இஸ்ரேல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்ரேல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 டிசம்பர், 2013

இஸ்ரேலுக்கு விசா வாங்கினேன்.


நான் ஸ்வீடனுக்குப் போயிருந்தபோது அங்கு என் புரொக்ராமைக் கவனித்துக் கொள்பவரிடம் இஸ்ரேல் பார்க்கும் என் ஆசையை வெளியிட்டேன். அவர் அதற்கென்ன செய்து விடலாம் என்றார்.

அடுத்த நாள் இஸ்ரேல் தூதரகத்திற்குச் சென்றோம். நான் டில்லியில் அமெரிக்கத் தூதரகத்திற்குப் போயிருக்கிறேன். அது பெரிய இடம். பல கட்டிடங்கள், செடி கொடிகள், என்று ஆர்ப்பாட்டமாய் இருந்தது. நானும் ஸ்டாக்ஹோமில் இஸ்ரேல் தூதரகமும் அப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் இருந்தேன். இதிலேயே முதல் அடி.

ஒரு கட்டிடத்தில் ஒரு கதவு. அதற்கு மேல் இஸ்ரேல் தூதரகம் என்று ஒரு போர்டு. கதவு சாத்தியிருந்தது. அந்த கதவிற்குப் பக்கத்தில் ஒரு செக்யூரிடி காவலாள். இவ்வளவுதான் இஸ்ரேல் தூதரகம். என்னைக்கூட்டிக்கொண்டு போனவர் முன்பே சொல்லி வைத்திருப்பார் போலும். நாங்கள் யார் என்று சொன்னதும் அவர் அங்குள்ள மைக்ரோபோனில் என்னமோ சொன்னார். சிறிது நேரத்தில் கதவு திறந்தது. செக்யூரிடி எங்களை உள்ளே போகச்சொன்னார்.

நானும் உள்ளே பெரிய ஆபீஸ் இருக்கும் போல என்று நினைத்துக்கொண்டு உள்ளே போனேன். அங்கு ஒரு மாடிப்படி. அதில் ஏறிப் போனால் அங்கு ஒரு எட்டுக்குப் பத்தில் ஒரு ரூம். அங்கு யாரும் இல்லை. நாங்கள் அங்கு போய் சிறிது நேரத்தில் ஒரு அசரீரி கேட்டது. "என்ன வேண்டும்?" என்றது. நாங்கள் வந்த விஷயத்தைச் சொன்னதும் ஒரு ஐந்து நிமிடம் கழித்து அங்குள்ள ஒரு துவாரத்தின் வழியாக ஒரு காகிதம் வந்தது. அது விசா வாங்க அப்ளிகேஷன்.

அசரீரி மீண்டும் சொன்னது. அந்த அப்ளிகேஷனைப் பூர்த்தி செய்து, பாஸ்போர்ட், விசா கட்டணம் சேர்த்து அந்த துவாரத்தில் போடவும் என்றது. நாங்கள் அப்படியே செய்தோம். அப்ளிகேஷனையும் பாஸ்போர்ட்டையும் பணத்தையும் அந்த துவாரத்தில் போட்டு விட்டு கால் கடுக்க நின்று கொண்டிருந்தோம். உட்காருவதற்கு ஒரு நாற்காலி கூட இல்லை.

அரை மணி ஆயிற்று. ஒரு மணி ஆயிற்று. ஒன்றும் நடக்கவில்லை. ஒன்றரை மணி நேரம் கழித்து அந்த துவாரத்தின் வழியே என்னுடைய பாஸ்போர்ட் வெளியே வந்தது. எடுத்துப் பார்த்தோம். விசா சீல் குத்தப் பட்டிருந்தது. அவ்வளவுதான் வேறு எந்த சத்தமும் இல்லை. பேசாமல் வெளியே வந்தோம். செக்யூரிடி ஒரு சலாம் போட்டான். நாங்கள் எங்கள் வாகனத்தில் ஏறி ஆபீசுக்கு வந்தோம்.

இந்த மாதிரியான ஒரு அனுபவம் என் ஆயுளில் பார்த்ததில்லை. இஸ்ரேல் தங்கள் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எவ்வளவு சர்வ ஜாக்கிரதையாக இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன்.

என்னுடைய இஸ்ரேல் டூர் முழுவதும் இப்படியான பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டு என் இரத்த அழுத்தத்தை எகிறச் செய்தன.

ஸ்வீடனிலிருந்து நெதர்லாந்து வந்து வேகனிங்கன் போய் வந்த கதை முன்பே சொல்லியிருக்கிறேன். அப்போது ஏர்போர்ட்டில் க்ளோக் ரூமில் என்னுடைய கப்போர்டை புதுப்பிக்க சென்றபோது ஏர்போர்ட் என்கொயரியில் சும்மா விசாரித்தேன். பிளைட்டுக்கு எவ்வளவு நேரம் முன்னால் வரவேண்டும் என்று கேட்டேன். ஒரு மணி நேரம் முன்னால் வந்தால் போதும் என்று சொல்லிவிட்டு, நீங்கள் எந்த ஊருக்குப் போகவேண்டும் என்றார்கள். நான் இஸ்ரேல் என்று சொன்னவுடன் அப்படியானால் இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக வந்து விடுங்கள் என்றார்கள்.

இது என்ன விசேஷ வரவேற்பாக இருக்கும்போல் இருக்கிறது என்று நான் புறப்பட்ட அன்று இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே சென்று விட்டேன். இஸ்ரேல் போகவேண்டிய கவுன்டருக்குப் போனவுடன் என்னை என் லக்கேஜ்களுடன் ஒரு தனி ரூமுக்கு கூட்டிப்போனார்கள். அங்கு மூன்று செக்யூரிடி ஆட்கள் இருந்தார்கள். என் லக்கேஜ்களை எல்லாம் தலைகீழாக கவிழ்த்தார்கள். ஒவ்வொரு ஐட்டத்தையும் சோதனை செய்தார்கள். பிறகு சரி, எல்லாவற்றையும் திரும்ப பேக் செய்யுங்கள் என்றார்கள்.

நான் ஓட்டல் ரூமில் வெகு பாடு பட்டு ஜாக்கிரதையாக பேக் செய்த சாமான்கள் அலங்கோலமாகக் கிடந்தன. பதட்டம் வேறு. எப்படியோ ஒரு வழியாக மனதிற்குள் இஸ்ரேலைத் திட்டிக்கொண்டு, அரை மணி நேரத்தில் எல்லாவற்றையும் பேக் செய்து முடித்தேன். பிறகு என்னை மட்டும் தனியாக இரண்டு பேர் வேறு ஒரு ரூமுக்கு கூட்டிப்போனார்கள். அங்கு போன பிறகு நடந்ததைச் சொல்ல வெட்கமாக இருக்கிறது.