உறவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உறவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 2 மே, 2015

என்னுடைய பலஹீனம்

                                   Image result for கோவில்
நேற்று நானும் என் மனைவியும் எங்கள் ஊரில் (சும்மா ஒரு ஐந்து கி.மீ. தூரம்தான்) ஒரு கோயில் கும்பாபிஷேகத்திற்குப் போயிருந்தோம். அங்கே கோயில் வளாகத்தில் நான் கொஞ்ச தூரம் சென்று விட்ட பிறகு, என்னைப் பார்த்த ஒரு பெண்மணி, வேறு ஒருவரை அனுப்பி என் பெயரைச் சொல்லி, அவர்தானா என்று விசாரித்து விட்டு என்னைக் கூப்பிட்டுக்கொண்டு வரச் சொன்னார்.

இது என்னடா விபரீதம், என் பெயரைச்சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டு வரச்சொன்னது யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே சென்றேன். அந்தப் பெண்மணி என்னையும் என் மனைவியையும் மிகவும் அன்னியோன்யமாக நலம் விசாரித்தார்கள். இது யாராக இருக்கும் என்று நான் என் மண்டையைப் பலமாக ஆட்டி யோசித்தும் அடையாளம் பிடிபடவேயில்லை.

எப்படியோ சமாளித்து பேசிவிட்டு விடை பெற்றோம். முதலில் என்னைக் கூப்பிட்ட அம்மாள், அவர்கள் பிறந்த தோட்டத்தின் பெயரைச் சொல்லித்தான் கூப்பிட்டார்கள். ஆனாலும் அவர்களின் அடையாளம் சட்டென்று மனதில் தோன்றவில்லை.

பிறகு திரும்பி வரும்போதுதான் ஒரு மாதிரி கணக்குப் போட்டுப் பார்த்ததில், ஆஹா, அவர்களல்லவா இவர்கள் என்று அடையாளம் துலங்கியது. அவர்கள் என் மனைவியின் ஒன்று விட்ட அக்காளுக்கு நாத்தனார். அவர்களின் கணவர் எனக்கு பால்யத்திலிருந்து நண்பர். அவர்களின் அண்ணன் என்னுடன் கல்லூரியில் படித்தவர்.

மிகவும் நெருங்கிய உறவுதான். ஆனாலும் பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டபடியால் சட்டென்று நினைவிற்கு வரவில்லை. இரவு முழுவதும் இதே யோசனையாகப் போய்விட்டது. எனக்கு இந்த மாதிரி உறவுக்காரர்களை சரியாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. இது என் ஒரு பெரிய பலஹீனம்.

ஆனால் சிலர், ஒருவரை ஒரு முறை பார்த்துப் பேசினால் போதும், பத்து வருடங்கள் கழித்து பார்த்தால் கூட, நீங்கள் இன்னார்தானே என்று பெயரைச் சொல்லி அடையாளம் கண்டு கொள்கிறார்கள். அது ஒரு கொடுப்பினைதான். 

திங்கள், 26 மார்ச், 2012

விருந்தினராக உறவினர் வீட்டில் தங்கலாமா?

காலங்கள் மாறிவிட்டன. உள்ளன்போடு ஒருவரை நேசிக்கும் பண்பு மறைந்துவிட்டது. உறவினர்களை, கல்யாணம் போன்ற விசேஷங்களில் பார்த்து நலம் விசாரிப்பதுடன் இன்றைய உறவுகள் முடிந்து விடுகின்றன.

லீவு வந்தால் சிறுவர் சிறுமியர் உறவினர் வீடுகளுக்குச் செல்வது என்ற வழக்கம் ஏறக்குறைய மறைந்துவிட்டது.

காரணங்கள் ஆயிரம் சொல்லமுடியும். ஆனால் அடிப்படைக் காரணம் ஒன்றுதான். அது மனிதர்களின் மனம் பணம் சம்பாதிப்பதிலும், தங்கள் வசதிகளை உயர்த்திக்கொள்வதிலும் ஈடுபடுகிறதே தவிர, மனித உறவுகளைத் தேடுவதில் இல்லை.

 ஆகவே இன்று நாம் ஒரு ஊருக்கு ஏதாவது வேலையாகச் செல்லுகிறோம் என்றால் அந்த ஊரில் நம் உறவினரோ, நண்பரோ இருந்தால் அவர் வீட்டில் தங்கலாம் என்று எண்ணக்கூடாது.  அவர்களுக்கு ஆயிரத்தெட்டு கஷ்டங்கள். போகிறவர்களுக்கும் பல எதிர்பார்ப்புகள். இதனால் நடைமுறையில் பல சிக்கல்கள் தோன்றுகின்றன.

எனக்குத் தெரிந்த இரண்டு பேர் தங்கள் மகளைப் பார்க்கச்சென்றாலும் கூட, அங்குள்ள ஓட்டலில் தங்கித்தான் மகளைப் பார்க்கப் போவார்கள். நான் கூட இதைத் தவறாகப் புரிந்ததுண்டு. ஆனால் வயதான பிறகு, இன்று சிந்தித்தால் அதுதான் சௌகரியம் என்று தோன்றுகிறது.

காலத்தின் மாறுதல்களுக்கு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.