சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 நவம்பர், 2016

இன்று ஒரு பொன்னான தினம்


என் மொபைல் போனுக்கு அழைப்புகள் வருவது அபூர்வம். 23000 ரூபாய் கொடுத்து ஒரு ஸ்மார்ட் போன் வாங்கியிருக்கிறேன்? அழைப்புகள் வருவதில்லை என்றால் என் மனம் எப்படி வேதனைப் படும் என்று இந்த உலகத்தில் கவலைப் படுபவர்கள் யாரையும் காணோம்.

இதில் இன்னொரு சங்கடம் என்னவென்றால் நான் வெகு ஆபூர்வமாகத்தான் வெளியில் செல்கிறேன். ஏதாவது விசேஷங்களுக்குப் போவதோடு சரி. அதுவும் மிக நெருங்கிய உறவினர் நண்பர்கள் வீட்டு விசேஷங்களுக்கு மட்டும்தான் போவேன். நான் வைத்திருக்கும் ஒரு டப்பா காரில் நானே ஓட்டிக்கொண்டு போவதுதான் வழக்கம்.

என் ராசி என்னவென்றால் இப்படி எப்போதாவது அபூர்வமாக வெளியில்  கார் ஓட்டிக்கொண்டு போகும் சமயங்களில்தான் என் மொபைலுக்கு அழைப்புகள் வரும். (திரு ஆர்ஆர்ஆர் மன்னிக்கவேண்டும்). இதில் உள்ள சங்கடம் என்னவென்றால், நான் ஒரு சமயத்தில் ஒரு வேலை மட்டுமே செய்து பழகியவன். அந்த வேலையைச் செய்யும்போது அதிலேயே ஆழ்ந்து விடுவேன்.

உதாரணத்திற்கு கம்ப்யூட்டரில் இன்டர்நெட் பார்த்துக் கொண்டிருக்கும்போது யார் என்ன கேட்டாலும் அது என் காதில் விழாது. அப்படி வேலையில் ஆழ்ந்து போகும் எனக்கு நான் கார் ஓட்டும்போது என் மொபைலில் அழைப்பு வந்தால் அந்த அழைப்பு மணிச்சத்தம் என் காதில் விழுவதில்லை. வயசானத்துக்கு அப்புறம் உங்களுக்கு காது மந்தமாகிக் கொண்டு வருகிறது, வேலையில் மூழ்கி விடுகிறேன் என்பது எல்லாம் சும்மா கதை என்று என் மனைவி சொல்கிறாள். அதை நம்புவதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

இப்படி இருக்க, நேற்று  காலையில் நான் ஒரு கல்யாணத்திற்குப் போய்விட்டு அப்படியே இன்னொரு விசேஷத்திற்குப் போகவேண்டி இருந்தது. கார் ஓட்டிக்கொண்டு போகும்போது மொபைலில் அழைப்பு மணி அடித்தது. வீட்டுக்காரிதான் மொபைல் மணி அடிக்கிறது என்று சொன்னாள். காரை ஒரு ஓரத்தில் நிறுத்தி விட்டு (ஒரு சமயத்தில் ஒரு வேலைதான் செய்வேன் என்று நான் முன்பு கூறியிருந்ததை நினைவு கொள்ளவும்) போனை எடுத்து ஆன் செய்தேன்.

அதிசயமாக பதிவுலக நண்பர் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி போன் செய்தார். குசலம் விசாரித்து விட்டு அவரிடம் கூசாமல் ஒரு பொய் சொன்னேன். நான் டிரைவிங்கில் இருக்கிறேன், அப்புறமாக உங்களைக் கூப்பிடுகிறேனே என்றேன். அவரும் சரி என்று போனை அணைத்து விட்டார்.

மதியம் விசேஷத்திற்குப் போய்விட்டு சாப்பிட்டு விட்டு (சாப்பிடுவதுதான் அந்த விசேஷம் - வளைகாப்பு என்றால் அதுதானே) வீட்டிற்கு வந்து தூங்கி எழுந்த பிறகு அவருக்கு போன் செய்தேன். அவர் கிடைத்தார். வழக்கமான உரையாடல்களுக்குப் பின் எவ்வளவு நாள் கோவையில் இருப்பீர்கள் என்றேன். இன்னும் இரண்டு நாள் இருப்பேன் என்றார். அப்படியானால் நீங்கள் தங்கியிருக்கும் இடத்தைச் சொல்லுங்கள், நாளைக்காலை உங்களை வந்து சந்திக்கிறேன் என்றேன். அவர் ரேஸ்கோர்ஸ் ஏரியாவில் ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்கியிருக்கிறேன் என்றார்.

சரி, அங்கே உங்களை நாளைக்காலை 8.30 மணிக்கு சந்திக்கிறேன், அங்கிருந்து பக்கத்தில் உள்ள ஒரு அன்னபூர்ணா ஹோட்டலுக்குப் போய் ஒன்றாக டிபன் சாப்பிடுவோம் என்று சொல்லி விட்டு பேச்சை முடித்தேன். எனக்கு ஒரு குணம் என்னவென்றால் ஏதாவது ஒரு காரியத்திற்கு ஒரு டைம் சொல்லி விட்டால் அந்த டைமை கண்டிப்பாக கடைப் பிடிக்கவேண்டும் என்ற குணம். போகும் வழியில் ஏதாவது இடைஞ்சல் ஏற்படலாம் என்பதால் அந்தக் குறிப்பிட்ட நேரத்திற்கு அரை மணி நேரம் முன்பாகவே அங்கு சேரும்படியாக வீட்டிலிருந்து புறப்பட்டு விடுவேன்.

காலை நேரம் என்பதால் சாலைகள் காலியாகவே இருந்தன. ஆதலால் அரை மணி நேரம் முன்பாகவே, அதாவது எட்டு மணிக்கே அங்கு போய்விட்டேன். என்னுடைய திட்டம் என்னவென்றால் அரை மணி நேரம் அங்கு உலாவி விட்டு சொன்ன நேரத்திற்கு அவரைப் பார்க்க ரூமுக்குப் போகலாம் என்று நினைத்தேன். காரை நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்தால் தம்பதி சமேதராக திருஆர்ஆர்ஆர் காலை வாக்கிங்க் போய்விட்டு திரும்புகிறார்கள். அவர்கள் பார்வையில் பட்டாயிற்று. இனி வேறு வழியில்லை.

அவர்களுடன் அவர்கள் ரூமிற்கு போய் வரவேற்பு ஏரியாவில் உட்கார்ந்து அளவளாவினோம். தம்பதிகள் ஒவ்வொருவராக குளித்து ரெடியானார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு அங்கே பக்கத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஹோட்டலுக்குப் போனோம். அங்கு டிபன் சாப்பிட்டு விட்டு நான் கை கழுவப்போனேன். நான் கை கழுவி விட்டு டேபிளுக்கு திரும்பும் சமயத்தில் சர்வர் பில் கொண்டு வந்து கொடுத்தார். அந்த சர்வரிடம் ஆர்ஆர்ஆர் சொல்லி வைத்திருப்பார் போல இருக்கிறது. பில்லை அவரிடத்தில் கொடுத்து விட்டார்.

நான் எவ்வளவோ மன்றாடிப்பார்த்தும் பில்லை அவர் என்னிடம் கொடுக்காம்ல் அவரே செட்டில் பண்ணி விட்டார். நீங்கள் பெரியவர் என்று ஒரு சப்பைக்கட்டு வேறு. இவரேதான் கெஸ்ட் ஹவுசில் பேசிக்கொண்டிருக்கும்போது உங்களைப் பார்த்தால் வயதானவராகத் தெரியவில்லையே என்று ஐஸ் வைத்தவர். மனிதர்கள் எப்படியெல்லாம் பேச்சு மாறுகிறார்கள் என்று பாருங்கள்.

பிறகு அவர்களை கெஸ்ட் ஹவுசில் திரும்பக் கொண்டு போய் விட்டு விட்டு வீட்டிறகுத் திரும்பினேன். அவர்களுக்கு வேலை இருந்ததால் வீட்டிற்கு அழைத்து வரமுடியவில்லை.  இப்படியாக இன்று ஒரு பொன்னாளாக அமைந்தது.

திங்கள், 29 பிப்ரவரி, 2016

என் தலைக்கனம் மறைந்தது.


விவசாயக் கல்லூரியில் 1953 முதல் 1956 வரை படித்து பாஸ் செய்து இன்று வரை உயிருடன் இருக்கும் வகுப்புத் தோழர்கள் ஒன்று கூடி நாங்கள் பாஸ் செய்து 60 வருடங்கள் ஆனதைக் கொண்டாட முடிவு செய்தோம் என்கிற விபரம் அன்பர்களுக்கு ஏற்கெனவே தெரியும்.

இப்படி விழா ஒன்று கொண்டாடலாம் என்று சென்னையிலிருக்கும் எனது வகுப்புத் தோழர் முனைவர் வசந்தராஜ் டேவிட் என்பவருக்குத்தான் முதலில் ஞானோதயம் தோன்றியது. அதற்குக் காரணம் பத்து வருடங்களுக்கு முன் இதேமாதிரி என் வகுப்புத் தோழர்களின் சந்திப்பை அவர்தான் திட்டமிட்டு நடத்தினார்.


இவர்தான் வசந்த்ராஜ் டேவிட்
பிரபல பூச்சி இயல் விஞ்ஞானி

நாங்கள் படித்த கல்லூரி வளாகத்திலேயே கொண்டாடலாம் என்று அவர் முடிவு செய்து, என்னைத் தொடர்பு கொண்டார். காரணம் கோயமுத்தூரில் இருக்கும் என் வகுப்புத் தோழர்களில் இணைய வசதி வைத்துக்கொண்டு அதை நோண்டிக் கொண்டிருப்பவன் நான் ஒருவன் மட்டும்தான். அவர் கேட்டவுடன் நான் "அதற்கென்ன, கொண்டாடினால் போச்சு" என்று சொல்லிவிட்டேன். இது நடந்து கிட்டத்தட்ட மூன்று மாதம் ஆகியிருக்கும். அப்படியானால் அதற்கான வேலைகளைத் தொடங்குங்கள் என்று சொல்லிவிட்டார்.

எனக்குள் வேறு ஒரு மனிதன் ஒளிந்து கொண்டு இருக்கிறான். அவன் தன்னால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்ற எண்ணம் கொண்டவன். நான் சும்மா இருந்தால் கூட அவன் முந்திரிக்கொட்டை போல இந்த மாதிரி விஷயங்களில் என்ன இழுத்து விட்டு விடுவான். அப்படித்தான் இந்த வேலை என் தலை மேல் ஏறிவிட்டது. அதிலிருந்து எனக்கு ஒரே தலைக்கனம்தான்.

எனக்கு தலைக்கனம் ஏறிவிட்டது. அதாவது தலையில் பொறுப்பு ஏறி விட்டது.
மூன்று மாதமாக அல்லும் பகலும் இதே நினைப்புத்தான். இந்தப் பொறுப்பு என்பதை ஒரு சிரங்கு மாதிரி. சொறியச் சொறிய அரிப்பு அதிகமாகுமே தவிர குறையாது. அப்படிப்பட்ட ஒரு வேதனையை அனுபவித்து வந்தேன். ஒரு பொறுப்பு எடுத்தால் அதை குறைவில்லாமல் நிறைவேற்ற வேண்டுமே என்ற எண்ணம்தான் இப்படி ஒருவனை அலைக்கழிக்கும்.

எப்படியோ விழாவிற்கு வேண்டிய அத்தனை ஏற்பாடுகளையும் செய்து 27-1-2016 அன்று விழாவைக் கொண்டாடிவிட்டோம். எங்கள் ஆசிரியர்களில் நான்கு பேர் தவிர மற்றவர்கள் இப்போது இல்லை. அதில் ஒருவர் 97 வயது ஆகிவிட்டாலும் உற்சாகம் குறையாமல் எங்கள் விழாவில் கலந்து கொண்டார். அவர்தான் முனைவர் டேனியல் சுந்தர்ராஜ் அவர்கள்.


நடுவில் பட்டு வேஷ்டியுடன் இருப்பவர்தான் டாக்டர் டேனியல் சுந்தர்ராஜ் அவர்கள்.


விழாவில் ஒரு குறையும் ஏற்படவில்லை. தலையிலிருந்த கனம்  அதாவது தலைக்கனம் மறைந்து விட்டது. விழாவிற்கு வந்திருந்த நண்பர்கள்


டாக்டர் தனபாலன், திரு பார்த்தசாரதி, திரு சிவராமன்



விழாவின் விருந்தினர்கள் அனைவருமாக எடுத்துக்கொண்ட போட்டோ.