வெள்ளி, 22 ஏப்ரல், 2011

விவாதமும் வாக்கு வாதமும்


விவாதம் வரவேற்பிற்குரியது. ஏனெனில் இதன் மூலம் ஒரு சிந்தனைத்தெளிவு ஏற்படும். அவ்வாறு சிந்தனைத் தெளிவு ஏற்படவேண்டுமானால், பல கருத்துக்களை விவாதித்து அவைகளின் சாதக பாதகங்களை ஆராய்ந்து, பிறகுதான் ஒரு சிந்தனைத் தெளிவு ஏற்படவேண்டும். 

ஆனால் பெரும்பாலான சமயங்களில் விவாதம் வாக்குவாதமாக மாறிவிடுகிறது. ஏன் இப்படி என்றால், ஒரு கருத்தை பட்சபாதமில்லாமல் விவாதிப்பதை விட்டுவிட்டு, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை வாதத்தில் வெளிப்படுத்துவதுதான். 

எந்தக் கருத்தைப்பற்றி விவாதிப்பதானாலும் அந்தக் கருத்து என்ன என்பதை முதலில் வரையறுத்துக் கொள்ளவேண்டும். நிறைய சர்ந்தப்பங்களில் நாம் எதைப்பற்றிப் பேசுகிறோம் என்ற தெளிவு இல்லாமலேயே பலர் பேசிக்கொண்டு இருப்பார்கள்.

விவாதத்தில் பங்கு கொள்பவர்கள் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை அல்லது அடுத்தவர்கள் பேரில் இருக்கும் கோபதாபங்களை வெளிக்காட்டும் சந்தர்ப்பமாக இதை பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. 
எப்போது விவாதம் வாக்குவாதமாக, தனிப்பட்டவர்களை பாதிக்கும் எல்லையைத் தொடுகிறதோ அப்பொழுது அந்த விவாதத்தை நிறுத்தி விட வேண்டும். இதை அந்தக் குழுவின் மூத்த அங்கத்தினர் செய்யவேண்டும்.