தமிழ்ச்சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்ச்சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 மே, 2016

கோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச் சங்கம் - எதிர்காலத்திட்டங்கள்

                                    Image result for tamil vazhkai thathuvam
சங்கம் ஆரம்பித்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இன்னும் உருப்படியாக ஏதும் செய்யவில்லை. இப்படியே போனால் நம்மை கிறுக்கர்கள் என்று எல்லோரும் கேலி செய்வார்களே என்று யோசித்தேன்.

செயலாளர் நண்பர் சொன்னார். சங்கத்தின் பெயரிலேயே கிறுக்கர்கள் சங்கம் என்று பெயர் வைத்துவிட்டு எல்லோரும் நம்மைக் கிறுக்கர்கள் என்று சொல்வார்களே என்றால் எப்படி?

அதுவும் ஒரு விதத்தில் நியாயம்தான் என்று ஒப்புக்கொண்டு, அடுத்து தமிழர்களை முன்னேற்ற என்ன செய்யலாம் என்று யோசித்தேன். இந்த திட்டத்திற்கு முதலாவதாக தமிழர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது அவசியம். அப்புறம்தான் அவர்களை முன்னேற்றுவது எப்படி என்று யோசிக்க முடியும். இதற்கு என்ன செய்யலாம் என்று செயலாளரைக் கேட்டேன்.

ஒரு பல்கலைக் கழகத்துடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்வோம். அங்குள்ள தமிழ்த்துறை தலைவருடன் பேசி இதற்கு ஒரு செயல் திட்டம் தீட்டுவோம் என்றார். இது நல்ல யோசனையாக இருக்கிறதே, அப்படியே செய்வோம், ஒரு நல்ல பல்கலைக்கழகமாகத் தேர்வு செய்யுங்கள் என்றேன்.

எனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள். அனைத்து ஏற்பாடுளையும் செய்து விட்டு உங்களைச் சந்திக்கிறேன் என்றார். அப்படியே செய்யுங்கள் என்று விடைகொடுத்து அவரை அனுப்பி வைத்தேன்.

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

கோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச் சங்கம்-துவக்க விழா

நான்கு நாள் முன்னமேயே இந்தப் பதிவு வெளிவந்திருக்கவேண்டும். தமிழர்கள் வழக்கப்படி இன்று லேட்டாக வெளிவருகிறது.

கோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச் சங்கத்தின் துவக்க விழா நேற்று அதாவது ஸ்ரீதுன்முகி ஆண்டு சித்திரை ஒன்றாம் தேதி (14-4-2016) அன்று கோலாகலமாகக் கொண்டாடப் பட்டது. கூட்டத்திற்கு மொத்தம் மூவாயிரம் பேர் வந்திருந்தார்கள் என்று சொல்ல விருப்பம்தான். ஆனால் வந்திருந்ததோ மூன்று பேர்கள்தான்.
நான், என் இரு நண்பர்கள், ஆகக்கூடி மூன்று பேர்கள். இதற்கெல்லாம் அசந்து விடுவேனா?  "அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும்" என்ற கொள்கையில் வளர்ந்தவனாச்சே. நாங்கள் மூவரும் முதலில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டோம். நான் தலைவர். ஒரு நண்பர் உபதலைவர். இன்னொரு நண்பர் காரியதரிசி.

இந்த சங்கத்தின் மூலமாக தமிழை வளர்ப்பது எப்படி என்று ஆலோசனை நடத்தினோம். பாண்டிய மன்னன் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சரித்திரம் எல்லோருக்கும் தெரியும். அதே போல் இந்த சங்கத்தையும் பிரபலமாக்குவோம் என்று தீர்மானம் போட்டோம். பின்பு நான் பேசும்போது கூறினேன். தமிழை வளர்க்க முதல் தேவை தமிழன் வளரவேண்டும். தமிழனை எப்படி வளர்த்தலாம் என்று ஆலோசித்ததில் பின்கண்ட யோசனைகள் உதித்தன.

1. தமிழனுக்கு தமிழ்ப்பற்று இல்லை. பேசுவது ஆங்கிலத்தில். பார்ப்பது இந்தி சினிமா. வேலைக்குப் போவது அமெரிக்கா. அங்கு போய் குழந்தை குட்டி எல்லாம் பெத்ததுக்கப்புறம்தான் தான் தமிழன் என்பது ஞாபகம் வரும். உடனே இவனைப்போல் இருப்பவர்கள் எல்லாம் கூடி ஒரு தமிழ்ச்சங்கம் ஆரம்பிப்பார்கள். அதில் நடவடிக்கைகள் எல்லாம் அமெரிக்க ஆங்கிலத்தில்தான் இருக்கும்.

2. கல்லூரியில் படிக்கும் பெண்கள் எல்லாம் தமிழில் பேச வெட்கப்படுகிறார்கள். அவர்கள் பேசும் ஆங்கிலம் அவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய ஒரு பரிபாஷை.

3. தமிழ் சீரியல்களில் வரும் பெண்கள் சீலை கட்டுவதில்லை.

4. ஆகவே இனிமேல் தமிழர்கள் எங்கு இருந்தாலும் ஆண்கள் வேட்டி, சட்டைதான் அணியவேண்டும். பெண்கள் சேலைதான் உடுத்தவேண்டும். சிறு பையன்கள் ஆப்-டிராயர் போட்டுக்கொள்ளலாம். சிறு பெண்கள் பாவாடை, தாவணிதான் போட்டுக்கொள்ளவேண்டும்.

இந்த நடைமுறைகளை அனுசரிப்பவர்கள்தான் தமிழர்கள். மற்றவர்கள் வந்தேறிகள். இந்த நடைமுறைகளை தமிழர்கள் எந்த அளவிற்கு கடைப் பிடிக்கிறார்கள் என்று கணித்த பிறகு அடுத்த கட்ட செயல்பாடுகளைப் பற்றி விவாதிப்போம். இத்துடன் கூட்டம் கலைகிறது.

செவ்வாய், 29 மார்ச், 2016

கோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச் சங்கம்

Image result for பார்க்


பதிவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு


வருகிற ஸ்ரீதுன்முகி வருடம் சித்திரை மாதம் ஒன்றாம் தேதி (அதாவது 14-4-2016, வியாழக்கிழமை) கோவையில் ஒரு மகத்தான தமிழ் மறுமலர்ச்சித் திருவிழா நடக்கவிருக்கிறது. அதாவது தாய்த்தமிழை வளர்ப்பதற்காக ஒரு சங்கம் துவக்குகிறோம். இந்தச்சங்கத்திற்கு "கோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச்சங்கம்" என்று பெயர் வைத்திருக்கிறோம்.

கிறுக்கர்கள் என்றால் கிறுக்குபவர்கள் அதாவது பேப்பரில் அல்லது சுவர்களில் அல்லது இணையத்தில் கிறுக்குபவர்கள் என்று அர்த்தம். அதாவது எழுத்தாளர்கள் அல்லது இந்த பதிவர்கள் மாதிரி என்று வைத்துக்கொள்ளலாம். வேறு அர்த்தம் கொள்பவர்கள் தமிழ் விரோதிகள்.

இந்தச் சங்கத்தில் சேர எந்த வித சந்தாவும் தேவையில்லை. ஒரே தகுதி, அவர்கள் தாங்கள் கிறுக்கர்கள் என்று ஒப்புக்கொள்ளவேண்டும். அவ்வளவே.

இந்த சங்கத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் 13-4-2016 தேதிக்குள் அவர்களுடைய விண்ணப்பத்தை கீழ்க்கண்ட பதிவருக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

கிறுக்கர் பழனி.கந்தசாமி, மன அலைகள் பதிவு, மேற்பார்வை "கூகுள் பிளாக்கர்".

தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

துவக்க விழா 14-4-2016 அன்று சாய்பாபா காலனி இராமலிங்கம் காலனி நகராட்சி பூங்காவில் நடைபெறும். அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்து கொண்டு இந்த சங்கத்தை வலுப்படுத்த வேண்டும்.