திங்கள், 15 ஜனவரி, 2018

34. தற்கால சங்கீத வித்வான்கள்

நான் கொஞ்சம் கர்னாடக இசைப் பிரியன். இந்த சங்கீதத்தின் கணக்கு வழக்கெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. நல்ல இசையென்றால் கேட்டு ரசிப்பேன் அவ்வளவுதான்.

இங்கே நான் பதிவு செய்திருக்கும் பாட்டும் பாடகியும் சங்கீத உலகில் பிரபலமானவர்கள். முதலில் அதைக் கேளுங்கள். பிறகு நான் என் சந்தேகத்தைச் சொல்லுகிறேன்.




இந்தப் பாடகிக்கு முன் ஒரு லேப்டாப் வைத்திருக்கிறார்கள் அல்லவா? இது எதற்கு என்று  நான் ரொம்ப நாளாய் என் மூளையைக் குழப்பிக்கொண்டு இருந்தேன். (எப்படி, சந்தடி சாக்கில் எனக்கும் மூளை இருக்கும் சமாச்சாரத்தை உங்களுக்கு சொல்லிவிட்டேன் பார்த்தீர்களா?)

இன்றைக்குத்தான் இந்த ரகசியத்தை எப்படியும் கண்டு பிடித்து விடுவது என்று கூகிளாரை வினவினேன். அவர் சொல்கிறார் - இது ஒரு டெலிபிராம்ப்டராம் - பாடகர்களுக்கு பாட்டின் வரிகள் மறக்காமலிருக்க அந்த வரிகள் இந்த லேப்டாப்பில் நகர்ந்து கொண்டு இருக்குமாம். அதைப் பார்த்து பாடகர்கள் பாடுவார்கள் என்று கூகுளார் சொன்னார்.

டிவி வந்த புதிதில் செய்தி வாசிப்பாளர்கள் இந்த மாதிரி டெலிபிராம்ப்டர்கள் உபயோகப்படுத்துவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இப்போது மேடைப் பாடகர்களும் இந்த யுக்தியைப் பயன்படுத்துகிறார்கள் என்பது ஒரு புரட்சிதான்.

சில பாடகர்கள் பாட்டை நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக்கொண்டு அதைப் பார்த்துப் பாடுவதைப் பார்த்திருக்கிறேன். பரவாயில்லை, தொழில் நுட்பம் எப்படியெல்லாம் பயன்படுகிறது பாருங்கள். அநேகமாக இன்னும் சில வருடங்களில் பாட்டை முன்பே பதிவு செய்து கொண்டு வந்து மேடையில் பக்க வாத்தியக்காரர்களும் பாடகரும் அந்த இசைக்கு ஏற்றபடி வாயையும் கையையும் அசைப்பார்கள் என்று யூகிக்கிறேன்.

என் சிறு வயதில் பிரபல பாடகர்கள் நான்கு ஐந்து மணி நேரக் கச்சேரிகளில் இந்த மாதிரி எந்த யுக்தியும் இல்லாமல் எப்படிப் பாடினார்கள் என்று ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

8 கருத்துகள்:

  1. "அநேகமாக இன்னும் சில வருடங்களில் பாட்டை முன்பே பதிவு செய்து கொண்டு வந்து மேடையில் பக்க வாத்தியக்காரர்களும் பாடகரும் அந்த இசைக்கு ஏற்றபடி வாயையும் கையையும் அசைப்பார்கள்"
    இது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இதேபோல் பக்கவார்த்திய இசையை பதிவு செய்து ஒலிக்கவிட்டு மேடையில் வாய் அசைத்து ரசிகர்களை முட்டாளாக்கும் நடை முறையும் தற்போது உள்ளது.

    பதிலளிநீக்கு
  2. வாசித்துப் பாடுவதைவிட யோசித்துப் பாடுவது உணர்வுபூர்வமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுல நிறைய கவனச் சிதறல் உண்டு ஸ்ரீராம். (அப்போ மாதிரி சாதகம்லாம் இப்போ இருக்கா. மனசுவேற பாடல்ல இருக்காம அலைபாயும். கவனத்தைக் கலைக்கும் செல்போன் மற்ற சப்தங்கள்).

      நீக்கு
  3. சார்... அந்தக் காலத்தில், சாதகம், மனப்பாடம் செய்தல், வேறு கவனமின்மை எல்லாம் கடுமையாகப் பின்பற்றினார்கள் (சீர்காழி, செம்மங்குடி,மதுரை மணி, எம்.எஸ்.எஸ்., எம்.எல்.வி போன்ற அனைவரும்). அதுக்கு அடுத்த காலத்தில், நிறைய கவனச் சிதறல்னால, கேஜே ஏசுதாஸ் அவர்கள்தான் நோட்டை வைத்துக்கொண்டு முதலில் பாட ஆரம்பித்தார் (வரிகள் விட்டுப்போகக்கூடாது என்பதற்காக). டெக்னாலஜி வளர வளர, அவரும் லேப்டாப்பை வைத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார். அதனை எல்லோரும் தொடருகின்றனர். இது டெலி ப்ராம்ப்ட் இல்லை. அந்தப் பாடல் திரையில் முழுமையாகத் தெரியும்னு நினைக்கறேன். (ஏன்னா எத்தனை முறை நிரவல் செய்வாங்கன்னு டெலிபிராம்ப்டுக்குத் தெரியாது)

    பதிலளிநீக்கு
  4. ஐந்து மணி நேரக் கச்சேரி என்று வியக்கிறீர்கள். சீர்காழி அவர்கள், மைக் இல்லாமலேயே வெளி'நாட்டில் பாடியிருக்கிறார் (குரல் வளம் அப்படி). இப்போதுள்ள பாடகர்கள் மைக் இல்லாமல் பாடமுடியும்னு தோணலை. இங்கு பல வருடங்களுக்கு முன்னால் டி.என்.சேஷகோபாலன் அவர்கள் கச்சேரி செய்ய வந்தபோது, முழுமையாக (இடைவெளி இல்லாமல், டக் என்று கச்சேரியை முடித்துவிடாமல், இன்னும் இன்னும் என்று எங்கள் திருப்திக்கு) பாடினார்கள்.

    பதிலளிநீக்கு
  5. ஓ ! நான் இது நாள் வரை முழுப் பாட்டும் அதில் இருக்கும் என்று நினைத்திருந்தேன் . நல்ல Information.

    பதிலளிநீக்கு