சமுதாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமுதாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 மே, 2019

காதல் விபத்துகள்


காலையில் பேப்பரைத் திறந்தால் கொலைச்செய்திகள்தான் முதலில் கண்ணில் படுகின்றன. அவைகளில்  பெரும்பாலானவை காதல் சம்பந்தப்பட்டதாக இருப்பது வருத்தத்குரியது. அதிலும் குறிப்பாக எங்கள் மாவட்டம் அதில் முன்னிலை வகிப்பதைக் கண்டு தலை குனிகிறேன்.


தற்காலத்தில் காதல் கல்யாணங்கள் அதிகமாக நடப்பதாக நான் நினைக்கிறேன். அவைகளில் பெரும்பாலானவை தோல்வியைத் தழுவுகின்றன என்பது ஒரு பரிதாபம்.

ஏன் காதல் கல்யாணங்கள் தோல்வியில் முடிகின்றன என்று பார்த்தால், சில காரணங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன.

கல்யாணம் என்றால் என்ன, கல்யாணம் செய்துகொண்ட பிறகு அந்தக் கணவன் மனைவிக்கு உண்டான பொறுப்புகள் என்னென்ன, இவைகளைப் பற்றி இன்றைய காதலர்கள் சிந்திப்பதாகவே தெரியவில்லை.

ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒரு குடும்பம் அமைப்பது என்பது விளையாட்டுக் காரியம் அல்ல. ஆனால் 21 அல்லது 22 வயது வேலையில்லாத ஒருவன் 18 வயது கல்லூரியில் படிக்கும் பெண்ணைக் காதல் கல்யாணம் செய்தால், அவனுக்கு குடும்பப் பொறுப்புகள் என்ன என்று தெரியுமா?

அதிலும் பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் நடைபெறும் கல்யாணங்களில் அவர்கள் தங்கள் சுய காலிலேயே நிற்க வேண்டும் என்றால் என்னென்ன தேவைகள் இருக்கின்றன என்பது அவர்களுக்குத் தெரியுமா?

உலகம் போற போக்கை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

புதன், 27 ஜூலை, 2011

சமைஞ்ச கொமரிப்பொண்ணுங்களுக்கு சீர் செய்தல்

நண்பர்களுக்கு வணக்கம். பல நாட்களுக்கு முன் வேறொரு பதிவில் கொங்கு வேளாள சமூகத்தினரின் சமுதாயப் பழக்க வழக்கங்களைப் பற்றி எழுதினேன். சோம்பேறித்தனம் காரணமாக அந்த தளத்தை விட்டு விட்டேன். இருந்தாலும் அந்தப் பதிவுகளை மிகவும் பிரயாசைப்பட்டு எழுதியிருந்தேன். அவைகள் வீணாகப் போய்விடக்கூடாது என்ற எண்ணத்திலும், நாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்ற பரந்த நோக்கிலும் அந்தப் பதிவுகளை இந்தத் தளத்தில் மீள் பதிவு செய்கிறேன்.


தமிழ் நடை ஒரு மாதிரியாக இருக்கும். பெரிய மனசு பண்ணி எல்லோரும் பொறுத்துக் கொள்ளவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.





பொண்ணுங்க வயசுக்கு வந்தா எல்லா சமூகத்திலயும் சடங்கு பண்றது வழக்கம்தானுங்க. எங்க சனத்துல எப்படி பண்ணுவாங்கன்னு சொல்றனுங்க. நாஞ்சொல்றது அம்பது அறுபது வருசத்துக்கு முன்னாடி நடந்த வளிமொறைங்க. இதெல்லாம் இப்ப ரொம்ப மாறிப்போச்சுங்க.


பொண்ணு சமைஞ்சா, ஒடனே அவ மாமனூட்டுக்குத்தான் சொல்லி அனுப்போணுங்க. இல்லீன்னா பெரிய வம்பு வளக்காயிருமுங்க. சமாசாரம் தெரிஞ்ச ஒடனே அவ மாமன் சம்சாரம், கூட நாலஞ்சு பேரைச்சேத்துட்டு, ஒரு புதுச்சீல, ரவிக்கை, சக்கரை, பளம் எல்லாம் வாங்கிட்டு இந்த சமைஞ்ச ஊட்டுக்கு வருவாங்க. அப்பல்லாம் சொந்தபந்தங்க எல்லாம் பக்கத்து பக்கத்து ஊர்லதான் இருப்பாங்க. அதனால எல்லாம் சட்டுப்புட்டுனு நடக்குமுங்க.



இங்கெயும் அக்கம்பக்கத்து ஊட்டுக்காரங்க எல்லாம் கூடிடுவாங்க. எல்லாருஞ்சேந்து அந்த புள்ளய ஒரு முக்காலி போட்டு கிளக்குமானா உக்கார வைப்பாங்க. வெந்தண்ணி ஒரு பெரிய குண்டாவுல கொண்டுவந்து பக்கத்துல வச்சுக்குவாங்க. கூட வெளயாடற சிறுசுக எல்லாம் வேடிக்கை பாக்க கூடிருமுங்க.

இருக்கெறதுல பெரிய சொமங்கலிதான் இந்த சீரெச்செய்யுமுங்க. சருகுச்சட்டில தண்ணி எடுத்து அதுல கொஞ்சம் மஞ்சப்பொடிய கலந்து அந்த தண்ணிய கையிலெ கொஞ்சம் எடுத்து மூணு தடவ அந்தப்புள்ள தலயச்சுத்தி கீள ஊத்துவாங்க. அப்பறமா எல்லாரும் மஞ்சப்பொடிய தண்ணிலெ நனச்சு அந்தப்புள்ள மூஞ்சில, களுத்து, கய்யில எல்லாம் பூசுவாங்க. அவியவிளுக்கு தெரிஞ்ச தமாசெல்லாம் ஆளாளுக்குப் பேசி, ஒரே ரவுசா இருக்குமுங்க.

அப்பறம் குண்டாவுல வச்சிருக்கற தண்ணிய அந்த சருகுச்சட்டிலெயெ மோந்து ஊத்தி அந்தப்புள்ளக்கி தண்ணி வாத்து உடுவாங்க. அப்பறம் மாமஞ்சம்சாரம் வாங்கிட்டு வந்திருக்கற புதுத்துணிய உடுத்தி வூட்டு பந்தவாசல்லெ முக்காலியப்போட்டு கெளக்குமாமா உக்கார வைப்பாங்க. அந்தப்புள்ளக்கி ஒரே வெக்கமாப்போயி தலயக்குனிஞ்சுகிட்டு உக்காந்துட்டிருக்கும்.


அதுக்கு முன்னால ஒரு மாத்து விரிச்சு அதுல ஒரு புள்ளார புடிச்சு வச்சிருவாங்க. புள்ளாருன்னா எப்படீன்னா, மாட்டுச்சாணி ஒரு கை ரொம்ப எடுத்து ஒரு கொளக்கட்டயாட்டம் புடிச்சு அதெக்கீள வெச்சு அதந் தலெல ரண்டு அருகம்பில்ல சொருகினா அதான் புள்ளாரு. அப்போதக்கி அதுதான் சாமி. அதுக்கு நெகுதி வச்சு சந்தனமும் செகப்பும் வச்சுட்டா தீந்துது. புள்ளாரு ரெடி. ஒரு தட்டத்திலெ வெத்தல, பாக்கு, ரெண்டு வாளப்பளம், ஒரு தேங்கா எல்லாம் இருக்குமுங்க. இன்னோரு தட்டத்துல சக்கர பளம் எல்லாம் வச்சிருக்கும். அப்பறம் ஒரு தட்டத்தில திண்ணீரு, செகப்பு, கப்பூரம் எல்லாம் இருக்கும். அப்புறம் ஒரு சொம்புல நெறய தண்ணியோட இருக்கும்.

இந்த சீர்க்காரம்மா அந்தப்புள்ளக்கி எதிரா நின்னு சொம்ப ஒரட்டாங்கையில எடுத்துட்டு கொஞ்சம் தண்ணியெ சோத்தாங்கையில ஊத்தி புள்ளயச்சுத்தி கீள ஊத்துமுங்க. இப்பிடி மூணு தடவ பண்ணுமுங்க. அப்பறம் தட்டத்துல கொஞ்சம் திண்ணீத்தப் போட்டு அதுக்குமேல கப்பூரத்தெ வச்சு பத்தவெச்சு புள்ளயச்சுத்தி மூணு தடவ காட்டுமுங்க. எல்லாரும் அந்தக்கப்பூரத்தெ தொட்டுக் கும்பிட்டுக்குவாங்க.
அப்பறம் சீர்க்காரம்மா சமஞ்ச புள்ள நெத்திலயும் திண்ணீரு பூசி, பொட்டு, பூவு எல்லாம் வெச்சுடுமுங்க. அப்பறம் கொஞ்சம் சக்கரெயெ எடுத்து புள்ள வாய்லெ வக்கிமுங்க. அப்பறமா வந்திருக்கற தாய்துபாய்து ஒரம்பற சனமெல்லாம் புள்ளக்கி பூவும்பொட்டும் வச்சுட்டுட்டு, சக்கர, பளத்தயெல்லாம் எடுத்து புள்ள வாயில ஊட்டறதும் மொறக்காரிங்க வாயில ஊட்டறதுமா, ஒரே ரவுசா கெடக்குமுங்க.

இந்தக்கூத்தெல்லாம் முடிஞ்சபொறவு புள்ளய கூட்டிட்டுப்போய் ஒரு தனி ரூம்புலெ உக்காரவச்சுருவாங்க. அந்தப்புள்ள மூணு நாளக்கி அந்த ரூம்பவிட்டு எங்கியும் போகப்படாதுன்னு கட்டுமானம் பண்ணியிருவாங்க.

மிச்சம் நாளெக்கி.....

வெள்ளி, 28 ஜனவரி, 2011

சமுதாய மாற்றம் – ஏன், எப்படி?



பதிவர்கள் சிலர் நாம் பதிவு எழுதி என்ன சாதித்தோம்? வெட்டியாக பொழுது போக்குக்காக எழுதுவதுதான் நமது நோக்கமா? சமுதாயப் பொறுப்பு வேண்டாமா? என்று பல சமயங்களில் கேட்கிறார்கள். எனக்கும் அவ்வப்போது இந்த எண்ணங்கள் வருகின்றன. நிஜ உலகில் தனி நபர்கள் என்ன செய்கிறார்களோ அதைத்தான் பதிவுலகிலும் மக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் சாத்தியமானது. இதற்கு மேல் ஏதாவது செய்ய முடியுமா என்று என் சிறிய மூளையை உபயோகித்து சில கருத்துக்களை இங்கே வைக்கிறேன்.

முதலில் சமுதாய மாற்றம் எப்படி ஏற்படுகிறது என்று பார்ப்போம். நிச்சயமாக அரசும் அரசாங்கக் கொள்கைகளும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கின்றன. அரசாங்கம் பொருளாதாரக் கொள்கைகளை ஏற்படுத்துகின்றன. அவைகளை பயன்படுத்தி தனி நபர்கள் பல்வேறு தொழில்களோ வியாபாரமோ செய்து முன்னேறுகிறார்கள். ஆனால் எல்லோராலும் இவ்வாறு முன்னேற முடிவதில்லை. இதற்குண்டான காரண காரியங்களைப் பின்பு ஆராய்வோம்

இவ்வாறு முன்னேறியவர்கள் தங்கள் முன்னேற்றத்தை நிரந்தரமாகத்  தக்கவைத்துக் கொள்ள தங்களாலான எல்லா முயற்சிகளையும் எடுப்பார்கள். இது மனித இயற்கை. அப்போது அவர்களின் முன்னேற்றத்திற்கு இடையூறு விளைவிக்காத அரசாங்கம் இருந்தால் அவர்களுக்கு நல்லதுதானே. ஆகவே அவர்கள் (பணக்காரர்கள் என்று ஒரு அடையாளச்சொல் வைத்துக் கொள்வோமே) அந்த மாதிரி அரசாங்கம் தொடர்ந்து இருக்க தங்களால் முடிந்த உதவி செய்வார்கள். என்ன உதவிபண உதவிதான். இன்றைய கால கட்டத்தில் பணம்தான் கண்கண்ட தெய்வம். அதனால் செய்ய முடியாதது உலகில் எதுவுமில்லை என்றாகிவிட்டது.

இவ்வாறு பணக்காரர்களின் (பண) உதவியால் அமைக்கப்பட்ட அரசு என்ன செய்யும்? பணக்காரர்களுக்கு வேண்டிய சலுகைகளை ஏற்படுத்தும். அப்படி உதவி பெற்ற பணக்காரர்கள் அரசுக்கு மீண்டும் உதவி செய்வார்கள். இப்படி தொடர்ந்து ஒரு வட்டம் அதாவது = உதவி-சலுகை-உதவி = இந்த வட்டம் இந்தியாவில் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது

சில சொற்களை உணர்ந்தே தவிர்த்து இருக்கிறேன். இப்பொழுதே கொஞ்சம் ரத்தவாடை அடிக்கிறது. இந்த வாடைக்கு சிங்கம், புலிகள் வரக்கூடும். ஆகவே இந்த சமுதாய விழிப்புணர்வை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உட்கொள்ள வேண்டும். மீதி நேயர் விருப்பம்போல்.