கலாசாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலாசாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 மே, 2016

தமிழன் என்பவன் ஒரு தனி இனமல்ல !




அம்மா பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரும் அவருடன் இரண்டு உதவிப் பேராசிரியர்களும் வந்திருந்தனர். அவர்களை கிறுக்கர்கள் தமிழ்ச்சங்கத்தின் புதிய அலுவலகத்தின் வரவேற்பறையில் சந்தித்தோம்.

அரசு கொடுத்த மான்யத்தில் கிறுக்கர்கள் தமிழ்ச் சங்கத்திற்கு ஒரு அலுவலகம் ஏற்பாடு செய்தது பதிவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இப்போது தெரிந்து கொள்ளுங்கள். மொத்தம் ஆயிரத்து ஐந்நூறு சதுர அடி பரப்பில் நகர மத்தியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இரண்டாவது மாடியில் குளிரூட்டப்பட்ட அலுவலகம். லிப்ட் வசதி உண்டு. வாடகை வெறும் 50000 ரூபாய் மட்டுமே. மின்கட்டணம், அலுவலக பராமரிப்பு ஆகியவைகளுக்குத் தனியாக 5000 ரூபாய்.

அலுவலகத்திற்கு வேண்டிய மேஜை, நாற்காலிகள் இத்தியாதிகள் வாங்க 10 லட்சம் ஆனது. தலைவர், உபதலைவர், காரியதரிசி ஆகியோருக்கு தலா 50000 ரூபாயில் ஆப்பிள் ஸ்மார்ட் போன் கொடுக்கப்பட்டது. அலுவலகத்திற்கு தனியாக ஒரு லேண்ட்லைன் போன், இன்டர்நெட்டுடன் கூடிய கம்ப்யூட்டர், பிரின்டர் இத்தியாதிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய். கம்ப்யூட்டரைப் பராமரிக்க மற்றும் மற்ற அலுவலக வேலைகளைப் பார்த்துக்கொள்ள ஒரு இளம் தமிழச்சியை அலுவலக உதவியாளராக மாதம் 10000 ரூபாய் சம்பளத்தில் அமர்த்தினோம்.

இன்டீரியர் டெக்கரேட்டர் ஒருவரைப்பிடித்து அலுவலகத்திற்குள் சிலபல டெக்கரேஷன்கள் ஒரு 10 லட்சம் ரூபாயில் செய்தோம். ஆங்காங்கே செயற்கைச் செடிகள் பொருத்தமாக வைக்கப்ப்ட்டன. அலுவலக உபயோகத்திற்காக ஒரு ஏசி கார் 20 லட்சம் ரூபாயில் வாங்கினோம். இந்தக் காரை ஓட்டுவதற்கு ஒரு நல்ல ஓட்டுனரை ஏற்பாடு செய்தோம். ஓட்டுனர் சம்பளம் மாதம் 15000 ரூபாய்.

இவை எல்லாம் வீண் செலவுகள் என்று நினைப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தமிழ் இனம் எவ்வளவு தொன்மை வாய்ந்தது என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டுவதில்லை. அப்படிப்பட்ட ஓர் இனத்தை முன்னேற்ற விரும்பும் ஒரு சங்கத்தின் அலுவலகம் எல்லோருக்கும் முன் மாதிரியாக இருக்கவேண்டாமா? அதற்காகத்தான் இந்த செலவுகள் செய்தோம்.

சங்க ஆபீஸ் தடபுடல்களைப் பார்த்த அம்மா பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவரும் கூட வந்த உதவிப்பேராசிரியர்களும் மலைத்துப்போய் விட்டார்கள். அவர்களை ஆசுவாசப் படுத்த குளிர் பானங்கள் கொடுத்து குடிக்கச்செய்தோம். பிறகு எங்களது செயல் திட்டங்களைப் பற்றி பேச ஆரம்பித்தோம்.



                              

செவ்வாய், 20 மார்ச், 2012

இன்றைய இளைஞர்களுக்கு ஒரு வார்த்தை


இந்தியாவில் இன்று அநேகரிடம் பணப்புழக்கம் தாராளமாக இருக்கிறது. அது எதனால், எப்படி ஏற்பட்டது என்பது பெரிய பொருளாதார நிபுணர்கள் விளக்கவேண்டிய ஒரு பொருள். நான் எழுத வந்ததற்கும் அதற்கும் சம்பந்தமில்லை.

நம் நாட்டில், குறிப்பாக தமிழ்நாட்டில், பெரும்பாலானவர்கள் நல்ல வசதியுள்ளவர்களாகவும் தங்கள் வாரிசுகளை நல்ல பள்ளிகளில் படிக்க வைக்கக்கூடிய நிலையிலும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பள்ளிகளில் அதிக வசதியுள்ளவர்களின் வாரிசுகளே படிக்கிறார்கள். அவர்களின் பேச்சுகளும் பழக்க வழக்கங்களும் பணக்கார தோரணையில் அமைகின்றன. அவர்களுக்கு கொடுக்கப்படும் பாக்கெட் மணியில் ஒரு ஏழைக்குடும்பம் ஒரு மாதம் சாப்பிடலாம்.


இவர்களின் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குப் போவார்கள். நல்ல சம்பளம் வாங்குவார்கள். அவர்களுக்கு தங்கள் குழந்தைகளுடன் பேசுவதற்கே நேரம் இருப்பதில்லை. தங்கள் குழந்தைகளின் விருப்பு-வெறுப்பு என்ன, யாருடன் பழகுகிறார்கள், அவர்களின் படிப்பு எப்படியிருக்கிறது, என்ன மார்க் வாங்குகிறார்கள், என்ற விஷயங்களெல்லாம் பெற்றோர்களுக்குத் தெரியாது. காரணம், நேரமில்லை. அதனால் இந்தக் குறைபாட்டை ஈடு கட்ட தங்கள் வாரிசுகளுக்கு அவர்கள் கேட்கும் எதையும் வாங்கிக்கொடுத்து விடுகிறார்கள்.


இந்த வாரிசுகள் இரு பாலரும் (ஆண்-பெண்) கல்லூரிக்குச் செல்லும்போது பல சிக்கல்கள் உருவாகின்றன. அது ஒரு இரண்டும் கெட்டான் வயது. நல்லது கெட்டதுகளை சரியாகப் புரிந்து கொள்ள முடியாத பருவம். அந்த வயதில் அவர்களை சரியான வழியில் செலுத்தக்கூடிய ஆலோசனைகள் பெற்றோர்களிடமிருந்து கிடைப்பதில்லை. அவர்களின் நண்பர்களிடமிருந்தே இந்த ஆலோசனைகள் கிடைக்கின்றன. நணபர்கள் நல்லவர்களாக இருந்தால் நல்ல ஆலோசனை கிடைக்கும். இல்லாவிட்டால் அவர்கள் திசை மாறிப்போக வாய்ப்புகள் அதிகம்.


அடிப்படையில், நல்ல குடும்பத்திலிருந்து வந்தவர்களுக்கு கூட, அந்த வயதிற்குண்டான, எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தோன்றுவது இயற்கை. இந்த ஆர்வத்தை பெற்றோர்கள் செம்மைப்படுத்தி சரியான வழி காட்டவேண்டும். அதற்கு அவர்களுக்கு நேரம் இல்லாததால் வாரிசுகள் கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுக்கிறார்கள்.  செல்போன், கம்ப்யூட்டர், இரு சக்கர வாகனம், பாக்கெட் மணி, இவையெல்லாம் தங்கு தடையில்லாமல் கிடைக்கின்றனகட்டுப்பாடு இல்லாததால் வாரிசுகள் தங்கள் இஷ்டம்போல் நடக்க ஆரம்பிக்கிறார்கள்உலகம் என்பது உல்லாசம் அனுபவிக்கத்தான் என்ற எண்ணம் இந்த வயதில் இந்த வாரிசுகளுக்கு மேலோங்கி விடுகிறது.


வாகனவசதிகள் இருப்பதால் நண்பர்களுடன் முதலில் ஊர் சுற்றுகிறார்கள். பெரிய ஓட்டல்களில் சாப்பிடுகிறார்கள். பெண்களின் நட்பும் சகவாசமும் கிடைக்கிறது. ஜோடி ஜோடியாக சுற்றுகிறார்கள். இந்த வயதில் இருக்கும் பாலுணர்வு காரணமாகவும், எதையும் அனுபவிக்கவேண்டும் என்ற தூண்டுதலாலும் பல மோசமான விளைவுகள் ஏற்பட்டுகின்றன.


இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லவேண்டும். இந்தக்காலத்தில் கல்லூரியில் படிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பாய் பிரண்ட் தேவைப்படுகிறார்கள். அப்படி பாய் பிரண்ட் இல்லையென்றால் அவர்கள் கல்லூரி மாணவ சமுதாயம் அவர்களை இளக்காரமாகப் பார்க்கிறது. அது மட்டும் இல்லாமல் அந்த பாய் பிரண்டுடன் எவ்வளவு நெருக்கமாக பழகுகிறாளோ அந்த அளவிற்கு அவளுக்கு கிரேடு கூடுகிறது.

இப்போது படித்தவுடன் பெரும்பாலோருக்கு கம்ப்யூட்டர் துறையில் பல ஆயிரக்கணக்கில் சம்பளத்துடன் வேலை கிடைத்து விடுகிறது. கல்லூரிப் பழக்க வழக்கங்களே அங்கும் தொடர்கின்றன. இந்த நிலையில் பெற்றோர் தேவைப்படாதவர்களாக ஆகிவிடுகின்றனர். பெற்றோர்களும் இது நாள் வரை இருந்த வளர்ப்பு முறையை மாற்ற முடியாதவர்களாக ஆகிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட கலாசாரத்தினால் ஏற்படும் விளைவுகளை நாம் தினமும் செய்தித்தாள்களில் படித்துக் கொண்டிருக்கிறோம். முளையில் கிள்ளி எறிய வேண்டிய செடியை பெரிய மரமானபின் பிடுங்க முயல்கிறோம். ஆனால் முடிவதில்லை.


காலத்தின் கோலத்தைக் கண்டு மனம் வெதும்பத்தான் முடியும்.