திங்கள், 18 ஏப்ரல், 2011

அடுத்தவர் செயல்களை விமரிசித்தல்



அடுத்தவனை, அவன் செய்யும் காரியங்களை குறை கூறுவதென்றால், பலருக்கு வெல்லம் சாப்பிடுவது மாதிரி. அதே மாதிரி நாம் செய்யும் காரியங்கள் நமக்கு சரியாய் பட்டாலும் அடுத்தவர்களுக்கு சரியாகத் தோன்றாமல் போகலாம். இது அவரவர்கள் குணாதிசயங்களைப் பொருத்தது. எல்லோரும், எல்லோருக்கும் பிடித்த மாதிரி காரியங்களைச் செய்வது முடியாத காரியமாகும். வாழ்க்கையில் இவ்வாறான முரண்பாடுகள் இருந்துமொண்டுதான் இருக்கும். அதனாலேயே மற்றவர்கள் செய்யும் காரியங்களை விமரிசிக்க நமக்கு உரிமை இல்லை.
மற்றவர்கள் செய்யும் செயல்களும் வாழ்க்கை நெறிகளும் நமக்கு சரியில்லாதவை போன்று தோற்றமளித்தால் நாம் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். அவர்கள் செய்யும் செயல்களும் வாழும் முறையும் அவர்களுடைய விதிப்பயனால் ஆண்டவனால் ஏற்படுத்தப்பட்டதாகும். மேலோட்டமாகப் பார்க்கும்போது அவர்களே அந்தக் காரியங்களைச் செய்வது போல் தோன்றினாலும் உண்மையில் ஆண்டவனுடைய இச்சைப்பிரகாரம்தான் அவர்கள் அந்தச் செயல்களைச் செய்கிறார்கள். அச்செயல்களின் பயனை அனுபவிக்கிறார்கள். ஆகவே ஒருவன் அந்தச் செயல்களை விமரிசிப்பது அர்த்தமற்ற மூடச்செயலாகும்.