மருந்துகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருந்துகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 மார்ச், 2013

மருந்து சாப்பிடுவது எப்படி?


பெயரில்லா4 மார்ச், 2013 4:36 PM
எனக்கு ஒரு சந்தேகம். ஆங்கில மருத்துவம் படித்த டாக்டர்களால் ஏற்பட்டது. மருந்து எழுதிகொடுக்கும்போது சா.பி. / சா. மு. என்று சரியாக சொல்ல மாட்டேன் என்கிறார்கள். கேள்வி கேட்க பயந்து கொண்டு மருந்து கடையில் கேட்க வேண்டியதாய் இருக்கிறது. அது எந்த அளவு சரியாக இருக்கும் என்று ஒரு பயத்திலேயே சாப்பிட வேண்டியிருக்கிறது. சா.பி. மாத்திரையை ஆகாரம் சாப்பிடுமுன் சாப்பிட்டாலோ சா. மு. மாத்திரையை ஆகாரம் சாப்பிட்ட பின் சாப்பிட்டாலோ பலன் இல்லை என்கிறார்கள்.

ஆராய்ச்சி டாக்டரான நீங்கள் இதற்கு ஒரு வழி சொல்ல முடியுமா? மருந்தி பெயரை வைத்தோ அல்லது அதன் மூலக்கூறுகளை வைத்தோ சா.பி. / சா. மு என்று கண்டு பிடிக்க முடியுமா? அதை உங்களுக்கே உரித்தான கொங்கு தமிழில் நகைச்சுவையுடன் சொன்னால் நாங்கள் உங்களை PhD டாக்டர் என்ற நிலையில் இருந்து MBBSடாக்டர் என்ற நிலைக்கு உயர்த்தலாம் என்ற எண்ணத்தில் உள்ளோம். எனவே நடுவில் கொஞ்சம் நேரம் கிடைக்கும்போது இதைப்பற்றியும் பதியுங்களேன் ஐயா

மருந்து சாப்பிடுவது என்ன பெரிய இந்திரஜால வித்தையா? மருந்தை வாயில் ஊற்றினால் வயிற்றுக்குப்போகிறது, இதற்கு ஒரு பதிவா? என்று கேட்பவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு.

பெயரில்லாவின் பின்னூட்டத்தில் மருந்து சாப்பிடுவது சாப்பாட்டிற்கு முன்பா அல்லது பின்பா என்பதைப்பற்றி ஒரு விளக்கம் கேட்டிருக்கிறார்.

இதைப் பற்றிய ஒரு நகைச்சுவைக் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஒருவர் தன்னுடைய வெய்ட்டைக் குறைக்க டாக்டரிடம் போனார். அவர் இனிமேல் நீங்கள் இரவில் ஒரு டம்ளர் பாலும் ஒரு பழமும் மட்டும் சாப்பிடுங்கள் என்றார். இவர், டாக்டர், இதை சாப்பாட்டுக்கு முந்தி சாப்பிடவா அல்லது சாப்பாட்டிற்குப் பிந்தியா? என்று கேட்டார். டாக்டர் என்ன சொல்ல முடியும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.

நோயாளிகள் டாக்டரைப் பார்க்கப்போகும்போது அவர்களுக்குப் பதட்டம், டாக்டருக்கோ நேரமின்மை. இதனால் பல சமயங்களில் மருந்து சாப்பிடும் முறை பற்றிய விவரங்களைப் பற்றி தெளிவாக டாக்டரிடம் கேட்க முடிவதில்லை. மருந்துக் கடைகளில் உள்ள பார்மசிஸ்ட்டுக்கு இந்த விவரங்கள் ஓரளவு தெரியும். ஆனால் மருந்துக் கடைகளில் பார்மசிஸ்ட் பெயருக்குத்தான் உண்டே தவிர, அவர் பெரும்பாலும் இருக்கமாட்டார்.

இந்த நிலையில் என்ன செய்வது? நோயாளியும் ஓரளவு விழிப்புடன் இருந்தால்தான் இன்றைய உலகில் வாழமுடியும்.

ஏன் சில மருந்துகளை சாப்பாட்டுக்கு முன்பு சாப்பிடவேண்டும், ஏன் சில மருத்துகளை சாப்பாட்டுடனோ அல்லது சாப்பிட்ட பிறகோ சாப்பிடவேண்டும்?

உங்களுக்கு வயிற்று வலி என்று வைத்துக்கொள்வோம். இது வயிற்றில் அதிக அமிலம் சுரப்பதினால் வருவது. சாப்பட்டவுடன் வலி அதிகமாகிறது. அப்போது இந்த அமிலத்தைச் சமன்படுத்தக் கொடுக்கும் மருந்தை சாப்பாட்டிற்கு அரை மணி முன்பு சாப்பிடவேண்டும். அப்போதுதான் வயிற்றிலுள்ள அதிகப்படியான அமிலம் சமன்படுத்தப்பட்டு நீங்கள் சாப்பிடும்போது வலி இருக்காது. இந்த மருந்தை சாப்பிட்டபின் சாப்பிட்டால் பலன் இருக்காது.

அதேபோல் சர்க்கரைக்காக சாப்பிடும் மாத்திரைகளை சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னால் சாப்பிடவேண்டும். அப்போதுதான் அந்த மருந்து இன்சலினை அதிகமாக சுரக்கவைத்து நீங்கள் சாப்பிட்டவுடன் உண்டாகும் சர்க்கரையை சமன்படுத்த உதவும். ஆனால் இன்சுலின் ஊசி போடுபவர்கள் சாப்பிட்ட பின்புதான் போடவேண்டும். இன்சுலின் உடனடியாக வேலை செய்யக்கூடியது. இரத்தத்தில் அதிகப்படியாக உள்ள சர்க்கரையை சமன்படுத்த இது உதவும். இரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரை இல்லாத சமயத்தில் இந்த ஊசியைப் போட்டால் சரக்கரையின் அளவு ரத்தத்தில் குறைந்து மயக்கம் வரக்கூடும்.

சில மருந்துகள் வயிற்றில் எரிச்சலை உண்டு பண்ணும். பெரும்பாலான வலி நிவாரணிகள் இந்த வகையைச் சேர்ந்தவை. அவைகளை வயிற்றில் உணவு இருக்கும்போதுதான் சாப்பிடவேண்டும். அப்போதுதான் வயிற்றெரிச்சல் உண்டாகாது. ( அடுத்தவன் நன்றாக வாழ்வதைப் பார்த்து வரும் வயிற்றெரிச்சல் வேறு. அது எப்போதும் இருந்து கொண்டேதான்  இருக்கும்.அதை மாற்ற மருந்து இல்லை)

பொதுவாக மருந்துகளை சாப்பிட்டபிறகு எடுத்துக்கொண்டால் அவை இரத்த்துடன் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு அதிகம். பெரும்பாலான மருந்துகள் இந்த வகையைச் சேர்ந்தவைதான். ஆகவே டாக்டர்கள் உணவிற்கு முன்னால் சாப்பிடுங்கள் என்று ஸ்பெஷலாகச் சொல்லாத வரை அவைகளை சாப்பாட்டிற்குப் பின் சாப்பிடுவதுதான் நல்லது.

நீண்ட நாள் தொடர்ந்து சாப்பிடவேண்டிய மருந்துகளை ஒரு முறைக்கு இருமுறை டாக்டரிட்ம் எப்போது, எப்படி சாப்பிடவேண்டும் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். சில மாத்திரைகளை வாயில் நன்றாக மென்று சாப்பிடவேண்டும். அவைகளை அப்படியே விழுங்கினால் பலன் இருக்காது.

அனைத்து மருந்துகளுடனும் மருந்துக் கம்பெனியின் அச்சடித்த குறிப்பு ஒன்று இருக்கும். அதில் மருந்தின் தன்மை, எப்படி சாப்பிடவேண்டும், பக்க விளைவுகள் ஏதாகிலும் உண்டா என்கிற விபரங்கள் இருக்கும். அந்தக் குறிப்பை நன்கு படித்து அதன்படி மருந்தைச் சாப்பிடவேண்டும்.

சில ஒவ்வாமை நோய்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் லேசானது முதல் நல்ல தூக்கம் வரை உண்டு பண்ணக்கூடியவை. அவைகளைப் பொதுவாக இரவில்தான் சாப்பிடச் சொல்லுவார்கள். இருந்தாலும் மறுநாள் பகலிலும் அதன் தாக்கம் இருக்கும். அப்படிப்பட்ட மருந்துகளைச் சாப்பிடுபவர்கள் வாகனம் ஓட்டவோ, கனரக இயந்தரங்களில் வேலை செய்வதோ கூடாது. விபத்துகள் நேரிடலாம்.

எந்த மருந்தானாலும் டாக்டர்கள் குறிப்பிடும் நாட்களுக்குச் சாப்பிடவேண்டும். நோயின் அறிகுறிகள் ஓரளவு மறைந்தவுடனேயே மருந்தை நிறுத்தி விடுவதுதான் நம்மில் பெரும்பாலானோரின் பழக்கம். மருந்து வாங்கும்போதே, டாக்டர் பத்து நாளைக்கு எழுதியிருந்தால், இரண்டு நாளைக்குக் கொடுங்கள் என்று வாங்குபவர்கள் அநேகம்.

டாக்டர் சொல்லும் நாட்களுக்கு மருந்து சாப்பிடவேண்டும். அப்போதுதான் அந்த நோய் முழுவதுமாகக் குணமாகும். ஆனால் சில டாக்டர்கள் தாங்களாகவே மருந்துக்கடை வைத்துக்கொண்டு அதன் முலம் காசு பார்ப்பதும் உண்டு. அத்தகைய டாக்டர்களிடம் போகாமல் இருப்பது உத்தமம்.

மருந்து சாப்படும்போது, இந்த மருந்து நம் நோயைக் குணப்படுத்தும் என்ற நம்புக்கையுடன் சாப்பிடவேண்டும். என்னமோ டாக்டர் கொடுத்திருக்கார், அல்லது மகன் வாங்கிக் கொடுத்திருக்கான், என்று கடனுக்காகச் சிப்பிட்டால் வியாதி குணமாக காலம் செல்லும்.

மருந்துகள் சாப்பிடவேண்டிய சூழ்நிலை வராமல் காத்துக்கொள்வது உத்தமம்.