புதன், 3 மே, 2017

1. நதிமூலம்-1

முதலில் பிரசுரித்த தேதி

Image result for spider solitaire

நான் இந்த வலைப்பதிவு விளையாட்டுகளுக்கு புதியவன். என்னுடைய மகள் தனக்கு ஒரு கணிணி புதிதாக வாங்கிக்கொண்டு தான் வைத்திருந்த பழைய கணிணியை எனக்கு தானம் கொடுத்தாள். எனக்கு கணிணியில் முன்பே சிறிது பழக்கம் உண்டு. ரொம்ப காலத்திற்கு முன்பு நான் வேலையில் இருந்தபோது அலுவலகத்தில் ஒரு கணிணி என்னுடைய அறையில் வைத்திருந்தார்கள். அது கணிணிகள் (குறிப்பாக மேஜை மாடல்கள்) வரத்தொடங்கிய காலம். என்னுடைய அறையில் இருந்த மாடலில் நிலையான சேமிப்பு சாதனம் இல்லை. இரண்டு தகடு அறைகள் இருந்தன. ஒன்றில் (A drive) மென்பொருள் தகட்டைப்போட்டுவிட்டு இன்னொன்றில் (B drive) நமக்கான தகட்டைப் போட்டுக்கொண்டு கணிணியில் நம் சித்து வேலைகளைக் காட்டவேண்டும்.

நான் வகித்த பதவி காரணமாக கணிணியை உபயோகிப்பது எப்படி என்று யாரிடமும் பாடம கேட்கமுடியாத சூழ்நிலை. ஆனாலும் இதை விடக்கூடாது என்ற எண்ணம் மனதில் விழுந்து விட்டது. மாலை 5 மணிக்கு மேல் கணிணி முன்பு உட்கார்ந்து நேரம் காலம் பார்க்காமல் ஒவ்வொரு படியாகப்படித்து முன்னேறி இன்று கணிணியைப்பிரித்து மேயும் அளவுக்கு முன்னேறியுள்ளேன்.

இப்போது ஓய்வு பெற்று வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும்போது இந்த கணிணி கிடைத்தது ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விட்டது. கணிணி உபயோகிப்பது என்னைப்போன்ற இளைஞர்களுக்கு (அதாவது 60 வயதுக்கு கீழே உள்ளவர்கள் குழைந்தைகள், அதற்கு மேல் உள்ளவர்கள்தான் இளைஞர்கள். என்னுடைய வயது வெறும் 75 தான்) அதிகமாக பரிச்சயம் இல்லாததால் ஏதாவது விளையாட்டு விளையாடலாம் என்று முடிவு செய்து என்ன விளையாடலாம் என்று பார்த்தேன்.

கணிணிக்குள் பார்த்தபோது ஒரு சீட்டு விளையாட்டு கிடைத்தது. (Spider Solitaire). சில நாட்கள் விடாமுயற்சி செய்து இந்த விளையாட்டை கற்றேன். என்ன ஆயிற்று என்றால் இந்த விளையாட்டு என்னைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. தூங்கும் நேரம் போக மீதி உள்ள நேரமெல்லாம் இதே பைத்தியமாக போய்விட்டது. என் மனைவி சாப்பிடுவதற்கு பல முறை கூப்பிட்டாலும் பிறகு வருகிறேன் என்று கூறி விட்டு இந்த சீட்டு விளையாட்டில் மூழ்கியிருந்தேன். இப்படி இருக்கையில் ஒரு நாள் ...
(தொடரும்)

பின் குறிப்பு: நான் ஒரு மூன்று மாதங்களாக  புதிய பதிவுகள் எதுவும் எழுதவில்லை. என் அன்பர்கள் ஒரு சிலர் இதனால்தான் பதிவுலகம் நசிந்து போய் விட்டது. அதனால் அதை    புனருத்தாரணம் செய்ய   நீங்கள் மீண்டும் எழுதவேண்டும். எழுதுவதை நிறுத்தின பிறகு மீண்டும் எழுத வேண்டுமென்றால் மிகுந்த சிரமம். அதனால் என்னுடைய பழைய பதிவுகளையே மீள் பதிவு செய்யலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

பின்னூட்டங்கள் போடுவது அவரவர்கள் விருப்பம். போடாமலிருப்பது உத்தமம். ஏனெனில் எனக்கு மனதிற்குப் பிடிக்காத பின்னூட்டங்களை நிராகரிப்பதாக முடிவு செய்துள்ளேன். பிறகு உங்கள் சௌகரியம்.

8 கருத்துகள்:

  1. சீட்டு விளையாட்டு குறித்து அறிய தொடர்கிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  2. 80களில் (1985), மேசை கணிணி வர ஆரம்பித்த காலம். நீங்கள் சொல்லியிருக்கும் ஹார்ட் டிஸ்க் இல்லாத இரண்டு ஃப்ளாப்பி டிஸ்க் இருக்கும் கணிணியை நானும் உபயோகித்திருக்கிறேன். அப்போதுதான் டிபேஸ் போன்றவை வர ஆரம்பித்திருந்தன.

    பெரிய கம்பெனிகளில், லஞ்ச் நேரத்தின்போது, ஹாலில் 3 கணிணிகளை, கேம்ஸ் விளையாடுவதற்கென்றே வைத்திருப்பார்கள். லஞ்ச் விரைவாக முடித்தவர்கள், அதில் கொஞ்ச நேரம் விளையாடலாம்.

    எனக்கு எப்போதுமே கம்ப்யூட்டர் விளையாட்டுகள் பிடிக்காது. ஏனென்றால் அது மற்ற போதை வஸ்துக்கள் மாதிரி நம்மைப் பிடித்துக்கொண்டுவிடும் என்பதால்.

    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  3. ஓல்ட் இஸ் கோல்ட். அந்தக் காலத்தில் படித்து பயன்பட முடியாதவர்கள் இப்போது படிக்கலாமே

    பதிலளிநீக்கு
  4. நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் இந்த நதிமூலம்-1 மீண்டும் படித்தேன். அருமையான ஆரம்பமாக உள்ளது. இதுபோன்ற பதிவுகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  5. நீண்ட நாட்களுக்குப் பின் தங்களைப் சந்திப்பதில் மகிழ்ச்சி ஐயா
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  6. நீண்ட நாட்களுக்குப் பிறகு பதிவுலகம் வரும் உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html
    பதிவு மூலமாக உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி ஐயா. பிடிக்காத பின்னூட்டங்களை நிராகரிப்பதாகக் கூறியுள்ளீர்கள். சரியான முடிவு. (என் பின்னூட்டம் எதில் சேர்கிறதோ எனத் தெரியவில்லை ஐயா)

    பதிலளிநீக்கு
  8. ஆஹா... அப்போது படிக்காதவர்கள் படிக்கலாம். நாங்கள் +1 படித்தபோது தான் முதன் முதலாக கணினி பாடம் அறிமுகம் ஆயிற்று! அப்போது பயன்படுத்தி, பிறகு அலுவலகத்திலும்! சீட்டு விளையாட்டு பலரையும் பிடித்து தனக்குள் அமுக்கிக் கொள்ளும்! வரிசையாக அந்த விளையாட்டுகளை விளையாடி ஜெயிப்பது ஒரு பொழுதுபோக்காக இருந்தது!

    பதிலளிநீக்கு