புதன், 11 பிப்ரவரி, 2009

நதிமூலம்-2

கணிணியில் சீட்டு விளையாடுவதைப்பற்றி போன பகுதியில் எழுதியிருந்ததின் தொடர்ச்சி. ஒரு நாள் போனில் என் மனைவி வழி உறவினர் யாரோ என்னைக் கூப்பிட்டிருக்கறார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டதற்கு என் மனைவி, அவர் சீட்டு விளையாடிக்கொண்டு இருக்கிறார் என்று சொல்ல ஒரே கூத்தாகிப்போய்விட்டது. சீட்டு விளையாடுவது என்பது பஞ்சமா பாதகங்களில ஒன்றாக கருதப்படும் சமூகத்தில் பிறகு என் மாமனார் வகை உறவில் என் மதிப்பு என்ன ஆகி இருக்கும் என்பதை உங்கள் ஊகத்திற்கு விட்டு விடுகிறேன்.
சரி இந்த வம்பு வேண்டாம், ஆனால் வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.
இப்படி இருக்கும்போது என் நண்பர் ஒருவர் அமெரிக்காவுக்கு தன்னுடைய மகன் வீட்டிற்கு 6 மாத தங்கலுக்காக சென்று விட்டார். அவரும் என்னைப்போலவே ஓய்வு பெற்றவர். அவர் இங்கே இருக்கும்போது அவருக்கு என்ன வேலை என்றால் தினமும் காலையில் டிபன் சாப்பிட்டு முடிந்த்தும் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு ஏதாவது ஒரு நண்பர் வீட்டிற்கு செல்வார். அவருடன் ஒரு இரண்டு மணி நேரம் பேசி உலக நடப்புகளைத் தெரிந்து கொள்வார். உலக நடப்பென்றால், திருவிளையாடல் சினிமாவில் சிவாஜி கணேசன் பாணியில் ‘நடந்தது, நடவாதது, நடப்பது, நடக்கப்போவது அனைத்தும்’ அவருக்கு தெரிந்தாகவேண்டும். இல்லையென்றால் அன்று இரவு அவருக்கு தூக்கம் வராது.
இப்படியாக தினமும் காலையில் ஒரு நண்பர், மாலையில் ஒரு நண்பர் என்று முறை வைத்துக்கொண்டு நான்கு நாட்களுக்கு ஒரு சுற்று வீதம் வலம் வந்து செய்திகளை தெரிந்து கொள்வார். இது தவிர காலையிலும் மாலையிலும் இரண்டு குழுவினருடன் நடைப்பயிற்சியும் போவார். நடைப்பயிற்சியை விட அவருக்கு நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்வதில்தான் ஆர்வம் அதிகம். இப்படிப்பட்ட அகோர செய்திப்பசி கொண்டவர் அமெரிக்காவில் போய் சிக்கிக்கொண்டால் எப்படியிருக்கும் ?
பொறுத்திருக்கவும்...

நதிமூலம்-1


நான் இந்த வலைப்பதிவு விளையாட்டுகளுக்கு புதியவன். என்னுடைய மகள் தனக்கு ஒரு கணிணி புதிதாக வாங்கிக்கொண்டு தான் வைத்திருந்த பழைய கணிணியை எனக்கு தானம் கொடுத்தாள். எனக்கு கணிணியில் முன்பே சிறிது பழக்கம் உண்டு. ரொம்ப காலத்திற்கு முன்பு நான் வேலையில் இருந்தபோது அலுவலகத்தில் ஒரு கணிணி என்னுடைய அறையில் வைத்திருந்தார்கள். அது கணிணிகள் (குறிப்பாக மேஜை மாடல்கள்) வரத்தொடங்கிய காலம். என்னுடைய அறையில் இருந்த மாடலில் நிலையான சேமிப்பு சாதனம் இல்லை. இரண்டு தகடு அறைகள் இருந்தன. ஒன்றில் (A drive) மென்பொருள் தகட்டைப்போட்டுவிட்டு இன்னொன்றில் (B drive) நமக்கான தகட்டைப் போட்டுக்கொண்டு கணிணியில் நம் சித்து வேலைகளைக் காட்டவேண்டும்.
நான் வகித்த பதவி காரணமாக கணிணியை உபயோகிப்பது எப்படி என்று யாரிடமும் பாடம கேட்கமுடியாத சூழ்நிலை. ஆனாலும் இதை விடக்கூடாது என்ற எண்ணம் மனதில் விழுந்து விட்டது. மாலை 5 மணிக்கு மேல் கணிணி முன்பு உட்கார்ந்து நேரம் காலம் பார்க்காமல் ஒவ்வொரு படியாகப்படித்து முன்னேறி இன்று கணிணியைப்பிரித்து மேயும் அளவுக்கு முன்னேறியுள்ளேன்.
இப்போது ஓய்வு பெற்று வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும்போது இந்த கணிணி கிடைத்தது ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விட்டது. கணிணி உபயோகிப்பது என்னைப்போன்ற இளைஞர்களுக்கு (அதாவது 60 வயதுக்கு கீழே உள்ளவர்கள் குழைந்தைகள், அதற்கு மேல் உள்ளவர்கள்தான் இளைஞர்கள். என்னுடைய வயது வெறும் 75 தான்) அதிகமாக பரிச்சயம் இல்லாததால் ஏதாவது விளையாட்டு விளையாடலாம் என்று முடிவு செய்து என்ன விளையாடலாம் என்று பார்த்தேன்.
கணிணிக்குள் பார்த்தபோது ஒரு சீட்டு விளையாட்டு கிடைத்தது. (Spider Solitaire). சில நாட்கள் விடாமுயற்சி செய்து இந்த விளையாட்டை கற்றேன். என்ன ஆயிற்று என்றால் இந்த விளையாட்டு என்னைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. தூங்கும் நேரம் போக மீதி உள்ள நேரமெல்லாம் இதே பைத்தியமாக போய்விட்டது. என் மனைவி சாப்பிடுவதற்கு பல முறை கூப்பிட்டாலும் பிறகு வருகிறேன் என்று கூறி விட்டு இந்த சீட்டு விளையாட்டில் மூழ்கியிருந்தேன். இப்படி இருக்கையில் ஒரு நாள் ...
(தொடரும்)