ஆத்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆத்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 டிசம்பர், 2015

ஏன் மனிதன் மிருகமாகிறான் ?

                                                Image result for டீக்கடை                   

சமீபத்தில் எங்களூரில் நடந்த இரு நிகழ்ச்சிகள்.

ஒன்று; டீக்கடை ஒன்றில் ஒருவன் குடித்து விட்டு வந்து தாறுமாறாகப் பேசிக்கொண்டு இருந்திருக்கிறான். அதை அங்கு டீ குடித்துக்கொண்டிருந்த ஒருவன் கண்டித்திருக்கிறான்.

இருவருக்கும் வாக்குவாதம் பெரிதாகி குடிகாரன் மற்றொருவனை தான் வைத்திருந்த கத்தியால் பல இடங்களில் குத்தியிருக்கிறான். குத்துப்பட்டவன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே இறந்து விட்டான்.

இன்னொரு நிகழ்வு;

ஒரு குடிசைவாழ் பகுதி. அங்கு ஒரு குடும்பம் - கணவன், மனைவி, இரு பெண் குழந்தைகள். ஒரு பெண் குழந்தைக்கு திருமணம் ஆகிவிட்டது. கணவன் மனைவி இருவரும் கூலி வேலைக்குப் போய் ஜீவனம் செய்பவர்கள்.

அதே போல் பக்கத்து குடிசையிலும் ஒரு கணவன் மனைவி. இதேபோல் கூலி வேலைக்காரர்கள். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

அந்த குழந்தை இல்லாத பெண்ணிற்கும் குழந்தை பெற்ற ஆணுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் கணவன் இதைக் கண்டித்திருக்கிறான். ஆனால் பலன் இல்லை.

ஒரு நாள்  அந்த தம்பதிகள் வேலைக்குப் போகும்போது இந்தக் குழந்தை பெறாத ஆள் துணைக்கு ஒரு உறவினனைக் கூட்டிக்கொண்டு அவர்கள் பின்னாலேயே போய் அவர்கள் இருவரையும் கொலை செய்திருக்கிறான்.

இந்த மாதிரி நிகழ்வுகள் அடிக்கடி செய்தித்தாள்களில் வருகிறது. மனிதன் என்னவாக மாறிக்கொண்டு வருகிறான் என்று யோசித்தால், அவன் மிருகமாகத்தான் ஆகிக்கொண்டு வருகிறான் என்பது புலனாகிறது.

இந்த நிகழ்வுகளை செய்திகள் என்ற அளவில் நாம் படித்து விட்டு அடுத்த நிமிடம் இந்த உலகம் அப்படித்தான் என்று நம் மனதிற்கு ஒரு ஆறுதல் சொல்லிவிட்டு அடுத்த செய்தியைப் படிக்கப்போய் விடுகிறோம். 

பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களின் நிலை என்ன ஆகும் என்று நாம் யாரும் தீவிரமாகச் சிந்திப்பதில்லை. பல உப்புச்சப்பு இல்லாத காரணங்களுக்காக பெரிய பெரிய போராட்டங்கள் நடத்தும் சமூக அமைப்புகள் இத்தகைய மக்களிடம் சென்று அவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டினால் இத்தகைய சமூகம் கொஞ்சமாவது சீராகுமே என்று என் மனதிற்குத்தோன்றுகிறது. 

நான் நினைப்பது சாத்தியமில்லாமல் இருக்கலாம். ஆனாலும் என் நினைவுகளில் அத்தகைய எண்ணம் தோன்றுகிறது.

சனி, 5 மே, 2012

உணர்ச்சி வசப்படுதலும் அதன் விளைவுகளும்


சமீபத்தில் செய்தித் தாள்களில் வெளியான ஒரு செய்தியை அநேகமாக அனைவரும் படித்திருப்பீர்கள்.

கயத்தாற்றில் ஒரு குடும்பம். தாய் தகப்பன், இரண்டு பையன்கள்,பெரியவனுக்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள். வெளியூரில் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறான். மனைவி பெற்றோருடன் இருக்கிறாள். தம்பி ஒரு கழிசடை. குடித்துவிட்டு ஊர்ப்பெண்களை மேய்வதுதான் அவன் வேலை. யாராலும் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த சூழ்நிலையில் தம்பி அண்ணியிடமே வம்பு செய்திருக்கிறான். அவள் முடிந்த வரையில் பொறுமையாக இருந்திருக்கிறாள். முடியாமல் போகவே கணவனிடம் புகார் செய்திருக்கிறாள்.

அண்ணன்காரன் அதீத உணர்ச்சி வசப்பட்டு ஊருக்கு வந்திருக்கிறான். அவனுக்கு இருந்த உணர்ச்சி வெறியில் விவேகம் அவனை விட்டுப் போய்விட்டது. தன் உறவினன் ஒருவனைத் துணைக்கு கூப்பிட்டுக் கொண்டான். தம்பியை நைச்சியமாய் பேசி தங்கள் தோட்டத்து பம்ப் செட் ரூமுக்கு கூட்டிப்போய் குடிக்க வைத்து 70 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டான்.

இதன்பிறகு என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். போலீஸ் கேஸ், சிறை வாசம், கோர்ட்டு விசாரணை, தீர்ப்பு. இந்தக் கூத்து எல்லாம் நடந்து முடிய ஓரிரு ஆண்டுகள் ஆகலாம். இந்த சமயத்தில் கேஸ் நடத்த, குடும்பம் நடத்த ஆகும் செலவுகளை எப்படி செய்வது? இருக்கும் சொத்துகளை விற்று செலவுகள் நடக்கும். முடிவில் அவனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கலாம்.

இதன் பிறகு அவன் மனைவி குழந்தைகள் நிலை என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அவர்களுடைய எதிர்காலம் எப்படி ஆகும்? உணர்ச்சி வசப்பட்டு செய்த காரியத்தினால் என்னென்ன விபரீதங்கள் ஏற்பட்டு விட்டன? இந்த நிகழ்வில் எங்கு தவறு நேர்ந்தது?

அந்தக் குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள் தங்கள் மூத்த மகனை அவன் மனைவியைத் தன்னோடு அழைத்துப் போகச் சொல்லியிருக்க வேண்டும். அது முதல் தவறு. அந்த மூத்த மகனாவது நிலைமையைப் புரிந்துகொண்டு தன் மனைவியைத் தன்னோடு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அந்த மனைவியாவது நல்ல யோசனை சொல்லியிருக்கவேண்டும். அல்லது அவளுடைய தாய் தகப்பனாவது ஏதாவது மாற்றுத் திட்டங்கள் சொல்லியிருக்கவேண்டும்.

இவைகளெல்லாம் நடக்கவில்லை. கடைசி காலத்தில் உணர்ச்சி வசப்பட்டு அவன் செய்த கொலையினால் ஒரு குடும்பம் சீரழிந்து நடுத்தெருவில் நற்கும் நிலை உருவாகிவிட்டது.

இது மாதிரி சம்பவங்கள் இப்போது அதிகமாக நடக்கின்றன. காரணம் பொறுமையின்மை. ஒரு நிமிடம் விளைவுகளைப் பற்றி யோசித்திருந்தால் இந்த செயல்கள் நடந்திருக்குமா?

இதைப் படிக்கும் நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இந்தப் பிரச்சினை ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நேரலாம். அப்படி நேரும் பட்சத்தில் உணர்ச்சி வசப்படாமல் அந்தப் பிரச்சினையை கையாள்வது எப்படி என்று இப்போதே யோசித்து வைத்துக்கொள்ளுங்கள்.