பதிவர் விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவர் விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 அக்டோபர், 2015

பதிவர் திருவிழாவில் நான் சந்தித்த பதிவர்கள்

                                                Image result for brain diagram

மனித மூளையை கணினிக்கு ஒப்பாகச் சொல்வார்கள். அதாவது மூளையும் கணினியும் செய்திகளைச் சேகரித்து தன் நினைவில் வைத்துக்கொண்டு நமக்குத் தேவைப்படும் பொழுது கொடுப்பவை. ஆனால் கணினியை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ளலாம். ஆண்டுதோறும் புதுப்புது மாடல் கணினிகள் வந்து கொண்டே இருக்கின்றன.

என்னுடைய மூளையும் அதைத் தயார் செய்து அனுப்பியபோது நன்றாக வேலை செய்தது. நாளாக நாளாக அதன் செயல் திறன் குறைந்து இப்போது ஏறக்குறைய அதல பாதாளத்திற்குப் போய் விட்டது. சில விஷயங்களில் அது முன்பிருந்தே மெத்தனமாகத்தான் வேலை செய்து வந்து கொண்டிருந்தது. நானும் போன இடங்களிளெல்லாம் அதற்கு உதிரி பாகங்கள் கிடைக்குமா என்று விசாரித்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் இதற்கு மட்டும் உதிரி பாகங்கள் கிடையாது என்று சொல்லி விட்டார்கள்.

எனக்கு வெகு காலமாகவே மனிதர்களின் முகங்களையும் பெயர்களையும் சேர்த்து நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. பழைய மாணவர்களையோ அல்லது அறிமுகமானவர்களையோ வெகு நாட்களுக்குப் பிறகு சந்தித்தால் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று தோன்றுமே தவிர, அவர் யார் என்று சரியாகப் புரிபடாது. முன்பெல்லாம் ஒரு மாதிரியாகப் பேசி சமாளித்து அவர்களிடமிருந்து விடுதலை பெற்று விடுவேன். இப்போது வயதாகி விட்டபடியால் எனக்கு மனிதர்களை மறப்பதற்கு லைசென்ஸ் வந்து விட்டது.

அதனால் யாரையாவது பார்க்கும்போது அவரைச் சரியாக அடையாளம் தெரியாவிட்டால் தயக்கமில்லாமல் உங்கள் பெயர் மறந்து விட்டதே என்று சொல்லி அவர் பெயரைக் கேட்டு விடுவேன். அவர்கள் பெயரைச் சொல்லும்போதே தாங்கள் இன்னார் என்றும் சொல்லி விடுவார்கள். ஆகவே இப்போது இந்த "பெயர்-முகம்" குழப்பத்தினால் சிக்கல் ஏதும் இல்லை.

ஆனால் இன்னொரு குழப்பம் ரொம்ப நாளாகவே இருக்கிறது. யாரையாவது புதிதாகச் சந்தித்தால் அவர்கள் பெயர் மற்றும் அவர்களைப் பற்றிய விவரங்கள் சொல்லுகிறார்கள். நானும் அதை தலையைத் தலையை ஆட்டிக்கொண்டு கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் அந்தப் பக்கம் போனவுடன் அவர் பெயர் என்ன சொன்னார் என்று யோசித்தால் அவர் பெயர் நினைவிற்கு வருவதில்லை. முன்பெல்லாம் இந்த மாதிரி ஏதாவது நிகழ்வு நடந்தால் அதைப் பற்றி மிகவும் விசனப்படுவேன். இப்போது நான் முதிர்ச்சி அடைந்து விட்டதினால் இந்த மாதிரி நிகழ்வுகளைக் கண்டு கொள்வதில்லை. "போனால் போகட்டும் போடா" என்று விட்டு விடுகிறேன்.

போனால் போகட்டும் போடா பாடலை மறந்து விட்டவர்களுக்காக-


                        

இவைகளை எல்லாம் நான் ஏன் இப்போது விலாவாரியாகச்சொல்லுகிறேன் என்றால் என் புதுக்கோட்டை பதிவர் திருவிழா அனுபவம்தான்.

பதிவுலகத்திற்கு வந்த புதிதில் ஒரு டைரி போட்டு அதில் பதிவர்கள் பெயர், பதிவின் பெயர், இணையவிலாசம் எல்லாம் குறித்து வைத்தேன். பிறகு புரட்டிப்பார்த்தால் எல்லாம் டூப்ளிகேட் பெயர்கள். ஒருவரின் போட்டோவும் உண்மையாக இல்லை. நார் எந்த ஊரில் அல்லது எந்த நாட்டில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எனது சிற்றறிவிற்கு எட்டிய வரை முயன்று பார்த்துவிட்டு அந்த டைரியைக் கிழித்துப் போட்டேன்.

பிறகு பதிவர் சந்திப்புகள் வந்தன. நான்கைந்து சந்திப்புகளில் கலந்து கொண்டேன். அப்போது பதிவர்களை நிஜ உருவில் கண்டேன். ஆனாலும் அங்கேயும் இந்த பெயர்-முகம்-தளம் குழப்பம் தொடர்ந்தது. உதாரணத்திற்கு நெல்லைப் பதிவர் சந்திப்பில் ஒருவரைச் சந்தித்தேன். பெயர் என்னவென்று கேட்டேன். பெயர் சொல்ல விருப்பமில்லை என்றார். இது என்னடா வம்பாகிப்போச்சே என்று நகர்ந்து விட்டேன்.

பிறகுதான் தெரிந்தது. அவர் மத்திய அரசில் ஒரு முக்கியமான துறையில் ஒரு பொறுப்பான அதிகாரியாக இருக்கிறார் என்று. அவர் தன் துறைக் கட்டுப்பாட்டுகளுக்குப் பயந்து கொண்டு அந்த மாதிரி பெயர் வைத்திருக்கிறார். ஸ்கூல் பையன், வால் பையன், வெளங்காதவன், காட்டான், இப்படியெல்லாம் பதிவர்களின் பெயர்கள் இருக்கின்றன. என்னால் இவைகளை நினைவில் இருத்திக்கொள்ள முடியவில்லை. ஆகவே இந்தப் பெயர்களை நினைவில் இருத்தி அவைகளை பின் நினைவிற்கு கொண்டுவரும் முயற்சியைக் கைவிட்டேன்.

சில பதிவர்களை நேரில் தனியாக கண்டு பேசியிருக்கிறேன்.  புலவர் திரு. ராமானுசம் ஐயா, தருமி அவர்கள், திரு. சீனா, ஜிஎம்பி, வை.கோபாலகிருஷ்ணன், இப்படி சிலர் மட்டுமே நினைவில் அழியாமலிருக்கிறார்கள்.

புதுக்கோட்டைப் பதிவர் திருவிழாவில் நான் அதிகம் புது பதிவர்களைக் கண்டு கொள்வதில் ஆர்வமாக இல்லை. அப்படியும் சில பதிவர்களை புதிதாக அடையாளம் கண்டேன்.

விழா அன்று காலை மூன்று மணிக்கே வழக்கம்போல் எழுந்து விட்டேன். அந்நேரத்தில் மன்றத்திற்குப்போனால் ஒருவரும் இருக்கமாட்டார்கள் என்பதால் சும்மா வெளியில் வந்தேன். அந்தத் தெரு முனையில் இரண்டு டீக்கடைக்காரர்கள் அப்போதுதான் பாய்லர் அடுப்பைப் பற்ற வைத்து டீ தயார் செய்வதற்கான ஆரம்ப வேலைகளில் இருந்தார்கள். என்னைப்போல் இன்னும் இரண்டு மூன்று பேர் டீ குடிப்பதற்காக அங்கே காத்துக்கொண்டிருந்தார்கள். பதினைந்து நிமிடங்களில் டீ தயார் ஆகியது. டீயைக் குடித்து விட்டு ரூமிற்குத் திரும்பி வந்தேன்.

மணி மூன்றரை. அப்படியும் இப்படியும் திரும்பித் திரும்பிப் படுத்து எப்படியோ ஐந்தரை மணி வரை நேரத்தைப் போக்கினேன். பிறகு எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டுக் குளித்தேன். ஆடைகள் அணிந்த பிறகு மணியைப் பார்த்தால் ஆறரைதான் ஆகியிருந்தது. சரி என்ன ஆனாலும் ஆகட்டும் என்று ரூமை விட்டுப் புறப்பட்டு விழா மண்டபத்திற்கு சரியாக ஏழு மணிக்கு வந்து சேர்ந்தேன். மண்டபத்தில் ஈ, காக்கை இல்லை. அதாவது மண்டபம் அவ்வளவு சுத்தமாக இருந்தது. இரண்டு பெண்கள் தரையைக் கூட்டிக் கொண்டிருந்தார்கள்.

மீதி நாளைக்கு.


வெள்ளி, 16 அக்டோபர், 2015

புதுக்கோட்டைத் திருவிழா - என் பிரவேசம்



10-10-2015 சனியன்று  (அதாவது பதிவர் திருவிழாவிற்கு முன்தினம்) நான் புதுக்கோட்டை போய்ச்சேர்ந்தபோது மணி மாலை 6. எனக்கு எங்கு ரூம் போட்டிருக்கிறார்கள் என்று சரியாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சரி ஏன் வீணாக அலைவானேன், பதிவர் விழா நடக்கும் மன்றத்திற்கே போய் விட்டால் அங்கு விவரம் கேட்டுத்தெரிந்து கொள்ளலாம் என்று ஒரு ஆட்டோ வைத்துக்கொண்டு ஆரோக்யமாதா மக்கள் மன்றத்திற்குப் போய்ச் சேர்ந்தேன்.

இதற்கு முன் நடந்தவைகளைப் பற்றி ஒரு flashback. கமலஹாசன் தெனாலியில் ஒரு  flashback சொல்வாரே< நினைவிருக்கிறதா? அந்த மாதிரி ஒரு
Image result for சுழல்போட்டுக்கொள்ளுங்கள்.

நான் புதுக்கோட்டை போவதென்று முடிவு செய்தவுடனேயே, அங்கு போனால் எங்கு தங்குவதென்று யோசனை செய்தேன். விழாக்குழுவினருக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பினேன். ஒரு பதிலும் வரவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு பல கமிட்டிகள் போட்டிருப்பதாகவும் அதல் வ,வேற்புக் கமிட்டி என்று ஒன்று இருப்பதாகவும் ஒரு பதிவு வெளி வந்தது. அதில் மூன்று பேர்களின் பெயர் கொடுத்து அதில் யாரைத் தொடர்பு கொண்டாலும் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுப்பார்கள் என்று போட்டிருந்தது.

நான் திருமதி கீதா அவர்களுக்குப் போன் போட்டுப் பேசினேன். நான் என் தேவையைச் சொன்னதும் ஆஹா, பேஷச் செஞ்சுடறேன் அப்படீன்னாங்க. நான் நூன்று நாள் காத்திருந்தேன். ஒரு செய்தியும் வரவில்லை. இதற்கு நடுவில் நான் எங்கள் ஓய்வு பெற்றோர் சங்க ஆண்டு விழாவிற்காக கிருஷ்ணகிரி சென்றிருந்தேன். அப்போது நினைவிற்கு வந்தது. என்ன புதுக்கோட்டையில் இருந்து ஒரு தகவலும் காணோமே, சரி ஒரு குறுஞ்செய்தி கொடுத்து வைப்போமே என்று செல்போனிலிருந்து திருமதி கீதா அவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.

இந்த செய்தி அனுப்பிய நேரம் காலை 4.45 மணி. நான் என் வாழ்வில் சந்தித்திராத ஒரு அனுபவம் அப்போது நடந்தது. நான் குறுஞ்செய்தி அனுப்பிய அடுத்த நொடியில் எதிர் பக்கத்தில் இருந்து பதில் செய்தி. ஐயா, உங்கள் பெயரும் ஊரும் செல்லுங்கள் என்று செய்தி. நான் இந்த இரண்டையும் முதலில் கொடுக்க மறந்து விட்டேன். அந்த இரண்டு தகவல்களையும் கொடுத்தவுடன், ஐயா, கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள், இப்போதே ஆவன செய்கிறேன் என்று சொல்லிவிட்டு ஒரு பதினைந்து நிமிடத்தில் அறை முன்பதிவு செய்த ஓட்டலின் பெயர், அறைக்கட்டணம் ஆகிய விவரங்கள் வந்து விட்டன.

இவ்வளவு சுறுசுறுப்பாக விழாக் குழுவினர் தூக்கமில்லாமல் வேலை செய்கிறார்கள் என்றால் விழா நன்றாகவே நடக்கும் என்று எண்ணிக்கொண்டேன். அந்த எண்ணத்தையும் குறுஞ்செய்தி மூலம் கீதாவிற்கு அனுப்பினேன்.

இப்போது flashback முடிந்தது. நிஜத்திற்கு வருவோம். நான் புதுக்கோட்டையில் இறங்கி விழா மன்றத்திற்கு ஒரு ஆட்டோ வைத்துக்கொண்டு போனேன். சாதாரணமாக நான் சிறிய தூரத்திற்கெல்லாம் ஆட்டோ வைப்பதில்லை. ஆனால் அன்று கொஞ்சம் சோர்வாக இருந்ததினால் ஆட்டோ வைத்தேன்.

மன்றத்தின் வாசலில் இறங்கியதுமே திருமதி கீதா வாசலிலேயே ஏதோ வேலையாக நின்றிருந்தார்கள். என்னைப்பார்த்தவுடன் வரவேற்று மன்றத்திற்குள் அழைத்துச்சென்று திரு முத்துநிலவனிடம் அறிமுகப்படுத்தி விட்டு ஒரு சக தொண்டரிடம் என்னைக் கூட்டிக்கொண்டு போய் லாட்ஜில் விடுமாறு கேட்டுக்கொண்டார்கள். அவரும் அப்படியே என்னைக்கூட்டிக்கொண்டு போய் லாட்ஜில் அறிமுகப்படுத்தி விட்டார். உடனே ஒரு அறை (ரூம்) கொடுத்தார்கள். ரூம் நன்றாக இருந்தது.

                         

ரூமில் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கொண்டு மணியைப் பார்த்தேன். மணி ஏழுதான் ஆகியிருந்தது. சரி. மன்றத்திற்குப் போய் விழாக்குழுவினர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று பொடி நடையாக மன்றம் போனேன். விழாக்குழுவினர் பம்பரம்போல் பல வேலைகளையும் கவனித்துக்கொண்டிருந்தார்கள். கொஞ்சம் பதிவர்களும் வந்திருந்தார்க்ள. திரு.ரமணி, திரு.செல்லப்பா, திரு.கவியாழி கண்ணதாசன் ஆகியாரைச் சந்தித்தேன்.


                 
பிறகு வெளியில் மழை பெய்ய ஆரம்பித்தது. நல்லவர்கள் வந்தால் மழை வருமல்லவா? அந்த நல்லவர் யாரென்று சொல்ல தன்னடக்கம் தடுக்கிறது. மழை விட்டவுடன் பக்கத்தில் இருந்த ஒரு சிறிய ஓட்டலில் நான்கு இட்லி வாங்கி சாப்பிட்டு விட்டு ஒரு ஆட்டோ பிடித்து ரூமுக்குப் போய் தூங்கினேன். இட்லிக்குத்தான அநியாய விலை. நான்கு இட்லிக்கும் சேர்த்து 16 ரூபாய் வாங்கினார்கள். சரி, என்ன செய்ய முடியும்? கொடுத்துவிட்டு வந்தேன். எங்கள் ஊரில் அன்னபூர்ணாவில் இட்லி விலை ரொம்பவும் சலீசு. நான்கு இட்லிக்கும் சேர்த்து ஐம்பத்திரெண்டு ரூபாய் மட்டுமே வாங்குவார்கள்.

அடுத்த நாள் சமாச்சாரங்கள் அடுத்த பதிவில்.