தரமான உணவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தரமான உணவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 ஜனவரி, 2013

புரதத்தை ஏன் கொள்ளை விலைக்கு விற்கிறார்கள்?

சரவணன்
ஒரு சந்தேகம்- புரோட்டீன் உணவுகள் (பருப்பு, கறி, புரோடீன் பானங்கள் உட்பட) விலை அதிகமாக இருப்பது ஏன்? கார்போஹைட்ரேடை விட புரோடீனை விளைவிப்பது செலவு அதிகமாக இருப்பது ஏன்? ஆம்வே நியூட்ரிலைட் பானம் 1 கிலோ ஆயிரம் ரூபாய்க்குமேல். அதில் பலன் உண்டா?

கொள்ளைக்காரனைப் பார்த்து "ஐயோ, கொள்ளையடிக்கிறானே" என்று புலம்புவதில் பயனில்லை.

துவரைக் காய்கள்

புரதச்சத்து மனித உடலுக்கு எவ்வளவு அவசியம் என்று முன்பொரு பதிவில் பார்த்தோம். மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு புரதம் மிகமிக அவசியம்.
வளரும் குழந்தைகளுக்கு போதுமான புரதச்சத்து இல்லாவிட்டால் அவர்களுக்கு பல குறைபாடுகள் உண்டாகும்.

இன்றைய வளர்ந்த சமுதாயத்தில், குறிப்பாக நடுத்தர வருவாய் ஈட்டும் குடும்பங்களில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்று வளர்க்கிறார்கள். அவர்களைக் குறி வைத்துத்தான் விளம்பரங்கள் அனைத்தும் வெளிவருகின்றன.

புரதச்சத்து இல்லாவிட்டால் உங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள் என்று சொல்லிவிட்டால் போதும், இந்தப் பெற்றோர்கள் படும் பாடு இருக்கிறதே, அதை எழுத்தில் விளக்கவே முடியாது. மக்களின் இந்த குணத்தைப் பயன்படுத்தி பெரிய கம்பெனிகள் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் மக்களின் மனதை மூளைச்சலவை செய்து தங்கள் பொருட்களை வியாபாரம் செய்து விடுகிறார்கள். 

பத்து ரூபாய் பெறும் ஒரு சத்தை இவர்கள் விளம்பரத்தின் மூலம் ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறார்கள். "ஆம்வே" கம்பெனி இந்தக் கொள்ளையில் முதலிடம் வகிக்கிறது.

மனிதன் ஒழுங்கான உணவுப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தால் அவன் ஆரோக்கியமாக வாழ்வதற்குப் போதும். அரிசி, கோதுமை, துவரம்பருப்பு, அவரைப் பருப்பு, கொள்ளு, நல்லெண்ணை, கடலை எண்ணை, காய்கறிகள், பால் இந்த உணவுகளை முறையாக சாப்பிட்டு வந்தால் போதும். எந்தக் குறைபாடும் வராது.

வளரும் குழந்தைகளுக்கு வேர்க்கடலை அல்லது பொட்டுக்கடலை, வெல்லம், பால் இவை மூன்றுமே அவர்களுடைய புரதத் தேவையை பூர்த்தி செய்து, அவர்கள் நன்கு வளரப் போதுமானவை. கடைகளில் விற்கும் கண்ட கண்ட பானங்களையோ, பொருட்களையோ வாங்கிக் கொடுப்பதினால் ஒன்றும் பலனில்லை. ஆரோக்கியமான உணவுகளைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாததினால்தான் இவ்வாறு மக்கள் ஏமாந்து விடுகிறார்கள்.

புரதச்சத்து தானியங்கள் விலை அதிகமாக இருப்பதற்குக் காரணம் அவைகளின் விளைச்சல், மாவுச்சத்து தானியங்களை விடக் குறைவு. அதனால் அவைகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. ஒரு ஏக்கரில் நெல் 2 டன் விளையும். ஆனால் துவரம்பருப்பு 400-500 கிலோ மட்டுமே விளையும். தவிர நெல் 4 மாதத்தில் விளைந்துவிடும். துவரம்பருப்பு விளைய 8 மாதங்கள் ஆகும்.

இன்றைய பொருளாதார நிலையில் மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். தேவையில்லாமல் விளம்பரங்களைப் பார்த்து மயங்கி பணத்தை வீணாக்க வேண்டாம்.