பதிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

பதிவுகளில் பக்கங்களை அமைப்பது


                                 Image result for a typical printed page

நான் அரசுப் பணியில் சேர்ந்தபோது கடிதங்கள் எழுதுவது பற்றி சில சட்டங்கள் இருந்தன. ஒரு காகிதத்தை எடுத்தால் அதில் உள்ள எல்லா வெற்றிடத்திலும் காலி விடாமல் எழுதக் கூடாது என்பது முதல் பாடம்.

மேலும் கீழும் போதுமான இடம் விடவேண்டும். இடது பக்கம் இரண்டு விரற்கடை அளவு "மார்ஜின்" (Margin) விடவேண்டும். வலது பக்கத்திலும் குறைந்தது ஒரு விரற்கடை அளவாவது இடம் விடவேண்டும். இவையெல்லாம் அந்த கடிதத்தை சிரமமில்லாமல் படிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவை.

பள்ளிக்குழந்தைகளுக்கு இந்த தத்துவத்தை மனதில் நன்கு பதிய வைப்பதற்காகவேதான் அவர்களின் நோட்டுப் புத்தகங்களில் மார்ஜின் கோடுகள் போடப்படுகின்றன. தட்டச்சு இயந்திரங்களில் தட்டச்சு செய்தாலும், கணினியில் தட்டச்சு செய்தாலும் ஒரு அச்சிட்ட பக்கத்தில் மேல், கீழ், இடது, வலது ஆகிய நான்கு பக்கங்களிலும் போதுமான இடம் வருமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

புத்தகங்கள் அச்சிடும்போதும் இதே விதிகள் கடைப் பிடிக்கப்படுகின்றன. நான் முதுகலைப் படிப்பு படிக்கும்போது எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இந்த விதி கடுமையாக கவனிக்கப்படும். இந்த விதிகளுக்குப் புறம்பாக இருக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.

அதே போல் வரிகளுக்கிடையே போதுமான இடைவெளி இருக்கவேண்டும். இவையெல்லாம் படிப்பவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட விதிகள். ஒரு வரி இவ்வளவு அகலம்தான் இருக்கலாம் என்றும் கணக்குண்டு. ஏனெனில் ஒரு வரியைப் படித்த பின் அடுத்த வரிக்கு வரும்போது வரிகளைத் தெளிவாக அறியும்படி இருக்கவேண்டும்.

பதிவுலகில் எழுதும் பதிவர்கள் தாங்கள் மட்டுமே படிப்பதற்காக எழுதுவதில்லை என்று நம்புகிறேன். அப்படி இல்லாமல் மற்றவர்களும் படிக்கவேண்டுமென்று அவர்கள் விரும்புவார்களாயின் இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கடைப்பிடித்தால் படிப்பவர்கள் சிரமமில்லாமல் படிப்பார்கள்.

இந்தப்படத்தைப் பார்க்கவும்.



இப்படிக் கொச கொசவென்று எழுதினால் படிப்பதற்குள் கண் வலி வந்து விடும்.

இன்னொரு தளம் பாருங்கள்.




ஒரு வரியைப் படித்து விட்டு அடுத்த வரி வருவதற்குள் வரி மாறி விடுகிறது. கொஞ்சம் அகலத்தைக் குறைத்தால் என்ன? கூகுள்காரன் இலவசமாக இடம் கொடுக்கிறான் அதில் கொஞ்சம் தாராளம் காட்டினால் என்ன?

தளம் முழுவதும் இடமிருந்து வலமாக முழு கணினி திரையையும் நிரப்பவேண்டுமா, என்ன?

நான் ஒரு பழமைவாதி. என்னால் இந்த மாதிரி விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

திங்கள், 22 டிசம்பர், 2014

சில பதிவர்களின் அக்கிரமம்.

இன்று கீழ்க் கண்ட பதிவை தமிழ்மணம் திரட்டியில் பார்த்தேன்.


வியாழன், 3 ஜனவரி, 2013

பதிவில் வரியின் இடைவெளியை அதிகப்படுத்த



இது ஒரு மீள் பதிவு. பிளாக்கர் டெம்ப்ளேட்டுகள் மாறியிருப்பதால் அவைகளுக்கு ஏற்ப குறிப்புகளை மாற்றியிருக்கிறேன்.


இந்த இரண்டு பதிவுகளையும் பாருங்கள்.(Screen shots)

ஒன்று:

இரண்டு:

இரண்டாவது பதிவு படிப்பதற்கு சௌகரியம். உங்கள் பதிவை இப்படி மாற்றவேண்டுமா? மேலே படியுங்கள்.


முதலில் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் ஒரு அமெச்சூர். கம்ப்யூட்டரின் எல்லா தொழில் நுட்பங்களும் எனக்குத் தெரியாது. ஆனால் நான் குருட்டாம்போக்கில் சில நுட்பங்களைக் கற்றிருக்கிறேன். அவைகளில் ஒன்று பதிவில் வரிகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை அதிகப்படுத்தல். நான் எழுதியிருப்பவைகளை அப்படியே செய்தால் விரும்பிய விளைவுகள் ஏற்படும்.  பல முறை படித்துவிட்டு அப்படியே செய்யவும்.
  
1.   முதலில் பதிவின் டேஷ்போர்டுக்குப் போகவும்.
2.   அங்கு பென்சில் மார்க்குக்கு வலது பக்கத்தில் சதுரமாக கருப்பாக ஒரு பட்டன் இருக்கும். அதன் மேல் கர்சரை வைத்தால் Go to post list என்று  தோன்றும். அதை அழுத்தவும்.
3.   இப்போது தோன்றும் ஸ்கிரீனில் இடது பக்கம் Template என்று இருப்பதை அழுத்தவும்.
4.   இப்போது தெரியும் ஸ்கிரீனில் வலது பக்கம் Back up/Restore Template என்கிற இடம் தெரியும். அந்த இடத்தை நன்றாக, முழுவதும் சுற்றிப் பார்த்து என்னென்ன இருக்கிறது என்று நன்றாகப் பார்த்துக்கொள்ளவும்.
5.   இப்போது Back up/Restore Template என்று இருப்பதை அழுத்தவும்.
6.   இப்போது Template  ›  Backup / Restore  என்று ஒரு விண்டோ வரும்.
7.   அதில் Download full template என்று ஒரு பட்டன் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
8. இப்போது Save as………. என்று ஒரு ஸ்க்ரீன் வரும். அதில் Save ஐ செலக்ட் செய்யவும்.
9.   இப்போது உங்கள் டெம்ப்ளேட் பத்திரமாக உங்கள் Download folder இல் ஸ்டோர் ஆகியிருக்கும். இது எதற்கென்றால் நீங்கள் நான் சொன்னபடி செய்யாமல் உங்கள் இஷ்டத்திற்கு ஏதாவது செய்திருந்தீர்களென்றால் வம்பு வந்துவிடும் அப்போது அந்த வம்பிலிருந்து மீண்டு வர இது உதவியாயிருக்கும்.
10. இப்போது Template  ›  Backup / Restore  விண்டோவை close செய்யவும்.
11.   அடுத்து Edit Template ஐ அழுத்தவும்.
12. இப்போது Template  ›  Edit HTML ன்று ஒரு ஸ்கிரீன் வரும். அதற்கு கீழ் Expand Widget Templates என்று ஒரு கட்டம் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
13. இப்போது தெரியும் ஒரு சதுரக் கட்டத்தினுள் என்னென்னவோ எழுதியிருக்கும். அதைப்பார்த்து பயப்படாதீர்கள். அந்தக் கட்டத்திற்குள் கர்சரை வைத்து ஒரு லெப்ட் கிளிக் செய்யவும். இப்போது கர்சர் ஒரு கோடாக உள்ளே கண் சிமிட்டிக்கொண்டிருக்கும்.
14.  அப்படிக் கண் சிமிட்டிக்கொண்டிருந்தால் இது வரை நீங்கள் செய்தது சரியென்று அர்த்தம். இப்போது Ctrl  என்று ஒரு கீ உங்கள் கீபோர்டில் இடது கோடியில் கீழே இருக்கும். அதை அழுத்திக்கொண்டு கூடவே F கீயையும் அழுத்தவும். அழுத்திவிட்டு கையை கீ போர்டிலிருந்து எடுத்து விடவும்.
15. இப்பொது ஸ்கிரீனில் வலது மேல் கோடியில் ஒரு நீள்சதுரக் கட்டம் தெரியும். அந்தக் கட்டத்தில் line-height  என்று டைப் அடிக்கவும். இப்போது இந்த எழுத்துக்கள் டெம்ப்ளேட்டில் ஹைலைட் ஆகித் தெரியும்.

முக்கிய குறிப்பு; இது வரையில் நீங்கள் செய்ததெல்லாம் உங்கள் பிளாக்கை ஒன்றும் செய்துவிடாது. இப்போது உங்களுக்குப் பயமாக இருந்தால் உங்கள் ஸ்கிரீனின் வலது கோடி டாப்பில் ஒரு சிகப்பு x இருக்கிறதல்லவா, அதை கிளிக் செய்துவிட்டு ஓடி வந்து விடலாம். பயப்படாதீர்கள். எல்லாவற்றிற்கும் கூகுளாண்டவர் துணை நிற்பார்.

16. இப்போது தெரிபவை:
       .post-body {
        Font-size 110%
        Line-height 1.2;

17. இதில் லைன் ஹைட் 1.2 என்று இருப்பதை 1.8 என்று மாற்றுங்கள். எப்படியென்றால், கர்சரை 2 க்கு முன்னால் வைத்து 2 ஐ டெலீட் செய்துவிட்டு 8 என்று டைப் செய்யுங்கள். அவ்வளவுதான். வேறு எந்த கீயையும் உபயோகப்படுத்தவேண்டாம்.
18.  இப்போது டெம்ப்ளேட் சதுரத்தை விட்டு வெளியில் வாருங்கள். கட்டத்துக்கு அடியில் SAVE TEMPLATE என்று இருப்பதை அழுத்தவும். கண்களை மூடிக்கொண்டு உங்கள் இஷ்ட தெய்வத்தை ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
19. இப்போது கண்களைத் திறந்து பாருங்கள். Your changes have been saved. View Blog என்று இருக்கும்.  View Blog ஐ அழுத்தவும். ஆஹா, உங்கள் பிளாக் இப்பொழுது அதிக இடைவெளியுடன் ஜ்வலிக்கும்.
20. இடைவெளியை இன்னும் அதிகப்படுத்த வேண்டுமானால் திரும்பவும் இதே மாதிரி செய்து லைன் ஸ்பேசிங்க்கை 2.0 க்கு மாற்றலாம். இதே மாதிரி எழுத்துகளின் சைஸையும் 120, 130 % என்று உங்களுக்குத் தேவையான அளவிற்கு மாற்றலாம்.

    இவைகளை எல்லாம் வெற்றிகரமாக செய்த பின், உடனே என்னுடைய இந்த பிளாக்குக்கு வந்து நன்றி தெரிவிக்கவும். இல்லாவிட்டால் குருவின் சாபத்திற்கு ஆளாக வேண்டி வரும். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

வியாழன், 13 டிசம்பர், 2012

போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே

நான் இந்த பிளாக்கிலிருந்து விடை பெற்றுப் போய் ஏறக்குறைய பத்து நாட்கள் ஆகின்றன. வேர்டு பிரஸ்ஸில் ஒரு பிளாக் ஆரம்பித்தேன். அவர்கள் எதற்கெடுத்தாலும் துட்டு கேட்கிறார்கள். மேலும் நான் ஒரு HTML Code ஐ பதிவு செய்ய முயற்சித்தேன். முடியவில்லை.

சிரங்கு பிடித்தவன் கையும் பிளாக் எழுதினவன் கையும் சும்மா இருக்காதுன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க?

அதுவுமில்லாமல் என் பதிவின் புள்ளி விவரங்களைப் பார்த்தேன். கொஞ்சம் நன்றாக இருக்கிறது.


ஆகவே "சுவத்துக் கீரையை வழிச்சுப் போடடி, சொரணை கெட்டவளே" என்றபடி திரும்பி கூகுளாண்டவரே கதி என்று சரண்டைந்து விட்டேன். என்ன இருந்தாலும் "தெரியாத தேவதையைவிட தெரிந்த சைத்தானே மேல் அல்லவா".

செவ்வாய், 23 அக்டோபர், 2012

பதிவுகளின் நோக்கங்கள்.


பதிவுலகம் ஒரு சக்தி வாய்ந்த ஊடகமாகப் பரிணமித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் தமிழில் எழுதுபவர்கள் நிலையாக இல்லை. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற தொல்காப்பிய விதிப்படி பதிவுலகம் இயங்குகிறது.

நீண்ட காலமாக எழுதி வந்தவர்களும் கூட பல காரணங்களினால் காணாமல் போகிறார்கள். புதிதாக எழுத வருபவர்களும் நிறைய வருகிறார்கள். பலதரப்பட்டபதிவுகள் எழுதப்படுகின்றன. பதிவுகளின் தன்மைகளைப் பார்த்துக்கொண்டு இருந்ததில் எனக்குப் புலப்பட்ட சில கருத்துகளை இங்கே பதிகின்றேன்.

கதைகள், நகைச்சுவை, தகவல்கள், செய்திகள், விமரிசனங்கள், விவாதங்கள், அரசியல், சமூகப் பிரச்சினைகள், தனிநபர் பிரச்சினைகள் என்று பதிவு வகைகளின் பட்டியல் நீண்டதாக இருக்கிறது. எல்லாவற்றையும் பார்க்கும்போது பொதுவான ஒரு நோக்கம் தெரிகிறது. முதலாவதாக, மக்கள் தங்கள் நினைவுகளை எழுத்தில் வடிக்க ஆசைப்படுகிறார்கள். வேறு வகையில் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த நல்ல ஊடகங்கள் இல்லாமையினால் இந்தப்பதிவு ஊடகத்தைப் பயன்படுத்துகிறார்கள். இது ஒரு ஆக்க பூர்வமான செயலே ஆகும்.

இரண்டாவது அப்படி அவர்களது ஆக்கங்கள் பதிவில் வெளியாகும்போது அதற்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கவேண்டுமென்றும் விரும்புகிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையாக ஒரு அங்கீகாரம் தேவைப்படுகின்றது. பதிவுலகில் பின்னூட்டங்கள், வருகைகள், திரட்டிகளில் ஓட்டுகள் இப்படி அங்கீகாரங்கள் கிடைக்கின்றன. இதற்காக சில பல உத்திகளைக் கையாளுகிறார்கள். அப்படி அங்கீகாரம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பலர் தொடர்ந்து எழுதுகிறார்கள்.

மூன்றாவது காரணம் அல்லது விளைவு முக்கியமானதாகும். பதிவுகள், படிப்பவர் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. அந்த விழிப்புணர்வு அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்படுகிறது. உதாரணத்திற்கு, இன்கம்டாக்ஸ் ஆபீசில் இருந்து வருவது போன்ற கடிதங்களை நம்பி ஏடிஎம் கார்டு நெம்பர்களைக் கொடுத்தால், உங்கள் கணக்கிலிருந்து பணம் எப்படித் திருடுகிறார்கள் என்று ஒரு பதிவு வெளியாகியது. இதைப் படித்தவர்கள் தங்களுக்கு இப்படி கடிதம் வந்தால் உஷாராகி விடுவார்கள் அல்லவா.

இப்படிப்பட்ட பதிவுகள் அதிகரிக்கவேண்டும். இப்படிப்பட்ட பதிவுகள்தான் சமுதாயத்திற்கும் தனி மனிதனுக்கும் உதவும். இப்படிப்பட்ட பதிவுகள் அவசியமானவை. ஆனால் அதனால் பெரிய சமுதாய மறுமலர்ச்சி நிகழ்ந்து விடும் என்று எண்ணவேண்டாம். காரணம் தமிழ்ப்பதிவர்கள் மொத்தமே பத்தாயிரத்திற்குள்தான். தினம் சுமாராக 300200இருநூறு பதிவுகள் போடப்படுகின்றன. இவைகளை ஏறக்குறைய மொத்தமாக ஒரு லட்சம் பேர் படிக்கக்கூடும்.

இந்த வாசகர்கள், சமுதாயத்தில் பெரிய மாற்றம் விளைவிக்கப் போதுமானதில்லை. இருந்தாலும் தமிழ் மக்களில் ஒரு சில பேராவது பயன் பெறுவார்கள் என்று நம்பித்தான் பதிவுகள் எழுதப்படுகின்றன. நானும் அந்த நம்பிக்கையில்தான் பதிவு எழுதிக்கொண்டு இருக்கிறேன். நம்பிக்கைதான் வாழ்க்கை. வாழ்க பதிவுலகம்.

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

உதவி செய்ய முடியுமா?

என்னுடைய பதிவில் சும்மா இருக்க முடியாமல் சில நாட்களுக்கு முன்  டெம்ப்ளைட்டை மாற்றினேன். ஒரு மாதிரியாக எல்லா திரட்டிகளையும் இணைத்து விட்டேன். தமிழ்மணம் தவிர மற்றவை எல்லாம் சரியாக இருக்கின்றன.

தமிழ் மணம் திரட்டியில் இணைக்க URL ல் "in" ஐ "com" என்று மாற்றி சேர்ந்தால் சேர்ந்துகொள்கிறது. ஆனால் ஓட்டுப்பட்டை வேலை செய்யவில்லை.

கழுதையை என்ன செய்தால் ஒழுங்காகப் பொதி சுமக்கும் என்று யாராவது சொன்னால் நன்றியுடையவனாக இருப்பேன்.

சனி, 29 செப்டம்பர், 2012

ஒரு திருத்தம்


எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாது எவ்வாறு Blogger ல் தமிழில் Type செய்வது | உலகவாழ்க்கையே வெறும் ஜெயிலு வாழ்க்கைதான்......

பழனி.கந்தசாமி at சாமியின் மனஅலைகள் - 10 hours ago
மேற்கண்ட தலைப்பில் என்னுடைய பிளாக்கில் ஒரு பதிவு வெளியானதாக கூகுள் காட்டும். அது ஒரு தவறான சரியான தகவல்தான். அது எப்படி நடந்தது என்பது ஒரு வெட்கக்கேடான சம்பவம்.
இப்போது பதிவுகளில் பின்னூட்டம் போடுவது ஒரு பெரிய கலையாகி மர்மமாகி வருகிறது. ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு மாதிரியான பின்னூட்ட வழிகள் வைத்திருக்கிறார்கள். நேற்று ஒருவர் 

எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாது எவ்வாறு Blogger ல் தமிழில் Type செய்வது


என்று ஒரு பதிவு போட்டிருந்தார். அதைப் பார்த்து விட்டு ஒரு பின்னூட்டம் போட முயற்சி செய்தேன். என்னமோ ஈமெயில், அப்பன் பேரு, ஆத்தா பேரு எல்லாம் கேட்டது. எல்லாத்தையும் கொடுத்துப்புட்டு அவங்க சொன்ன பட்டனை அழுத்தினா, என்னுடைய பிளாக்கில் அதே தலைப்பில் ஒரு பிளாக் ஏறி விட்டது.

என்னடா வம்பாப் போச்சே அப்படீன்னு அதை உடனே டெலீட் செய்தேன். ஆனா கூகுள்காரன் கொம்பனாச்சே, உடுவானா, அதையும் லிஸ்ட்டுல சேர்த்துட்டான். அதை கிளிக் பண்ணினா ஒரு மண்ணும் இல்ல. பார்த்தவங்க எல்லாம் பேஜாரா ஆயிட்டாங்க.

இதைப் பார்த்தவங்க எல்லாம் பேராசிரியருக்கு ஏதோ மறை கழண்டு போச்சு போலன்னு நெனச்சிருப்பாங்க. அப்படி நெனச்சா அதில தப்பு ஒண்ணும் இல்லை. கொஞ்ச நாளாகவே மண்டைக்குள்ள என்னமோ லூசா ஆடற மாதிரிதான் இருக்கு. கழட்டிப் பாக்கோணும். எப்படியும் இந்த ஆயுத பூஜைக்கு எல்லாத்தையும் கிளீன் பண்ணோணும். இதையும் கிளீன் பண்ணிடறேன்.

புதன், 29 ஆகஸ்ட், 2012

என் கம்ப்யூட்டரை முடக்கி விட்டார்கள்


என் பதிவுலக வளர்ச்சியைப் பொறுக்கமாட்டாமல் இந்த கார்ப்பரேஷன்காரர்கள் என்னுடைய டெலிபோன் கனெக்ஷ்னை துண்டித்து விட்டார்கள். .நா.சபையில் முறையிடலாமா என்று யோசித்தேன். ஆனால் அது அமெரிக்காவில் இருக்கிறதாமே? போய் வருவதற்கு உடலில் தெம்பில்லை. ஆகவே உள்ளூரிலேயே ஏதாவது செய்யலாம் என்று முயற்சித்தேன்.

முதலில் டெலிபோன் ஆபீசைப் படையெடுத்தேன். அவர்கள் சொன்னார்கள். உங்கள் வீதியில் பாதாள சாக்கடையும், சாதாரண சாக்கடையும் போடுவதற்காக கார்ப்பரேஷன்காரர்கள் குழி வெட்டும்போது டெலிபோன் வயர்களை எல்லாம் சின்னாபின்னமாக்கி விட்டார்கள். அவர்கள் வேலை எல்லாம் முடித்து விட்டுப் போகட்டும், அப்புறம் நாங்கள் டெலிபொன் லைனை சரி செய்து கொடுக்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள்.

சரி என்று சாக்கடைக்காரர்களிடம் (அதாவது கார்ப்பரேஷன்) போனேன். எப்படியும் இன்னும் ஓரிரு மாதங்களில் முடித்து விடுவோம் என்றார்கள்.
ஆகவே எனக்கு இன்னும் இரண்டு மாதத்திற்கு டெலிபோன் வேலை செய்யாது. கூடவே இன்டர்நெட்டும் காலி. எப்படிப் பதிவு போடுவது என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தபோது கடவுள் என் பேரன் மூலமாக ஒரு வழி காட்டினார். அதாவது என் பேரன் டாடா கம்பெனியின் டேட்டா கார்டு வைத்திருக்கிறான். (டாடா-டேடா, எப்படி எதுகை மோனை?). அதை உங்களுக்கு தினம் பதினைந்து நிமிடம் உபயோகப் படுத்தி இன்டர்நெட்டில் என்ன பண்ண வேண்டுமோ செய்து கொள்ளுங்கள் என்று சொன்னான்.

கொலைப் பசிக்காரனுக்கு ஒரு டம்ளர் கஞ்சி கிடைத்த மாதிரி சந்தோஷப் பட்டேன். அதை வைத்துத்தான் இந்த பதிவு போடுகிறேன். பதினைந்து நிமிடத்தில் பதிவைப் பதிவேற்றத்தான் முடியும். பதிவு முன்னமே தயார் செய்து வைத்திருக்கவேண்டும். மற்ற பதிவுகளைப் பார்ப்பதோ அல்லது பின்னூட்டங்களுக்குப் பதில் போடவோ முடியாது. சரி எப்படியோ சமாளித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தபோது தலையில் இன்னொரு இடி.

திடீரென்று கம்ப்யூட்டர் ஸ்கிரீன் கருப்பாகி விட்டது. நன்றாக கவனித்துப் பார்த்ததில் வலது கீழ் மூலையில் ஒரு செய்தி. "உங்கள் தலையில் யாரோ மிளகாய் அரைத்து விட்டார்கள்" அப்படீன்னு இருந்தது. தலையை நன்றாகத் தடவிப் பார்த்தேன். மிளகாய் அரைத்த சுவடு ஒன்றையும் காணோம். கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக் கொண்டு செய்தியை மறுபடியும் உன்னிப்பாகப் படித்தேன். நீங்கள் உபயோகப் படுத்தும் இந்த விண்டோஸ் புரொக்ராம் ஒரிஜினல் இல்லை. யாரோ உங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்று இருந்தது. மைக்ரோசாஃப்ட்காரன் எவ்வளவு நாசூக்கா "நீ திருட்டுப் புரோக்ராம் வச்சிருக்கறே" அப்படீன்னு சொல்றாம் பாருங்க.

என்னுடைய தன்மானம் ஆட்டம் பாம் போல வெடித்தது. மீசை துடித்தது. நான் வழக்கமாகப் போகும் கம்ப்யூட்டர் கடைக்குப் போனேன். “யோவ், உங்ககிட்டதானே கம்ப்யூட்ட, காசு கொடுத்துத்தானே வாங்கினேன், இப்ப ஒருத்தன் என்னைத் திருடன் அப்படீங்கறான், இது என்னய்யா அநியாயமா இருக்குஅப்படீன்னு சத்தம் போட்டேன்.  அவன் என்னை உட்கார வச்சு, காப்பி வாங்கிக் கொடுத்து, கம்ப்யூட்டர் கிளாஸ் ஒரு மணி நேரம் எடுத்தான். அப்பத்தான் தெரிஞ்சுது, என் தலையில நெஜமாகவே களிமண்ணுதான் இருக்குதுண்ணு. கம்ப்யூட்டர்ல ஹார்டுவேர், சாஃப்ட்வேர் அப்படீன்னு ரெண்டு இருக்குதாம். அதுல ஹார்டுவேர்தான் அவங்க விக்கறாங்களாம் சாஃப்ட்வேர் அவங்கவங்க வாங்கிக்கணுமாம். அந்த சாஃப்ட் வேர் அமெரிக்காவில ஒரு கொ(வெ)ள்ளைக்காரன்தான் விக்கறானாம். அவம்பேரு பில் கேட்ஸாம். அதுக்கு தனியா காசு கொடுத்து வாங்கோணும். அப்படீன்னு சொன்னான்.

சரி, உரல்ல தலையைக் கொடுத்தாச்சு, உலக்கைக்குப் பயந்தா ஆகுமா, அப்படீன்னு சரி, அது உங்க கிட்ட இருக்குதான்னு கேட்டேன். இருக்குதுன்னான். சரி, இருக்கிறதில வெல கம்மியா இருக்கிறத கொடு அப்படீன்னேன். விண்டோஸ் மட்டும் போதுமா, இல்ல ஆபீஸும் வேணுமான்னு கேட்டான். ரெண்டு எதுக்கய்யான்னு கேட்டேன். அவன் சொல்றான், ஒண்ணு கம்ப்யூட்டர ஓட வைக்கறதுக்கு, இன்னொண்ணு உங்க பிளாக் எழுத, கணக்கு வச்சுக்க, படம் போட அப்படீன்னான். சரி. ரெண்டு எளவையும் கொடுன்னு, வாங்கீட்டு வந்து வச்சேன்

அப்பறம் நம்ம கம்யூட்டர வழக்கமா பாக்கற டாக்டர் வந்து பாத்துட்டு சொல்றார். உங்க மிசினுக்கு வயசாயிடுச்சுங்க, சூடு வருது பாத்தீங்களா, இதையும் மாத்திப்புட்டா நல்லா இருக்கும்னு ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார். டாக்டர் சொன்ன பொறவு செய்யாம இருக்க முடியுமுங்களா. சரின்னு அதையும் மாத்தியாச்சு. இந்த ரெண்டு சனியனையும் கம்ப்யூட்டருக்குள்ள போட்டாச்சு.

அப்புறம் நம்ம டாக்டர் சொல்றாரு. இனி ஒரு பயலும் விரலை நீட்டி ஒண்ணும் சொல்லமாட்டானுங்க, நீங்க தைரியமா உங்களை பூந்து விளையாடுங்க, அப்படீன்னு தைரியம் சொல்லீட்டுப் போனாருங்க. எல்லாமாச் சேர்ந்து சொளையா இருபது நோட்டு ஆயிப்போச்சுங்க.
பதிவுகளை சொந்த கம்ப்யூட்டர்ல போடறதுன்னா இவ்வளவு ரகளைகள் இருக்குங்க. ஏதாச்சும் ஆணி புடுங்கற வேலைக்குப் போனா, அங்க இருக்கற கம்ப்யூட்டர்ல நம்ம பதிவு வேலையைப் பாத்துக்லாம்னு நெனச்சா, 78 வயசில ஒனக்கு என்ன வேலை கொடுக்கறது? ஊருக்குப் போற வழியைப் பாருங்கன்னு சொல்றாங்க. உலகம் ரொம்பக் கெட்டுப் போச்சுங்க.

பின்குறிப்பு:
Windows 7 Home Basic = Rs.5000/=
MS Office 2010 Home and Student = Rs.3200/=
இந்த ரெண்டும் நம்ம உபயோகத்திற்குப் போதும்.