சுற்றுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுற்றுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 ஜனவரி, 2014

தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது எப்படி?


இஸ்ரேல் நாடு இருக்குமிடம் அறிவீர்கள். அங்கிருந்து தென்கிழக்கில் 5 மணி நேரப் பயணத்தில் பம்பாய் (மும்பை என்று சொல்லவேண்டுமோ?) வந்துவிடும். ஆனால் அரபு நாடுகளின் மீது பறக்கவேண்டும்.

இஸ்ரேல்காரங்களுக்கும் அரேபியர்களுக்கும் ஜன்மாந்திரப் பந்தம். ஒரே இனமாக இருந்து பிறகு பிரிந்தவர்கள்தானே. அரேபியர்கள் தங்கள் நாடுகள் மீது இஸ்ரேலிலிருந்து புறப்படும் எந்த விமானம் பறந்தாலும் அதை சுட்டுத்தள்ளுவோம் என்று சொல்லிவிட்டார்கள். அதேபோல் அரபு நாடுகளிலிருந்து புறப்படும் எந்த விமானமும் இஸ்ரேல் மீது பறந்தால் அது சுட்டுத்தள்ளப்படும். இது இஸ்ரேல், அரபு நாடுகள் மற்றும்  எல்லா இதர நாடுகளும் பரஸ்பரம் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தம். நல்ல நட்பின் அடையாளம் கண்காணாமல் இருப்பதே.

இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் அவ்வளவு நட்பு. ஆகவே இஸ்ரேலிலிருந்து பம்பாய் வரவேண்டுமானால் வடமேற்கே 7 மணி நேரம் பயணித்து ஐரோப்பாவில் ஏதாவது ஒரு ஊருக்குப் போகவேண்டும். அங்கிருந்து கிழக்கு-தென்கிழக்காக ஒரு 9 மணி நேரம் பயணித்து பம்பாய் வரவேண்டும். கீழேயுள்ள படத்தைப் பார்க்கவும்.


தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது என்பது இதுதான். என்னுடைய டூரை இப்படித்தான் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

நான் இஸ்ரேலை விட்டுப் புறப்படும் தினத்தன்று காலையில் எழுந்து குளித்து டிபன் சாப்பிட்டு விட்டு என் சாமான்களையெல்லாம் மூட்டை கட்டினேன். காலை 9 மணிக்கு டாக்சி வருவதாக ஏற்பாடு. நான் என் லக்கேஜ்களை ஓட்டல் லாபியில் கொண்டு வந்து வைத்துவிட்டு காத்திருந்தேன்.

டாக்சி சரியான நேரத்திற்கு வந்தது. அரை மணி நேரத்தில் ஏர்போர்ட் வந்து சேர்ந்தேன். லக்கேஜகளை ஒரு டிராலியில் ஏற்றிக்கொண்டு உள்ளே சென்றேன். உள்ளே ஏகப்பட்ட போலீஸ் பெண் போலீஸ்கள்தான் அதிகம். அதில் ஒருத்தி என்னப் பிடித்துக்கொண்டாள்.

பத்து நிமிடங்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டாள். அவள் கேட்ட முக்கியமான கேள்விகளும் என் பதில்களும் கீழே.

1. கேள்வி:  இஸ்ரேலுக்கு எதற்காக வந்தீர்கள்?

    பதில்:       நான் ஒரு விவசாய விஞ்ஞானி. இங்குள்ள சொட்டு நீர்ப்                                              பாசனத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வந்தேன்.

2. கே:  இங்கு எத்தனை நாள் இருந்தீர்கள்?

    ப:     மூன்று நாள்

3.  கே:  இந்த லக்கேஜ்களை எல்லாம் யார் பேக் செய்தார்கள்?

       ப:  நான்தான் பேக் செய்தேன்.

4.   கே: பேக் செய்த பின் எங்காவது போனீர்களா?

        ப:  எங்கும் போகவில்லை.

5.   கே:  இந்த பேக்கேஜுகள் உங்கள் பார்வையிலேயே இருந்ததா?

        ப:  ஆமாம்.

6.    கே. யாராவது உங்களிடம் ஏதாவது பாக்கெட் கொடுத்தார்களா?

        ப:  இல்லை.


"சரி, இங்கேயே இருங்கள்"  என்று சொல்லிவிட்டு, கொஞ்ச தூரத்தில் இருந்த இன்னொரு போலீஸகாரியைக் கூப்பிட்டு அவர்கள் பாஷையில் என்னமோ சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

இந்த இரண்டாவது போலீஸ்காரியும் முதல் போலீஸ்காரி கேட்ட அத்தனை கேள்விகளையும் அதே வரிசையில் கேட்டாள். நானும் அதே பதில்களை அதே வரிசையில் சொன்னேன்.

சரி. நீங்கள் செக்இன் செய்யப் போகலாம் என்று விடை கொடுத்தாள். போன உயிர் திரும்ப வந்த மாதிரி இருந்தது. பின்னால்தான் தெரிந்தது. அந்த ஊரில் வைரம் பட்டை தீட்டி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். சட்ட பூர்வமாக ஏற்றுமதி செய்தால் நிறைய வரி கட்டவேண்டும். அதனால் இந்த மாதிரி டூர் வரும் ஆட்களிடம் சிறிய பாக்கெட்டுகளில் வைரக்கற்களை கொடுத்தனுப்பினால் வரியை ஏய்க்கலாம்.

நான் ஓட்டலில் இருக்கும்போது ஒரு ஆள் என்னைப் பற்றி விசாரித்தான். நான் ஒரு அரசு ஊழியன் என்று தெரிந்த தும் போய்விட்டான். அவன் இந்த விஷயத்திற்கு நான் தோதுப்படுவேனா என்றுதான் நோட்டம் பார்த்திருக்கவேண்டும்.

எப்படியோ சிக்கல் இல்லாமல் நான் பிளேன் ஏறி யூரிச் என்னும் ஊருக்கு 7 மணி நேரம் பிரயாணம் செய்து வந்து சேர்ந்தேன். பம்பாய் செல்லும் விமானத்திற்காக அரை நாள் காத்திருந்து  பிறகு அதில் ஏறி 9 மணி நேரம் பிரயாணம் செய்து பம்பாய் வந்து சேர்ந்தேன். அங்கிருந்து லோகல் விமானம் பிடித்து இரண்டு மணி நேரத்தில் ஊர் வந்து சேர்ந்தேன். ஏறக்குறைய இஸ்ரேலிலிருந்து ஊருக்கு வர ஒன்றரை நாள் ஆகியது.

வீட்டிற்கு வந்ததும் குளித்து விட்டு ரசம் சாதம் சாப்பிட்டு விட்டு இரண்டு நாள் தூங்கினேன். இப்படியாக என்னுடைய இஸ்ரேல் டூர் முடிந்தது.



சனி, 30 நவம்பர், 2013

ஆம்ஸ்டர்டாம் அனுபவங்கள் - பாகம் 4


டிக்கட் பரிசோதகர் என்னிடம் டிக்கெட் கேட்டார். நானும் வாங்கி வைத்திருந்த டூரிஸ்ட் டிக்கட்டைக் காட்டினேன். அவர் அதை வாங்கிப் பார்த்துவிட்டு என்னை மேலும் கீழுமாகப் பார்த்தார். அப்போதே ஏதோ வில்லங்கம் போல் இருக்கிறது என்று மனதிற்குள் பொறி தட்டியது. இருந்தாலும் "கெத்தை" (Self Confidence) விடாமல் ஏதாவது பிரச்சினையா என்றேன். அவர் சொன்னார், "இந்த பாஸ் சிட்டி வரம்பிற்குள் பிரயாணம் செய்வதற்குத்தான் செல்லுபடியாகும். நீங்கள் சிட்டி லிமிட்டைத் தாண்டி வெகு தூரம் வந்து விட்டீர்கள் என்றார்."

நான் உடனே சுருதி இறங்கிப்போய், டிபன்ஸ் மோடுக்கு மாறினேன். "ஐயா, நான் அசலூருங்க, உங்க ஊரைச் சுற்றிப்பார்க்கலாமென்று வந்தேன். இந்த உள்  விவகாரங்களெல்லாம் எனக்குத் தெரியவில்லை. இப்போது என்ன செய்யலாம்" என்றேன். அவர் நீங்கள் டூரிஸ்ட்டாக இருப்பதால் இது வரைக்கும் வந்ததற்கும் திரும்ப போவதற்கும் உண்டான சாதாரண கட்டணம் மட்டும் வசூலிக்கிறேன். இதுவே ஊள்ளூர்க்காரர்களாயிருந்தால் பெரிய தொகை பைன் கட்ட வேண்டியிருக்கும் என்றார்.

எப்படியோ தலைக்கு வந்தது தலைப்பாகையுடனே போயிற்று என்று நினைத்துக்கொண்டு அவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன். அவர் ரசீது கொடுத்து விட்டு, வரும் ஸ்டேஷனில் இறங்கி, திரும்பிப் போகும் ரயிலில் சிட்டி போய்ச் சேருங்கள் என்றார். அடுத்த ஸ்டேஷனில் இறங்கி கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தேன். அப்போது ஒரு சுவாரஸ்யமான காட்சியைக் கண்டேன்.

அந்த ஊர் நகரின் வெளிப்புறத்தால் உள்ள ஒரு சிறாய கிராமம். அன்று ஒரு விடுமுறை நாள் போலும். அங்கு ஒரு பெரிய வேளியில் சிறிய சிறிய பிளாட்டுகள் போட்டிருந்தார்கள். அதில் பலவிதமான செடிகள் பயிரிடப்பட்டிருந்தன. ஒவ்வொரு பிளாட்டிலும் பெரியவர்கள், சிறியவர்கள் ஆகியோர் குடும்பம் குடும்பமாக ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்கள். இது ஒரு வழக்கம் போல் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு நான் திரும்ப வேண்டிய ரயில் வந்ததால் திரும்பி விட்டேன்.

நெதர்லாந்துக்காரர்கள் ஒட்டு மொத்தமாகத் திருடர்கள் என்பது எவ்வளவு பேர்களுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி அடுத்த பதிவில். 

புதன், 5 செப்டம்பர், 2012

மாணவர்களுடன் ஆல் இந்தியா டூர்-2


சென்னையிலிருந்து முதலில் ஹைதராபாத் போனோம். அங்கு ஹைதராபாத் ஸ்டேஷனில் எங்கள் கோச்சை நிறுத்தினார்கள். அது ஒரு சின்ன ஸ்டேஷன். அங்கு நிறுத்துவதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. அங்கிருந்து மும்பை விக்டோரியா ஸ்டேஷனுக்குப் போகும் ரயிலில் இந்தக் கோச்சைச் சேர்க்கவேண்டும். அதற்கு ஜெனரல் மேனேஜர் ஆபீஸ் ஆர்டர் வேண்டும் என்றார்கள்.

நாம் சாதாரணமாக நினைத்துக்கொண்டு இருப்பது என்னவென்றால், இன்ஜினும், டிரைவரும், கோச்சுகளும் இருந்தால் ரயில் ஓடும் என்றுதானே நினைத்துக்கொண்டு இருக்கிறோம். அது எவ்வளவு தவறான கருத்து என்பது எனக்கு அங்குதான் தெரிந்தது. ஜெனரல் மேனேஜர் ஆபீஸ் என்பது வழக்கமாக எல்லா ஊர்களிலும், ஸ்டேஷன் சப்தம் கேட்காமல், ஸ்டேஷன் நாற்றங்கள் எட்டாமல், ஐந்து கி.மீ. தூரத்தில் வைத்திருக்கிறார்கள்.   

இந்த ஜெனரல் மேனேஜர் ஆபீஸில் ஒரு மூலையில்அசிஸ்டன்ட் கமெர்ஷியல் கிளார்க்என்று ஒருவர் இருக்கிறார். அவர்தான் அனைத்து ரயில்களையும் ஓட்டுபவர். ரயில் இன்ஜினில் அவர் தன் ஆயுளில் ஒரு நாள்கூட ஏறிப் பார்த்திருக்க மாட்டார். ஆனாலும் அவர் ஆர்டர் போடாவிட்டால் ஒரு ரயிலும் ஓடாது. இது நடைமுறை உண்மை. அவர்தான் அந்த ஸ்டேஷனில் இருக்கும் எல்லா கோச்சுகளுக்கும், (எல்லா ரயில் கோச்சுகளுக்கும் நெம்பர் உண்டு, பார்த்திருப்பீர்கள்). இன்ஜின்களுக்கும் கணக்கு வைத்திருக்கிறார். அந்த ஸ்டேஷனிலிருந்து என்னென்ன ரயில்கள், எந்தெந்த ஊர்களுக்கு, எந்தெந்த நேரங்களில் புறப்படுகின்றன என்பது அவருக்கு மனப்பாடம். அந்த ரயில்களுக்கு எந்த கோச்சுகள், எந்த வரிசையில் இணைக்கப்படவேண்டும், எத்தனை மணிக்கு பிளாட்பாரத்திற்கு அனுப்பவேண்டும் என்று ஆர்டர் போட்டு, ஷண்டிங்க் யார்டுக்கு அனுப்பினால்தான் அந்த ரயில் குறித்த நேரத்திற்கு புறப்படும். அவர் ஏதாவது சொதப்பி விட்டால் அவ்வளவுதான், அன்று அந்த ரயில் புறப்படாது. ஜெனரல் மேனேஜர் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

இவரிடம் போய், நாங்கள் இந்த ஊரிலிருந்து, இன்ன ரயிலில், ஸ்பெஷல் கோச்சில், இன்று வந்திருக்கிறோம். இத்தனாம் தேதி, இன்ன ரயிலில் இன்ன ஊருக்குப் போக வேண்டுமென்று சொன்னால், அது பற்றிய ஆர்டர் வந்திருக்கிறதா என்று பார்ப்பார். நாம் டூர் புரொக்ராம் போட்டு, ரயில்வே அப்ரூவல் வாங்கியிருக்கும் ஊரிலுள்ள ரயில்வே ஜெனரல் மேனேஜர் ஆபீசில் இருந்து, நம் டூர் முழுவதற்கும் உள்ள எல்லா விபரங்களையும் சம்பந்தப்பட்ட எல்லா ஸடேஷன்களுக்கும் (அதாவது அந்தந்த ஜெனரல் மேனேஜர் ஆபீசுக்கு) அனுப்பியிருப்பார்கள். இந்த ஆர்டரை அந்த கிளார்க் வைத்திருப்பார்

அதைப் பார்த்து, நாம் சொலும் விபரங்களும், அந்த ஆர்டரில் இருக்கும் விபரங்களும் ஒத்துப் போனால், சரி அப்ளிகேஷன் எழுதிக் கொடுங்கள் என்பார். நம் கல்லூரி லெட்டர் பேடில் அப்ளிகேஷன் எழுதி, அதற்குண்டான காணிக்கையுடன் கொடுத்து விட்டால் நம் வேலை முடிந்தது. சரி, நீங்கள் போகலாம், நான் ஆர்டர் அனுப்பிவிடுகிறேன், என்பார். நம் கோச், நாம் போகவேண்டிய ரயிலில் சேர்ந்து விடும். இந்த நடைமுறையைச் சரியாக கடைப்பிடிக்காமல், எங்களுக்கு முன் சென்ற இரண்டு குழுக்களும் ஹௌரா ஸ்டேஷனில் பட்ட அனுபவம் ஒரு தனிக்கதை (பின்னால் சொல்லுகிறேன்)

இந்த நடைமுறையைக் கண்டுபிடிக்க, முதல் ஊரில் மிகவும் கஷ்டப்பட்டோம். பிறகு அடுத்த ஊர்களில் சுலபமாக இந்த வேலையைச் செய்து முடித்தோம். இப்படி நாங்கள் ஹைதராபாத்தில் பார்க்கவேண்டிய இடங்களைப் பார்த்து முடித்த பிறகு, பம்பாய் (அந்தக்காலத்தில் அது பம்பாயாகத்தான் இருந்தது. இப்போதுதான் மும்பை) புறப்பட்டோம்.

திங்கள், 3 செப்டம்பர், 2012

மாணவர்களுடன் ஆல் இந்தியா டூர்.1


டூர் என்றாலே எல்லோருக்கும் குஷிதான். அதுவும் மாணவர்களுக்குச் சொல்லவேண்டுமா? 1978 ம் வருடம் என்று நினைக்கிறேன். நான் மதுரை விவசாயக் கல்லூரியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு ஆல் இந்தியா டூர், இறுதி ஆண்டு மாணவர்களுக்காக ஏற்பாடு செய்தார்கள். மாணவர்களுடன் மூன்று ஆசிரியர்களும் துணையாகப் போகவேண்டும். மொத்தம் 75 மாணவர்கள், இரண்டு அட்டெண்டர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்கள். ஆக மொத்தம் 80 பேர். நான்தான் இந்தக்குழுவிற்கு தலைமை.

ஆசிரியர்களும் இப்படி டூர் செல்வது ஒரு மாற்றத்திற்காகத்தான், ஆனால் பொறுப்பு மிக மிக அதிகம். மொத்த மாணவர்களின் நலனும் ஆசிரியர்களின் கையில்தான். அவர்களை பத்திரமாக திருப்பி ஊர் கொண்டு வந்து சேர்ப்பது வரை வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருப்பது போல்தான் இருக்கும்.

நான் பல டூர்கள் மாணவர்களுடன் போயிருக்கிறேன். என் அதிர்ஷ்டம், எந்த விதமான துர்ச்சம்பவங்களும் நிகழ்ந்ததில்லை. ஆனால் சோதனைகள் பல வந்தன. அவைகளை எப்படி சமாளித்தேன் என்பதுதான் இந்தத் தொடரின் மையக்கருவாகும்.

அந்தக் காலத்தில் ஒரு இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் ரயில் கோச்சில் சரியாக 80 சீட்கள்தான். ஆகவே ஒரு முழு கோச்சுக்கான பர்மிஷன் ரயில்வே ஆபீசுக்கு எழுதி வாங்கினோம். இந்த மாதிரி ஒரு தனி கோச் புக் செய்வதில் என்ன சௌகரியம் என்றால் டூர் முடியும் வரை இந்தக் கோச் எங்கள் வசமே இருக்கும். மாணவர்கள் இந்தக்  கோச்சிலேயே தங்கிக்கொள்ளலாம். ஹோட்டல் ரூம் வாடகை மிச்சமாகும். இந்தக் கோச்சை ஸ்டேஷன் வாசலுக்குப் பக்கத்திலேயே ஒரு தனி ட்ரேக் இருக்கும். அதில் விட்டு விடுவார்கள். வெளியில் போகவர வசதியாக இருக்கும். அந்தக் காலத்தில் இந்த மாதிரி தனிக்கோச்சுகளுக்கு சார்ஜ் மிகவும் குறைவு. இப்போது மிக அதிகமாக ஏற்றி விட்டார்கள் என்று கேள்வி.

ஆசிரியர்களான எங்களுக்கு முதல் வகுப்பு தகுதி இருந்தாலும் நாங்களும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி இந்தக் கோச்சிலேயே பயணம் செய்தோம். ஆனால் தங்குவது மட்டும் ஹோட்டலில். அதற்கு காரணம் மாணவர்கள் சுதந்திரமாக இருக்கட்டும் என்பதுதான். தவிர, நாங்களும் சுதந்திரமாக இருக்கலாம் அல்லவா?

மதுரையிலிருந்து சென்னை வரையிலும் சாதா ரிசர்வ்டு கம்பார்ட்மென்டில்தான் பயணம் செய்தோம். சென்னையில்தான் எங்களுக்கு ஸ்பெஷல் கோச் கொடுப்பதாக ஏற்பாடு. ஏனென்றால் மதுரையிலிருந்து சென்னை வரை மீட்டர்கேஜ். (1978ல்) சென்னையிலிருந்துதான் பிராட்கேஜ் பாதை. நாங்கள் சென்னையிலிருந்து போகும் மற்ற ஊர்களுக்கெல்லாம் பிராட்கேஜ் பாதைதான். சென்னை சென்ட்ரல் நிலைய ஸ்டேஷன் சூப்பிரன்டென்ட், எங்களுடன் வேலை செய்யும் ஒரு நண்பரின் உறவினர். அவரிடம் முன்பே சொல்லி வைத்திருந்ததனால் எங்களுக்கு ஒரு புத்தம் புது கோச் அலாட் செய்திருந்தார்.

மாணவர்களுக்கு அந்தக் கோச்சைப் பார்த்தவுடன் ரொம்பக் குஷி. ஏனென்றால் அந்தக் கோச்சில்தான் ஏறக்குறைய இருபது நாள் அவர்கள் பயணம் செய்வதுடன் தங்கவும் வேண்டும். இப்படிப்பட்ட புது கோச் ஏற்பாடு பண்ணின ஆசிரியரான என் மதிப்பு பல மடங்கு கூடியது என்று சொல்லவும் வேண்டுமா? மும்பையில் இந்தக் கோச்சை ஏறக்குறைய கோட்டை விடப்பார்த்தேன். அதிலிருந்து தப்பித்தது என் பூர்வ ஜன்ம புண்ணியம். (அந்தக் கதை பின்னால் வருகிறது)