அவலங்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அவலங்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 ஜூலை, 2017

15. GST யினால் எங்கள் வருமானம் போச்சே?


இன்றைய கோவை செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தி GST வந்த பிறகு மாநிலங்களுக்கு இடையேயான வணிக வரிச் சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டுவிட்டன என்பதுதான். இதைப் பற்றி பல கனரக வாகன ஓட்டிகள் பேட்டி கொடுத்திருக்கிறார்கள்.

கோவை-பாலக்காடு இடையே வாளையார் என்கிற இடத்தில் ஒரு வணிகவரிச் சோதனைச் சாவடி இருக்கிறது. இது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். தினமும் இதன் வழியாக ஆயிரக்கணக்கான கன ரக வாகனங்கள் பல மாநிலங்களிலும் இருந்து செல்கின்றன. இந்த சோதனைச்சாவடியில் தணிக்கை முடிந்து வாகனங்கள் போவதற்கு குறைந்தது நான்கு நாட்கள் ஆகும்.

இதனால் விளைந்த தீமைகள் - இந்த வாகனங்களின் ஓட்டுனர்கள் வெட்டியாக நான்கு நாட்கள் காத்துக்கொண்டிருப்பதில் அவர்களின் சம்பளம், வாகனங்கள் ஓடாமல் நின்று கொண்டிருப்பதால் ஏற்படும் நஷ்டம் ஆகியவை அடங்கும். இந்த வழியாகப் போகும் மற்ற சாதாரண வாகனங்களும் பல இன்னல்களைச் சந்தித்தன.

இப்போது இந்த வணிக வரிச் சோதனைச் சாவடி நீக்கப்பட்டு விட்டதால் கனரக வாகன ஓட்டிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக செய்தித்தாட்கள் செய்தி பிரசுரிக்கின்றன.

ஆனால் இவர்கள் ஒருவரும் இந்த சோதனைச்சாவடிகளின்  இன்னொரு சாராரைப் பற்றி சிறிதும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. யோசித்துப் பாருங்கள். இந்தச் சோதனைச்சாவடிகளில் பணியாற்றிய பணியாளர்களின் இன்றைய நிலை என்ன? அவர்களின் குடும்பங்கள் எவ்வளவு சிரமப்படும்? இதை யாராவது யோசிக்கிறார்களா?

அவர்கள் அரசாங்க ஊழியர்கள், இந்த வேலை இல்லாவிட்டால் இன்னொரு வேலையில் அமர்த்தப்படுவார்களே, அதனால் அவர்களுக்கு என்ன கஷ்டம் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகின்றது.

அப்படிக்கேட்பவர்கள் வாளையார் சோதனைச் சாவடிப் பக்கம் போயிருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஒரு சர்க்கார் அலுவலகம், ஆயிரக்கணக்கான வாகனங்கள், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஏற்றிச் செல்பவை, அந்த சர்க்கார் அலுவலர்கள் அனுமதித்தால்தான் போகலாம். இப்படிப்பட்ட நிலையில் ஒருவன் சும்மா இருந்தால் கூட வாகன ஓட்டிகள் கொடுக்கும் அன்பளிப்புகளை வாங்கி நிரப்ப ஒரு பாக்கெட் போதாதே.

இனி அவர்கள் பாக்கெட் நிரம்ப வழி ஏதுமில்லையே? இவர்களின் குறையைக் கேட்பார் இல்லையே? இதைவிடக் கஷ்டம் இருக்க முடியுமா? இந்தச் செய்தித்தாள்கள் இவர்களின் குறையை ஏன் செய்தியாக வெளியிடக்கூடாது?   

புதன், 18 ஜனவரி, 2017

பணமும் பயமும்

                                   
                                        Image result for பணம் image

வயதாகும்போது சில பயங்கள் வந்து விடுகின்றன. குறிப்பாக வரும் காலத்தில் நான் உடல் நலத்தோடு இருப்பேனா? என்னுடைய அன்றாட காரியங்களை நானே செய்து கொள்வேனா? எனக்கு உடல் நலம் குன்றினால் ஆஸ்பத்திரி செலவிற்கு நான் இப்போது சேமித்திருக்கும் பணம் போதுமா? இப்படியான பயங்கள் வருகின்றன.

இந்தப் பயங்களுக்கு சரியான பதில்கள் கிடையாது. உன் விதிப்படி எல்லாம் நடக்கும் என்று பொதுவாக சொல்வார்களே தவிர குறிப்பிட்டு எந்த விவரமும் சொல்ல முடியாது. அவரவர்கள்தான் தங்கள் மனதைத் திடப்படுத்திக் கொள்ளவேண்டுமே தவிர, அடுத்தவர்களின் ஆதரவை எதிர்பார்ப்பது விவேகமல்ல.

இந்தப் பயங்களைப் போக்கத்தான் பலர் (நான் உட்பட) பணத்தை தங்கள் கடைசி காலத்திற்கு வேண்டும் என்று சேமிக்கிறார்கள். இது ஒரு நல்ல முயற்சிதான் என்றாலும் இதில் உள்ள பெரும் சங்கடம் என்னவென்றால், எவ்வளவு பணம் இருந்தால் நல்லது என்பதற்கு ஒரு அளவு இல்லை. ஒருவர் பத்து லட்சம் ரூபாய் இருந்தால் நமது தேவைக்குப் போதும் என்று நினைக்கலாம்.

இன்னொருவர் ஒரு கோடி ரூபாய் இருந்தால்தான் நமது கடைசி காலத்தில் நிம்மதியாக இருக்க முடியும் என்று எண்ணலாம். எப்படி நினைத்தாலும் கடைசியில் ஒவ்வொருவரும் பணத்தை எப்படியாவது சம்பாதித்து சேமிக்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். இதற்கு வரம்பு இல்லாமல் போகிறது. ஒரு பூதமும் ஏழு ஜாடி தங்கமும் என்ற கதை இந்த மனப்பான்மைக்கு நல்ல உதாரணம்.

இந்தக் கதை தெரியாதவர்கள் என்னுடைய இந்தப் பதிவை வாசிக்கவும். http://swamysmusings.blogspot.com/2012/04/blog-post_8346.html

நான் இப்போது அனுபவிக்கும் வேதனை என்னவென்றால் என்னுடைய இப்போதைய சேமிப்பு என் வாழ்நாளுக்குப் போதுமா அல்லது போதாதா? இந்தக் கேள்விக்கு நானேதான் விடையளிக்கவேண்டும்.

போதும் என்றால் இனி வரும் வருமானங்களை என்ன செய்வது? யாருக்காவது கொடுக்க முடியாது. ஏனென்றால் பெண்டாட்டி, பிள்ளை குட்டிகள் இருக்கிறார்கள். நானே திங்கலாம் என்றால் பல்லெல்லாம் போன பிறகு எதைத் திங்க முடிகிறது? வேறு ஏதாவது செலவு செய்யலாம் என்றால் பெண்டாட்டி திட்டுகிறாள். சரி, சும்மா இருக்கலாம் என்றால் மனது "நான் அப்படியெல்லாம் சும்மா இருக்க மாட்டேன், எனக்கு ஏதாவது தீனி போட்டால்தான் ஆச்சு" என்று அடம் பிடிக்கிறது.

இப்போது இருக்கும் சேமிப்பு போதாது என்று வைத்துக்கொண்டால், இப்போது இருக்கும் வருமானத்தைக் கொண்டு இன்னும் எவ்வளவு நாள் சேமிப்பது என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. இந்த சேமிப்பையெல்லாம் நாளைக்கு ஒரு மோடி மஸ்தான் வந்து உங்கள் பேங்க் டெபாசிட் எல்லாம் "ஓகயா". எல்லாப்பணமும் அரசாங்க கஜானாவில் சேர்த்து விட்டாம் என்று சொல்லி விட்டால் அந்தச் செய்தியை இந்த இதயம் தாங்குமா என்ற கவலை வேறு இன்னொரு பக்கம் அரிக்கிறது.

இப்படியாக சாகவும் முடியாமல் பிழைக்கவும் முடியாமல் செய்து விட்ட அந்த ஆண்டவனை திட்டிக்கொண்டு இருக்கிறேன். அவன் எப்போது கண் திறப்பானோ?

செவ்வாய், 10 ஜனவரி, 2017

ஜல்லிக் கட்டும் நானும்

           
                              Image result for ஜல்லிக்கட்டு படம்
எங்க ஊர்ல ஜல்லிக்கட்டு கிடையாது. ஆதலால் நான் இதுவரை ஜல்லிக்கட்டை நேரில் பார்த்தது இல்லை. டிவியில் பார்த்ததுதான்.

இதுவரை நான் பார்த்த ஜல்லிக்கட்டு டிவிக்களில் என்னைக் கவர்ந்தது மாட்டின் கொம்பு குத்தி மனிதனின் குடல் வெளிவருவதைத்தான். ஆனாலும் அடுத்தவன் சாவதைப் பார்ப்பதில் மனிதனுக்குள்ள ஆர்வத்தை மெச்சத்தான் வேண்டும்.

மனித மனத்திற்குள் எப்படிப்பட்ட குரூர அல்லது வக்கிர எண்ணங்கள் குடி கொண்டிருக்கின்றன என்பதை ஜல்லிக்கட்டுதான் பூரணமாக வெளிக்கொணர்கிறது. இதுதான் தமிழனின் வீர விளையாட்டு என்று எல்லோரும் பீற்றிக் கொள்கிறார்கள். இது ஒரு நல்ல ஜோக்குதான்.

ஆனாலும் ஜல்லிக்கட்டு நடப்பதை நான் வரவேற்கிறேன். ஊரில் சும்மா திரியும் வெட்டிப் பயல்களுக்கு ஒரு நல்ல வேலை அன்றுதான் கிடைக்கிறது. நடக்கட்டும்.

வெள்ளி, 10 ஜூன், 2016

நான் ஒரு பைத்தியக்காரன்


                                  Image result for பைத்தியக்காரன்

எல்லோரும் அநேகமாக தாங்கள் போகும் வழியில் தங்கியிருக்கும் ஏதோவொரு பைத்தியக்காரனைப் பார்த்திருப்பார்கள். அந்த உருவம் உங்கள் கண்களின் வழியே மூளைக்குச் சென்றிருக்குமானால் ஒரு சில விநாடிகள் ஒரு பரிதாபம் உங்களுக்குள் தோன்றியிருக்கும். அதன் பிறகு உங்கள் அன்றாட வாழ்வின் போராட்டங்கள் இந்த நினைவை அழித்திருக்கும்.

அடுத்த தடவை இந்த மாதிரி ஒரு பைத்தியக்காரனைப் பார்த்தால் ஒரு சில மணித்துளிகள் நின்று அவனைக் கவனியுங்கள். நீங்கள் கவனிப்பதை அவன் பார்த்தால் கூட அதைக் கண்டு கொள்ள மாட்டான். அவன் அருகே மூன்று அல்லது நான்கு சாக்கு மூட்டைகள் இருக்கும். அதில் பலதரப்பட்ட குப்பைகள், தெருவில் கிடக்கும் சாமான்களைச் சேகரித்து வைத்திருப்பான். அவைகள் ஏதோ மிகவும் விலை உயர்ந்த பொருட்கள் போன்று அவைகளைப் பாதுகாப்பான்.

உங்களுக்கு அவைகள் வெறும் குப்பைகளாகத்தான் தெரியும். இவன் ஏன் இந்தக் குப்பைகளை இவ்வளவு பத்திரமாகப் பாதுகாக்கிறான் என்று உங்களுக்குப் புரியாது. அவன் பைத்தியக்காரன்தானே, அப்படித்தான் இருப்பான் என்று உங்கள் மனதைச் சமாதானம் செய்து கொண்டு உங்கள் வேலையைப் பார்க்கப் போய் விடுவீர்கள்.

நேற்று நான் நடைப் பயிற்சி சென்றுவிட்டுத் திரும்பும்போது ஒரு போதி மரத்தின் கீழ் சில நொடிகள் நிற்க வேண்டி  வந்தது. அப்போது எனக்கு இந்தப் பைத்தியக்காரனின் சிந்தனை வந்தது. அப்போது திடீரென்று என் மூளியில் ஒரு பொறி தட்டியது. ஆஹா, அந்தப் பைத்தியக்காரனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? நாமும் எவ்வளவு வேண்டாத பொருட்களைச் சேகரித்து வைத்திருக்கிறோம் என்று தோன்றியது.

வேண்டாத பொருட்கள் என்று நான் குறிப்பிடுவது நாளைக்குத் தேவைப்படலாம் என்று எண்ணி எவ்வளவு பொருட்களை நாம் சேகரிக்கிறோம்? ஆனால் அவைகளை நாம் வருடக்கணக்காக உபயோகப்படுத்தியதே இல்லை. இனி வரும் காலங்களிலாவது அவைகளை உபயோகப்படுத்துவோமா என்றும் தெரியாது. சரி, அவைகளை உபயோகப்படுத்தக்கூடிய யாருக்காவது கொடுக்கலாமே என்றால் அதற்கும் நம் மனது இடம் கொடுப்பதில்லை. ஆனாலும் பைத்தியக்காரன் சாக்கு மூட்டைகளைப் பாதுகாத்து வைத்திருப்பது போல் அவைகளை நாம் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம்.

 அப்படி நான் பாதுகாப்பாக வைத்திருக்கும் சில பொருட்கள்- தேவைக்கு அதிகமான பணம், உபயோகப் படுத்தாத நாட்குறிப்பு ஏடுகள், பேனா, பென்சில், துணிகள், கம்ப்யூட்டர் சிடிக்கள், இன்னும் பல. இப்போது சொல்லுங்கள், நான் பைத்தியக்காரன்தானே!

வியாழன், 28 மார்ச், 2013

கள்ளக்காதலை எதிர்கொள்வது எப்படி?

நாட்டில் அவலங்கள் அதிகப்பட்டு வருகின்றன. நம் மனதிற்கு அவை பிடிக்கவில்லை என்பதற்காக அவைகளை புறக்கண்ப்பதால் அவை மறைந்து விடப்போவதில்லை. அவைகளை நாம் எவ்வகையிலாவது சந்திக்க நேரிடும்.

கள்ளக்காதல் என்பது ஒரு முக்கூட்டுப் பிரச்சினை. கணவன், மனைவி, கள்ளக்காதலன் அல்லது காதலி. இது இன்று அல்லது நேற்று முளைத்த பிரச்சினை இல்லை. காலங்காலமாக இருந்து வரும் பிரச்சினை. இதை சாதாரண மனிதன் எப்படி எதிர்கொள்ளுகிறான் என்று பார்ப்போம்.

ஆண் என்றால் இதை மூன்று வழிகளில் கையாளுகிறான்.

1. கள்ளக்காதலனைப் போட்டுத்தள்ளுவது.

இதுதான் வழக்கமாக நடக்கும் ஒன்று. அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் இதை ஒரு குற்றமாகவே கருத மாட்டார்கள். ஆனால் இந்தியாவில் இது ஒரு கொலைக்குற்றமாக கருதப்படுகிறது. இந்தக் குற்றம் புரிபவன் குறைந்த பட்சம் ஆயுள் தண்டனை பெறுவான். ஜெயிலில் களி சாப்பிடும்போதுதான் அவனுக்கு யோசனை வரும்.

நாம் ஏன் இப்படி செய்தோம் என்று யோசிப்பான். குற்றம் செய்தது அவன் பெண்டாட்டி. இதற்கு நான் தண்டனை அனுபவிக்கிறேனே, அவள் வெளி உலகில் சுதந்திரமாக வாழ்கிறாளே என்று எண்ணி வருந்துவான்.

2. கள்ளக்காதலனையும் பெண்டாட்டியையும் போட்டுத் தள்ளுவது.

மிகவும் உணர்ச்சி வசப்படும் ஆண் செய்யும் காரியம் இதுதான். குற்றம் புரிந்தது இருவர் என்பதால் ஒருவரை மட்டும் தண்டிப்பது சரியல்ல என்பது இவர்கள் எண்ணம். ஆனால் விளைவு என்னமோ ஒன்றுதான். இரட்டைக் கொலைக்காக இவன் தண்டனை பெறுவான்.

ஜெயில் தண்டனை என்பது சாதாரணமானதல்ல. ஒருவன் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைகள் முடிந்து தண்டனை பெற்று அதை அனுபவித்து முடித்து வெளியில் வரும்போது அவன் மனநிலை எப்படி இருக்கும் என்று சொல்லமுடியாது.

3. இருவரையும் போட்டுத் தள்ளிவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்வது.

இதுதான் உச்சகட்ட உணர்ச்சிகளின் வெளிப்பாடு. இதில் உள்ள ஒரே சௌகரியம் என்னவென்றால் கதை உடனடியாக முடிந்து விடுகின்றது. போலீஸ்காரர்களுக்கும் நீதிபதிகளுக்கும் வேலை குறைவு. பிரேதப் பரிசோதனை முடித்து அடக்கம் செய்தால் கேஸ் முடிந்துவிடும்.

இந்த மூன்று வழிகளிலும் உள்ள ஒரே வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், அவர்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களுடைய எதிர்காலம் என்ன ஆகும் என்பதே.