கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

கல்லூரிகளும் உயர் கல்வியும்

                                         Image result for பட்டமளிப்பு விழா
உயர்கல்வி எனப்படுவது இளங்கலைப் பட்டப்படிப்பு முடிந்த பிறகு மேற்கொள்ளும் கல்வி ஆகும். முதுகலைப் பட்டப்படிப்பு, முனைவர் பட்டப்படிப்பு ஆகிய இரண்டும் இதில் அடங்கும். இளங்கலைப் பட்டப்படிப்புக்கு மேல் 6 மாதம், மூன்று மாதம் ஆகிய குறுகிய காலங்களில் சில படிப்புகள் நடத்தப்பட்டு, அதற்கான பட்டயம் கொடுக்கப்படும். இது ஆங்கிலத்தில் சர்டிபிகேட் கோர்ஸ்கள் என்று அறியப்படும்.

இந்த உயர்கல்விப் படிப்புகளில் முக்கியமானது ஏதாவது ஒரு ஆராய்ச்சியை திட்டமிட்டு நடத்தி அதற்கான கட்டுரையை சமர்ப்பிக்கவேண்டும். வெறும் புத்தகப்படிப்பு மட்டும் அந்தத் துறையின் முழு அறிவையும் கொடுக்காது, தானே ஒரு ஆராய்ச்சித் திட்டத்தை வகுத்து அதை நடத்தி அனுபவம் பெற்றால்தான் அந்தத் துறையில் பல நுணுக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன் வளரும் என்ற நோக்கில் ஏற்பட்ட ஒரு முறை.

குமுதம் என்ற வாரப் பத்திரிகையில் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நகைச்சுவைத் துணுக்கு போட்டிருந்தார்கள். எல்லாவற்றையும் பற்றி கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பவன் இளங்கலைப் பட்டதாரி. கொஞ்சம் விஷயங்களைப் பற்றி நிறையத் தெரிந்து வைத்திருப்பவன் முதுகலைப் பட்டதாரி. ஒன்றுமில்லாததைப்பற்றி எல்லாம் தெரிந்து வத்திருப்பவன் முனைவர் பட்டதாரி. இவ்வாறு ஒரு நகைச்சுவைத் துணுக்கு போட்டிருந்தார்கள்.

இந்த நகைச்சுவை ஒரு புறமிருக்க, முனைவர் பட்டம் வாங்க என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். அங்கீகரிக்கப்பட்ட ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் மாணவனாகச் சேரவேண்டும். இப்படி சேர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை வரையரைக்குட்பட்டது. அங்கு அனுபவப்பட்ட முனைவர் பட்டத்திற்கான வழிகாட்டுதலுக்கு எவ்வளவு ஆசிரியர்கள் இருக்கிறார்களோ, அதற்குத் தகுந்த மாதிரிதான் மாணவர்களைச் சேர்க்க முடியும்.

மாணவர்களைச் சேர்த்த பிறகு அந்த மாணவர் ஒரு ஆசிரியரின் கீழ் தன் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியைத் துவங்குவார். முனைவர் பட்டத்திற்கு ஒரு நல்ல ஆரய்ச்சிப் பொருள் தேவைப்படும். இதை அந்த மாணவர் ஆசிரியர் வழிகாட்டுதலின்படி தேர்ந்தெடுப்பார். பிறகு அந்தப்பொருள் பற்றி என்னென்ன ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று ஒரு திட்டம் வகுப்பார்கள். அந்த திட்டத்தின்படி ஆராய்ச்சிகள் செய்து அதனுடைய முடிவுகளை பல விதத்தில் ஆராய்ந்து ஒரு ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும். இதை "தீசிஸ்" என்பார்கள்.

இந்த ஆய்வு அறிக்கை இரண்டு அல்லது மூன்று வல்லுநர்களுக்கு அனுப்பி அவர்களின் கருத்துகளை வாங்குவார்கள். இந்த அறிக்கை முனைவர் பட்டம் வழங்குவதற்கு ஏற்றதுதானா என்று அந்த வல்லுநர்கள் சொல்லவேண்டும். பிறகு அந்த மாணவனை ஒரு வல்லுநர் முன்பு நேர்முகத்தேர்வுக்கு உட்படுத்தப்படுவான். அதிலும் அவன் தகுதியானவனாக மதிப்பிடப்பட்டால் அவனுக்கு முனைவர் பட்டம் வழங்கப்படும்.

இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் உண்மையானதாக இருக்கவேண்டும். தன் கற்பனையில் உதிக்கும் முடிவுகளை ஒருவன் முனைவர் பட்டத்திற்கு சமர்ப்பிக்க முடியாது. இப்படித்தான் நான் முனைவர் பட்டம் வாங்கினேன். என் முனைவர் பட்டத்திற்கான "தீசிஸ்" அமெரிக்காவிலுள்ள மூன்று நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டு அங்கீகாரம் பெற்றது. நான் வழிகாட்டிய சில மாணவர்களும் இவ்வாறுதான் முனைவர் பட்டம் வாங்கினார்கள்.

ஆகவே ஒருவர் முனைவர் பட்டம் வாங்கியிருக்கிறார் என்றால் கல்வி வட்டாரத்தில் அவருக்கு ஒரு நல்ல மதிப்பு உண்டு.

ஆனால் இன்று நடக்கும் நடைமுறைகளைப் பார்த்தால் கண்ணில் நீர் வரும். ஒவ்வொரு ஊரிலும் கல்லூரிகளுக்குப் பக்கத்தில் இங்கு "தீசிஸ்" தயார் செய்து கொடுக்கப்படும் என்று பல போர்டுகளைப் பார்க்கலாம். அந்தந்த கல்லூரிகளுக்குப் பொருத்தமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை இங்கு தயார் செய்து கொடுக்கிறார்கள். மாணவர்கள் சொந்தமாக ஆராய்ச்சி செய்யவேண்டியதில்லை.

மாணவர்கள் பணம் மட்டும் கொடுத்தால் போதும். இந்த கடைக்காரர்களே ஒரு பொருத்தமான பொருளில் ஆராய்ச்சிக் கட்டுரையை முழுமையான வடிவில் கொடுத்து விடுவார்கள். அந்த மாணவர்களின் வழிகாட்டி ஆசிரியர்களும் இதைக் கண்டு கொள்ளமாட்டார்கள். இந்த முறை மாணவர்களுக்கும் வசதி, ஆசிரியர்களுக்கும் வசதி. புதிதாக ஆரம்பிக்கும் பல கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் ஒன்றும் இருக்காது. அங்கு எப்படி ஆராய்ச்சி செய்து ஆராய்ச்சிக்கட்டுரை சமர்ப்பிக்க முடியும்?

புதுக்கல்லூரிகளில் ஆரம்பித்த இந்த நோய் பழைய கல்லூரிகளையும் பிடித்துவிட்டது. இதில் சில பல்கலைக் கழகங்களில் வருமானத்தைப் பெருக்குவதற்காக மாணவர்கள் எங்கு வேண்டுமானாலும் ஆராய்ச்சி செய்து கொள்ளலாம். யாரை வேண்டுமானாலும் வழிகாட்டியாக வைத்துக்கொள்ளலாம் என்று விதிகள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

யாராவது முனைவர் பட்டம் வைத்திருப்பவர்களிடம் ஒரு கையெழுத்து வாங்கினால் போதுமானது. சில வருடங்கள் முன்பு என் நண்பர் சிபாரிசின் பேரில் ஒரு மாணவர் இந்த மாதிரி கையெழுத்து வேண்டும் என்று வந்திருந்தார். என்ன ஆராய்ச்சி செய்திருக்கிறாய் என்று கேட்டால் ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. ஒரு சிடியைக் கொண்டு வந்திருந்தார். இதில் எல்லாம் இருக்கறது என்றார்.

அந்த சிடியை வாங்கி கம்ப்யூட்டரில் போட்டுப் பார்த்தேன். அது வேறு மாகாணத்திலுள்ள ஏதோ  ஒரு கல்லூரியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சிக்கட்டுரை. இதை அப்படியே என் பெயர் போட்டு என் ட்யூட்டோரியல் இன்ஸ்டிட்யூட்டில் டைப் அடித்துக் கொடுத்து விடுவார்கள். அந்த சர்டிபிகேட்டில் நீங்கள் ஒரு கையெழுத்து மட்டும் போட்டால் போதும் என்றார். நான் தம்பி. அது எனக்கு சரிப்படாது, நீ வேறு யாரையாவது பார்த்துக்கொள் என்று அனுப்பி விட்டேன்.

வட இந்தியாவில் பல இடங்களில் பல்கலைக் கழக பட்டங்களை விற்கிறார்கள் என்று கேள்விப் படுகிறேன். அது உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. நம் நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது. 

புதன், 19 ஆகஸ்ட், 2015

நானும் மாணவர்களின் கட்டுப்பாடும்.

                                       Image result for அக்ரி காலேஜ் கோவை

மாணவர்களின் கடமை படிப்பது மட்டும்தான். என்னென்ன படிக்கவேண்டும்? பாடம் மட்டுமல்ல. கட்டுப்பாடு, ஒழுங்கு, நேரம் தவறாமை, மற்றவர்களிடம் அனுசரித்துப் போதல், ஆசிரியரிடம் மரியாதை இவை எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளவேண்டும். இதுவே என் தாரக மந்திரம்.

விவசாயக் கல்லூரியில் பெரும்பாலான மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிப்பார்கள். ஆகவே அவர்கள் ஏறக்குறைய 24 மணி நேர மாணவர்கள். இந்த வாழ்வு முறையில் அவர்கள் வாழ்க்கையின் நுணுக்கங்களை முழுவதுமாகக் கற்றுக் கொள்கிறார்கள். விவசாயக் கல்லூரியில் படித்த மாணவர்கள் விவசாயம் மட்டும் அல்லாது பல்வேறு துறைகளிலும் (IAS, IPS, IRS, Banking, Social Work)ஈடுபட்டு பிரகாசிக்கிறார்கள்.

இதற்கெல்லாம் முதல் காரணம் ஆசிரியர்களின் ஈடுபாடே. ஏதோ வந்தோம், வகுப்பு எடுத்தோம், சென்றோம் என்று இல்லாமல் மாணவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் ஆசிரியர்கள் பொறுப்பெடுத்துக்கொண்டார்கள். இதில் நான் கடைப்பிடித்த சில கொள்கைகள் இன்றைய நாளில் செல்லுபடியாகாது. ஆனால் அன்று இருந்த சூழ்நிலையில் என் கொள்கைகள் வெற்றிகரமாக நடந்தன.

அப்போது விவசாயக் கல்லூரி பல்கலைக் கழகமாக உருவாகவில்லை. சென்னை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. ஆண்டு தேர்வுகளெல்லாம் பல்கலைக்கழகமே நடத்தும். கல்லூரியில் இருக்கும் விரிவுரையாளர்கள் உள் தேர்வு அதிகாரிகளாகவும், வெளி மாநிலத்து வேளாண்கல்லூரிகளிலிருந்து விரிவுரையாளர்களை வெளித் தேர்வு அதிகாரிகளாகவும் நியமிப்பார்கள். செயல் முறைத்தேர்வை இருவரும் சேர்ந்து நடத்துவார்கள்.  எழுத்துத்தேர்வின் விடைத்தாள்கள் வெளித்தேர்வு அதிகாரிகளால் திருத்தப்படும்.

இந்த மதிப்பெண்கள் எல்லாம் சென்னை பல்கலைக் கழகத்திற்கு அனுப்பப்படும். அங்கு இந்த வெளித் தேர்வு அதிகாரிகள் மட்டும் ஒரு நாள் சந்தித்து இந்த முடிவுகளை ஆராய்ந்து முடிவு செய்வார்கள், தேவைப்படுபவர்களுக்கு ஓரிரு மதிப்பெண்கள் தேவையானால் இங்கே அதைச் சேர்ப்பதுண்டு. குறிப்பாக மொத்தம் உள்ள ஆறு பாடங்களில் ஐந்து பாடங்களில் ஒரு மாணவன் தேர்வு பெற்றிருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பாடத்தில் மட்டும் ஒரு மதிப்பெண் குறைகிறது. அதைச்சேர்த்தால் அவன் முழுத்தேர்வு பெற்ற விடுவான். அந்த சூழ்நிலையில் அந்த ஒரு மதிப்பெண்ணைச் சேர்க்க அந்தக் குழுவிற்கு அதிகாரம் உண்டு.

ஒரு கட்டத்தில் ஒரு வெளி தேர்வு அதிகாரி கடைசி கட்டத்தில் தன்னால் வரமுடியவில்லை என்று பல்கலைக்கழகத்திற்கு கடிதம் எழுதி விட்டார். போதிய கால அவகாசம் இல்லாததினால் பல்கலைக் கழகம் உள்தேர்வு அதிகாரியாக இருந்த என்னை வெளித்தேர்வு அதிகாரியாக நியமனம் செய்தது. அதில் இங்குள்ள பலருக்கு, (மேல் அதிகாரிகள் உட்பட) என் மேல் பொறாமை. ஏனெனில் கல்லூரியிலேயே பாடம் நடத்தும் ஒருவரை வெளித்தேர்வு அதிகாரியாக நியமனம் செய்வது அதுதான் முதல் தடவை. இது ஒரு பெரிய கௌரவம். மாணவர்கள் மத்தியில் என்க்கு ஒரு பெரும் மரியாதை கலந்த மதிப்பு கூடியது.

பல்கலைக் கழகம் நடத்தும் தேர்வுகளில் விவசாயக் கல்லூரியின் அதிகாரிகளின் தலையீடு எதுவும் இருக்காது. அதனால் தேர்வு அதிகாரிகள் சதந்திரமாக செயல்புரிய முடிந்தது. ஆனால் யாரும் மனச்சாட்சிக்கு விரோதமாக மதிப்பெண் போடுவதோ, குறைப்பதோ செய்யமாட்டார்கள். அதிகமாகப்போனால் ஒருவனுக்கு சலுகை காட்டமாட்டார்கள். அவ்வளவுதான்.

இந்த சூழ்நிலையில் வருட ஆரம்பத்தில் நான் என் வகுப்புகளை ஆரம்பிக்கு முன் மாணவர்களுக்கு சில குறிப்புகள் கொடுப்பேன்.

1. என் வகுப்புகளுக்கு மாணவர்கள் கட்டாயம் வரவேண்டும். 50 சதத்திற்கு குறைவாக வரும் மாணவர்கள் தேர்வு பெறமாட்டார்கள்.

2. 95 சதம் வருகை புரிந்த மாணவர்கள் தேர்வுக்கு வந்தால் போதும், அவர்கள் பேப்பரில் என்ன எழுதிக் கொடுத்திருந்தாலும் தேர்வு பெறுவார்கள்.

3. என் வகுப்புகளிலோ அல்லது மாணவர் விடுதியிலோ அல்லது கல்லூரி வளாகத்தினுள் எங்கேயாவதோ ஏதாவது கலாட்டா அல்லது சண்டையில் கலந்து கொண்டிருந்தால் அவர்கள் தேர்வில் கட்டாயம் வெற்றி பெற மாட்டார்கள்.

4. இந்த விதிகளுக்கு உற்பட்டு நல்ல மதிப்பெண்கள் வேண்டுபவர்கள் அவர்களாக முயற்சி செய்து வாங்கிக் கொள்ளவேண்டியது.

இந்த விதிகளைச் சொல்லிவிட்டுத்தான் பாடங்களை ஆரம்பிப்பேன். வருடத்திற்கு ஒன்றிரண்டு மாணவர்கள் அவர்களாகவே தேர்வில் வெற்றி பெறாவிட்டலும் நான்தான் அவர்களை வேண்டுமென்றே தோல்வி பெறச்செய்தேன் என்று வதந்தி பரப்புவதுண்டு. அதனால் என் பேரில் எல்லா மாணவர்களுக்கும் ஒரு பயம் உண்டு. நான் அவைகளைக் கண்டுகொள்ளமாட்டேன்.

இவ்வாறாக மாணவர்களை பல வகையில் வளர்வதற்கு ஆசிரியர்கள் பங்களித்தார்கள். நானும் என் பங்களிப்பை அர்ப்பணித்தேன்.

புதன், 2 மே, 2012

பெற்றோர்களே ஜாக்கிரதை


10 ம் வகுப்பு 12 ம் வகுப்பு பரீட்சைகள் முடிந்து, மாணவர்கள் லீவை அனுபவித்துக் கொண்டிருக்கும் காலம் இது. ஆனால் பெற்றோர்களின் வயிற்றில் ஒரு இனம் தெரியாத வேதனை அல்லது கவலை இருந்து கொண்டிருக்கும்.

காரணம், தங்கள் வாரிசுகளை இனி என்ன படிப்பில் சேர்க்கலாம் என்பதுதான். இன்றுள்ள கல்வி வாய்ப்புகள் இன்றைய பெற்றோர்கள் படிக்கும்போது இல்லை. அதனால் அவர்களுக்கு அதிக குழப்பம் ஏற்படவில்லை. ஆனால் இன்றுள்ள படிப்புகளை முழுமையாக யாரும் அறிந்திருப்பது கடினம். இன்றைய இளைஞர்கள் எதை விரும்புகிறார்கள்? அதனால் அவர்கள் வாழ்க்கை நன்றாக அமையுமா? என்கிற கேள்விகள் ஒவ்வொரு தகப்பனையும் ஆட்டிக்கொண்டு இருக்கும்.

பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதியிருப்பவர்களுக்கு கவலை கொஞ்சம் குறைவு. மார்க்கைப் பொருத்து ஏதாவதொரு கோர்சில் சேர்த்து விட்டால் இரண்டு வருடத்திற்கு கவலை இல்லை என்று பொதுவாக எல்லோரும் நினைப்பார்கள்.ஆனால் பொறுப்புள்ள பெற்றோர்கள் அப்படி இருக்கக் கூடாது. பையனோ, பெண்ணோ, அவர்களின் எதிர்காலத்தைப் பற்றிய முழுத் திட்டமும் இப்போதே தயார் பண்ணிக்கொள்ளவேண்டும்.

வாரிசுகளின் ஆசாபாசங்கள், குடும்ப பொருளாதாரம், வாரிசுகளின் திறமை இவைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்தத் திட்டம் தயாரிக்கப்படவேண்டும். திட்டம் நடைமுறைக்குச் சாத்தியமானதாக இருக்கவேண்டும். எதிர்பார்த்த மார்க்குகள் கிடைக்காவிடில் மாற்றுத்திட்டம் என்ன என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

இதில் சம்பந்தப்பட்ட வாரிசுகளின் முழு ஈடுபாடு அவசியம். அவர்கள் தங்கள் பெற்றோர்களின் நிலையைப் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்த மாதிரி தங்கள் எதிர்காலப் படிப்பைப் பற்றிய கனவுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

பெற்றோர்கள் கவனக் குறைவாக இருந்தால் பல அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு. என் உறவினர் பையன் தான் விரும்பும் படிப்பில் பணம் கொடுத்துச் சேர்த்தவில்லை என்பதால் தன் உயிரை மாய்த்துக் கொண்டான். அப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகாத மாதிரி பெற்றோர்கள் மிக கவனமாக இருக்கவேண்டும்.

புதன், 29 பிப்ரவரி, 2012

செயல் திட்டம் (புராஜெக்ட் வொர்க்) என்றால் என்ன?


நேற்று நடைப் பயிற்சிக்காக போகும்போது தெரு முனையில் ஒரு பது விளம்பரத்தைப் பார்த்தேன். Final Year Projects இங்கே கிடைக்கும் என்று எழுதியிருந்தது. என்னவென்று விசாரித்தேன். அந்த விசாரணையில் தெரிய வந்ததை உங்கள் பார்வைக்காக வைக்கிறேன்.

இப்போதுள்ள பாடத்திட்டங்களின்படி ஏறக்குறைய எல்லா தொழில் நுட்பப் படிப்புகளுக்கும் அந்தப் படிப்பின் கடைசி வருடத்தில் ஒரு புராஜெக்ட் வேலை கொடுத்து அதை முடித்து வருமாறு சொல்வார்கள். முன்பெல்லாம் இது முதுகலைப் பட்டப் படிப்புகளுக்குத்தான் இருந்தது. அதை தீஸிஸ் சமர்ப்பித்தல் என்று சொல்லுவார்கள்.

அந்த தீஸிஸ் வேலை என்றால் என்னவென்றால், ஒவ்வொரு மாணவனும் ஒரு ஆராய்ச்சி செய்து அதன் முடிவுகளை ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையாக சமர்ப்பிக்க வேண்டும். இதை ஒரு ஆய்வாளர் பரிசீலித்து, படிக்கும் படிப்புக்கு ஏற்றதாக இருக்கிறது என்றால்தான் அந்த மாணவனுக்கு அந்தப் பட்டம் கிடைக்கும். இந்த தீஸிஸ் வேலையில் அந்த மாணவனை வழி நடத்த ஒரு அனுபவம் உள்ள ஆசிரியரை வழிகாட்டியாக நியமிப்பார்கள். அவர் அந்த மாணவர் எழுதும் தீஸிஸ் அவராகவே புள்ளிவிபரங்கள் சேகரித்து அவராலேயே எழுதப்பட்டது என்று சான்று கொடுக்கவேண்டும். அப்போதுதான் அந்த தீஸிஸ் முழுமையானதாகக் கருதப்படும்.

இந்த வேலை எதற்காக என்றால், ஒரு முதுகலைப் பட்டப்படிப்பு படித்த மாணவனிடம் ஒரு வேலை கொடுத்தால், அந்த வேலையை எவ்வாறு திட்டமிட்டு, அதற்கு வேண்டிய உபகரணங்களைச் சேகரித்து அந்த வேலையை முடித்து அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்கும் திறமையை வளர்ப்பதற்காகத்தான். அப்போதுதான் அவன் எந்த வேலையில் சேர்ந்தாலும் தன்னம்பிக்கையுடன் அந்த வேலையைச் செய்வான்.
நமது கல்வித் திட்டங்களில் மாற்றங்கள் அவ்வப்போது கொண்டு வருவார்கள். அது எதற்காக என்றால் அப்போதுதான் நமது மாணவர்களின் கல்வித்திறன் அதிகரிக்குமாம். இந்த மாற்றங்களில் எல்லா வித தொழில் படிப்புகளுக்கும் இந்த செயல் திட்டத்தை கட்டாயமாக்கினார்கள். நல்ல, உயரிய நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட மாற்றம்தான் இது.

ஆனால் கால ஓட்டத்திலே இந்த முறை சீரழிந்து, வெறும் சடங்காக மாறிவிட்டது. இது மிகவும் பரிதாபத்திற்குரிய விஷயமாக தற்போது இருக்கிறது. ஒவ்வொரு கல்லூரிக்குப் பக்கத்திலும் இருக்கும் கம்ப்யூட்டர் சென்டர்கள் இந்த செயல்திட்ட அறிக்கையை ரெடிமேடாக தயார் செய்து ஒரு விலை போட்டு கொடுக்கிறார்கள். மாணவர்களும் அதை வாங்கி அப்படியே கல்லூரியில் கொடுத்து விடுகிறார்கள். அவர்களை மேற்பார்வை பார்க்கும் ஆசிரியர்களும் சான்று கொடுத்து விடுகிறார்கள்.  

ஆக மொத்தம் செயல் திட்டத்தின் நோக்கம் நிறைவேறுவதில்லை. காலத்தின் மாற்றத்தினால் ஏற்படும் சீரழிவு இது. எங்களைப் போல் வாழ்வின் இறுதியில் இருக்கும் ஆசிரியர்கள் புலம்பத்தான் முடியும்!