ஐதீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐதீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 3 மே, 2014

ஒரு வில்லங்கமான சந்தேகம்.

பாரம்பரியமாக சொல்லப்படுகின்ற அல்லது நடைமுறையில் இருப்பவைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது பொதுவான பெரியோர்களின் கருத்து. ஏனெனில் அவைகளில் பல உட்பொருள்கள் மறைந்திருக்கலாம். அதை நாம் அறியாமல் இருக்கலாம். ஆகவே அவைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்கிறார்கள்.

ஆனாலும் இந்த மாதிரி விஷயங்களில் எனக்கு சில சந்தேகங்கள் அவ்வப்போது தோன்றுகின்றன. புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் தோன்றிய மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன். (நம்ம அரச மரத்தைத்தான் போதி மரம் என்று புத்தர்கள் சொல்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?)

இந்த மாதிரி சந்தேகங்கள் வருவது பாவ லிஸ்டில் சேருமா  என்று நான் அறியேன். சித்திரகுப்தனை ஒரு நாள் பார்த்து இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளவேண்டும்.

கீழே கொடுத்துள்ள படத்தைப் பாருங்கள். பார்வதி கல்யாணப்படம். பெருமாள் தாரை வார்த்துக் கொடுக்க பரமசிவன் தானம் வாங்கிக்கொள்கிறார்.


இந்த படம் எனக்கு சமீபத்தில் வந்திருந்த ஒரு கல்யாண அழைப்பிதழில் இருந்தது. செல்போன் கேமராவினால் எடுக்கப்பட்டது. படம் அவ்வளவு துல்லியமாக வரவில்லை. இருந்தாலும் இந்தப் படத்தை பலரும் பார்த்திருப்பீர்கள். உங்களுக்கு வந்த கல்யாணப் பத்திரிக்கைகளிலும் இருக்கலாம்.

இந்த தானம் கொடுப்பதைப்பற்றி ( தாரை வார்ப்பது என்றாலும் தானம் கொடுப்பது என்றாலும் ஒன்றுதான்) எனக்குத் தெரிந்த ஐதீகம் என்னவென்றால், தானம் கொடுப்பவர் கை உயர்ந்து இருக்கவேண்டும். அடுத்த படியில் அதாவது அதற்குக் கீழே தானம் கொடுக்கப்படும் பொருள் இருக்கவேண்டும். அதற்குக் கீழே தானம் வாங்குபவரின் கை இருக்கவேண்டும். சரிதானே.

இப்போது படத்திற்கு வாருங்கள். பெருமாளின் கை மேலே இருக்கிறது. அவர் கெண்டியிலிருந்து நீர் வார்க்கிறார். தானம் கொடுக்கும்போது இந்த மாதிரி நீர் வார்ப்பது அவசியம்.

மகாபாரதத்தில் குருக்ஷேத்திர யுத்தத்தில் இந்திரன் பிராமண வேடத்தில் கர்ணனை அணுகி அவனுடைய புண்ணியங்களை தானமாக கொடுக்கும்படி கேட்கிறான். அப்போது அங்கு தண்ணீர் இல்லாததால் தன் உடம்பிலிருந்து வழியும் ரத்தத்தையே வார்த்து தானம் கொடுத்ததாக கதை படித்திருப்பீர்கள்.

இப்படி பெருமாள் நீர் வார்க்கும்போது மேலே பார்வதியின் கையும் அதன் கீழே ஈஸ்வரனின் கையும் இருப்பதுதானே முறை. ஆனால் இந்த மாதிரி பல படங்களில் ஈஸ்வரன் கை மேலேயும் பார்வதியின் கை கீழேயும் இருப்பது மாதிரி காட்டப்படுகிறது. இது சரியல்ல என்பது என்னுடைய கருத்து. 

இந்தப் படங்களைப் பார்க்கும்போதெல்லாம் இந்த நுணுக்கத்தைப் பார்த்துப் பார்த்து எனக்கு இந்தப் படங்களின் மேல் இருக்கும் மரியாதை குறைந்து கொண்டே வருகிறது. என் கருத்து சரிதானா என்று வாசகர்கள் சொல்லுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.