சுற்றுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுற்றுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 நவம்பர், 2010

ஹரித்துவாரும் ரிஷிகேசமும்



ஹரித்துவாரில் கங்கையில் குளிப்பது என்பது ஒரு தனி அனுபவம். உண்மையில் நாம் குளிப்பது கங்கை கால்வாயில்தான். இருந்தாலும் இது காசியில் கங்கா ஸ்நானம் செயவதைவிட உற்சாகமாக இருக்கும். காசியில் கங்கை ஓடுவதே தெரியாது. சமவெளியாதலால் நதியின் வேகம் மிகவும் குறைந்து நதி ஓடுவதே தெரியாமல் இருக்கும். ஆனால் ஹரித்துவார் இமய மலையின் அடித்துவாரம். இமயமலையின் ஆழமான சரிவுகளில் ஓடிவரும் கங்கை இன்னும் சாந்தமடையாத நிலை. சற்று கவனக்குறைவாக கங்கையில் இறங்கினால் தன் உற்பத்தி ஸ்தானத்துக்கே, அதாவது மகேஸ்வரனின் ஜடாமுடிக்கே, அழைத்துச் சென்றுவிடுவாள். அவ்வளவு வேகம்.

அந்த வேகத்தை பல தடுப்பணைகள் முலமாகக் கட்டுப்படுத்தி கால்வாய்கள் மூலமாக கங்கையை ஹரி-கி-பியாரிக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த கால்வாய் நெடுகிலும் குளிப்பவர்களின் சௌகரியத்திற்காக படித்துறை கட்டி, இரும்பு குழாய்களை நட்டு அவைகளை இணைத்து கெட்டியாக இரும்புச்சங்கிலி போட்டிருக்கிறார்கள். குளிப்பவர்கள் இந்த இரும்பு சங்கிலிகளைப் பிடித்துக்கொண்டு குளிப்பது பாதுகாப்பாக இருக்கும். இந்த சங்கிலிகள் இன்னொரு விதத்திலும் பாதுகாப்பானது. கங்கைக் கால்வாயின் நீர் ஏறக்குறைய ஐஸ் கட்டியை உருக வைத்தது போல இருக்கும். முதல் தடவை இங்கு குளிப்பவர்களின் உடல் குளிர் ஜுரம் வந்தவர்கள் உடம்பு போல நடுங்கும். அப்போது இந்த இரும்பு சங்கிலிகள்தான் ஆதரவாக இருக்கும்.

ஆனால் இந்த ஊர் வாண்டுப் பையன்கள் எந்த வித பயமும் இல்லாமல் கால்வாயின் குறுக்கே கட்டியிருக்கும் பாலத்திலிருந்து கால்வாய்த்தண்ணீரில் குதித்து விளையாடுகிறார்கள். அதில் ஒரு சில வாண்டுகள் அந்த மாதிரி குதித்துக்காட்டுவதற்காக யாத்திரீகர்களிடம் பணம் கேட்பதுவும் உண்டு. ஐந்து ரூபாய் கொடுத்தால் ஒரு முறை ஜம்ப் செய்து காண்பிப்பார்கள். அவர்களுக்கு பழக்கமானதால் குளிர் அவர்களுக்கு உறைப்பதில்லை.

காலையில் நேரத்தோடு வெறும் வயிற்றில் குளிப்பது நல்லது. தண்ணீரில் ஒரு முறை முங்கி எழுந்துவிட்டால் அப்புறம் குளிர் போய்விடும். தண்ணீரை விட்டு வெளியில் வரவே மனது வராது. அழுக்குத்துணிகளைத் துவைத்து பக்கத்திலுள்ள செடிகளின் மேல் காயப்போட்டுவிட்டு குளித்துவிட்டு வந்தால் துணிகள் காய்ந்து இருக்கும். அவைகளைப் போட்டுக்கொண்டு, கங்கா மாதா கோவிலுக்குப் போய் தரிசனம் செய்துவிட்டு ரூமுக்கு வந்தோம். முருகேசன் கடையில் இட்லி வாங்கி சாப்பிட்டோம்.

பிறகு ஹரித்துவாரில் அடுத்து மிகப்பிரபலமானமன்ஸா தேவிகோவிலைப் பார்க்கலாம் என்று புறப்பட்டோம். இந்தக்கோவில் ஒரு சிறிய மலைக்குன்றின் மேல் இருக்கிறது. கோவிலுக்குப் போவதற்கு நல்ல பாதை போட்டிருக்கிறார்கள். கூடவே கேபிள் கார் சேவையும் இருக்கிறது. பெரும்பாலானவர்கள் டூரிஸ்ட்கள் ஆனதால் நேரத்தை மிச்சப்படுத்த கேபிள் காரையே பயன்படுத்துகிறார்கள். நாங்கள் ஹோட்டலிலிருந்து ஆட்டோ ரிக்சா மூலம் கோவில் அடிவாரத்தை அடைந்தோம். கேபிள் காருக்கு போகவர டிக்கெட் வாங்கி கேபிள் காருக்காக கொஞ்சம் நேரம் காத்திருந்தோம். பிறகு கேபிள் காரில் ஏறி மேலே கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.

நான் பலமுறை இந்தக் கோவிலுக்குப் போயிருக்கிறேன். ஒவ்வொரு முறை போகும்போதும் கோயிலில் கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இந்த அம்மனின் பெயர்மன்ஸா தேவி”. இந்த அம்மனை மனதில் என்ன நினைத்து வேண்டிக்கொண்டாலும் அது கண்டிப்பாக நிறைவேறும் என்று பெயர் பெற்றது. அம்மனின் குங்குமப் பிரசாதம் கோவில் முழுவதும் பரவிக்கிடக்கிறது. உங்கள் ஆடை எங்கு உரசினாலும் குங்குமம் ஒட்டிக் கொண்டு விடும். நான் எந்தக் கோவிலுக்குப் போனாலும் எதையும் குறிப்பிட்டு வேண்டிக்கொள்வது இல்லை. எனக்கு என்ன வேண்டும் என்று கடவுளுக்குத் தெரியும். எனக்கு என்ன பிராரப்தமோ அது எனக்கு கிடைக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை உடையவன் நான். அதனால் கோவிலுக்குப் போனால் ஒரு நமஸ்காரம் போட்டுவிட்டு வந்துவிடுவேன். இங்கும் அதே மாதிரி செய்தேன். கொஞ்ச நேரம் அங்கு உட்கார்ந்துவிட்டு கீழே வந்தோம்.

ரூமுக்குப் போவதற்கு ஆட்டோக்காரன் வரும்போது கொடுத்ததைவிட இரண்டு மடங்கு வாடகை கேட்டான். வேறு வழியில்லாததால் அவன் கேட்ட வாடகையைக் கொடுத்து ரூமுக்கு வந்து சேர்ந்தோம். சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடுத்தோம்.

தொடரும்….

செவ்வாய், 16 நவம்பர், 2010

ஹரித்துவாரும் ரிஷிகேசமும் - 2.

ஹரித்துவாரில் பார்க்கவேண்டிய இடங்களில் தலையானதுகங்கா ஆரத்தி”. பலரும் இதைப்பற்றி பதிவிட்டிருப்பார்கள் அல்லது யூட்யூப்பில் விடியோவாக தரவேற்றியிருப்பார்கள். இருந்தாலும் நானும் என் கடமையைச் செய்ய வேண்டுமல்லவா? அதற்காக என் பங்கை இங்கே அளிக்கிறேன்.

வட இந்தியாவில் கங்கை நதிக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், பக்தியும் உண்டு. கங்கை நதியை கடவுளாகவே அங்குள்ள மக்கள் வணங்குகிறார்கள். கங்கா மாதாவுக்கு ஜே! என்பது அங்கு அடிக்கடி கேட்கக்கூடிய கோஷம். காரணம் கங்கை நதிதான் அவர்களுக்கு உயிர் போன்றது. அந்த ஜீவநதிதான் கங்கை சமவெளியில் விவசாயத்திற்கு ஆணிவேர் போன்றது. எல்லா முக்கிய நகரங்களும் கங்கை அல்லது யமுனா நதிக்கரையில்தான் அமைந்துள்ளன. கங்கை அவர்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஆகவே அவர்கள் அந்நதியை பக்தியுடன் வழிபடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

காசியிலும் ஹரித்துவாரிலும் அனுதினமும் மாலையில் கங்கைக்கு ஆரத்தி காட்டி வழிபடுகிறார்கள். இந்த வழிபாட்டில் தினமும் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் கலந்து கொள்கிறார்கள். ஹரித்துவார் சென்றுவிட்டு கங்கா ஆரத்தி பார்க்காமல் வருபவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இந்த ஆரத்தி மாலை சுமார் ஆறரை மணிக்கு ஆரம்பிக்கிறது. இந்த நேரம் சூரிய அஸ்தமன நேரத்தை ஒட்டி மாறும். ஆரத்தி ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே யாத்திரீகர்கள்ஹரி-கி-பியாரிஎன்னுமிடத்தில் கூட ஆரம்பித்து விடுகிறார்கள். உண்மையில் இந்த இடம் கங்கை நதிக்கரை அல்ல. கங்கையின் வேகத்தைக் கட்டுப்படுத்தி கால்வாயின் மூலம் கங்கை நீரை இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள். ரிஷிகேசத்தில்தான் உண்மையான கங்கைக்கரையில் ஆரத்தி நடைபெறுகிறது.

ஹரி-கி-பியாரியில் கங்கா மாதாவுக்காக ஒரு புராதன கோவில் இருக்கிறது. அதைச்சுற்றி பல கோவில்கள் இருக்கின்றன. கோவில் என்றால் உடனே மதுரைக் கோவிலைக் கற்பனை பண்ண வேண்டாம். சென்னையில் தெருவோரங்களில் இருக்கும் நடைபாதைக் கோவில்கள் சைஸில்தான் எல்லாக்கோவில்களும் இருக்கின்றன. அபரிமிதமான பக்தி மனதில் இருந்தால்தான் இந்தக்கோவில்களை ரசிக்க முடியும். இந்த கங்கா மாதா கோவில் பூஜாரி ஆரத்தி காட்ட ஆரம்பித்த பிறகுதான் மற்ற கோவில்களின் பூஜாரிகள் ஆரத்தி காட்டுகிறார்கள்.

மாலை ஐந்து மணியிலிருந்தே பக்தர்கள் ஹரி-கி-பியாரியில் கூட ஆரம்பித்து விடுகிறார்கள். கூட்டம் ஓரளவிற்கு சேரும்போது, கூட்டத்தை ஒழுங்கு படுத்த சில தொண்டர்கள் வருகிறார்கள். அவர்கள் ஏதோவொரு சேவா-ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள். கூட்டத்தை ஒழுங்கு படுத்திக்கொண்டு இருக்கும்போதே, அவர்கள் செய்யும் பொதுத் தொண்டுகளுக்காக நன்கொடையும் வசூலிக்கிறார்கள். நன்கொடை கட்டாயமல்ல. ஆனாலும் நிறையப் பேர்கள் நன்கொடை கொடுக்கிறார்கள். மைக்கிலும் இந்த சேவா ஸ்தாபனத்தைப்பற்றி அறிவிப்பு செய்கிறார்கள். ஆரத்தி நேரம் நெருங்க நெருங்க கூட்டம் நிறையவே சேர்ந்து விடுகிறது. எங்கு பார்த்தாலும் மனித தலைகள்தான் தெரிகின்றன. உட்கார இடம் கிடைக்காதவர்கள் ஆங்காங்கே நின்றுகொண்டும் இருக்கிறார்கள்.

ஆரத்தி நேரம் வந்தவுடன் மைக்கில் ஆரத்தி பாட்டு போடப்படுகிறது. எல்லோரும் பேச்சை நிறுத்திவிட்டு கோவில்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். எல்லாக்கோவில்களின் முன்பும் ஆரத்தி விளக்குகள் திரி போட்டு எண்ணை விட்டு தயாராக வைக்கப்பட்டு இருக்கின்றன. ஆரத்தி நேரம் வந்தவுடன் கங்கா மாதா கோவிலில் அம்மனுக்கு வழிபாடு செய்கிறார்கள். அந்த மணி ஓசை கேட்டவுடன் அனைத்து கோவில் பூஜாரிகளும் தயாராக நின்று கொள்கிறார்கள். தலைமைப்பூஜாரி அம்மன் பூஜையை முடித்துவிட்டு வெளியில் வந்து நிற்கிறார். அவருடைய ஆரத்தி விளக்கை (பல அடுக்குகள் கொண்டது) அசிஸ்டன்ட் பூஜாரி ஏற்றி அவரிடம் கொடுக்கிறார். எல்லோரும் பலமாககங்கா மாதா கி ஜேஎன்று கோஷமிடுகிறார்கள். தலைமைப்பூஜாரி அந்த விளக்கை வாங்கிக்கொண்டு கங்கைக்கு ஆரத்தி காட்ட ஆரம்பிக்கிறார். உடனே மற்ற கோவில் பூஜாரிகளும் அவரவர்கள் விளக்குகளைப் பற்ற வைத்து ஆரத்தி காட்டுகிறார்கள். சுமார் இருபத்தியைந்து பூஜாரிகள் ஆரத்தி காட்டுகிறார்கள். எல்லோரும் ஆரத்தி காட்டும்போது அது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. மக்கள் கோஷம் விண்ணைப் பிளக்கிறது.

இந்த பூஜாரிகள் ஆரத்தி காட்ட ஆரம்பித்தவுடன், மக்கள் தாங்கள் கொண்டு வந்திருக்கும் ஒரு இலையால் ஆன பூக்கூடையில் உள்ள விளக்கைப் பொருத்தி, கங்கை நதியில் பக்தியுடன் விடுகிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் இவ்வாறு விடும் விளக்குகளினால் கங்கை ஆறே விளக்கு மயமாக காட்சி தருகிறது. ஒரு பக்கம் பூஜாரிகள் காட்டும் ஆரத்தி விளக்குகள்! இன்னொரு பக்கம் மக்கள் விடும் விளக்குக்கூடைகள்! பார்க்க மிகவும் பரவசமாக இருக்கிறது. மக்களின் பக்திப்பெருக்கு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

பூஜாரிகள் காட்டும் ஆரத்தி விளக்குகள் பல அடுக்குகள் கொண்டவை. கனமும் பல கிலோக்கள் இருக்கும். அந்த கனம் மிகுந்த விளக்குகளை அநாயாசமாகப் பிடித்துக்கொண்டு அவர்கள் ஆரத்தி காட்டும் நேர்த்தியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அதுவும் ஏறத்தாழ பத்து நிமிடங்களுக்கு ஆரத்தி காட்டுகிறார்கள். இது உண்மையிலேயே ஒரு சாதனைதான். இவ்வாறு ஆரத்தி காட்டி முடிந்ததும் பூஜாரிகள் கோவிலுக்குள் போய்விடுகிறார்கள். மக்கள் கூட்டம் கலைய ஆரம்பிக்கிறது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் கலைய ஆரம்பித்தால் எப்படிப்பட்ட களேபரம் இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆனாலும் எந்த அசம்பாவிதமும் நடப்பதில்லை. நல்ல இருட்டு வந்து விடுவதால் குழுவாகச் செல்பவர்கள் சிறிது நேரம் பொறுத்திருந்து வழிதெரிந்தவர்களின் பின்னாலேயே போவது நல்லது. புது ஊரில் வழி தவறிவிட்டால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கவேண்டும்.



திரும்பும்போது மனது பக்தி பரவசத்தினால் நிறைந்து இருந்தது. இந்துக்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது கங்கா ஆரத்தியைக் காணவேண்டும்.

தொடரும்

சனி, 13 நவம்பர், 2010

ஹரித்துவாரும் ரிஷிகேசமும்-பாகம் 1

முன் தொடர்ச்சி: மாலை ஐந்து மணி சுமாருக்கு ஹரித்துவார் வந்து சேர்ந்தோம். ஒரு லாட்ஜ் பிடித்து தங்கினோம்.”

இப்படி போன பதிவில் முடித்திருந்தேன். ஆனால் இதன் பின்னணியில் ஒரு இரண்டாயிரம் ரூபாயைப் பறிகொடுத்த சோகக்கதை ஒன்று இருக்கிறது.

கோவையிலிருந்து டில்லிவரையில் விமானப்பயணம். அங்கிருந்து ஹரித்துவார் வரை ரயில் பயணம். ஹரித்துவார் வந்து இறங்கியதும் நாங்கள் புக் செய்திருந்த டூரிஸ்ட் டாக்சிக்காரர் அன்றே கேதார்நாத்திற்கு புறப்படவேண்டுமென்று சொல்லியிருந்தார். ஆகவே காலைக்கடன்களை முடித்துவிட்டுப் புறப்படுவதற்காக, ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் இருக்கும் ஐயப்பன் கோவில் ரூமுக்குச் சென்று 2 மணி நேரத்துக்கு ரூம் எடுத்து குளித்து தயாரானோம். ஐயப்பன் கோவில் வாசலில் சென்னையைச் சேர்ந்த முருகேசன் என்பவர் ஒரு தள்ளுவண்டியில் இட்லிக்கடை நடத்துகிறார். அந்தக்கடையில் ஆளுக்கு நாலு இட்லி வாங்கி சாப்பிட்டோம். எங்கள் டாக்சிக்கு போன் செய்தோம். டாக்சி வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னார்கள்.

அப்போது ஒரு யோசனை தோன்றியது. கேதார்நாத், பத்ரிநாத் பார்த்துவிட்டு வந்ததும் ஹரித்துவாரில் 4 நாட்கள் தங்குவதாக புரோக்ராம். அதனால் ஒரு லாட்ஜில் ரூமுக்கு சொல்லிவிட்டுப்போனால் சௌகரியமாக இருக்குமே என்ற முன்னெச்செரிக்கை உணர்வு வந்தது. அதனால் பக்கத்தில் பார்ப்பதற்கு நன்றாக இருந்த ஒரு லாட்ஜில் நாங்கள் திரும்பி வரும் நாளைக்கு இரண்டு ரூம் வேண்டுமென்று பேசி இரண்டாயிரம் ரூபாய் அட்வான்ஸாகக் கொடுத்தோம். அப்புறம் டாக்சி வந்தது. அதில் ஏறி கேதார்நாத், பத்ரிநாத் போய் வந்ததை விரிவாகப் பார்த்தோம்.

திரும்பி வந்ததும் நேராக நாங்கள் ரிசர்வ் செய்திருந்த லாட்ஜுக்குப் போய் எங்களுக்குக் கொடுத்த ரூமில் தங்கினோம். அப்போது மாலை மணி நான்கு. ரூமுக்குள் போனதுமே ஒரு மாதிரியான வாடை எங்கள் மூக்கைத் தாக்கியது. படுக்கை, தலையணைகளை வெகு நாட்கள் வெயிலில் போடாமல் வைத்திருந்தால் வருமே அந்த வாடை. ஒருவரும் பெட்டிகளைத் திறக்கவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் ஒரு சில நிமிடங்கள் யோசித்தேன். பிறகு இந்த ரூம்களில் தங்கமுடியாது என்ற முடிவுக்கு வந்தேன். உடனே சம்பந்தியைக் கூட்டிக்கொண்டு மெயின் ரோடுக்குச் சென்று சர்வே செய்தேன். ஒரு லாட்ஜ் கொஞ்சம் நன்றாக இருந்தது. அங்கு சென்று விசாரித்ததில் ரூம்கள் இருக்கிறதென்று சொன்னார்கள். உடனே இரண்டு ரூம்கள் அட்வான்ஸ் கொடுத்து புக் செய்தோம்.


பழய லாட்ஜுக்கு வந்து விவரத்தை சொன்னவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இப்போது பிரச்சினை என்னவென்றால் லாட்ஜுக்காரனிடம் என்ன சொல்லி வெளியேறுவது என்பதுதான். அரசுப்பணியில் இந்த மாதிரி சமயங்களில் எவ்வளவு பொய் சொல்லி சமாளித்திருக்கிறோம். அந்த அனுபவம் கை கொடுத்தது. அந்த லாட்ஜ் மேனேஜரிடம் போய்ஊரிலிருந்து அர்ஜன்டாக வரச்சொல்லி ஒரு போன் வந்தது. நாங்கள் உடனே போக வேண்டும். ஆகவே ரூமைக்காலி செய்கிறோம். எங்கள் அட்வான்ஸைத் திருப்பித்தர வேண்டாம்என்று சொன்னோம். அவனும் சந்தோஷப்பட்டு எங்களைப் பத்திரமாகப் போகச்சொல்லி விடை கொடுத்தான். அவனிடம் என்னுடைய வோட்டர் ஐ.டி. கார்டை அடையாளத்திற்காக கொடுத்து வைத்திருந்தேன். அதைத் திரும்ப வாங்கிக் கொண்டு இரண்டு ஆட்டோ பிடித்து புது லாட்ஜுக்கு வந்து சேர்ந்தோம். ரூமைப்பார்த்தவுடன் பெண்களுக்கெல்லாம் மகிழ்ச்சி. பணம் போனால் போகிறது, நாம் சௌகரியமாக இருப்பதுதான் முக்கியம் என்று எல்லோரும் ஏக மனதாகச் சொல்லி விட்டார்கள். இப்படியாக இரண்டாயிரம் ரூபாயை காந்தி கணக்கில் எழுதினோம்.

அடுத்ததாக சாப்பாட்டுப் பிரச்சினையை எப்படித் தீர்க்கலாம் என்று யோசித்து எனக்குத் தெரிந்த ஐயப்பன் கோவில் வட்டாரத்தில் ஒரு வட்டம் அடித்தோம். நம்ம இட்லிக்கடை முருகேசன் ஒரு ஹோட்டலை சிபாரிசு செய்தார். அன்று இரவு அங்கு சாப்பிட்டோம். திருப்திப்படவில்லை. அடுத்த நாளும் சர்வே செய்து ஒரு ஹோட்டலைக் கண்டுபிடித்தோம். ஓரளவு பரவாயில்லை. சம்பந்திகள் சாப்பிட்டுவிட்டு நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள். அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன். அந்த ஹோட்டலின் படத்தைப் பார்க்கவும்.



தொடரும்….