கொள்ளையர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொள்ளையர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 ஜூன், 2017

11. நாட்டு நடப்பு – 3

                                           Image result for மணப்பெண் அலங்காரம்
இன்றைய செய்தி-கோவையில் நான்கு இடங்களில் பெண்களிடமிருந்து நகை பறிப்பு. தங்கம் பவுன் 11 ஆயிரம் ரூபாயக்கு மேல் விற்கிறது. தங்கத்தை விற்பது எளிது. ஆகவே அதை திருட பல கயவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நம் தமிழ்நாட்டுப்பெண்களுக்கு கழுத்தில் ஒரு இரண்டு பவுனாவது இல்லாவிட்டால் அவர்களுக்கு மூச்சு விட முடியாது. மிடில் கிளாஸ் குடும்பம் என்றால் குறைந்தது ஒரு பத்து பவுனாவது கழுத்தில் வேண்டும். பத்து பவுன் என்றால் இன்றைய விலையில் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய்.

இதைப்பார்க்கும் வழிப்பறித்திருடனுக்கு அல்வா சாப்படுகிற மாதிரி. இரு சக்கர வாகனங்களில் இரண்டு பேர் வேகமாக மேலே இடிப்பது போல் பக்கத்தில் உரசிக்கொண்டு போவார்கள். பின்னால் உட்கார்ந்திருப்பவன் கண்மூடி கண் திறக்கும் நேரத்தில் கழுத்தில் இருக்கும் நகையை அறுத்துக்கொண்டு வேகமாக ஓடிவிடுவார்கள். என்ன நடந்தது என்று அந்த பெண்ணுக்குத் தெரிவதற்குள் அந்த திருடர்கள் கண்ணுக்குத்தெரியாத தூரத்திற்கு சென்று விடுவார்கள்.

நகையை பறிகொடுத்த பெண் சுதாரித்து சத்தம் போடுவதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டிருக்கும். போலீசுக்கு தகவல் போய் அவர்கள் வந்து விசாரிக்கும்போது இந்தப்பெண்ணிற்கு அழுகைதான் வருமே ஒழிய கோவையாக வார்த்தைகள் வராது.

பிறகு என்ன? வீட்டிற்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் பத்து-இருபது தடவை நடந்தபின் ‘நகை போனால் போகிறது, இந்த தொந்தரவிலிருந்து தப்பித்தால் போதும்’ என்று கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினால் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களின் துக்க விசாரிப்புகள் வேறு. 

சொந்தக்காரர்களின் விசாரிப்பு வேறு விதமாக இருக்கும். உனக்கு எப்போதும் ஜாக்கிரதை போறாது. வெளியில் நகை போட்டுக்கொண்டு போகையில் அக்கம் பக்கம் பார்த்து ஜாக்கிரதையாக போகக்கூடாதா? நகை போன துக்கம் ஒரு பக்கம், இந்த ஈவிரக்கமில்லாத விசாரிப்புகள் இன்னொரு பக்கம், எல்லாம் சேர்ந்து அந்தப்பெண் படும் பாடு இருக்கறதே அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

இதை விடக்கொடுமை என்னவென்றால் அந்தப்பெண்ணின் கணவன் இருக்கிறானே அவன் படுத்தும் பாடு ஆயுளுக்கும் தொடர் கதையாகத்தொடரும். அதுவும் அவன் வாங்கிக் கொடுத்த நகையாக இருந்ததோ போச்சு, அவன் பேச்சைக் கேட்டு காதில் இரத்தம் வந்து விடும்.

சரி உலகத்தில் இப்படி நடக்கிறதே, நாமாவது ஜாக்கிரதையாக ஏதாவது டூப்ளிகேட் நகை அல்லது வடநாட்டுப்பெண்கள் போடுவது போல் ஏதாவது ஒரு அரை பவுனில் ஒரு செயின் கண்ணுக்குத் தெரியாமல் போடலாம் என்று நினைப்பார்களா? மாட்டார்கள், அவள் அஜாக்கிரதையாக இருந்ததால்தான் அவள் நகையை திருடன் அறுத்துக்கொண்டு போனான். நானெல்லாம் அப்படி அஜாக்கிரதையாக போகமாட்டேன் என்று பீத்திக்கொள்வாள். அவளும் ஒரு நாள் தன் நகையை திருட்டுக்கொடுப்பாள்.

வெளிநாட்டிலே பெரும்பாலான பெண்கள் நகைகளையே அணிவதில்லை. அப்படியே ஏதாவது அணிந்தாலும் அது கண்ணுக்கே தெரியாத மாதிரி இருக்கும். அதுவும் அந்தப் பெண்களின் நிறத்தில் ஒன்றிப்போய்விடும். மேலும் அவர்கள் அணிவது 18 அல்லது 14 கேரட் தங்க நகைகள்தான். நம் தமிழ் பெண்களுக்கு மட்டும் இந்த நகை மோகம் எப்படி பிடித்த்து என்று தனியாக ஒரு ஆராய்ச்சி நடத்த வேண்டும்.

திங்கள், 18 பிப்ரவரி, 2013

என்னைக் கொள்ளையடியுங்கள் - அழைப்பு விடுக்கும் ஜனங்கள்


என்னைக் கொள்ளையடியுங்கள் என்று சொன்னால் கொள்ளையடிப்பவனுக்கு கசக்குமா என்ன? இதை அன்றாடம் நம் சூப்பர் மார்க்கெட்டுகளும் பலசரக்குக் கடைக்காரர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு டிவிக்காரர்களும் கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்கிறார்கள்.

நமது அன்றாட உணவுப் பழக்கங்களில் நமக்கு வேண்டிய அனைத்துச் சத்துக்களும் கிடைக்கின்றன. மக்கள் கொஞ்சம் கவனம் எடுத்துக் கொண்டால் வீட்டில் யாருக்கும் எந்த சத்துக் குறைவும் வராது. ஆனாலும் இன்றைய தாய்மார்கள் தங்கள் மேலேயே நம்பிக்கை இல்லாமல் டிவி விளம்பரங்கள் மேல்தான் நம்பிக்கை வைக்கிறார்கள்.

அவர்களுக்கு வீட்டு வேலை முடிந்த பிறகு பொழுது போக்க டிவி யை விட்டால் வேறு வழியில்லை. டிவிக் காரனுக்கும் விளம்பரங்களில்தான் வருமானம். அதற்காகத்தான் சீரியல்கள். சீரியல் பார்க்கும் பெண்களைக் குறிவைத்தே அனைத்து விளம்பரங்களும் காட்டப் படுகின்றன. விளம்பரங்களில் சொல்லப்படும் அனைத்து தகவல்களையும் அப்படியே வேதவாக்காக எடுத்துக் கொண்டு செயல்படும் குடும்பத்தலைவிகள் அநேகம்.

உதாரணத்திற்கு குழந்தைகளுக்கான உணவு வகைகளில் "பெடியாஷ்யூர்" என்று ஒரு பொருள் விளம்பரப்படுத்தப்படுகிறது. குழந்தைகள் இந்த உணவைச் சாப்பிடாவிட்டால் அவர்கள் வளர மாட்டார்கள், அவர்களின் மூளை வளராது, வாழ்க்கையில் அவர்கள் தோற்று விடுவார்கள் என்றெல்லாம் விளம்பரத்தில் சொல்லுவார்கள். இதைக் கேட்கும் தாய்மார்கள், தங்கள் குழந்தை எல்லாவற்றிலும் முதலாவதாக வரவேண்டும், அதற்கு இதைக் கொடுத்தால்தான் நடக்கும் என்று நம்புகிறார்கள்.

இதன் விலை யானை விலை. ஆனாலும் அதை வாங்கிக் கொடுக்கிறார்கள். இத்தகைய உணவுகளைச் சாப்பிடும் குழந்தைகள் அனைத்தும் வெகு புஷ்டியாக, அதாவது அதிக குண்டாக வளர்கின்றன. இத்தகைய குழந்தைகளுக்கு "கிளாக்சோ பேபி" என்றே அந்தக் காலத்தில் பெயர். இந்த உணவுகளில் தேவைக்கு அதிகமான மாவுச்சத்துக்கள் இருப்பதே இந்தக் குழந்தைகள் கொழு கொழுவென்று ஆவதற்குக் காரணம்.

டிவியில் ஒரு விளம்பரத்தை பத்து செகன்ட் காட்டுவதற்கு என்ன கட்டணம் தெரியுமா? 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது. அனைத்து மொழிகளிலும் அனைத்து முக்கிய சேனல்களிலும் தினம் பலமுறை இந்த விளம்பரங்கள் காட்டப்படுகின்றன. அப்படியானால் தினசரி என்ன செலவாகும், மாதத்திற்கு எவ்வளவு, வருடத்திற்கு எவ்வளவு என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நிறுவனமும் வருடத்திற்கு பல கோடி ரூபாய்கள் விளம்பரத்திற்காக செலவு செய்கிறார்கள்.

இதற்கு மேல் அந்தப் பொருளின் தயாரிப்புச் செலவு இருக்கிறது. அதை மார்க்கெட்டுக்கு அனுப்ப செலவு இருக்கிறது. இத்தனையையும் செய்த பிறகு அந்தக் கம்பெனிக்கு லாபமும் வரவேண்டும். அப்படியானால் உற்பத்தி செலவுக்கு மேல் எத்தனை அதிகம் விலை வைக்கவேண்டும்? யோசித்துப் பாருங்கள்.

என்னுடைய அனுமானம், இந்த மாதிரி பொருள்களில் விற்பனை விலையில் கால் பங்குதான் உற்பத்திச் செலவு இருக்கும் என்று நினைக்கிறேன். இப்படி கொள்ளையடிக்கும் பொருட்களை நாம் வாங்குகிறோம். இப்படிப்பட்ட உணவுகளை நாமே வீட்டில் தயாரித்துக் கொண்டால் ஆரோக்கியத்துடன் பணவிரயமும் தவிர்க்கப்படும்.

மக்களே, சிந்தியுங்கள்.