மாற்றங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாற்றங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 மார்ச், 2013

7. தூதரகம் திறப்பு.


மறுநாள் எழுந்தவுடன் மயனைக் கூப்பிட்டு, நீங்கள் செக்குவுடன் உடனே பூலோகத்திற்குப் போய் நமக்கு கொடுத்துள்ள நிலத்தை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். அந்த இடத்தில் "தேவேந்திர நகர்" என்ற நகரத்தை சகல வசதிகளுடன் நிர்மாணியுங்கள். ஒரு பத்தாயிரம் பேர் தங்குவதற்கான வசதிகளும், ஹெலிகாப்டர் தளம் மற்றும் தூதரக ஆபீஸ்களும், நல்ல பாதுகாப்பான மதில் சுவர்களும், மற்றும் அந்த ஊருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்யுங்கள்.

அப்படியே நமது தேவ்லோக் பேங்கிற்கும் அந்த தூதரகத்துக்குள்ளேயே ஒரு கிளை கட்டுங்கள். அதில் எல்லாவித சௌகரியங்களும் இருக்கட்டும்.

நாளை காலை பத்து மணிக்கு இந்த தூதரக திறப்பு விழா நடக்கட்டும். இந்திரனும் இந்திய ஜனாதிபதியும் இந்த தூதரகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைப்பார்கள். இங்கிருந்து நாம் எல்லோரும் செல்வோம். இந்தியாவில் இருந்து முக்கிய பிரமுகர்கள் ஆயிரம் பேரை அழைக்கலாம்.

இந்தியாவில் இந்த மாதிரி விழாக்களை நடத்த "Event Manager" கள் இருப்பார்கள். அவர்களில் ஒரு நல்ல நிறுவனத்திடம் இந்த வேலையை ஒப்படைத்து விடுங்கள். விழா மிகப் பிரமாதமாக இருக்கவேண்டும் என்று சொல்லிவிடுங்கள். விழா முடிந்தவுடன் கலை நிகழ்ச்சிகளும் விருந்தும் ஆடம்பரமாக இருக்கவேண்டும் என்றும் சொல்லி விடுங்கள். நீங்கள் போகலாம் என்று சொன்னேன். அவர்களும் புறப்பட்டுப் போனார்கள்.

இந்திரன் இந்த விழாவிற்காக பூலோகத்திற்குப் போய்வர புருனே சுல்தான் வைத்திருக்குற மாதிரி ஒரு பிளேன் உடனடியாக வாங்குங்கள், அதன் விடியோ இதோ இருக்கிறது. அதனுள் 100 பேர் அமரும்படியான ஒரு நடன அரங்கம் அவசியம் இருக்கட்டும். இந்திரனால் நாட்டியம் பார்க்காமல் கொஞ்சநேரம் இருந்தால் அவனுக்கு பைத்தியம் பிடித்துவிடும். அதனால் ஜாக்கிரதை.



தூதரகத் திறப்பு விழா அழைப்பிதழ் இந்தியாவின் அனைத்து பாரலிமென்ட் உறுப்பினர்கள். வெளிநாட்டுத் தூதுவர்கள், அனைத்து மாநில முதல்வர்கள்,
அனைத்து தமிழ் பதிவர்கள், ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் அனைத்து இந்திய மக்களுக்கும், மத்திய அரசு அனைத்து செயலர்களுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும், அனைத்து மத்திய மாநில மந்திரிகளுக்கும் உடனடியாக கொடுத்து விடுங்கள்.

அப்படியே அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு, மறுநாள் காலை திறப்பு விழாவிற்கு அனைத்துப் பிரமுகர்களும் வந்து விட்டார்கள். தூதரக வாசலில் அனைவருக்கும் சோமபானம் கொடுத்து வரவேற்கப்பட்டார்கள். வாசலில் கட்டப்பட்டிருந்த ரிப்பனை இந்திய ஜனாதிபதி அவர்கள் விலை உயர்ந்த இரத்தினக்கற்கள் பதித்த தங்கக் கத்தரிக்கோலால் வெட்டி தூதரகத்தைத் திறந்து வைத்தார். ஜனாதிபதியின் மெய்க்காப்பாளர் அந்த கத்தரிக்கோலை பவ்யமாக வாங்கி தன் பைக்குள் வைத்துக்கொண்டார். இதை பிற்பாடு ஜனாதிபதி வாங்கிக் கொள்வார். இது பல காலமாக அனுஷ்டிக்கப்படும் சம்பிரதாயம்.

பிறகு எல்லோரும் விழாப் பந்தலுக்குள் நுழைந்தார்கள். முக்கிய பிரமுகர்கள் அனைவரையும் தனியாக அழைத்துக்கொண்டு போய் அலங்கார மேடையில் அமரச் செய்தார்கள். கடவுள் வாழ்த்துக்குப் பின்னர், நான் வரவேற்புரை வழங்கினேன். அப்போது நான் சொன்னதாவது.

இந்த நாள் இதுவரை பூலோகத்திலேயே யாரும் பார்த்திராத பொன்னாள். இந்த தேவலோகத் தூதரகத்தை புண்ணிய பூமியான இந்தியாவில்தான் முதலில் அமைக்கவேண்டும் என்று மும்மூர்த்திகளும் விரும்பினார்கள். அதனால்தான் இங்கு அமைத்தோம்.

இன்று முதல் இந்தப் புண்ணிய பூமியில் பல அதிசயங்கள் நடைபெறப் போகின்றன. உலகிலேயே பெரிய வல்லரசாக இந்தியா பரிணமிக்கப் போகிறது. அதன் பலனை இந்திய மக்கள் அனைவரும் அனுபவிப்பார்கள்.

தேனும் பாலும் இனி இந்திய ஆறுகளில் ஓடும். வறுமை என்பதே எங்கும் இருக்காது. ஒரு பெண் சகல ஆபரணாதிகளுடன் டில்லி தெருவில் இரவு பனிரெண்டு மணிக்கு தனியாக, பயமில்லாமல் நடமாடலாம். இந்தியா சொர்க்கபூமியாக மாறப்போகிறது. மகாத்மா காந்தி சொன்ன ராம  ராஜ்யம் வரப்போகிறது. எல்லோரும் அதற்குத் தயாராகுங்கள்.

இந்த விழாவிற்கு வந்துள்ள அனவரையும் இரு கரம் கூப்பி வருக, வருக என்று வரவேற்கிறேன்.

கைதட்டல் வானைப் பிளந்தது. பிறகு ஜனாதிபதி இரண்டு மணிநேரம் பேசினார். வேத காலத்தில் இந்தியாவிற்கும் தேவலோகத்திற்கும் இருந்த தொடர்பிலிருந்து ஆரம்பித்து, இருபத்தியோராம் ஆண்டுக்கு வருவதற்குள் எல்லோருக்கும் பசி வந்து விட்டது. நன்றி நவிலலை சுருக்கமாக கூறிவிட்டு கூட்டத்தை அவசரமாக முடித்து விட்டு எல்லோரும் சாப்பிடப் போனோம்.

சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுத்த பின் தேவலோக நடன மங்கையர் நால்வரின் நடனம் தொடங்கியது. எல்லோரும் வாயில் ஈ போவது கூடத் தெரியாமல் அந்த நடனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


நடனம் முடிந்து இரவு உணவு அருந்தியபின் எல்லோரும் அவரவர் ஊருக்குப் புறப்பட்டுப் போனார்கள். இதற்கு முன்பாகவே நான் இந்திய பிரதம மந்திரியையும் நிதி அமைச்சரையும் பார்த்து மறுநாள் காலை பத்து மணிக்கு ஒரு முக்கிய மீட்டிங்க் வைத்திருக்கிறேன். நீங்கள் இருவரும் அவசியம் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவர்களும் வருவதாக ஒப்புக்கொண்டார்கள்.

தேவேந்திரன் ஊருக்குப் போய்விட்டான். நாங்கள் மூவரும் (நான், பொது, செக்கு) உறங்கச்சென்றோம்.