ஆசைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆசைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 மே, 2016

கஜானா காலி என்று புலம்ப முடியாது.

                                  Image result for கன்டெய்னர்

வழக்கமாக தமிழ் நாட்டில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்து தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைப்பார்கள். அப்படி ஒரு கட்சி பதவிக்கு வந்தவுடன் வைக்கும் முதல் ஒப்பாரி, சென்ற அரசு கஜானாவைக் காலி செய்து விட்டுப் போய்விட்டார்கள் என்பதாகத்தான் இருக்கும்.

ஆனால் இந்த முறை அம்மா அவர்கள் அப்படி பிலாக்கணம் வைக்க முடியாமல் போய்விட்டது. ஏனென்றால் கஜானாவும் அவர்களுடையது. காலி செய்ததும் அவர்களே. அப்புறம் எப்படி பிலாக்கணம் வைக்க முடியும்?

இந்த மாதிரி பணத்தை பல கன்டெய்னர்களில் வைத்து இருந்தால் அவைகளை கரையான் அரித்து விடாதா? இந்தக் கவலையில் எனக்கு இரவு முழுவதும் தூக்கம் வருவதில்லை. அதில் ஒரு சில கோடிகளை அப்படியே என் வீட்டிற்குத் தள்ளி விடக்கூடாதா? நானும் அவைகளின் மேல் சில காலம் படுத்துத் தூங்குவேன் அல்லவா? அம்மன்தான் கண் திறக்கவேண்டும் !

இப்படி தனிப்பட்ட கஜானாக்கள் இருக்கும்போது ரிசர்வ் வங்கி வேறு தனியாக கஜானாக்களை வைத்துப் பராமரிக்க வேண்டுமா என்பது என் இன்னொரு சந்தேகம். கஜானாக்களை பராமரிக்கும் வேலையை ஏன் தனியார்களுக்குக் கொடுக்கக்கூடாது? ரிசர்வ் பேங்க் கவர்னர் இந்த யோசனையை உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ் நாட்டில் நன்கு அனுபவப்பட்ட கஜானா பராமரிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 4 ஜனவரி, 2016

80 வயதிலும் இளமை !

                                         Image result for tnau campus
நான் விவசாயக் கல்லூரியில் சேர்ந்து படித்து பட்டம் பெற்ற வருடம் 1956. ஜூன் மாதம் பரீட்சைகள் முடிந்தன. ஜூலை மாதம் முடிவுகள் வந்தன. முடிவுகள் தெரிந்த பதினைந்து நாளில் கவர்ன்மென்ட் வேலைக்கான உத்திரவு வந்து விட்டது. ஆகஸ்ட் மாதம் வேலைக்கு சேர்ந்தேன். விவசாந ஆராய்ச்சிப் பண்ணையில் ஆய்வு உதவியாளன் என்னும் உத்தியோகம்.

என்ன பெரிய உத்தியோகம்? நான் முதல் மாதம் வாங்கிய சம்பளத்தைச் சொன்னால் என் பேரன் என்னை கேவலமாகப் பார்க்கிறான். ரூ.100 சம்பளம். ரூ. 24 பஞ்சப்படி. மொத்தம் 124 ரூபாய்.

அப்போது கோவையில் நூற்பாலைகளில் பணி புரிந்தவர்கள் மாதம் 150 ரூபாய் சம்பளம் பெற்றார்கள். வருடத்தில் ஆறு மாத போனஸ். இத்தனைக்கும் அவர்களில் பெரும்பாலானோர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். நான் 16 வருடம் படித்து பட்டம் வாங்கி, அவர்களைவிட குறைவான சம்பளம் வாங்குவது கேவலமாகப் பட்டது. பேசாமல் அந்த வேலைக்கே போய்விடலாமா என்று கூட ஒரு கட்டத்தில் யோசித்தேன்.

எப்படியோ விதி வசத்தால் அதே கவர்ன்மென்ட் உத்தியாகத்தில் தொடர்ந்து இருந்து படிப்படியாக உயர்வுகள் பெற்று ஒரு பேராசிரியராகப் பதவி ஓய்வு பெற்றேன். இன்று கணிசமான ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு பதிவுலகில் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறேன்.

இப்போது நான் சொல்ல வந்த விஷயம் வேறு. நான் விவசாயப் பட்டப்படிப்பில் சேர்ந்த போது, என் வகுப்பில் மொத்தம் 96 பேர் சேர்ந்தோம். மூன்று வருடங்கள் கழித்து 82 பேர் படிப்பு முடிந்து வெளியில் வந்தோம். இதில் சுமார் 45 பேர்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் கேரளா, கர்னாடகத்தைச் சேர்ந்தவர்கள். அப்போது அந்த இரு மாநிலங்களிலும் விவசாயக்கல்லூரிகள் இல்லை.

இந்த 86 பேர்களும் பல வேலைகளில் பணி புரிந்து ஓய்வு பெற்றிருந்தனர். ஓரிருவர் மட்டும் சொந்தத் தொழிலில் இருந்தார்கள். இப்படி இருக்கையில் கடந்த 2006 ம் ஆண்டு, எங்களில் ஒருவருக்கு நாம் வகுப்புத்தோழர்கள் எல்லாம் ஒன்று கூடி அளவளாவினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் வந்தது. அவர் நான் உட்பட சில நண்பர்களைக் கலந்து ஆலோசித்தார். நாங்களும் இந்தக் கருத்துக்கு ஒப்புதல் தரவே, அவர் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தார். பெருமுயற்சிக்குப் பின் ஏறக்குறைய 60 நபர்களைத் தேடிக்கண்டு பிடித்து விட்டார்.

மீதி நபர்கள் மேல் லோகத்தில் சௌக்கியமாக இருக்கிறார்கள் என்று தெரிந்தது. இந்த 60 பேருக்கும் செய்தி அனுப்பி, விழா ஏற்பாடு செய்து 2006 ம் ஆண்டில் "பொன் விழா" கொண்டாடினோம். 50 பேர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தார்கள்.



இந்த வருடம், அதாவது 2016 ம் வருடம் நாங்கள் பட்டம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆகவே இந்த ஆண்டில் வைர விழா கொண்டாடலாம் என்று முடிவு செய்தோம். சென்னை நண்பர் எங்கள் வகுப்புத் தோழர்களின் கணக்கை எடுத்தார். பொன் விழாவின்போது இருந்தவர்களில் இன்னும் 20 பேர் காணவில்லை. சரி இருக்கும் 40 பேரை வைத்து விழா எடுப்போம் என்றால் அதில் பாதிப்பேர் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்ற நிலையில் இருக்கிறார்கள்.

எப்படியோ ஒரு 20 பேரைத் தேத்தியிருக்கிறோம். விழா வருகிற பெப்ரவரி மாதம் 27 ம் தேதி கோயமுத்தூர் விவசாயப் பல்கலை வளாகத்தில் நடைபெறுகிறது. ஏறக்குறைய எல்லோருக்கும் 80 வயதிற்கு மேல் ஆகிறது. அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்கும் ஆவல் வளர்கிறது.

விழா முடிந்தவுடன் விபரமான கட்டுரை வெளியாகும்.

வெள்ளி, 9 மார்ச், 2012

நிறைவேறின ஆசைகள்

கொஞ்சும் சலங்கை என்ற சினிமா வந்த புதிதில், 1962 என்று ஞாபகம், சிங்கார வேலனே தேவா என்ற பாடல் பிரபலமாகி பட்டி தொட்டிகளிலெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தது. திருமதி ஜானகி திரை உலகத்தில் பிரவேசித்த முதல் பாடல். ஆபேரி ராகத்தில் அமைந்த பாடல். திரு காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் நாதஸ்வர இசையோடு பின்னிப்பிணைந்த பாடல். அதற்கு முன்பும் அப்படி ஒரு பாடல் வந்ததில்லை. அதற்குப்பின்பும் அந்த பாடல் மாதிரி வரவில்லை.

நான் அப்போதுதான் முதுகலை படிப்பு முடித்துவிட்டு வேலையில் சேர்ந்திருந்தேன். படிப்புக்காக வாங்கிய கடனை அடைக்கவேண்டும். குடித்தனம் நடத்தவேண்டும். அப்போது நான் பிரம்மச்சாரிதான். இருந்தாலும் பாட்டியுடன் தனிக்குடித்தனம். என் அம்மாவிற்கும் பாட்டிக்கும் ஆகாது. ஆனால் நான் பாட்டி செல்லம். ஆகவே என்னை பாட்டியுடன் தனிக்குடித்தனம் அனுப்பி விட்டார்கள்.

இந்த சிங்கார வேலன் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் மனதில் ஒரு ஏக்கம் தோன்றும். ஆஹா, இந்தப் பாட்டை கிராமபோன் ரிக்கார்டில் வீட்டில் போட்டு கேட்டால் எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் என்று ஏங்கியிருக்கிறேன். கிராமபோன் வாங்கும் அளவிற்கு என்னுடைய அன்றைய பொருளாதார நிலை இல்லை. இந்த ஏக்கம் மனதில் இருந்து கொண்டே இருந்தது.

பல வருடம் கழித்து டேப் ரிகார்டர் வாங்கினேன். அதில் இந்தப் பாடல் கேசட் வாங்கி என் மனம் திருப்தியடையும் வரையிலும் இந்தப் பாடலைக்கேட்டேன். இப்போது கம்ப்யூட்டர், சி.டி.ப்ளேயர், ஐபாட், டேப் ரிகார்டர் என்று பலவித உபகரணங்களும் வீட்டில் இருக்கின்றன. இந்தப் பாட்டு பல வடிவங்களில் இந்த உபகரணங்களில் இருக்கின்றன. ஆனால் அன்று டீக்கடைகளில் ஓரமாக நின்று கேட்டு ஆனந்தித்த அனுபவம் இப்போது வரவில்லை.

ஒரு பொருள் இல்லாதபோது அதன் மீது ஏற்படும் ஈர்ப்பு, அந்தப் பொருளை நாம் அடைந்த பிறகு வெகுவாக குறைந்து விடுகிறது.