பேங்க் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேங்க் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 மார்ச், 2013

5. தேவலோகத்தில் பேங்க் உதயம்.

மறு நாள் விடிந்ததும் நாரதர் பேப்பரும் கையுமாக வந்தார். அவர் வாயெல்லாம் பல்.

மந்திரி பிரபோ, தேவலோகம்  முழுவதும் நேற்று இரவு எங்கும்  ஒரே ஆட்டபாட்டம்தான். தேவர்களின் உற்சாகம் கரை புரண்டோடுகிறது, என்றார். நல்லது, கேட்க சந்தோஷமாக இருக்கிறது. இதற்காகத்தானே மும்மூர்த்திகள் என்னை இங்கு வரச்சொன்னார்கள். இன்னும் பல மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறேன், பார்த்துக்கொண்டிருங்கள் என்றேன். நாரதர் சரி என்றார்.

அப்புறம் நாரதரே, மகாபாரதத்தில் யுத்தம் ஆரம்பிக்கு முன்பாக தருமர் இங்கு யாரிடமோ கடன் வாங்க வந்தாராமே, அது யார் என்றேன். அதுங்களா, இங்கே குபேரன் என்று ஒருவன் அம்பாரம் அம்பாரமாக வைரம், வைடூர்யம், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவைகளை வைத்துக்கொண்டு இருக்கிறான், என்றார். அவனைக்கூப்பிடுங்கள் என்றேன்.

சிறிது நேரத்தில் அவன் வந்தான். வந்து மந்திரி பிரபோ வணக்கம், என்றான். வாரும் குபேரா, நீ அந்த இலங்கை ராவணனின் தம்பியல்லவோ என்றேன். அவன் கொஞ்சம் அசந்து விட்டான். பிரபுவிற்கு என்னுடைய குலம் கோத்திரம் எல்லாம் அத்துபடி போலிருக்கிறது என்றான். நான் எல்லாம் அறிவேன், இப்படி உட்கார் என்றேன்.

நீ வைத்திருக்கும் செல்வங்களையெல்லாம் என்ன செய்கிறாய் என்றேன். ஒன்றும் செய்வதில்லை என்றான். அப்படியா, அப்படி செல்வ லக்ஷ்மியை சும்மா வைத்திருக்கலாமோ, அது அபச்சாரமல்லவா? நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அப்படியே செய்யலாம் என்றான்.

அப்படியானால் இங்கு ஒரு தேவலோக பேங்க் ஆரம்பிக்கலாம், மயனைக்கூப்பிடுங்கள் என்றேன். மயன் வந்தான். மயா. இங்கு ஒரு பேங்க் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறோம். அதற்கு தேவ்லோக் பேங்க் என்று பெயர். ஸ்விட்சர்லாந்து என்று ஒரு நாடு பூலோகத்தில் இருக்கிறது. அங்குதான் உலகின் மிகப்பெரிய பேங்க் இருக்கிறது. நீயும் குபேரனும் அங்கு போய் அந்த பேங்க்கின் கட்டிடங்கள், பணம் வைக்கும் அறைகள் மற்றும் அதன் நடைமுறைகளைத் தெரிந்து வாருங்கள் என்றேன்.

ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்து விட்டார்கள். எல்லாம் பார்த்து விட்டோம் என்றார்கள். மயனே, அந்த மாதிரி இங்கு இன்னும் அலங்காரமாகவும், குபேரனின் செல்வங்கள் அனைத்தும் வைக்கும்படியாகவும் ஒரு பேங்க் கட்டுங்கள் என்றேன். உடனே தயாராகிவிட்டது.


குபேரா, இந்த பேங்கிற்கு நான் பிரசிடென்ட், நீதான் தலைமைக் கேஷியர், பொதுவும் செக்கும் டைரக்டர்கள். உனக்கு உதவிக்கு வேண்டிய ஆட்களை யமனிடமிருந்து வாங்கிக்கொள். இன்று மாலை திறப்பு விழா வைத்துக்கொள்ளலாம். இந்திரனுக்கு சமீபத்தில் ஒரு வேலையும் கொடுக்கவில்லை. அவனை வைத்து திறப்பு விழா நடத்துவோம். மும்மூர்த்திகளையும் விழாவிற்கு அழைத்துவிடுங்கள் என்றேன்.

மாலை நான்கு மணிக்கு "தேவலோக் பேங்க்" ஐ இந்திரன் ரிப்பன் வெட்டி திறந்தார். பேங்கிற்குள் இருக்கும் வசதிகளைப் பார்த்து மும்மூர்த்திகளும் அசந்து போய் விட்டனர். எல்லோரும் என்னை வாழ்த்த எனக்கு மிகவும் கூச்சமாகப் போய்விட்டது.


பிறகு விருந்துபசாரம் அரம்பித்தது. மேனகை, திலோத்தமை நடனத்துடன் ஆரம்பித்தோம். நளனும் பீமனும் தங்கள் திறமைகளை எல்லாம் காட்டி பலவித உணவு ஐட்டங்களை தயாரித்திருந்தார்கள். எல்லோரும் நன்றாக சாப்பிட்டுவிட்டு அவரவர் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார்கள்.

நாங்களும் தூங்கச்சென்றோம்.

அடுத்த பதிவு - 6. பூலோகத்தில் தேவலோக தூதரகம்.