கனவு காண்போம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கனவு காண்போம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 ஏப்ரல், 2016

20. கனவு கலைந்தது.


ஆஹா, இந்திய நாடு சீக்கிரமே வல்லரசாகப்போகிறது என்ற நினைப்பில் ஆனந்தமாக இருந்தேன். திடீரென்று ஒரு இடிச்சப்தம் கேட்டது. உடனே மழையும் பெய்ய ஆரம்பித்தது.

என்னடா இது, வேளை கெட்ட வேளையில் மழை பெய்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, என் மனைவியின் குரல் ஓங்கி ஒலித்தது. ரிடையர் ஆனாலும் ஆனீங்க, எப்பப் பாரு தூக்கம்தானா, எழுந்திரீங்க, வாசல்ல யார் யாரோ வந்து நிக்கறாங்க, என்னன்னு போய்ப்பாருங்க, என்றாள்.

அப்பத்தான் நான் இவ்வளவு நேரமும் கனவு உலகத்தில் இருந்திருக்கிறேன் என்று புரிந்தது. எழுந்து முகம் கழுவி விட்டு வாசலுக்கு வந்தேன். அங்கு கார்ப்பரேஷன் பிளம்பர் நின்று கொண்டிருந்தார். என்ன விஷயம் என்று கேட்டேன். நாளைக்கு உங்கள் ரோட்டில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்போகிறோம், உங்கள் பைப் கனெக்ஷன் உடைந்தாலும் உடையலாம் என்றார்.

சரி, அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றேன். கொஞ்சம் சம்திங் கொடுத்தால் அந்தப் பசங்களை உங்கள் பைப்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளச் சொல்கிறேன் என்றான். சரியென்று அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு திரும்பினால் இன்னொருவன்.

நீங்க யாருங்க என்றேன். நான் டெலிபோன் டிபார்ட்மென்டுங்க. நாளைக்கு ரோடைத் தோண்டும்போது உங்கள் டெலிபோன் வயர் அறுந்தாலும் அறுகலாம் என்றான். அய்யய்யோ, டெலிபோன் இல்லாவிட்டால் இன்டர்நெட் இருக்காதே. அத்துடன் நம் உயிரும் இருக்காதே என்று நினைத்து அதற்கு என்ன பண்ணலாம் என்றேன். வயர் அறுகாமல் நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் என்னை கொஞ்சம் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றான்.

சரி என்று அவன் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு திரும்பினால் இன்னொருத்தன். நீ யாரப்பா என்றேன். நான் எலெக்ரிசிட்டி டிபார்ட்மென்ட்டுங்க என்று தலையைச் சொறிந்தான். எனக்கு விஷயம் புரிஞ்சு போச்சு. அவனுக்கும் அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டு வந்து காபி குடித்தேன்.

நம் நாடு என்னவாகும் என்று யோசனையில் மூழ்கினேன். நம் மக்கள் என்ன கஷ்டம் வந்தாலும் விதியின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று வாழ்வார்கள் என்று புரிந்தது. கனவில் வரும் ஒரு மாற்றத்தைப் பற்றிய பதிவைப் படிப்பதற்கே பயப்படும் ஒரு இனம், நிஜ வாழ்வில் மாற்றங்களைப் பற்றி நினைக்கவே மாட்டார்கள் என்பது என் மர மண்டையில் பசுமரத்தாணி போல் பதிந்தது.

அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொல்லிவிட்டுப் போனார். கனவுதான் காண முடியும் போல் இருக்கிறது.

(எங்க வீட்டு ரோஜாப்பூ)

வெள்ளி, 6 ஜூலை, 2012

இந்திய ஜனாதிபதி - கனவுலகில் நான் - பாகம் 1

முக்கிய அறிவிப்பு: இந்தப் பதிவு தொடர் பதிவாக வெளிவரும். எத்தனை பாகங்கள் என்பது கற்பனை ஓட்டத்தில் முடிவு செய்யப்படும். இந்தப் பதிவில் நடக்கும் அனைத்துக் காரியங்களும் கற்பனையே. அவைகளை உண்மை என்று எண்ணி யாராவது ஏமாந்தால் அதற்கு பதிவின் ஆசிரியர் (அதாவது நான்) எந்த விதத்திலும் பொறுப்பு ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று அறியவும்.


நான் இந்திய நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டேன். பரீட்சார்த்தமாக எனக்கு எல்லையில்லா அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. என்னைக் கேள்வி கேட்பார் யாருமில்லை.

இந்த மாதிரி நடந்தால் என்ன செய்வது என்று நான் தூக்கம் வராத இரவுகளில் ஏற்கனவே யோசித்து வைத்திருந்ததனால் நான் பெரிதாக ஒன்றும் ஆச்சரியப்படவில்லை. சில நடைமுறை சந்தேகங்கள் மட்டும் இருந்தன. என்னுடைய முதன்மை செக்ரடரியைக் கூப்பிட்டு விசாரித்தேன்.

அவர் சொன்னதாவது. சார் நீங்கள் காகிதத்தில் என்ன எழுதிக் கையெழுத்துப் போடுகிறீர்களோ அந்த உத்திரவுகள் அடுத்த விநாடி நிறைவேற்றப்படும் என்றார். ஏனய்யா, இவ்வளவு பெரிய நாட்டின் ஜனாதிபதி அவரே எழுத வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கு அவர், சார் உங்களுக்காக 347 ஸ்டேனோக்கள் நியமிக்கப்பட்டு ரெடியாக இருக்கறார்கள் என்றார். 

அது சரி, உங்கள் மாதிரி எத்தனை செக்கரட்டரிகள் இருக்கிறார்கள் என்று கேட்டேன். அவர், என்னையும் சேர்த்து பல கிரேடுகளில் 2492 செக்ரட்டரிகள் இருக்கிறார்கள் என்று சொன்னார். அப்படியா, சரி என்று சொல்லி விட்டு, ஒரு நல்ல, இங்கிலீஷ் தெரிந்த ஸ்டெனோவைக் கூப்பிடுங்கள் என்று சொன்னேன்.

அவர் இன்டர்காமில் என்னமோ சொல்ல, உடனே ஒரு சினிமா நடிகை உள்ளே வந்தாள். இது யார் என்று கேட்க, சார், இதுதான் உங்கள் முதன்மை ஸ்டனோ என்றார். அப்படியா, முதலில் இந்தப் பெண்ணை, மேக்கப் எல்லாம் கலைத்துவிட்டு வரச்சொல்லுங்கள் என்றேன். கொஞ்ச நேரம் கழித்து ஒரு வயதான அம்மாள் உள்ளே வந்தார்கள். 

செக்ரட்டரியிடம் யாரய்யா இது என்று கேட்டேன். சார், முன்னால் பார்த்தீர்களே, ஸ்டெனோ, அவர்கள்தான் இது, மேக்கப்பைக் கலைத்துவிட்டு வந்திருக்கிறார்கள் என்றார். சரி, இப்போதைக்கு இருக்கட்டும், நாளையிலிருந்து எனக்கு, ஒரு நல்ல பையனாப்பார்த்து ஸ்டெனோவாப் போட்டுடுங்க என்றேன்.

என்னுடைய அதிகாரம் இந்த செக்ரட்டரி சொன்னமாதிரிதான் இருக்கிறதா என்பதைச் சோதிக்க ஒரு டெஸ்ட் செய்தேன். இந்த முதன்மை செக்ரட்டரி தவிர மீதமுள்ள 2491 செக்ரட்டரிகளையும் கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பவும் என்று ஆர்டரை டைப் செய்து எடுத்துக்கொண்டு வா என்று ஸ்டெனோவிடம் சொன்னேன். அந்த அம்மா வெளியில் போனார்கள்.

என்ன, செக்ரட்டரி, என்று திரும்பிப் பார்த்தால், செக்கரட்டரி மயக்கமாகக் கீழே விழுந்து கிடந்தார்.  

தொடரும்........