன் ஆதங்கத்தைத் தீர்த்துக்கொள் என்று திருவாய் மலர்ந்தருளினாள்.

ஆஹா, என்னே அம்மன் அருள் என்று சந்தோஷப்பட்டுக்கொண்டு இனிமேல் என்ன செய்யலாம் என்று யோசித்து ஒரு திட்டம் தயாரித்திருக்கிறேன். தமிழ் மக்கள் ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்புகிறேன்.

பைரவர் நாய்த்தோல் கம்பெனி பிரைவேட் லிமிடெட்

அதிர்ஷ்டம் அழைக்கிறது
நாய்த்தோல் மிகவும் மென்மையானது. இதனால் செய்யப்படும் தோல் பொருட்களுக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பயங்கர டிமாண்ட் இருக்கிறது. இந்தியாவில் மேனகா காந்தி புண்ணியத்தினால் பெரும் அளவில் நாய்கள் இருக்கின்றன. அதனால் இந்தியாவில் ஒரு நாய்த்தோல் மற்றும் நாய்த்தோலினால் செய்த கைவினைப் பொருள்கள் செய்யும் கம்பெனி ஆரம்பிக்கப் போகிறோம். தோல் உரித்த பிறகு அந்த நாயின் இறைச்சி பதப்படுத்தப்பட்டு பிலிப்பைன்ஸ், வியட்னாம், கொரியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். அந்த நாடுகளில் நாய் இறைச்சிக்கு மிகுந்த தேவை இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே. இந்த தொழிற்சாலைக்கு தினந்தோறும் ஆயிரம் நாய்கள் தேவைப்படுகின்றன. ஒரு நாய்க்கு ஆயிரம் ரூபாய் வீதம் ரொக்கம் கொடுத்து வாங்கப்படும். நூறு நாய்கள் சப்ளை செய்தவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் போனஸும், ஒரு தங்க நாணயமும் கொடுக்கப்படும்.

இந்தக் கம்பெனிக்கு நாய்கள் சப்ளை செய்ய விருப்பமுள்ளவர்கள் கம்பெனியில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளவேண்டும். டெபாசிட் தொகை பத்தாயிரம் ரூபாய் கட்டி, அடையாள அட்டை வாங்கிக் கொள்ளவேண்டும். உங்கள் டெபாசிட் பணத்திற்கு 100 % காரன்டி கொடுக்கும் நிறுவனம் இது ஒன்றே. மற்ற கம்பெனிகளைப்போல் ஏமாற்றி விடுவார்களோ என்ற சந்தேகம் அணுவளவு கூட வேண்டாம்.

குறிப்பிட்ட அளவு நபர்களை மட்டுமே ரிஜிஸ்டர் செய்வதால் உங்கள் ரிஜிஸ்ட்ரேஷனுக்கு முந்துங்கள்.

இந்த விளம்பரம் முன்னணி செய்தித்தாள்களில் எல்லாம் நாளைக்கு வெளியாகும். பதிவுலக நண்பர்களுக்கு மட்டும் தனிச்சலுகையாக இன்றே ரிஜிஸ்டர் செய்யப்படும். முந்துங்கள்.

பின்குறிப்பு: ஈமு கோழி, வேலை வாய்ப்பு, நிதி நிறுவனங்கள் போன்ற கம்பெனிகளின் கேஸ்களை நடத்துவதிலும், முன் ஜாமீன் எடுப்பதிலும், முன் அனுபவமுள்ள, நல்ல வக்கீல்கள் தேவை. மாதக்கணக்கில் தலைமறைவாக இருக்க நல்ல பண்ணை வீடுகள் ஏற்பாடு செய்யவும் தெரிந்திருந்தால் நல்லது. நல்ல பீஸ் கொடுக்கப்படும். பதிவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். உடனடியாக ஆபீஸுக்கு வரவும். – இந்த பின்குறிப்பு விளம்பரத்தில் வெளியாகாது.

புதன், 29 ஆகஸ்ட், 2012

என் கம்ப்யூட்டரை முடக்கி விட்டார்கள்


என் பதிவுலக வளர்ச்சியைப் பொறுக்கமாட்டாமல் இந்த கார்ப்பரேஷன்காரர்கள் என்னுடைய டெலிபோன் கனெக்ஷ்னை துண்டித்து விட்டார்கள். .நா.சபையில் முறையிடலாமா என்று யோசித்தேன். ஆனால் அது அமெரிக்காவில் இருக்கிறதாமே? போய் வருவதற்கு உடலில் தெம்பில்லை. ஆகவே உள்ளூரிலேயே ஏதாவது செய்யலாம் என்று முயற்சித்தேன்.

முதலில் டெலிபோன் ஆபீசைப் படையெடுத்தேன். அவர்கள் சொன்னார்கள். உங்கள் வீதியில் பாதாள சாக்கடையும், சாதாரண சாக்கடையும் போடுவதற்காக கார்ப்பரேஷன்காரர்கள் குழி வெட்டும்போது டெலிபோன் வயர்களை எல்லாம் சின்னாபின்னமாக்கி விட்டார்கள். அவர்கள் வேலை எல்லாம் முடித்து விட்டுப் போகட்டும், அப்புறம் நாங்கள் டெலிபொன் லைனை சரி செய்து கொடுக்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள்.

சரி என்று சாக்கடைக்காரர்களிடம் (அதாவது கார்ப்பரேஷன்) போனேன். எப்படியும் இன்னும் ஓரிரு மாதங்களில் முடித்து விடுவோம் என்றார்கள்.
ஆகவே எனக்கு இன்னும் இரண்டு மாதத்திற்கு டெலிபோன் வேலை செய்யாது. கூடவே இன்டர்நெட்டும் காலி. எப்படிப் பதிவு போடுவது என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தபோது கடவுள் என் பேரன் மூலமாக ஒரு வழி காட்டினார். அதாவது என் பேரன் டாடா கம்பெனியின் டேட்டா கார்டு வைத்திருக்கிறான். (டாடா-டேடா, எப்படி எதுகை மோனை?). அதை உங்களுக்கு தினம் பதினைந்து நிமிடம் உபயோகப் படுத்தி இன்டர்நெட்டில் என்ன பண்ண வேண்டுமோ செய்து கொள்ளுங்கள் என்று சொன்னான்.

கொலைப் பசிக்காரனுக்கு ஒரு டம்ளர் கஞ்சி கிடைத்த மாதிரி சந்தோஷப் பட்டேன். அதை வைத்துத்தான் இந்த பதிவு போடுகிறேன். பதினைந்து நிமிடத்தில் பதிவைப் பதிவேற்றத்தான் முடியும். பதிவு முன்னமே தயார் செய்து வைத்திருக்கவேண்டும். மற்ற பதிவுகளைப் பார்ப்பதோ அல்லது பின்னூட்டங்களுக்குப் பதில் போடவோ முடியாது. சரி எப்படியோ சமாளித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தபோது தலையில் இன்னொரு இடி.

திடீரென்று கம்ப்யூட்டர் ஸ்கிரீன் கருப்பாகி விட்டது. நன்றாக கவனித்துப் பார்த்ததில் வலது கீழ் மூலையில் ஒரு செய்தி. "உங்கள் தலையில் யாரோ மிளகாய் அரைத்து விட்டார்கள்" அப்படீன்னு இருந்தது. தலையை நன்றாகத் தடவிப் பார்த்தேன். மிளகாய் அரைத்த சுவடு ஒன்றையும் காணோம். கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக் கொண்டு செய்தியை மறுபடியும் உன்னிப்பாகப் படித்தேன். நீங்கள் உபயோகப் படுத்தும் இந்த விண்டோஸ் புரொக்ராம் ஒரிஜினல் இல்லை. யாரோ உங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்று இருந்தது. மைக்ரோசாஃப்ட்காரன் எவ்வளவு நாசூக்கா "நீ திருட்டுப் புரோக்ராம் வச்சிருக்கறே" அப்படீன்னு சொல்றாம் பாருங்க.

என்னுடைய தன்மானம் ஆட்டம் பாம் போல வெடித்தது. மீசை துடித்தது. நான் வழக்கமாகப் போகும் கம்ப்யூட்டர் கடைக்குப் போனேன். “யோவ், உங்ககிட்டதானே கம்ப்யூட்ட, காசு கொடுத்துத்தானே வாங்கினேன், இப்ப ஒருத்தன் என்னைத் திருடன் அப்படீங்கறான், இது என்னய்யா அநியாயமா இருக்குஅப்படீன்னு சத்தம் போட்டேன்.  அவன் என்னை உட்கார வச்சு, காப்பி வாங்கிக் கொடுத்து, கம்ப்யூட்டர் கிளாஸ் ஒரு மணி நேரம் எடுத்தான். அப்பத்தான் தெரிஞ்சுது, என் தலையில நெஜமாகவே களிமண்ணுதான் இருக்குதுண்ணு. கம்ப்யூட்டர்ல ஹார்டுவேர், சாஃப்ட்வேர் அப்படீன்னு ரெண்டு இருக்குதாம். அதுல ஹார்டுவேர்தான் அவங்க விக்கறாங்களாம் சாஃப்ட்வேர் அவங்கவங்க வாங்கிக்கணுமாம். அந்த சாஃப்ட் வேர் அமெரிக்காவில ஒரு கொ(வெ)ள்ளைக்காரன்தான் விக்கறானாம். அவம்பேரு பில் கேட்ஸாம். அதுக்கு தனியா காசு கொடுத்து வாங்கோணும். அப்படீன்னு சொன்னான்.

சரி, உரல்ல தலையைக் கொடுத்தாச்சு, உலக்கைக்குப் பயந்தா ஆகுமா, அப்படீன்னு சரி, அது உங்க கிட்ட இருக்குதான்னு கேட்டேன். இருக்குதுன்னான். சரி, இருக்கிறதில வெல கம்மியா இருக்கிறத கொடு அப்படீன்னேன். விண்டோஸ் மட்டும் போதுமா, இல்ல ஆபீஸும் வேணுமான்னு கேட்டான். ரெண்டு எதுக்கய்யான்னு கேட்டேன். அவன் சொல்றான், ஒண்ணு கம்ப்யூட்டர ஓட வைக்கறதுக்கு, இன்னொண்ணு உங்க பிளாக் எழுத, கணக்கு வச்சுக்க, படம் போட அப்படீன்னான். சரி. ரெண்டு எளவையும் கொடுன்னு, வாங்கீட்டு வந்து வச்சேன்

அப்பறம் நம்ம கம்யூட்டர வழக்கமா பாக்கற டாக்டர் வந்து பாத்துட்டு சொல்றார். உங்க மிசினுக்கு வயசாயிடுச்சுங்க, சூடு வருது பாத்தீங்களா, இதையும் மாத்திப்புட்டா நல்லா இருக்கும்னு ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார். டாக்டர் சொன்ன பொறவு செய்யாம இருக்க முடியுமுங்களா. சரின்னு அதையும் மாத்தியாச்சு. இந்த ரெண்டு சனியனையும் கம்ப்யூட்டருக்குள்ள போட்டாச்சு.

அப்புறம் நம்ம டாக்டர் சொல்றாரு. இனி ஒரு பயலும் விரலை நீட்டி ஒண்ணும் சொல்லமாட்டானுங்க, நீங்க தைரியமா உங்களை பூந்து விளையாடுங்க, அப்படீன்னு தைரியம் சொல்லீட்டுப் போனாருங்க. எல்லாமாச் சேர்ந்து சொளையா இருபது நோட்டு ஆயிப்போச்சுங்க.
பதிவுகளை சொந்த கம்ப்யூட்டர்ல போடறதுன்னா இவ்வளவு ரகளைகள் இருக்குங்க. ஏதாச்சும் ஆணி புடுங்கற வேலைக்குப் போனா, அங்க இருக்கற கம்ப்யூட்டர்ல நம்ம பதிவு வேலையைப் பாத்துக்லாம்னு நெனச்சா, 78 வயசில ஒனக்கு என்ன வேலை கொடுக்கறது? ஊருக்குப் போற வழியைப் பாருங்கன்னு சொல்றாங்க. உலகம் ரொம்பக் கெட்டுப் போச்சுங்க.

பின்குறிப்பு:
Windows 7 Home Basic = Rs.5000/=
MS Office 2010 Home and Student = Rs.3200/=
இந்த ரெண்டும் நம்ம உபயோகத்திற்குப் போதும்.