கற்றுக்கொடுத்தல். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கற்றுக்கொடுத்தல். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 நவம்பர், 2017

27 - தற்கொலை செய்வது எப்படி?

                                                         Image result for தற்கொலை செய்து கொள்வது எப்படி
தற்சமயம் செய்தித் தாள்களில் தற்கொலைச் செய்திகள் அதிகமாக வருகின்றன. சாதாரண, அன்றாடம் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளுக்காக தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

ஒரு ஆசிரியை மாணவிகளைத் திட்டினார் என்பதற்காக நான்கு மாணவிகள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்திருக்கிறார்கள். புருஷனுடன் சண்டை போட்டு விட்டு குழந்தைகளுடன் பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

பெற்றோர் செலவிற்கு காசு கொடுக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்பவர்கள் ஏராளம். தான் விரும்பிய படிப்பில் சேர்க்கவில்லை என்பதற்காக என் உறவினர் பையன் உயிரை மாய்த்துக்கொண்டான்.

ஏன் இவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சாதாரணப் பிரச்சினைகளுக்கு மனமொடிந்து போகிறார்கள் என்று புரியவில்லை. இவர்களின் வளர்ப்பு முறையில் ஏதாவது கோளாறு இருக்கிறதா? அல்லது இவர்கள் வாழும் சமுதாய சூழ்நிலை இவர்களைப் புறக்கணிக்கிறதா?

எனக்கு ஒன்று புலனாகிறது. அதாவது இன்றைய சூழ்நிலையில் இளைஞர்களுக்கும் வளர்ந்தவர்களுக்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளி உண்டாகியிருக்கிறது. இன்றைய குடும்பம் ஒரு தாய் தகப்பன் ஒரு பிள்ளை என்பதாக இருக்கிறது. வளரும் பிள்ளைகளுக்கு வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவ பெற்றோர்களுக்கு நேரமில்லை.

எந்நேரமும் டிவி, சினிமாக்களைப் பார்த்துக்கொண்டு குழந்தைகளின் வளர்ப்பில் அக்கறை காட்டுவதில்லை. பணக்காரர்களின் வீட்டில் மட்டுமல்ல, நடுத்தர மக்களின் வீட்டிலும் இப்படித்தான் நடக்கிறது. வாழ்க்கையைச் சந்திக்க வேண்டிய மன தைரியத்தை பிள்ளைகளிடம் ஏற்படுத்த வேண்டிய கடமையிலிருந்து பெற்றோர்கள் தவறி விடுகிறார்கள் என்று படுகிறது.

படிப்பு என்பது வாழ்க்கையைப் புரிந்து கொள்வது என்பது போய் மார்க் வாங்குவதற்கு மட்டும் என்று ஆகிவிட்ட பிறகு பிள்ளைகளுக்கு நல்ல மார்க் வாங்குவதுதான் வாழ்க்கை என்று ஆகி விட்டது.  அக்கம் பக்கத்தில் இருக்கும் மற்ற பிள்ளைகளுடன் விளையாடுவதோ பழகுவதோ அரிதாகி விட்டது. உலகம் என்றால் படிப்பும் மார்க்கும் என்று ஆகிவிட்ட நிலையில் அவர்களுக்கு வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிய மனத்துணிவு இல்லை.

பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்தப் பிரச்சினையை ஆழ்ந்து சிந்தித்து தீர்வு காணாவிட்டால் எதிர்கால சமுதாயம் மனத்துணிவற்ற ஒரு சமுதாயமாக மாறிவிடும்.

திங்கள், 28 நவம்பர், 2016

பதிவுலகைப் புதுப்பிப்போம் வாரீர் !



பதிவுலகம் க்ஷீணித்துக் கொண்டு வருகிறது என்பதை பதிவர்கள் எல்லோரும் அறிவார்கள். காரணம் என்னவென்று சிந்தித்ததில் ஒன்று புலனாகியது.

அதாவது பதிவுலகில் விறுவிறுப்பு இல்லாமல் போயிற்று. ஏதோ என்னைப்போல் ஓரிருவர் மட்டுமே விறுவிறுப்பான பதிவுகள் எழுதுகிறோம். மற்றவர்கள் அன்வரும் எங்க ஊட்ல மாடு கண்ணு போட்டது, நான் சாமி கும்பிட்டேன், தெரு முனைல ஒரு பாட்டி போண்டா சுடுகிறாள், இந்த மாதிரி பதிவுகளே எழுதுகிறார்கள்.

இந்த மாதிரிப் பதிவுகளை யார் படிப்பார்கள்?

செய்தித்தாள் துறையில் ஒரு பழைய ஜோக் உண்டு. அதாவது நாய் மனிதனைக் கடித்தால் அதில் என்ன செய்தி இருக்கிறது? மனிதன் நாயைக் கடித்தான் என்றால் அதுதான் செய்தி என்பார்கள்.

உதாரணத்திற்கு நமது தேசீய நெடுஞ்சாலைகளில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. தினத்தந்தியில் தினமும் "நேற்று இரண்டு லட்சத்தி முப்பத்தியைந்தாயிரம் வாகனங்கள் நம் தேசீய நெடுஞ்சாலையில் பயணித்தன, எல்லோரும் பத்திரமாக அவரவர்கள் போக வேண்டிய இடங்களுக்குப் போய்ச் சேர்ந்தார்கள்" என்று செய்தி வருகிறதென்று வைத்துக் கொள்ளுங்கள்.எவனாவது தினத்தந்தி பேப்பரை வாங்குவானா?

நேற்று ஒரு சொகுசு காரும் அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. காரில் பயணம் செய்த ஆறு பேரும் ஸ்தலத்திலேயே மரணம். இப்படி ஒரு செய்தியை பிரசுரம் செய்து அதை முக்கிய செய்தியாக வால்போஸ்டில் போட்டால் விற்பனை பிச்சுக்கிட்டுப் போகும்.

அந்த மாதிரி பதிவுலகிலும் பதிவுகள் விறுவிறுப்பாக வரவேண்டும். அப்போதுதான் அதிகப்பேர் பதிவுலகிற்கு வருவார்கள். புதிய பதிவர்கள் தோன்றுவார்கள். வலைச்சரம் மீண்டும் பிரசுரமாகும்.

இரண்டொரு உதாரணங்கள் கொடுத்தால்தான் நம் பதிவர்களுக்கு நன்றாக விளங்கும்.

ஒரு ஆன்மீகப் பதிவு.  நேற்று நான் அங்காளம்மன் கோவிலுக்குப் போயிருந்தேன். அங்கு அர்ச்சகரும் அங்காளம்மனும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்ததை நான் என் இரு கண்களாலும் பார்த்தேன்.
இப்படி எழுதலாம்.

இல்லாவிட்டால் இன்னொரு உதாரணம். காளிகாம்பாள் கோவிலுக்குப் போய் கண்ணை மூடி தியானித்துக்  கொண்டிருந்தபோது யாரோ என்னைத் தொட்ட மாதிரி இருந்தது. கண்ணைத் திறந்து பார்த்தால் சாட்சாத் அம்மனேதான் என் முன் நிற்கிறாள்.

பயணக் கட்டுரைகளில் நான் பத்ரினாத் போனேன். பத்ரிநாதரைப் பார்த்துக் கும்பிட்டேன். இந்த மாதிரி எழுதினால் அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கும். நான் பத்ரிநாத் போகும்போது நாங்கள் போய்க்கொண்டிருந்த பஸ் கங்கை ஆற்றில் விழுந்தது என்று எழுதினால் பலர் சுவாரஸ்யமாகப் படிக்க வருவார்கள்.

அடுத்த பதிவில் பஸ் போகும்போது நான் தூங்கி விட்டேன் அப்போது பஸ் ஆற்றில் விழுவது மாதிரி கனாக் கண்டேன் என்று சமாளித்து விட்டால் போகிறது.

ஆகவே பதிவர்களே, உங்கள் எழுத்து பாணியை மாற்றாவிட்டால் பதிவுலகம் நசித்துப் போய் காணாமல் போகும் என்று எச்சரிக்கிறேன்.


திங்கள், 13 ஆகஸ்ட், 2012

ஆசிரியராக வேலை பார்த்தபோது நான் செய்த கொடுமைகள்


தலைப்பு சரியாக அமையவில்லை. பரவாயில்லை. பதிவைப் படித்தபின் உங்களுக்குப் பிடித்த தலைப்பை வைத்துக் கொள்ளுங்கள். தலைப்பில் நான் சொல்ல விரும்பியது என்னவென்றால் நான் ஆசிரியனாக இருந்தபோது என் கொள்கைகள் என்னென்ன என்பதுதான். தலைப்பு புரிஞ்சு போச்சா, செய்திக்குப் போவோம்.

ஒரு பத்து வருடம் இளநிலை விவசாயப் படிப்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தேன். ஐந்து வருடம் செய்முறை விளக்க பரிசோதனைக் கூடத்திலும் ஐந்து வருடம் வகுப்புப் பாடம் நடத்துபவனாகவும் பணி புரிந்திருக்கிறேன். பிறகு பதவி உயர்வுகள் காரணமாக வேறு பதவிகளுக்கு மாற்றப்பட்டேன். இருந்தாலும் அவ்வப்போது முதுகலை மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தேன்.

இளங்கலை ஆசிரியனாக இருந்தபோது கொஞ்சம் கொடுமைக் காரனாகத்தான் இருந்தேன். மாணவன் கல்லூரிக்கு வருவது பாடம் கற்றுக் கொள்ள மட்டும் அல்ல. வாழ்க்கையின் ஒழுக்கங்களையும் அவன் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் மிகவும் நம்பிக்கை உள்ளவன் நான்.

நான் சொல்லிக்கொடுத்தது இயல்பியல் பாடங்கள் அதாவது கெமிஸ்ட்ரி. விவசாயப் பட்டப்படிப்பில் முதல் வருட மாணவர்களுக்கு நான் இயல்பியல் பரிசோதனை வகுப்புகள் நடத்திக்கொண்டிருந்தேன. பரிசோதனைச் சாலைக்கு வரும் மாணவர்கள் காக்கி அரைக்கால் டவுசரும், அரைக்கை சட்டையும் போட்டுக்கொண்டு வருவார்கள். ஏறக்குறைய அனைத்து செயல்முறை வகுப்புகளுக்கும் இந்த யூனிபார்ம்தான்.

இதில் மேல் சட்டையில் எல்லா பட்டன்களையும் போட்டிருக்கவேண்டும். இல்லாவிட்டால் வகுப்பில் அனுமதி இல்லை. (டிராயரில் ஜிப் போடாவிட்டால் பரவாயில்லையா என்று கேட்கக்கூடாது. ஆப்சன்ட் போட்டுவிடுவேன், ஜாக்கிரதை.) மாணவர்கள் வகுப்புக்குள் வரும்போது எல்லா பட்டனையும் போட்டுக் கொண்டுதான் வருவார்கள். இன்றும் கூட என் பழைய மாணவர்கள் என்னைப் பார்த்தால் அவர்கள் அறியாமலேயே கை சட்டைப் பட்டனுக்குப் போகும்.

வருகைப் பதிவேடு பெயர்கள் படித்து முடிப்பதற்குள் வந்தால்தான் வகுப்புக்குள் அனுமதிக்கப்படுவார்கள். நான் பெயர்கள் வாசித்து முடிந்தவுடன் பரிசோதனைச் சாலையின் கதவு மூடப்படும். அதன் பிறகு வருபவர்கள் திரும்பித்தான் செல்லவேண்டும்.

பரிசோதனைச் சாலையில் பரிசோதனைகள் செய்யும்போது நான் சொல்லி, செய்து காட்டியவாறுதான் செய்யவேண்டும். வேறு மாதிரி செய்தால் அந்த மாணவன் வெளியேற்றப்படுவான். காரணம், வேறு மாதிரி செய்யும்போது தவறுகள் ஏற்படும். அதையெல்லாம் அவன் புரிந்து கொள்ளும் வயதில்லை. ஆகவே சர்வாதிகாரம்தான்.

சரி, இதற்கெல்லாம் மாணவர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்களா, கொடி பிடிக்க மாட்டார்களா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. பிடித்தார்களே! அதைப் பற்றி அடுத்த பதிவில் சொல்லுகிறேன்.