செவ்வாய், 20 மார்ச், 2012

இன்றைய இளைஞர்களுக்கு ஒரு வார்த்தை


இந்தியாவில் இன்று அநேகரிடம் பணப்புழக்கம் தாராளமாக இருக்கிறது. அது எதனால், எப்படி ஏற்பட்டது என்பது பெரிய பொருளாதார நிபுணர்கள் விளக்கவேண்டிய ஒரு பொருள். நான் எழுத வந்ததற்கும் அதற்கும் சம்பந்தமில்லை.

நம் நாட்டில், குறிப்பாக தமிழ்நாட்டில், பெரும்பாலானவர்கள் நல்ல வசதியுள்ளவர்களாகவும் தங்கள் வாரிசுகளை நல்ல பள்ளிகளில் படிக்க வைக்கக்கூடிய நிலையிலும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பள்ளிகளில் அதிக வசதியுள்ளவர்களின் வாரிசுகளே படிக்கிறார்கள். அவர்களின் பேச்சுகளும் பழக்க வழக்கங்களும் பணக்கார தோரணையில் அமைகின்றன. அவர்களுக்கு கொடுக்கப்படும் பாக்கெட் மணியில் ஒரு ஏழைக்குடும்பம் ஒரு மாதம் சாப்பிடலாம்.


இவர்களின் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குப் போவார்கள். நல்ல சம்பளம் வாங்குவார்கள். அவர்களுக்கு தங்கள் குழந்தைகளுடன் பேசுவதற்கே நேரம் இருப்பதில்லை. தங்கள் குழந்தைகளின் விருப்பு-வெறுப்பு என்ன, யாருடன் பழகுகிறார்கள், அவர்களின் படிப்பு எப்படியிருக்கிறது, என்ன மார்க் வாங்குகிறார்கள், என்ற விஷயங்களெல்லாம் பெற்றோர்களுக்குத் தெரியாது. காரணம், நேரமில்லை. அதனால் இந்தக் குறைபாட்டை ஈடு கட்ட தங்கள் வாரிசுகளுக்கு அவர்கள் கேட்கும் எதையும் வாங்கிக்கொடுத்து விடுகிறார்கள்.


இந்த வாரிசுகள் இரு பாலரும் (ஆண்-பெண்) கல்லூரிக்குச் செல்லும்போது பல சிக்கல்கள் உருவாகின்றன. அது ஒரு இரண்டும் கெட்டான் வயது. நல்லது கெட்டதுகளை சரியாகப் புரிந்து கொள்ள முடியாத பருவம். அந்த வயதில் அவர்களை சரியான வழியில் செலுத்தக்கூடிய ஆலோசனைகள் பெற்றோர்களிடமிருந்து கிடைப்பதில்லை. அவர்களின் நண்பர்களிடமிருந்தே இந்த ஆலோசனைகள் கிடைக்கின்றன. நணபர்கள் நல்லவர்களாக இருந்தால் நல்ல ஆலோசனை கிடைக்கும். இல்லாவிட்டால் அவர்கள் திசை மாறிப்போக வாய்ப்புகள் அதிகம்.


அடிப்படையில், நல்ல குடும்பத்திலிருந்து வந்தவர்களுக்கு கூட, அந்த வயதிற்குண்டான, எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தோன்றுவது இயற்கை. இந்த ஆர்வத்தை பெற்றோர்கள் செம்மைப்படுத்தி சரியான வழி காட்டவேண்டும். அதற்கு அவர்களுக்கு நேரம் இல்லாததால் வாரிசுகள் கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுக்கிறார்கள்.  செல்போன், கம்ப்யூட்டர், இரு சக்கர வாகனம், பாக்கெட் மணி, இவையெல்லாம் தங்கு தடையில்லாமல் கிடைக்கின்றனகட்டுப்பாடு இல்லாததால் வாரிசுகள் தங்கள் இஷ்டம்போல் நடக்க ஆரம்பிக்கிறார்கள்உலகம் என்பது உல்லாசம் அனுபவிக்கத்தான் என்ற எண்ணம் இந்த வயதில் இந்த வாரிசுகளுக்கு மேலோங்கி விடுகிறது.


வாகனவசதிகள் இருப்பதால் நண்பர்களுடன் முதலில் ஊர் சுற்றுகிறார்கள். பெரிய ஓட்டல்களில் சாப்பிடுகிறார்கள். பெண்களின் நட்பும் சகவாசமும் கிடைக்கிறது. ஜோடி ஜோடியாக சுற்றுகிறார்கள். இந்த வயதில் இருக்கும் பாலுணர்வு காரணமாகவும், எதையும் அனுபவிக்கவேண்டும் என்ற தூண்டுதலாலும் பல மோசமான விளைவுகள் ஏற்பட்டுகின்றன.


இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லவேண்டும். இந்தக்காலத்தில் கல்லூரியில் படிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பாய் பிரண்ட் தேவைப்படுகிறார்கள். அப்படி பாய் பிரண்ட் இல்லையென்றால் அவர்கள் கல்லூரி மாணவ சமுதாயம் அவர்களை இளக்காரமாகப் பார்க்கிறது. அது மட்டும் இல்லாமல் அந்த பாய் பிரண்டுடன் எவ்வளவு நெருக்கமாக பழகுகிறாளோ அந்த அளவிற்கு அவளுக்கு கிரேடு கூடுகிறது.

இப்போது படித்தவுடன் பெரும்பாலோருக்கு கம்ப்யூட்டர் துறையில் பல ஆயிரக்கணக்கில் சம்பளத்துடன் வேலை கிடைத்து விடுகிறது. கல்லூரிப் பழக்க வழக்கங்களே அங்கும் தொடர்கின்றன. இந்த நிலையில் பெற்றோர் தேவைப்படாதவர்களாக ஆகிவிடுகின்றனர். பெற்றோர்களும் இது நாள் வரை இருந்த வளர்ப்பு முறையை மாற்ற முடியாதவர்களாக ஆகிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட கலாசாரத்தினால் ஏற்படும் விளைவுகளை நாம் தினமும் செய்தித்தாள்களில் படித்துக் கொண்டிருக்கிறோம். முளையில் கிள்ளி எறிய வேண்டிய செடியை பெரிய மரமானபின் பிடுங்க முயல்கிறோம். ஆனால் முடிவதில்லை.


காலத்தின் கோலத்தைக் கண்டு மனம் வெதும்பத்தான் முடியும்.


13 கருத்துகள்:

  1. இன்றைய இளைஞர்களுக்கு என்பதைவிட
    இன்றைய தாய் தந்தையருக்கு என்பதே பொருத்தமாய் இருக்கும்
    என நினைக்கிறேன்
    தாங்கள் குறிிப்பிடுவதைப்போல நகத்தால் கிள்ளி எறிய
    சோம்பல்பட்டு பின் கோடாலி கொண்டும் வெட்ட முடியாது
    அவதியுறுகிற தாய் தந்தையரே இன்று அதிகம்
    அனைவருக்குமான பயனுள்ள பதிவு
    தொட்ர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. வாழ்வில் எது முக்கியம் என்ற தெளிந்த பார்வையை அறவே இழந்துவிட்டோம்.. காசிருப்பவனே கடவுள் என்ற மனநிலைக்கு வந்து, எல்லாவற்றையும் பணத்தின் மூலமே அளக்கிறோம்! We just get what we deserve!

    பதிலளிநீக்கு
  3. //முளையில் கிள்ளி எறிய வேண்டிய செடியை பெரிய மரமானபின் பிடுங்க முயல்கிறோம்//பெற்றோர் நெற்றிப்பொட்டில் ஓங்கி சுத்தியால் ஆணியை அடித்ததுபோலுள்ளது.

    ஐயா,இன்றைய இளைஞர்களுக்கு ஒரு வார்த்தை என்று ஆரம்பித்து,காரணங்களையும்,இன்றைய நிலைகளையும் சொன்னீர்கள்,ஆனால் அவற்றுக்கெல்லாம் ஒரு தீர்வையும் கூறியிருக்கலாமே...
    மூத்தோர் சொல் அமிர்தம் அல்லவா!!!

    பதிலளிநீக்கு
  4. இந்த சீரழிவுகளுக்கு முழு முதல் காரணம் பெற்றோர்களே! வீண் ஆடம்பரமும், வறட்டு கௌரவமும் பணம் இருக்கிறது என்ற மமதையும் தானே அன்றி வேறு யாரை குற்றம் சொல்வது. "அடுத்தவர்கள் செய்கிறார்கள் நானும் செய்கிறேன் " என்ற ரீதியில் முட்டாள் தனமாக முடிவுகளை எடுத்துவிட்டு இன்று பலன் ஏதுமின்றி பறிதவித்து நிற்பவர்கள் நிறைய பேர்கள். பிள்ளைகளுக்கு தேவையானதை செய்தாலும் அவர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள சிரமங்களையும் ,கஷ்டங்களையும் புரிந்துகொள்ளும் படி பெற்றவர்கள் அல்லவா அவர்களை நெறிபடுத்த வேண்டும்? இருவரும் சம்பாதிபதால் ஏதோ இவர்கள் பிரான்சிலும் .ஜெர்மனியிலும் வாழ்ந்ததை போல இங்கே "பில்டப்" விட்டுக்கொண்டு இருப்பதாய் சாதாரணமாக சென்னையில்காண இயலுமே?

    பதிலளிநீக்கு
  5. கலியின் முக்கிய விளைவுகளில் இதுவும் ஒன்று.. இனி குழந்தைகளைப் படிக்க வைத்தவுடன் பெற்றோர் விலகிக் கொள்ளவேண்டியதுதான்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    பதிலளிநீக்கு
  6. காலத்தின் கோலத்தைக் கண்டு மனம் வெதும்பத்தான் முடியும்.

    ஒவ்வொரு பெற்றோரும் மனதில் கொள்ளவேண்டிய பகிர்வுகள்..

    பதிலளிநீக்கு
  7. //இந்த வாரிசுகள் இரு பாலரும் (ஆண்-பெண்) கல்லூரிக்குச் செல்லும்போது பல சிக்கல்கள் உருவாகின்றன. அது ஒரு இரண்டும் கெட்டான் வயது. நல்லது கெட்டதுகளை சரியாகப் புரிந்து கொள்ள முடியாத பருவம். அந்த வயதில் அவர்களை சரியான வழியில் செலுத்தக்கூடிய ஆலோசனைகள் பெற்றோர்களிடமிருந்து கிடைப்பதில்லை. அவர்களின் நண்பர்களிடமிருந்தே இந்த ஆலோசனைகள் கிடைக்கின்றன. நணபர்கள் நல்லவர்களாக இருந்தால் நல்ல ஆலோசனை கிடைக்கும். இல்லாவிட்டால் அவர்கள் திசை மாறிப்போக வாய்ப்புகள் அதிகம்.//

    //முளையில் கிள்ளி எறிய வேண்டிய செடியை பெரிய மரமானபின் பிடுங்க முயல்கிறோம். ஆனால் முடிவதில்லை.//

    வெகு அழகான ஆரோக்யமான ஆலோசனைப் பதிவு - இளைஞர்களுக்கும் பெற்றோர்களுக்கும்.

    பதிலளிநீக்கு
  8. ஐயா, நீங்கள் குறிப்பிடும் மக்கள் அப்பர் மிடில் க்ளாஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களைக் கண்டு இல்லாதவர்கள் இவர்களைப்போல் இருக்கத் துவங்கும்போதுதான் பிரச்சனையே. ஒரே வயசு. ஒரே கனவுகள்.ஒரே இன மொழி பின்புலம். ஒரே வித்தியாசம் இவர்கள் கட்டுப்பாட்டில் இல்லாத பிறப்பு. இவகளை எளிதில் வசப் படுத்திக் குளிர் காயும் அரசியல் கட்சிகளும் தலைவர்களும். எழுதினால் முடிக்க முடியாத அளவுக்கு ஆதங்கங்கள்தான் மிஞ்சும். நாம் எங்கே போகிறோம் என்று பலரும் சிந்திக்கத் துவங்கினால் ஒரு சமயம் தீர்வு கிடைக்கலாம்.

    பதிலளிநீக்கு
  9. நல்லதொரு பகிர்வு.சொல்லி இருக்கும் வரிகள் அத்தனையும் உண்மை.

    பதிலளிநீக்கு
  10. நல்ல பகிர்வு....

    தில்லியில் இன்னும் மோசம்.... பார்த்தால் பயமாகத்தான் இருக்கிறது....

    ஏழாம் - எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவன் கூட பள்ளியில் ஆயிரம் ரூபாய் நோட்டு வைத்துக்கொண்டு இருக்கிறான் - குளிர்பானம் அருந்தவும், பள்ளியில் ஸ்னாக்ஸ் சாப்பிடவும்....

    பதிலளிநீக்கு
  11. உண்மையைச் சொன்னீங்க.........அருமையான பதிவு பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா

    பதிலளிநீக்கு