சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 3 ஜூன், 2017

10. நாட்டு நடப்பு – 2

                                        Image result for யானை
தினமும் பத்திரிக்கைகளில் வரும் செய்திகளில் முக்கியமானவை திருட்டுச்செய்திகள்தான். திருட்டுகளில் பலவகை. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

வங்கிகளில் பணம் எடுத்து வரும்போது திருட்டுக்கொடுப்பது மிகவும் சாதாரணமாகி விட்டது. இரண்டொரு பண நோட்டுக்களை வழியில் போட்டுவிட்டு ‘ஐயா, இந்த நோட்டு உங்களது போல இருக்குதே’ என்று கூறுவார்கள். நீங்களும் ஓஹோ, நம் பணம் தானோ என்று அதை எடுக்க முயற்சி செயவீர்கள். அந்த சமயத்தில் உங்கள் கவனம் அந்த கீழே கிடக்கும் பணத்தின் மீதுதான் இருக்கும். அப்போது அந்த திருடர்கள் உங்கள் பணப்பையை பிடுங்கிக்கொண்டு ஓடி விடுவார்கள். அந்த சமயத்தில் உங்களுக்கு கையும் ஓடாது காலும் ஓடாது. இரண்டொரு நிமிடங்கள் கழித்துத்தான் என்ன நடந்தது என்று புரியும். அதற்குள் அந்த திருடன் கண்காணாமல் போயிருப்பான்.

இந்த மாதிரியான செய்திகள் அநேகமாக வாரத்திற்கு ஒருமுறையாவது வருகின்றன. மக்கள் இந்த செய்திகளைப் பார்த்துவிட்டு என்ன நினைப்பார்கள் என்று புரியவில்லை. நமக்கு இந்த மாதிரி நடக்காது என்று நினைப்பார்கள் போலும்.  ஆனால் இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நடப்பதைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது என்றால் மனித மனம் சபல புத்தி உள்ளது. எதுவும் சும்மா கிடைக்கிறது என்றால் அவனது புத்தி அப்போது வேலை செய்வதில்லை.

என் பாட்டி ஒரு கதை சொல்வார்கள் – ஒருத்தன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது தெருவில் ஒருவன் யானை, யானை, கடனுக்கு யானை என்று விற்றுக்கொண்டு போனான். இந்த சாப்பிட்டுக் கொண்டிருந்தவனுக்கு வாய் நிறைய சோறு, பேச முடியவில்லை, இடது கையினால் எனக்கு ஐந்து என்று சாடை காட்டினானாம்.

அது போல சும்மா கிடைக்கு மென்றால் எதுவாக இருந்தாலும் கை நீட்டுவதுதான் நம் ஜனங்களுக்கு பழக்கம். இந்த பழக்கம் இரத்தத்திலேயே ஊறி இருக்கிறது. இதன் காரணமாகத்தான் பணத்தை கீழே பார்த்தவுடன் அது நம்முடையதுதானா என்று கொஞ்சமும் யோசிக்காமல் அதை எடுக்க முயற்சிக்கிறான். நஷ்டம் அடைகிறான். இந்த ஆசையானது மக்களை மேலும் எப்படி அலைக்கழிக்கிறது என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.

தொடரும்....

வெள்ளி, 23 மார்ச், 2012

நம் குழந்தைகளிடம் நடந்து கொள்வது எப்படி?

நம் குழந்தைகள்தான், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று இருந்த காலம் போய்விட்டது. இடுப்பில் கயறு கட்டி கிணற்றுக்குள் இறக்கி பயங்காட்டின நாட்கள் இப்போது இல்லை.

இன்றைய பெற்றோர்களின் பொறுப்பு மிக சிக்கலாக இருக்கிறது. குழந்தைகளுக்கு எது நல்லது, எதை எப்படி சொல்லிக்கொடுப்பது என்பது கஷ்டமான சமாசாரமாக இருக்கிறது. குழந்தை வளர்ப்புக்கென்று ஸ்பெஷல் கிளாஸ்கள் நடக்கின்றன என்று கேள்விப்படுகிறேன். உண்மையில் அவை அவசியம் என்றே தோன்றுகிறது.

இதோ இந்தப் பதிவைப் பாருங்கள். குழந்தைகளின் ஆதங்கத்தை நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

குழந்தைகளிடம் அன்பு காட்டவேண்டியது அவசியம். ஆனால் அதீத அன்பு கெடுதல் விளைவிக்கும் என்பதையும் உணரவேண்டியது அவசியம். கண்டிப்பு தேவைப்படும் சமயங்களில் கண்டிப்பாக இருப்பது குழந்தைகளுக்கு நல்லது. ஆனால் எப்பொழுது அன்பு காட்டவேண்டும், எப்பொழுது கண்டிப்பாக இருக்கவேண்டும் என்பதை அனுபவத்தின் மூலமாகத்தான் கற்றுக்கொள்ள முடியும்.

குடும்பத்தின் பொருளாதார நிலையைக் குழந்தைகள் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் குடும்ப நிலைக்கு மீறி ஆசைப்படாமல் இருப்பார்கள். இளம் வயதில் கல்வி கற்பதுதான் ஒருவனின் நோக்கமாக இருக்கவேண்டும். உபரியாக ஏதாவது விளையாட்டு அல்லது நுண்கலையில் பரிச்சயம் இருந்தால் போதும். அதற்காக குழந்தைகளை பல்கலை நிபுணனாக வளர்க்கிறேன் என்று விரட்டுவது கூடாது.

தொலைக்காட்சிப் பெட்டியும் கணிணியும் இல்லாத வீடே இல்லை என்று ஆகிப்போனது. இந்த இரண்டும் பொது அறிவை வளர்க்கக் கூடியவைதான். ஆனால் அதற்கும் ஒரு நியதி இருக்கவேண்டும். வீட்டிலுள்ள பெரியவர்கள் எப்போதும் டி.வி. பார்த்துக்கொண்டு குழந்தைகளுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது சாத்தியமில்லை.

குழந்தைகளின் நடவடிக்கைகளின் மேல் பெற்றோர்களின் கண்காணிப்பு எப்போதும் அவசியம். அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை பெற்றோர்கள்தான் கொடுக்கவேண்டும். அவர்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்திருக்கிறோமே என்று திருப்திப் பட்டுக்கொண்டு அவர்களை மனம் போல் நடந்து கொள்ள அனுமதிப்பது தவறு.

நம் குழந்தைகளின் எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்கிக் கொடுப்பது நம் பொறுப்பு. அதே சமயம் நம் அனைத்து செல்வங்களையும் அவர்களுக்காகவே தியாகம் செய்து விட்டு நம்முடைய வயதான காலத்தில் அவர்களை எதிர்பார்த்து நிற்கும் நிலைக்கு ஆளாகாதீர்கள்.

ஞாயிறு, 8 மே, 2011

முதிர் காளைகள்


பல குடும்பங்களில் முதிர் கன்னிகள் இருப்பதைக்கண்டு மனம் வருந்துகிறோம். அதே மாதிரி பல குடும்பங்களில் முதிர் காளைகள் இருப்பதைப்பற்றி சில நாட்களுக்கு முன் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த நிலைக்கு பெரும்பாலும் ஜோதிடர்களே காரணம் என்றாலும், சில குடும்பங்களில் வேறு சில சுயநல எண்ணங்களும் காரணமாக அமைகின்றன.
 
அவர்கள் தங்களுடைய சுயநலத்தை மறைப்பதற்காக ஜோசியர்கள் மேல் பழியைப் போடுவார்கள். ஆனால் காரணம் தங்கள் சுயநலமே. கீழ்க்கண்ட காரணங்கள்தான் உண்மையானவை.
1.   பையன் தங்கள் பிடியிலிருந்து நழுவி, மாமியார் வீட்டுக்கோ அல்லது தனிக்குடித்தனமோ போய்விட்டால் தங்களுக்கு ஆதரவு இல்லாமல் போய்விடுமே என்கிற பயம்.
2.   பையனுக்கு குடும்பம், குழந்தைகள் என்று ஆகிவிட்டால், தாய் தந்தையரின் பேரில் உள்ள பாசம் குறைந்து தங்களை ஒதுக்கி விடுவானோ என்ற பயம்.
3.   தான் பெற்று வளர்த்து ஆளாக்கிய தன் மகன் இன்று நல்ல சம்பாத்தியம் பெறுவதை எங்கிருந்தோ வந்த ஒருத்தி அனுபவிப்பதா என்ற பொறாமை.
4.   தன் பையனை ஒருத்தி தன் முந்தானைக்குள் போட்டுக்கொள்வதை பொறுக்க மாட்டாமை.
இதற்கு ஒரே தீர்வு அந்தப் பையன் தனியாக தன் திருமணத்தைப் பற்றி முடிவு எடுப்பதுதான்.  

திங்கள், 14 மார்ச், 2011

காப்பி குடிப்பது எப்படி?

காப்பி குடிக்கத் தெரியாதா எங்களுக்கு! நேத்துப்பொறந்த குழந்தை கூட இன்னைக்கு காப்பி குடிக்கறது என்று சொல்பவர்கள் சற்றுப் பொறுக்கவும். இது ரோடோரக் கடையில வாங்கி நாலு மொடக்குல குடிக்கற காப்பி மாதிரி இல்லை. ஜப்பானில் “டீ செரிமனி” என்று வைப்பார்களே அந்த மாதிரி.

{ பாவம் ஜப்பான்காரர்கள் ! விதி அவர்களுடன் எப்போதும் விளையாடுகிறது. யாருடனும் வம்புக்குப் போகாமல் அவரவர்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களை இயற்கை ஏன் இவ்வாறு பழி வாங்குகிறது என்று தெரியவில்லை. அவர்களுக்கு உதவ நாம் என்ன செய்யமுடியும் என்றும் தெரியவில்லை. இந்தப் பேரழிவிலிருந்து மீண்டுவரத் தேவையான மன தைரியத்தை அவர்களுக்குக் கொடுக்க இறைவனை வேண்டிக்கொள்வோம். உயிர்நீத்த அனைத்து ஆத்மாக்களும் அமைதி பெற ஆண்டவனை வேண்டுவோம்.} 

இரண்டு பேர் காப்பி குடிக்கவேண்டும் என்றால் தேவையானவைகள் - இரண்டு பழைய காலத்து டம்ளர்கள். கால் படிக்குக் கம்மியில்லாமல் கொள்ளளவு இருக்கவேண்டும். அரைப்படி பிடிக்கக் கூடிய வாழைப்பூ சொம்பு ஒன்று. ஒரு படி ஒரு உப்புப்பொரி. சாதாரணப் பொரி இரண்டு உப்புப்பொரி என்று சொல்வார்கள். அது கொஞ்சம் கசக்கும்.
 
கிராமங்களில், வெளியூரிலிருந்து யாராவது ஒரம்பரை (உறவினர்) வந்தால் இரண்டு பேரும் (அதாவது வீட்டுக்காரரும், ஒரம்பரைக்கு வந்தவரும்) வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொள்வார்கள். வீட்டுக்காரர் உள்ளே பார்த்து “அம்மணீ, யாரு வந்திருக்காங்கன்னு பாரு” ன்னு குரல் கொடுப்பார். வூட்டு அம்மணி வெளியில் வந்து பார்த்துவிட்டு, வாங்கண்ணா, ஊர்ல அண்ணியெல்லாம் எப்படி இருக்காங்க, எங்களையெல்லாம் மறந்துட்டீங்களாட்டம் இருக்குது, அப்படீன்னு குசலம் விசாரித்து விட்டு, வீட்டுக்குள் போய் ஒரு சொம்பில் குடிப்பதற்கு தண்ணீரும் கூட ஒரு தட்டில் வெத்தலபாக்கும் கொண்டு வந்து வைப்பாங்க. அண்ணா, வெத்தில போடுங்க, காப்பி கொண்டார்றேன்னுட்டு உள்ள போயிடுவாங்க. 

அப்புறமா காப்பி வரும். ரெண்டு டம்ளர்ல நெறயக் காப்பியும், கூட ஒரு வாழைப்பூ சொம்பில நெறய காப்பியும் கொண்டு வந்து வைப்பாங்க. கூடவே ஒரு தட்டத்தில நெறய பொரியும் கொண்டு வந்து வைப்பாங்க. அந்தக்காப்பிய கொஞ்சம் குடிச்சுட்டு, அப்பறமா பொரிய எடுத்து காப்பி டம்ளர்ல போட்டுக்குவாங்க. அப்புறம் அந்தப் பொரியோட காப்பியக் குடிப்பாங்க. காப்பி அரை டம்ளர் ஆனவுடன் வாழைப்பூ சொம்பில இருக்கிற காப்பிய டம்ளர்ல ஊத்தி, பொரியையும் போட்டு டம்ளரை நெறச்சுக்குவாங்க. டம்ளர்ல காப்பி குறையக் குறைய சொம்பில இருந்து நெரப்பீக்குவாங்க. அப்பப்ப பொரியையும் போட்டுக்குவாங்க.

கொண்டு வந்து வச்ச காப்பியெல்லாம் தீர்ந்ததுக்கு அப்புறமும் காப்பி வேணும்போல இருந்திச்சுன்னா வீட்டுக்காரர் உள்ள பாத்து இன்னும் கொஞ்சம் காப்பித்தண்ணி கொண்டா அம்மணின்னு கொரல் குடுப்பாரு. சித்த நேரத்துல மொத மாதிரியே ரண்டு டம்ளர்ல காப்பியும், ஒரு சொம்பு நெறய காப்பியும், ஒரு தட்டத்தில பொரியும் வந்துடும். அப்பறம் என்ன, பழய மாதிரியே ரவுண்டு கட்ட வேண்டியதுதான்.

மத்தியானம் சாப்பாடு சாப்பிடற மட்டும் இப்படியேதானுங்க குடிச்சிட்டிருப்பாங்க. இதுதாங்க காப்பி குடிக்கிற முறைங்க.

ஞாயிறு, 13 ஜூன், 2010

நான் வம்பினில் சிக்கினேன்

 
வேட்டைக்காரன்புதூர் கவுண்டர்களின் ஜம்பம் பிரசித்தி பெற்றது. இதனால் நான் எப்படி வம்பில் சிக்கினேன் என்று பார்க்கலாமா?
நான் நிலக்கடலை ஆராய்ச்சிப் பண்ணையில் சேரும்போது கடலைக்காய் அறுவடைக்காலம். கடலைக்காயில் இரண்டு வகை உண்டு: 1. குத்துக்காய்
2. கொடிக்காய். குத்துக்காய் அறுவடை செய்வது சுலபம். மண்ணில் சரியான ஈரப்பதம் இருக்கும்போது செடியைப்பிடித்து இழுத்தால் செடி வேருடனும் காய்களுடனும் வந்து விடும். மண்ணுக்குள் அதிகம் காய்கள் நிற்காது. ஆனால் கொடிக்காய் தரையோடு படர்ந்திருக்கும். அதை மம்மட்டி அல்லது களைக்கொத்து கொண்டு வெட்டித்தான் பிடுங்கவேண்டும். அப்படியும் பல காய்கள் மண்ணிற்குள் நின்றுவிடும். இதற்கு அதிகம் ஆட்கள் தேவைப்படும்.
இதற்காக கோயமுத்தூர் விவசாய பொறியியல் துறையில் டிராக்டரில் பொருத்தக்கூடிய கருவி ஒன்று கண்டு பிடித்திருந்தார்கள். அதைப் பரிசோதனை செய்து பார்ப்பதற்காக எங்கள் பண்ணைக்கு கொண்டு வந்திருந்தார்கள். அதை கொண்டுவந்திருந்த டிராக்டர் டிரைவர் எங்கள் குடும்பத்திற்குத் தெரிந்தவன். என்னை விட 10 வயது மூத்தவன். அதிகமாக சர்வீஸ் போட்டவன். அதனால் அவன் என்னுடன் கொஞ்சம் உரிமையுடன் பழகுவான். அவன் சொன்ன ஒரு அறிவுரை என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் உபயோகமாக இருந்தது.
இப்படி கொஞ்சம் நெருக்கமானபடியால் ஒரு நாள் பக்கத்திலுள்ள ஒரு ஹோட்டலுக்கு நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே போய் டிபன் சாப்பிட்டுவிட்டு வந்தோம். நான் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்தவன். ஒரு நகரத்தில் பிறந்து வளர்ந்தவன். ஆபீஸ் நடைமுறைகள், சர்வீஸ் ரேங்குகள், சமூக அந்தஸ்து வித்தியாசங்கள் இவைகளில் எல்லாம் எந்த அனுபவங்களும் இல்லாதவன். ஆனால் வேட்டைக்காரன்புதூர் மக்களுடைய பார்வையில் நான் ஒரு கவர்மென்ட் ஆபீசர். நான் ஒரு டிரைவருடன் சேர்ந்து காபிக்கடைக்குப் போய் டிபன் சாப்பிட்டது மாபெரும் அகௌரவமான செயல். தனியாகக்கூட நான் காபிக்கடைக்குப் போய் அங்கு வரும் பாமர கூலித்தொழிலாளிகளுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடாது. எது வேண்டுமென்றாலும் ஆள் அனுப்பி வேண்டியதை வாங்கிக்கொண்டு வரச்செய்து ஆபீசில் என்னுடைய அறையில் உட்கார்ந்துதான் சாப்பிடவேண்டும்இப்படியிருக்க நான் என்னைவிட பல படிகள் கீழே உள்ள ஒரு டிரைவருடன் எப்படிப்போய் காப்பிக்கடையில் சாப்பிடலாம் என்பது ஒரு பெரிய செய்தியாகி விட்டது.  


இதை என்னுடைய ஆபீசில் வேலை செய்பவர்கள் வந்து சொன்னார்கள். அப்போதுதான் புரிந்தது, கிராமம் என்றால் என்ன என்று. பிறகு சுதாரித்துக்கோண்டேன். வேட்டைக்காரன்புதூர் கவுண்டர்களின் ஜபர்தஸ்தை போகப்போக புரிந்து கொண்டேன். அவர்கள் வீடுகளெல்லாம் மிகப்பெரியதாய் இருக்கும். ஒவ்வொருவர் வீட்டு மெயின் ஹாலிலும் ஆளுயரத்திற்கு இரண்டு யானைத் தந்தங்கள் ஒரு ஸ்டேண்டில் பொருத்தி வைத்திருப்பார்கள். அவர்களை வேலைக்காரர்கள் எல்லாம் பார்த்து பேசவே மாட்டார்கள். எல்லாம் கணக்குப்பிள்ளை அல்லது மேஸ்திரி மூலமாகத்தான் நடக்கும்.
இது மாதிரி தஞ்சாவூரில் வேலை பார்த்தபோதும் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். நேரில் பார்த்தது இல்லை. அங்கு ஒரு பெரிய மிராஸ்தார். அவர் எப்பொழுதும் அவர் வீட்டு மாடியில்தான் இருப்பார். அவரைப் பார்க்க வருபவர் யாராயிருந்தாலும் மாடிக்குச்சென்றுதான் பார்க்கவேண்டும். மாடியில் ஒரு சேர்தான் உண்டு. அதில் அவர் உட்கார்ந்திருப்பார். வருபவர்கள் நின்று கொண்டுதான் அவரைப் பார்த்து பேசிவிட்டுப் போகவேண்டும். ஒருக்கால் யாராவது ரொம்பப் பெரிய மனுஷன் (கலெக்டர் மாதிரி) வந்துவிட்டால், அவருக்கு வேறு சேர் கொண்டு வரச் சொல்லமாட்டாராம். என்ன செய்வாரென்றால் இவரும் எழுந்து நின்றுகொண்டு அவரிடம் பேசி அனுப்பி விடுவாராம். இது எப்படி இருக்கு?
தொடரும்….