சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

வெள்ளரிக்காய் , தக்காளி , சேலட் – எப்படி செய்வது? தெரியுமா?



நண்பர் முகமது அலி, முட்டைப் பொரியல் செய்வது பற்றிப் பதிவு போட்டிருந்தார். அவர் மட்டும்தான் சமையல் பதிவு போடுவதா? நாமும் ஏன் போடக்கூடாது என்று சிந்தித்ததின் விளைவுதான் இந்தப் பதிவு.

முதலில் சேலட் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். இது ஒரு ஆங்கில நாட்டு பேஷன். நம் நாட்டில் சமையல் செய்ய சோம்பல்படும் இல்லத்தரசிகளுக்கான ஒரு வரப்பிரசாதமாய் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் முறை.

இதைச் சமையல் என்று சொல்வதே ஒரு “நகைமுரண்”. நகைமுரண் அப்படீன்னா என்னன்னு கேக்கறீங்களா? இதுவும் ஆங்கில நாட்டு இறக்குமதியே. அங்கே “comedy of error” என்று தீங்கு விளைவிக்காத, சிரிப்பு வரவழைக்கும் தவறுகளைக் குறிப்பிடுவார்கள். நமது அருமை தமிழ் ஆர்வலர்கள் இதைத் தமிழ்ப்படுத்தியது ஒரு நகைமுரண்.

சேலட் செய்வதற்கு சமையலறை வேண்டியதில்லை. ஒரு கத்தியும் ஒரு பேசினும் மட்டும் போதும். வெள்ளரிக்காய் சேலட் செய்யத்தேவையான பொருட்கள்.

  1.   வெள்ளரிக்காய்         – 2
  2.   ஆப்பிள் தக்காளி        - 4
  3.   பச்சை மிளகாய்         - 4
  4.   பெரிய வெங்காயம்     - 2
  5.   டேபிள் சால்ட்          - தேவையான அளவு
  6.   மிளகுத்தூள்            - தேவையான அளவு
  7.   ஆலிவ் ஆயில்          - ஒரு டேபிள்ஸ்பூன்

8. ரெடி மேட் பிளாஸ்திரிகள் - தேவையான நெம்பர்கள் (கையில் காயம் ஆகும்போது உபயோகிக்க)
   

செய்முறை:
1, 2, 3 ஐட்டங்களை தண்ணீரில் நன்றாகக் கழுவிக்கொள்ளுங்கள். இயற்கை ஆர்வலர்கள் இந்த ஸ்டெப்பை விட்டுவிடவும்.
பெரிய வெங்காயத்தை தோலுரிக்கவும். (தவறான பொருள் கொள்ளவேண்டாம்)

இந்த நான்கு ஐட்டங்களையும் பொடிப்பொடியாக நறுக்கி பேசினில் போடவும். தேவையான அளவு டேபிள் சால்ட்டையும் மிளகுத்தூளையும் சேர்த்து கலக்கவும். ஆலிவ் ஆயிலை மேலே ஊற்றிப் பரிமாறவும். உடனே சாப்பிடவேண்டும். இல்லாவிட்டால் நீர் கோர்த்து ருசி போய்விடும்.

இந்த ஆலிவ் ஆயிலை எதற்கு ஊற்றவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் யூட்யூப்பில் எல்லா ரெசிபிக்களிலும் போட்டிருக்கிறார்கள். அதனால் நானும் போட்டேன். ஆலிவ் ஆயிலுக்கான வியாபார உத்தியாக இருக்கலாம். ஆலிவ் ஆயில் மிகவும் சலீசு. கிலோ ஆயிரம் ரூபாய் மட்டுமே.

இந்த சேலடை சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள்.

1. நீண்ட ஆயுள்.
2.  பிரமசாரிகளுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கும்.
3.  கல்யாணமானவர்களுக்கு சீக்கிரமே குழந்தை பிறக்கும்.
4.  குழந்தைகள் பெற்றோர்கள் சொன்னபடி கேட்பார்கள்.
5.  மொத்தத்தில் நீங்கள் பூலோக சொர்க்கத்தில் வாழ்வீர்கள்.

செய்து சாப்பிட்டுப் பார்த்துவிட்டுப் பின்னூட்டத்தில் உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும்.