ஞாயிறு, 23 மே, 2010

விக்கிரமாதித்தன் தலையை பட்டி இரவல் வாங்கின கதை - பாகம் 1

விக்கிரமாதித்தனும் பட்டியும் உஜ்ஜனிமாகாளிப்பட்டினத்தில் தங்கள் தேசத்தை நிர்மாணித்து அரசாண்டு வரும் வேளையில் நாடு மிகுந்த சுபிட்சமாயும் நாட்டு மக்கள் எல்லா வளங்களும் பெற்று சந்தோஷத்துடனும் இருந்தார்கள். நாட்டில் மாதம் மும்மாரி பெய்தது. புலியும் பசுவும் ஒரே துறையில் நீர் அருந்தின. கீரியும் பாம்பும் ஓடிப்பிடித்து விளையாடின. விக்கிரமாதித்தனும் நீதிநெறி தவறாமல் அரசாண்டு வந்தான். அவனுடைய புகழ் நாடு நகரமெங்கும் பிரசித்தி பெற்று விளங்கியது.

இவ்வாறிருக்கும் நாளில் தேவலோகத்தில் ஒரு பிரச்னை உருவாயிற்று. தேவலோகத்தில் ரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமை என்ற நான்கு நடன மங்கையர் உண்டு என்பது எல்லோரும் அறிந்ததே. தமிழ் சினிமா நடிகைகள் என்று குழம்பவேண்டாம், இவர்கள் வேறு. இதில் ரம்பைக்கும் ஊர்வசிக்கும் தொழில் போட்டி வந்துவிட்டது. தங்களில் யாருடைய நடனம் சிறந்தது என்பதில் வாக்குவாதம் தொடங்கி பெரிய சண்டையாகி தேவேந்திரனிடம் பஞ்சாயத்திற்குப் போயிற்று. அவனும் ஒரு நாள் தேவசபையில் இவர்கள் இருவரையும் நடனமாடச்சொல்லி கவனமாகப் பார்த்தான். அவனால் இவர்களின் ஆட்டத்தில் உயர்வு தாழ்வு கண்டுபிடிக்க முடியவில்லை. தேவசபையில் இருந்த எல்லோரையும் கேட்டான். ஒருவராலும் இவர்கள் ஆட்டத்தில் வேறுபாடு காண முடியவில்லை. சரி, அப்புறமாக தீர்ப்பு கூறுகிறேன் என்று அவர்களை அனுப்பிவிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

அப்போது சர்வலோக சஞ்சாரியான நாரதர் அங்கே வந்தார். தேவேந்திரன் நாரதரைப் பார்த்து வாரும் நாரதரே, இங்கு நடந்ததைப்பார்த்தீர்கள் அல்லவா? இவர்கள் நடனத்தில் வெற்றி தோல்வியைச்சொல்ல என்னால் முடியவில்லை. நீர்தான் திரிலோக சஞ்சாரியாயிற்றே, இந்தப்பிரச்னைக்கு தீர்வு சொல்லக்கூடியவர்கள் எங்காவது இருக்கிறார்களா என்று கேட்க, நாரதர் சொன்னார், பூலோகத்திலே உஜ்ஜனிமாகாளிப்பட்டினம் என்ற ஊரிலே விக்கிரமாதித்தன் என்று ஒரு ராஜா இருக்கிறான். அவன் சகல கலைக்ஞானமும், வீரதீரப் பராக்கிரமும், அதிவிவேகமும் உடையவனாய், பூலோக முழுவதும் பிரக்யாதி பெற்று விளங்குகிறான். அவனை நீர் நமது தேவலோகத் தேரை அனுப்பி வரவழைத்தீராகில் அவன் இந்தப்பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டு பிடித்து சொல்லுவான் என்றார்.

உடனே தேவேந்திரனும் தேவலோக சாரதி மாதலியைக் கூப்பிட்டு உடனே பூலோகத்தில் உஜ்ஜனிமாகாளிபுரத்திற்கு போய் அங்கு அரசாண்டு கொண்டிருக்கும் விக்கிரமாதித்த ராஜாவை நாம் அழைத்து வரச் சொன்னதாய்க் கூறி அவனை நம் ரதத்தில் ஏற்றிக்கொண்டு சீக்கிரம் வருவாயாக என்று உத்திரவிட்டான். அவ்வாறே மாதலியும் தேவலோக ரதத்தில் குதிரைகளைப் பூட்டி பூலோகத்தில் உஜ்ஜனிமாகாளிபுரத்திற்கு வந்தான். அந்தக்குதிரைகள் எப்படிப்பட்டவை என்றால் தேரில் பூட்டிவிட்டால் வாயு வேகம் மனோ வேகம் என்று சொல்லக்கூடிய வேகத்தில் செல்லக்கூடியவை.

மாதலி விக்கிரமாதித்தன் அரச சபையில் பிரவேசித்து ராஜாவிற்கு வந்தனம் சொல்லி தன்னை இன்னாரென்று அறிமுகப்படுத்திக் கொண்டான். விக்கிரமாதித்தனும் அவனுக்கு முகமன் கூறி வரவேற்று யாது பிள்ளாய், இவ்வளவு தூரம் வந்த காரணம் என்ன என்று கேட்க, மாதலி, மகாராஜா, தேவேந்திரன் யாது காரணமாகவோ தங்களை அழைத்து வரச்சொன்னார் என்று கூறினான். விக்கிரமாதித்தன் பட்டியை நோக்க, பட்டியும் ராஜாவின் குறிப்புணர்ந்து மகாராஜா, எல்லாம் நல்ல காரியமாய் முடியும், சென்று வாருங்கள் என்று கூற, விக்கிரமாதித்தனும் சர்வாபரண, ஆயுதலரங்- கிருதனாய் புறப்பட்டு மாதலியைப்பார்த்து, போகலாமா என்று கேட்டான். மாதலியும் தேரை அரண்மனை வாசலில் கொண்டு வந்து தயாராக நிறுத்தினான். விக்கிரமாதித்தனும் சபையில் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு அரண்மனை வாசலுக்கு வந்து தேரில் ஏறுவதற்காக ஒரு கையினால் தேர்க்காலைப்பிடித்துக்கொண்டு ஒரு காலைத்தூக்கி தேர்த்தட்டில் வைக்கும்போது மாதலி குதிரைகளின் லகானைச்சுண்ட, அந்தக் குதிரைகள் வாயுவேகம் மனோவேகமாக நூறு யோஜனை தூரம் சென்றன. அது ஏனென்றால், மாதலிக்கு மனதிற்குள் ஒரு மானுடனை நம் தேரில் ஏற்றிச்செல்வதா என்ற ஆணவம்.

விக்கிரமாதித்தன் தேர்க்காலை ஒரு கையில் பிடித்து ஒரு கால் பெருவிரல் தேர்த்தட்டில் இருக்க, பிடித்த பிடியும், வைத்த காலும் அப்படியே இருக்க தேரில் ஒட்டிக்கொண்ட அட்டை போல் அசராமல் வந்து கொண்டிருந்தான்.
இதைப்பார்த்த மாதலி, ஆஹா, நாம் என்னவோ இவன் சாதாரண மானுடன் என்று எண்ணினோம், ஆனால் இவன் மிகுந்த வீரதீரப்பராக்கிரமசாலியாய் இருக்கிறானே, இவனை நாம் சரியானபடி தேவலோகம் கொண்டுபோய் சேர்க்காவிடில் நமக்கு வேலை போய்விடும் என்று யோசித்து தேரை நிறுத்தி, கீழே இறங்கி விக்கிரமாதித்தனை வணங்கி, மகாராஜா, நான் தங்களை சாதாரணமாக நினைத்து விட்டேன், என்னை மன்னிக்கவேண்டும் என்று கூறி, கைலாகு கொடுத்து விக்கிரமாதித்தனை தேரில் ஏற்றி ஆசனத்தில் உட்காரவைத்து, தேரை தேவேந்திரன் சபை வாசலில் கொண்டு போய் நிறுத்தினான். விக்கிரமாதித்தன் வருவதைப்பார்த்த தேவேந்திரன் முதலான தேவர்கள் சபையின் வாசலுக்கே வந்து ராஜனை வரவேற்று சபைக்குள் அழைத்துப்போய் தனக்கருகில் ஓர் ஆசனம் போடச்செய்து, தேவேந்திரனும், விக்கிரமாதித்தனும் உட்கார்ந்துகொண்டு பரஸ்பரம் குசலம் விசாரித்துக் கொண்டார்கள்.

அப்போது விக்கிரமாதித்தனும் தேவேந்தரனை நோக்கி, தேவேந்திரா, என்னை இங்கு அவசரமாய் அழைத்து வரச்சொன்ன காரணம் என்னவெனக்கேட்க, தேவேந்திரன் சொன்னான், அகோ வாரும் விக்கிரமாதித்தா, நமது இந்திர சபையில் வழமையாக நடனமாடும் நால்வரில் ரம்பை, ஊர்வசி ஆகியோருக்கிடையில் தங்கள் தங்கள் திறமையில் கர்வமுண்டாகி நான்தான் சிறந்தவள் என்று இருவரும் கூறிக்கொண்டு, தங்களில் யார் சிறந்தவள் என்று தீர்மானித்துக் கூறும்படியாய் என்னிடத்தில் வந்தார்கள். நானும் அவர்களது நடனத்தைப்பார்த்து யாருடைய நடனம் சிறந்தது என்று கூற முடியவில்லை. அப்போது நாரதர் உன்னுடைய வீரப்பிரதாபங்களையும், சகல கலைக்ஞானத்தைப்பற்றியும், நீதி தவறாத ஆட்சியைப்பற்றியும் கூறி, இந்த நடனமாதர்களின் சிறப்பை உன்னால்தான் கணித்துச்சொல்ல முடியும் என்று கூறியதால் அந்தக்காரியத்திற்காக உன்னை இங்கு வரவழைத்தோம் என்று கூறினான். விக்கிரமாதித்தனும் சரி, நாளைக்காலையில் அவர்கள் இருவரையும் இங்கு சபையில் நடனமாடச்சொல்லுங்கள், நான் எனக்குத்தெரிந்த வரையில் அவர்களின் ஆட்ட நுட்பத்தை அறிந்து சொல்கிறேன் என்று கூறினான்.

பிறகு இந்திரன் சில சேடிப்பெண்களைக் கூப்பிட்டு விக்கிரமாதித்த மகாராஜாவை அழைத்துப்போய் நமது அரண்மனையில் தங்க வைத்து வேண்டிய உபசாரங்களைச் செய்யுமாறு பணித்தான். அவ்வாறே பணிப்பெண்களும் விக்கிரமாதித்தனை அழைத்துப்போய் போஜனம் செய்வித்து அம்சதூளிமா மஞ்சத்தை தயார் செய்து அவனை சயனம் கொள்ளும்படி கேட்டுக்கொண்டு ஒரு புறமாய்ப் போய் இருந்தார்கள். விக்கிரமாதித்தனும் சிறிது நேரம் யோசனையாய் இருந்துவிட்டு நித்திரை போனான்.

நாமும் நித்திரை செய்து பிறகு மீதியைப் பார்ப்போமா?

12 கருத்துகள்:

  1. வேளாளர் புராணம், கல்யாண கலக்கல்கள், விக்கிரமாதித்தன் கதை என... கூடு விட்டு கூடு பாஞ்சுக்கிட்டுத்தான் இருக்கீங்கோ..

    பதிலளிநீக்கு
  2. தாராபுரத்தான் சொன்னது:

    //வேளாளர் புராணம், கல்யாண கலக்கல்கள், விக்கிரமாதித்தன் கதை என... கூடு விட்டு கூடு பாஞ்சுக்கிட்டுத்தான் இருக்கீங்கோ.//

    சாப்புட்டுட்டு சும்மா இருந்தா செரிக்கோணுமில்லீங்களா, அதுக்கோசரம்தானுங்க இந்த வேலை.

    பதிலளிநீக்கு
  3. மிக விரைவில் உங்க வீட்டில் இருக்கும் அந்த "விக்ரமாதித்தன் கதைகள் " புத்தகம் களவு போய்விடும்.
    அனேகமாக நானே வேறு உருவில் வந்து "லவட்டிக் கொண்டு " வந்துவிடுவேன்.விரைவில் முழுதும் படித்துவிடவும்.
    அப்புறம் காணாமல் போய்விடும். அபுட்டுதேன் !

    பதிலளிநீக்கு
  4. கக்கு-மாணிக்கம், இந்த கதையை புஸ்தகத்தெ பாத்து எழுதறேன்னா நெனச்சுகிட்டு இருக்கீங்க. அந்த புஸ்தகம் இப்ப ஊட்லயே இல்லீங்க. பத்து வயசிலேர்ந்து எத்தன தடவ படிச்சிருப்பேன். முழு புஸ்தகமும் மனசுக்குள்ள இருக்கு, கக்கு, உங்களால ஒண்ணும் பண்ணமுடியாது :-)

    பதிலளிநீக்கு
  5. "விக்கிரமாதித்தன் தலையை, பட்டி இரவல்
    'வாங்கின'(?) கதை - பாகம் 1" படித்தேன்.
    நல்ல, சரளமாக, விறுவிறுப்பாகக் கொண்டு
    செல்கிறீர்கள்.
    தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
  6. பொஸ்தகம் படிக்கிறா மாதிரியே இருக்குதுங்க நடை. காத்திருக்கோம் அடுத்த பகுதிக்கு.:)

    பதிலளிநீக்கு
  7. உங்கள் தொலைபேசி எண் கொடுக்க முடியுமா?மொபல் நம்பர் இருந்தால் நல்லது...

    பதிலளிநீக்கு
  8. Malar:

    என்னுடைய லேண்ட் லைனுக்கு நீங்கள் பேசினபோது சிறிது உடல் நலம் குன்றியிருந்ததால் தூங்கிக்கொண்டு இருந்தேன்.

    என்னுடைய நம்பர்கள்:

    லேண்ட் லைன்: 0422-2444441
    மொபைல்: 09442006871

    ஏதாவது வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
  9. மருத்துவர் ஐயா,

    வணக்கம். சிறப்பான பதிவு. என்னுடைய மிகச்சிறு வயதில் (இப்போது சிறு வயதே) என்னுடைய தந்தை வழி தாத்தா அவர்கள் இந்த கதையை சொல்லிக் கேட்டிருக்கிறேன். மறுபடியும் அதே நடையில் படிப்பது அந்த மிகச்சிறு வயது நாட்களை கண் முன் கொண்டுவந்தது. நன்றி சார்.

    கோவையில் இருந்து மற்றுமொரு மருத்துவ பதிவரா? சூப்பர்.

    பதிலளிநீக்கு
  10. Nazimudeen, மற்றும் வானம்பாடிகள், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  11. King Viswa said

    //மருத்துவர் ஐயா,

    வணக்கம். சிறப்பான பதிவு. என்னுடைய மிகச்சிறு வயதில் (இப்போது சிறு வயதே) என்னுடைய தந்தை வழி தாத்தா அவர்கள் இந்த கதையை சொல்லிக் கேட்டிருக்கிறேன். மறுபடியும் அதே நடையில் படிப்பது அந்த மிகச்சிறு வயது நாட்களை கண் முன் கொண்டுவந்தது. நன்றி சார்.

    கோவையில் இருந்து மற்றுமொரு மருத்துவ பதிவரா? சூப்பர்.//

    உங்களுடைய தாத்தாவின் இனிய நினைவுகளை தூண்டி விட்ட வகையில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    ஒரு கேள்வி: கோவையில் இருக்கும் அந்த மருத்துவ பதிவரின் விபரம் கோடுக்க முடியுமா?
    அடுத்த குறிப்பு: நான் டாக்டர் பட்டம் பெற்றது உண்மைதான், ஆனால் செடிகளுக்கு ஊசி போடத்தான் எனக்கு உரிமை உண்டு. நான் விவசாய ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்றவன்.

    பதிலளிநீக்கு
  12. //ஒரு கேள்வி: கோவையில் இருக்கும் அந்த மருத்துவ பதிவரின் விபரம் கோடுக்க முடியுமா//

    கண்டிப்பாக. இதோ அவரின் வலைத்தளம்: http://akotheeka.blogspot.com/

    பதிலளிநீக்கு