அதிசயங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிசயங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 ஏப்ரல், 2016

மக்கள் திருந்தவே மாட்டார்களா?

                          Image result for ராஜஸ்ரீ

பழம்பெரும் நடிகை ராஜஸ்ரீயிடம் ரூ. 15 லட்சம் தங்க-வைர நகைகள் கொள்ளை.


இன்றைய தினத்தந்தி செய்தி.

பேங்க் லாக்கரிலிருந்து இந்த நகைகளை எடுத்து ஒரு கைப்பையில் வைத்து காரில் உட்கார்ந்து கொண்டிருந்த போது ஒரு நபர் வந்து காருக்குப் பக்கத்தில் கீழே கிடக்கும் பத்து ரூபாய் நோட்டுகள் உங்களுடையதுதானா என்று கேட்டிருக்கிறார்.

ராஜஸ்ரீ காரை விட்டு இறங்கி அந்த நோட்டுகளை ராஜஸ்ரீ குனிந்து எடுத்துக்கொண்டிருந்தபோது காரில் இருந்த கைப்பையை அந்த நபர் எடுத்துக்கொண்டு மறைந்து விட்டார்.

இந்த மாதிரி திருடும் டெக்னிக் எனக்குத் தெரிந்து 50-60 வருடங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த திருட்டுகள் செய்தித்தாள்களிலும் பிரசுரமாகி வருகிறது.

ஆனாலும் நம் மக்கள் இந்த டெக்னிக்குக்கு பலியாவது எப்படி என்று எனக்குப் புரியவில்லை?

புதன், 17 அக்டோபர், 2012

காணாமல் போன பூனைக்குட்டிகள்.

எங்கள் வீட்டில் வளர்ந்து கொண்டிருந்த நான்கு பூனைக்குட்டிகள் எங்கு போயின என்று தெரியாமல் வருந்திக்கொண்டிருந்தேன் அல்லவா. இப்போது கிடைத்த ஒரு நல்ல செய்தி.

எங்கள் வீட்டிலிருந்து ஒரு ஏழெட்டு வீடுகள் தள்ளி, ஒரு வீட்டில் ஒரு முஸ்லிம் பாய் கோழி மற்றும் மட்டன்  பிரியாணிகள் செய்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார். பார்சல் மட்டும்தான். பல இடங்களில் விற்பனை மையங்கள் உள்ளன. எங்கள் வீட்டுக்கு வரும் வேலைக்கார அம்மா அந்த வீட்டுக்குப் பக்கத்தில்தான் குடியிருக்கிறார்கள்.

நேற்று அவர்கள் சொன்ன தகவல். இந்த காணாமல் போன நான்கு பூனைக்குட்டிகளும் அந்த பிரியாணி கடையில்தான் இருக்கின்றனவாம். என் மாப்பிள்ளையும் அந்த வழியாகப் போகும்போது இவைகளைக் கண்டிருக்கிறார். நான் இன்னும் நேரில் பார்க்கவில்லை. ஆகவே, இந்த பூனைக்குட்டிகள் நல்ல வசதியான இடத்தில் இருக்கின்றன என்ற தகவல் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

தாய்ப் பூனை வேகாத இறைச்சிகளைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது குட்டிப்பூனைகளுக்கு பிரியாணியே கிடைப்பது ஆண்டவன் திருவிளையாடலே.

இந்த சம்பவத்தில் ஒரு அதிசயம் என்னவென்றால், முதலில் மூன்று குட்டிகள்தான் காணாமல் போயின. அவை பிரியாணிக் கடைக்குப் போய்விட்டன என்று இப்போது தெரிகிறது. அடுத்த நாள் காணாமல் போன ஒரு பூனைக்குட்டியும் எப்படி சரியாக அந்தப் பிரியாணிக் கடைக்கே சென்று மற்ற குட்டிகளுடன் சேர்ந்தது என்பது ஒரு ஆச்சரியமான விஷயம்! ஒரு சமயம் அந்த மூன்று குட்டிகளில் ஒன்று திரும்பி வந்து, நல்ல இடம் கிடைத்திருக்கிறது என்று சொல்லி, இந்த நாலாவது குட்டியையும் கூட்டிக்கொண்டு போயிருக்குமோ?

இப்போது என் மனதை வாட்டும் விஷயம் என்னவென்றால், இந்த தாய்ப்பூனை தினமும் மூன்று வேளை எங்கள் வீட்டிற்கு வந்து தன் குட்டிகளைத் தேடுகிறது. அதன் குட்டிகள் பிரியாணிக்கடையில் வசதியாக இருக்கின்றன என்ற செய்தியை அதற்குப் புரிய வைப்பது எப்படி? யாருக்காவது பூனை பாஷை தெரிந்திருந்தால் உடனே என்னைத்தொடர்பு கொள்ளவும். ஒரு சமயம் டோண்டு ராகவனுக்குத் தெரிந்திருக்குமோ?