குழப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 மே, 2016

தமிழன் என்பது ஒரு நாடக வேடமே !

                           Image result for தமிழன் வரலாறு

பொது உறவு அதிகாரியாக இருக்க பிரபல பதிவர் ஒத்துக்கொண்டபடியால் அவரை உடனே அப்பதவிக்கு நியமனம் செய்து அவரும் உடனடியாக வேலையில் சேர்ந்து விட்டார். அவருக்கு நான் கொடுத்த முதல் வேலை என்னவென்றால் நம் சங்கத்தின் செயல்பாடுகளை நல்ல முறையில் மக்களிடம் போய்ச்சேறுமாறு நீங்கள் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதே. அவரும் சரியென்று சொல்லிவிட்டு தன் வேலையைக் கவனிக்கப்போய்விட்டார்.

ஒரு மாதம் சென்ற பிறகு அம்மா பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரும் அவருடன் இரண்டு உதவிப் பேராசிரியர்களும் கூடவே பத்து ஆராய்ச்சி மாணவ, மாணவிகளும் வந்தார்கள். தேனீர் அருந்தியவுடன் விவாதத்தை ஆரம்பித்தோம்.

த.து.தலைவர்தான் ஆரம்பித்தார். கி.த.ச. தலைவரே, நீங்கள் கேட்ட விவரத்தைப் பற்றி சிந்தித்தேன். சிந்திக்க சிந்திக்க குழப்பம்தான் மிஞ்சுகிறதே தவிர ஒரு தெளிவு கிடைக்க மாட்டேனென்கிறது.

நான் -  இதிலென்ன குழப்பம். தமிழ் இனம் எவ்வளவு தொன்மையானது? இந்த இனத்தைச் சேர்ந்தவர்களை அடையாளம் காண்பது அவ்வளவு கடினமா?

ததுத (அதாவது தமிழ்த்துறைத் தலைவர்) - மண்ணின் மைந்தர்கள் என்று பார்த்தால் வீட்டிலும் வெளியிலும் தமிழ் பேசுபவர்கள்தான் மண்ணின் மைந்தர்கள் ஆவார்கள். அவர்களைத்தான் தமிழர் என்று ஏற்றுக்கொள்ள முடியும்.  தமிழ் நாட்டில் வசிக்கும் பலர் வெளியில் தமிழிலும் வீட்டிற்குள் தெலுங்கு, கன்னடம், மலயாளம், ஹிந்தி, மராட்டி, பஞ்சாபி என்று இப்படி பல மொழிகளில் பேசிக்கொள்கிறார்கள். அவர்களை எப்படி தமிழன் என்று ஏற்றுக்கொள்ள முடியும்?

நான் - இது ஒரு சரியான குழப்பமான நிலைதான். அப்படி வீட்டிற்குள்ளும் வெளியிலும் தமிழ் மட்டுமே பேசக்கூடிய தமிழர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?

ததுத - இந்தக் கணக்கை அரசு புள்ளி விவர ஏடுகளிலிருந்து சேகரித்தேன். அந்த விவரத்தைச் சொல்ல வெட்கமாக இருக்கிறது.

நான் - பலவாயில்லை, சொல்லுங்கள்

ததுத - அப்படிப்பட்டவர்கள் மொத்தம் 24 சதவிகிதம் மட்டுமே இருக்கிறார்கள்.

நான் - அப்போ தமிழ்நாட்டில் தமிழர்கள் ஒரு சிறுபான்மை சமூகம்தானா, இதென்ன அநியாயம் ?

ததுத - அது மட்டுமா? இந்த மாதிரி தமிழர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைந்து கொண்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படியே போனால் 2030 ல் தமிழ் நாட்டில் தமிழர்களே இருக்க மாட்டார்கள். எல்லோரும் அமெரிக்கா போயிருப்பார்கள். அங்கே அவர்கள் கிரீன் கார்டு வாங்கி அமெரிக்கர்களாக மாறியிருப்பார்கள்.

நான் - என்னய்யா இது அக்கிரமம்? தமிழ் நாட்டில் தமிழர்கள் இருக்க மாட்டார்களா? அப்புறம் இங்கு இருப்பவர்கள் என்ன மொழி பேசுவார்கள்?

{இதற்குள் திமுதிமுவென்று ஒரு பதினைந்து பேர் விவாத அரங்கினுள் நுழைந்தார்கள். நான் "பொது" (அதாவது பொது உறவு அதிகாரி) யைப் பார்த்தேன். அவர் சொன்னார். நீங்கள் சொன்ன மாதிரி நமது கருத்துகள் மக்களுக்கு போய்ச்சேர நான்தான் இந்த பத்திரிக்கை நிருபர்களை வரச்சொன்னேன் என்றார். சரி அவர்களுக்கு சிற்றுண்டி கொடுத்து அமரச்சொல்லுங்கள் என்று சொல்லி விட்டு விவாதத்தைத் தொடர்ந்தோம்.}

ததுத - இதற்கு ஒரு வழி இருக்கிறது. மண்ணின் மைந்தர்கள் அல்லாதவர்களை தமிழ் நாட்டை விட்டு வெளியேற்றுவதுதான் அந்த வழி.

நான் - இதை சட்ட பூரவமாகச் செய்ய முடியாதே. மத்திய அரசு ஒத்துக்கொள்ளாதே.

ததுத -  இதற்கு வேறு ஒரு வழி இருக்கிறது. தமிழர்களை விட்டு ஒரு போராட்டம் ஆரம்பிக்கலாம். தமிழ் நாடு தமிழர்களுக்கே என்று கோஷம் போடலாம். அப்போது இந்த வந்தேறிகள் பயந்து கொண்டு அவரவர்கள் ஊருக்குப் போய்விடுவார்கள்.

நான் - இது ஒரு நல்ல யோசனையாகத்தான் தெரிகிறது. "பொது" வைப் பார்த்து இதற்கு உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லி விட்டு கூட்டத்தை முடித்தேன்.

எல்லோரும் மதிய விருந்து உண்டுவிட்டு கிளம்பிப்போனார்கள்.

திங்கள், 8 ஜூன், 2015

மனம் மயங்குதல் அல்லது கலங்குதல்

                                      Image result for confusion images
சுமைதாங்கி எனும் சினிமாவில் கண்ணதாசன் எழுதி எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்து பிபிஸ்ரீனிவாஸ் பாடிய பாடல் நிறையப் பேருக்கு நினைவிருக்கலாம்.

மயக்கமா கலக்கமா  மனதிலே குழப்பமா   வாழ்க்கையில் நடுக்கமா


                         

கண்ணதாசன் மிகுந்த பொருட்செறிவோடு எழுதிய பாடல் இது.

மயக்கம் என்பது இல்லாததை இருப்பதாக அல்லது இருக்கும் ஒன்றை வேறொன்றாக காணும் மனநிலை. இந்த நிலையில் இருக்கும் ஒருவன் எந்த ஆக்கபூர்வமான செயலையும் செய்யும் சக்தி அற்றவனாகிறான். மாயை என்னும் சொல்லிலிருந்து வந்தது மயக்கம்.

கலக்கம் என்பது மனம் தெளிவான நிலையை இழந்து நிற்கும் நிலை. இந்த நிலையில் எது சரி, எது தவறு என்று பகுத்தறியும் ஆற்றலை ஒருவன் இழந்து விடுகிறான்.

இந்த இரண்டு நிலைகளும்,  ஒருவன் எதிர்பாராத அல்லது மிகப்பெரிய வாழ்க்கைப் பிரச்சினைகள் ஏற்படும்போது அடையும் நிலைகளாகும். இது சாதாரணமாக பெரும்பலானோருக்கு ஏற்படும் அனுபவமே. இதிலிருந்து வெளிவந்து அந்த பிரச்சினையின் தீர்வுக்காக செயல் புரிபவனே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான்.

இந்த மயங்குதல் மற்றும் கலங்குதல் நிலையைக் கடப்பது எப்படி என்பது வாழ்க்கையின் ஒரு பெரும் சவாலாகும். மன திடம் உள்ளவர்களுக்கு இது சுலபம். மற்றவர்களுக்கு இது கடினம். ஆனால் எல்லோருக்கும் பொதுவான சில தீர்வுகள் இருக்கின்றன. அவரவர்களுக்குப் பிடித்தமானவற்றைக் கடைப்பிடிக்கலாம்.

முழுவதுமாக ஆண்டவன் பேரில் இந்தச் சுமையை இறக்கி வைத்து விடுவது. இது கடவுள் பக்தி உள்ளவர்களால் மட்டுமே முடியக்கூடியது. ஆண்டவன் நேரில் வந்து இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பானா என்ற கேள்விக்குப் பதில் இதுதான். ஆண்டவன் நேரில் வராவிட்டாலும் பிரச்சினை தீர்வதற்கு உண்டான ஏதாவது ஒரு வழியைக் காண்பிப்பான்.

உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாராவது உதவிக்கு வந்து இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கலாம். அல்லது இரண்டொரு நாளில் உங்களுக்கே ஒரு வழி தோன்றலாம். எப்படியோ பிரச்சினை தீர்ந்து விடும். சிறிது நாட்கள் கழித்து நீங்களே நினைப்பீர்கள். "இந்தப் பிரச்சினைக்குப் போயா நாம் இவ்வளவு வருந்தினோம்" என்று.

அடுத்து உங்களுக்கு வேண்டிய பெரியவர்கள் யாராவதிடம் ஆலோசனை கேட்கலாம். இதை ஒரு தன்மானப் பிரச்சினையாகக் கருத வேண்டியதில்லை. அடுத்தவரிடம் யோசனை கேட்பதா என்று நினைக்கக் கூடாது. உடல் தலம் குன்றினால் டாக்டரிடம் போகிறோம். மனதில் கலக்கம் இருந்தால் அடுத்தவரிடம் யோசனை கேட்பதில் என்ன தவறு? அவர்கள் இந்தப் பிரச்சினையை பாரபட்சமில்லாமல் அணுகி ஒரு தீர்வு கண்டுபிடிக்கக் கூடும்.

இந்த நிலையில் ஒரு உண்மையை நீங்கள் உணர வேண்டும். இந்தப் பிரச்சினையில் உங்களால் ஏன் உடனடியாக ஒரு முடிவு எடுக்க முடியவில்லை என்றால் அந்தப் பிரச்சினை நீங்கள் சம்பந்தப்பட்டது. அதனால் நீங்கள் அதனுடன் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு இணைந்திருக்கிறீர்கள். அதனால் நீங்கள் பாரபட்சமில்லாமல் அந்தப் பிரச்சினையை அணுக முடியவில்லை.

இங்குதான் நான் முந்தைய பதிவில் குறிப்பிட்ட தாமரை இலைத் தண்ணீர் உதாரணம் பொருத்தமாக இருக்கும். அடுத்து நான் எழுதிய "தள்ளிப் போடுதல்" உத்தியும் இந்த மாதிரி பிரச்சினைகளைத் தீர்க்க உதவும். இரண்டு நாளைக்கு ஒன்றும் செய்யாமல் இருந்தால் மூன்றாம் நாள் உங்களுக்கே ஏதாவது ஒரு நல்ல யோசனை தோன்றும்.

ஒரு முனிவர் ஒரு ராஜாவிற்குச் சொன்ன புத்திமதியை இங்கு நினைவு கூர்கிறேன். "இதுவும் கடந்து போகும்". இதுதான் அவர் சொன்ன புத்திமதி. எந்தப் பிரச்சினை ஆனாலும் காலம் அதை மாற்றி விடும் என்பதே அதன் கருத்து.

நடைமுறைக்கு பெரிதும் உதவும் எளிமையான இன்னும் ஒரு வழியைச்  சொல்கிறேன் கேளுங்கள். "சாமியின் மன அலைகள்" என்றொரு வலைத்தளம் இருக்கிறது. அதைத் தவறாமல் படித்து வந்தால் வாழ்க்கையில் எந்தச் சிக்கல் வந்தாலும் சமாளிக்க அந்த தளத்தில் வழி சொல்லப்பட்டிருக்கும்.

எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை.