பேசுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேசுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 மே, 2012

பேசுவது எப்படி?


பேசறதுக்குத் தெரியாதா? பிறந்ததிலிருந்து பேசிக்கொண்டுதானே இருக்கிறோம். இப்ப என்ன புதுசாக் கத்துக்கொடுக்கறாரு இந்த பதிவுலக விஞ்ஞானி அப்படீன்னு நினைக்கறீங்கதானே. உங்க நினைப்பு சரிதான். நம்ம வீட்டுக்குள்ளே, அல்லது ஊருக்குள்ளே விவசாயத்தைப் பார்த்துகிட்டு இருக்கறவங்களுக்கு அது போதும்.


ஆனால், இப்பொழுது எல்லோருக்கும் படிப்பில் ஆர்வம் மேலோங்கியுள்ள காலம். கிராமத்தில் படித்தவர்கள் எல்லாம் அமெரிக்காவில் வேலை பார்க்கும் காலம் இது. நம் கல்லூரிகளில் படிப்பைச் சொல்லிக்கொடுக்கும் அளவிற்கு வாழ்க்கைக் கலையை சொல்லிக் கொடுப்பதில்லை. மேல் நாடுகளுக்குச் செல்லும் நம் இளைஞர்களும் இளைஞிகளும் இந்த நடைமுறைகளில் சங்கடப்படுகிறார்கள். ஒவ்வொரு பகுதியாகப் பார்ப்போம்.


முதலில் பேசுவது எப்படி என்று பார்ப்போம். பேசுவது சந்தர்ப்பங்களைப் பொருத்து அமையும். ஒரு நேர்முகத்தேர்வுக்குப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அங்கு பத்துப் பதினைந்து பேர்கள் வந்திருக்கலாம். நீங்கள் அவர்களுடன் எப்படி உரையாடுகிறீர்கள் என்பது முக்கியமாக கவனிக்கப்படும். ஆகவே நீங்கள் எதிர்பாராத தருணங்களில் கூட உங்கள் பேச்சின் தரம் வகைப்படுத்தப்படுகிறது.


உலகில் ஏறக்குறைய எல்லா செயல்களும் பேச்சின் மூலமாகத்தான் நிறைவேறுகின்றன. ஆகவே அந்தக் கலையை முறையாகக் கற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் வாழ்க்கையில் முன்னேறலாம். எனக்குத்தெரிந்த சில குறிப்புகளைக் கொடுத்திருக்கிறேன். வளரும் இளைஞர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.


1. உங்கள் குரலின் தன்மை:


கருணாநிதியின் கரகரத்த குரலை எல்லோரும் கேட்டிருப்பீர்கள். அதுவே அவருக்கு அடையாளமாக மாறிப்போய்விட்டது. உங்கள் குரல் மற்றவர்களுக்கு எப்படி கேட்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. நம் குரல் நன்றாகத்தானே இருக்கிறது என்று நம்பிக்கொண்டிருப்போம். உங்கள் குரலை டேப் ரிகார்டரில் பதிவு செய்து திரும்ப போட்டுக் கேளுங்கள். அது உங்கள் குரலை சரியாகக் காட்டும்.


பேச்சின் ஏற்ற இறக்கங்கள், வேகம், பேச்சின் சத்த அளவு, இடைவெளிகள் இவைகளை கூர்ந்து கவனியுங்கள். உங்களுக்கே பல குறைகள் தெரியும். உங்கள் நலனில் உண்மையான அக்கறையுள்ள நண்பர் யாருக்காவது அதைப் போட்டுக் காட்டுங்கள். அவருடைய கருத்துக்களையும் கேட்டுக்கொள்ளுங்கள். எந்தெந்த வகைகளில் உங்கள் பேச்சை முன்னேற்ற முடியும் என்று யோசித்து அந்த மாற்றங்களை யடைமுறைப்படுத்துங்கள். சில நாட்களில் உங்கள் பேச்சின் தொனி மாறுவதை உணருவீர்கள்.


2. வார்த்தைகள்:


உங்கள் பேச்சில் நீங்கள் உபயோகிக்கும் வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை. அடக்கம், பணிவு, அன்பு இவைகளுடன் கூடிய வார்த்தைகள் இனிமையானவை. கேட்பவர்களை மயக்கக் கூடியவை. உங்களுடைய மதிப்பைக் கூட்டக்கூடியவை. பேசுமுன் யோசனையும் சிந்தனைத் தெளிவும் இருந்தால் பொருத்தமான வார்த்தைகளை உபயோகிக்க முடியும். ஆகவே இதில் கவனம் தேவை.


3. உணர்ச்சி வசப்படுதல்.


ஒருவரைக் கெடுக்க வேறு யாரும் வரவேண்டியதில்லை. அவரவர்களின் வார்த்தைகளே அவர்களை குழி தோண்டி அதில் தள்ளி விடும். பேச்சின் இடையில் நீங்கள் உணர்ச்சி வசப்பட்டால் உங்கள் அறிவு மங்கி வார்த்தைகள் தாறுமாறாக வெளிப்படும். இதுதான் மிகவும் கொடுமையான நிகழ்வு. இத்த் தவிர்க்க முறையான பயிற்சி தேவை.


4. தெளிவு:


உங்கள் பேச்சு தெளிவாக இருக்கவேண்டும். தேவையில்லாத வார்த்தைகளை அடிக்கடி உபயோகிக்கக் கூடாது. தொலுக்கட்சியில் ஒளிபரப்பப் படும் நேர் காணல் நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கேட்டால் இந்த மாதிரி தவறுகளை காணலாம். உதாரணமாக "வந்து" என்கிற வார்த்தை. இதை தைவையில்லாமல் பேச்சின் நடுவே அடிக்கடி உபயோகிப்பார்கள். இத் பேச்சின் சுவையைக் கெடுக்கும்.


5. இடம், பொருள், ஏவல் தெரிதல்:


உங்கள் பேச்சு சந்தர்ப்பத்திற்கு பொருத்தமாக இருக்கவேண்டும். துக்கவீட்டில் நகைச்சுவைக்கும் கல்யாண வீட்டில் ஒப்பாரிக்கும் இடமில்லையல்லவா? இதை நன்கு புரிந்து கொள்ளவேண்டும். யாரையாவது பாராட்ட வேண்டுமென்றால் நாலு பேர் இருக்கும்போது பாராட்டவும். கண்டிக்கவேண்டுமென்றால் தனிமையில் கண்டிக்கவும்.


இன்னும் பல உத்திகள் இருக்கும். எனக்கு நினைவுக்கு வரவில்லை. ஒன்றை மட்டும் மறக்காதீர்கள். உங்களை உங்கள் பேச்சை வைத்துத்தான் எடை போடுவார்கள். எல்லோரும் பேச்சில் திறமைகளை வளர்த்துக்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.