முட்டாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முட்டாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 மே, 2011

முட்டாள்கள் பலவிதம் – அதில் நான் ஒருவிதம்


முட்டாள்களில் பலவிதங்களைப் பார்த்திருப்பீர்கள். 
 
சிலரிடம் ஒரு காரியத்தைச் செய்யச் சொல்லி எல்லா விவரங்களையும் சொல்லியிருப்பீர்கள். அந்தக்காரியத்தை எந்தெந்த விதங்களில் சொதப்புவார்கள் என்று யூகித்து அதற்கெல்லாம் முன்னேற்பாடாக ஜாக்கிரதையெல்லாம் சொல்லியிருப்பீர்கள். அந்த ஆள் நம் ஜாதியாயிருக்கும் (முட்டாள் ஜாதி) பட்சத்தில் நீங்கள் முழுவதும் எதிர்பாராத ஒரு சொதப்பல் செய்து அந்தக் காரியத்தை உருப்படியில்லாமல் செய்வார். 

ஒரு ஜோக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒருவர் மற்றொருவருடன் சொல்லுகிறார். நான் எந்தத் தப்பையும் ஒரு தடவைக்கு மேல் செய்ய மாட்டேன் என்றார். அப்போது அங்கு வந்த அவர் நணபர் சொன்னார். அவர் சொல்வது சரிதான். ஆனால் அவர் செய்யாத தப்பே கிடையாது என்றார்.

நான் இந்த ஜாதியைச் சேர்ந்தவன், அதாவது எந்த தப்பையும் ஒரு தடவைக்கு மேல் செய்ய மாட்டேன். ஏறக்குறைய எல்லாத் தப்பையும் செய்து முடித்துவிட்டேன் என்ற திருப்தியில் இருந்தவனுக்கு ஒரு மரண அடி. என்ன நடந்தது என்று கேளுங்கள்.

என் தங்கை மகனுக்கு கல்யாணம் முடிந்து ஒரு குழந்தை. அவன் சம்சாரம் அவனுடன் ஏதோ கோபித்துக் கொண்டு அவளுடைய அம்மா வீட்டிற்குப் போய்விட்டாள். இதைக் கேள்விப்பட்டவுடன் நானும் எதார்த்தமாக நாலு நாள் போனால் அவள் அம்மா வீட்டிலிருந்து யாராவது கொண்டு வந்து விடுவார்கள் என்று எண்ணி, ஒரு டூர் போய்விட்டேன். ஒரு மாதம் கழித்து திரும்பி வந்தவுடன் கேட்டால், அந்தப் பெண் இன்னும் அம்மா வீட்டில்தான் இருக்கிறது என்று சொன்னார்கள்.

குடும்பத்தில் பெரியவன் நான். எப்படி சும்மா இருக்க முடியும். அங்கேயும் இங்கேயும் இரண்டு மூன்று தடவை நடந்து (காரில்தான்) என்னென்னவோ சமாதானங்கள் செய்து, அந்தப் பெண்ணைக் கூட்டி வந்து புருஷன் வீட்டில் விட்டு விட்டு, எனக்குத்தெரிந்த புத்திமதிகள் எல்லாம் எல்லோருக்கும் சொல்லி விட்டு வந்தேன். 

நான் செய்த இந்தக் காரியத்தில் ஏதாவது தவறு இருக்கிறதா, சொல்லுங்கள். சில நாட்கள் கழித்து ஒரு இடத்தில் அந்தப் பெண்ணின் அம்மாவைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விட்டார்கள். என் தங்கை பையன் என்னிடம் சொல்லாமல் தனிக்குடித்தனம் போய் விட்டான். அவன் மாமனார் வீட்டில் இரண்டு நல்ல காரியங்கள் நடந்தன. எனக்கு அழைப்பு இல்லை. எங்கு பார்த்தாலும் என் தங்கை பையன், அவன் பெண்டாட்டி, அவன் மாமனார் வீட்டு ஆட்கள் என்னைக் கண்டு கொள்வதில்லை.

நான் செய்த காரியம் பிரிந்திருந்த புருஷன் மனைவியைச் சேர்த்து வைத்ததுதான். இது தவறா? ஆனால் நடக்கும் காரியங்களைக் கவனிக்கும் போது நான் செய்தது முட்டாள்தனம் என்றுதான் தோன்றுகிறது.