வாழ்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 நவம்பர், 2016

வாழ்வியல்

ஒரு பதிவில் திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் போட்ட பின்னூட்டம்.  இந்தப் பின்னூட்டத்தில் வாழ்வின் ஆதாரங்களைத் தெளிவாக விளக்கியிருக்கிறார். இதில் கூறப்பட்ட கருத்துகளை ஆழமாக சிந்தித்து பயன் பெற வேண்டுகிறேன்.

குறிப்பாக  பிழைத்தார்-செத்தார் இந்த இரண்டு சொற்களை அவர் பிரயோகித்த விதம் மிகவும் பாராட்டுக்குரியது. 


வை.கோபாலகிருஷ்ணன் said...

அவரவர் வசதிப்படி, செளகர்யப்படி, மத நம்பிக்கைப்படி, மன சாட்சிப்படி யோசிக்க வைக்கும் ஒரு சிறு நிகழ்வு பற்றி கதைஎன்ற பெயரில் இங்கு சொல்லப்பட்டுள்ளது. 

இருப்பினும் பின்னூட்டங்கள் என்ற பெயரில் பலரும் நன்றாகவே இங்கு கதைவிட்டுள்ளார்கள். 

எந்த ஒரு ஜீவனும் எதற்கும் பிறரை நம்பி இழுத்துக்கொண்டு நாறக்கூடிய அவல நிலை ஏற்படாமல், மணக்க மணக்கச் சட்டுப்புட்டுன்னு போகும் பாக்யம் செய்திருக்க வேண்டும். இதை சொல்வது மிகவும் எளிது. ஆனால் அதுபோல எல்லோருக்கும் பாக்யம் கிடைத்து நடப்பது மிகவும் கஷ்டம். 

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக, அவர்களின் சிறுவயதில் செய்யும் தியாகங்களும் கடமைகளும் முற்றிலும் வேறு. 

அதை பிரதிபலனாக பிள்ளைகளிடமிருந்து தங்களின் முதுமையில் எதிர்பார்ப்பது போன்றதொரு முட்டாள்தனம் இருக்கவே முடியாது. 

இன்றைய சூழ்நிலையில் யாருக்கும் எதற்கும் நேரமோ, பொறுமையோ, சகிப்புத்தன்மையோ, சேவை மனப்பான்மையோ, உண்மையான பாசமோ இருப்பது இல்லை. எல்லாமே வெளி வேஷம் மட்டுமே என்ற கசப்பான உண்மையை இங்கு ஆணித்தரமாக வலியிறுத்திச் சொல்லிக்கொள்கிறேன். 

அழுகை உள்பட அனைத்துமே போலியானவைகள் மட்டுமே. ஆங்காங்கே அழவும் ஒப்பாரி வைக்கவும் கூட ஆள் போட்டு விடுகிறார்கள் என்பதையும் நம்மால் இன்று மிகச்சுலபமாகப் பார்க்க முடிகிறது.

பலரிடம் இன்று செலவழிக்கப் பணம் மட்டும் உண்டு. எதற்கெடுத்தாலும் காண்ட்ராக்ட் போல ஆளை நியமித்து கவனித்துக்கொள்ளப் பார்க்கிறார்கள். பொருத்தமான தகுந்த ஆட்களும் அவ்வளவு எளிதில் கிடைப்பது இல்லை. அப்படியே ஆள் கிடைத்தாலும், பணத்துக்காகவும் கடன் எழவுக்காகவும் வேலை செய்பவராகவே பெரும்பாலும் அமைகிறார்கள். அவர்களிடம் உண்மையான அன்பையோ, அரவணைப்பையோ நாம் எதிர்பார்க்க முடியாது. ரத்த சம்பந்தமுள்ள நமக்கே இல்லாத அன்பும் அக்கறையும் கூலிக்கு மாரடிக்க வந்திருப்போரிடம் மட்டும் எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்? 

எனவே எதற்கும் பிறர் உதவியை எதிர்பார்த்து முடியாமல் 
படுத்துவிடும் நிலைக்கு வந்த ஒருவர் ................... 

அடுத்த மூன்று நிமிஷத்திலோ அல்லது 

அடுத்த மூன்று மணி நேரத்திற்குள்ளோ அல்லது 

அடுத்த மூன்று நாட்களுக்குள்ளோ அல்லது 

அடுத்த மூன்று வாரங்களுக்குள்ளோ அல்லது கடைசி பக்ஷமாக 

அடுத்த மூன்று மாதங்களுக்குள்ளோ 

டிக்கட் வாங்கிக்கொண்டு புறப்படும் பாக்யம் வாய்த்தவராக இருந்தால் மட்டுமே ..... 

பி--ழை--த்--தா--ர். :)

இல்லாதுபோனால் 

செ--த்--தா--ர். :)

oooooooooooooooooooooooooo

இன்றைய உலக யதார்த்தங்களை யோசிக்க வைக்கும் நிகழ்வினை எழுதியவருக்கும், வெளியிட்டுள்ளவரும் நன்றிகள்.
October 19, 2016 at 4:42 AM

ஒரிஜினல் பதிவில் பிரசுரமான சில பின்னூட்டங்களையும் வாசகர்கள் சௌகரியத்திற்காக இங்கே கொடுத்திருக்கிறேன்.  அந்தத் தளத்தின் ஆசிரியருக்கு நன்றி.

காமாட்சி said...
வயோதிகம் ஒரு சாபம்தான். நாலுங்கிடக்க நடுவில் போய்விடுகிரார்களே அவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள். வயோதிகத்திலும் வியாதிகள் இல்லாது இருப்பவர்களும் கொடுத்து வைத்தவர்கள். அனாயாஸேன மரணம் கிடைத்தால் அதைவிட பாக்கியம் கிடையாது. மற்றபடி நேரம்,காலம், பொழுது எல்லாம் பார்த்து எதுவும் வருவதில்லை. நீங்கள் எழுதியிருப்பதுபோல ஒவ்வொரு முதியவர்களும் நினைப்பார்கள். கிடைத்தால் பரலோக ஸாம்ராஜ்யம்தான். எல்லாம் எழுதுவதற்கு நன்றாக உள்ளது. அவரவர்கள் வினைப்பயன் அனுபவித்தே தீரவேண்டும். பெற்ற பிள்ளைகளோ, மற்றவர்களோ கருணையுடன் நடந்து கொள்ளுங்கள் முதியவர்களிடம் என்று வேண்டுமானால் கேட்டுக் கொள்ளலாம். நீயாரையா இதெல்லாம் சொல்வதற்கு என்று பதில் வரும். இது தொடர்கதைதானே தவிர பலவும் நல்லது,கெட்டது என எல்லா வகைகளையும் உள்ளடக்கியது.கொஞ்சம் வயதானவர்களை சிந்திக்க வைத்துவிட்ட உண்மைப் பதிவு இது. அன்புடன்
ஜீவி said...
'மனைவியின் ஒத்துழைப்பு இருந்தால்தான், ஒரு பிள்ளை அவனது கடமையைச் செவ்வையாய்ச் செய்யமுடியும்.' என்று காமாட்சி அம்மா சொன்னதை எடுத்துச் சொன்னீர்கள், ஸ்ரீராம்!

இது யதார்த்தமான உண்மை. சாமவேதத்தில் இந்த யதார்த்த உண்மைக்கும் ஒரு முடிச்சுப் போட்டு வைத்திருக்கிறது. மனைவி இருந்தால் தான் சாமவேதம் சார்ந்தோருக்கு தன் முன்னோர்களூக்கு
சிரார்த்தம் செய்யும் யோக்கியதையே இருக்கிறது என்று அந்த வேத்ததில் வரையறுத்து வைத்திருக்கிறது.
மருமகளுக்கு அவ்வளவு உரிமை. தாம்பாளத்தில் தணல் கொண்டு வந்து ஹோமத்தையே ஆரம்பித்து வைப்பவள் அவள் தான்.
Geetha Sambasivam said...
இந்தப் பதிவுக்கு என் கருத்தை இடுவதற்கு முன் ரொம்ப யோசித்தேன். மனம் புண்படும்படி எழுதிடுவோமோ என்ற பயம் தான். ஆனால் இப்போத் தான் ஶ்ரீராம் இங்கே வந்திருக்கும் கருத்துகளைப் படிக்கச் சொன்னார். பலரும் நான் நினைத்தாற்போலவே எழுதி இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே அறுபதைக் கடந்தவர்கள் என்பதும் புரிகிறது. இப்போது என் கருத்தைத் தாராளமாய்ச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
Geetha Sambasivam said...
தவறாக நினைக்க வேண்டாம். ஒரு கட்டத்தில் பெற்றோரைப் பார்த்துக் கொள்ள ஆள் நியமிப்பது தவறில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. அந்த மகனோ, மகளோ குடும்பத்தில் அதிகம் வேலை செய்பவர்களாகவோ அல்லது அவர்களும் வயதானவர்களாகவோ அல்லது நோயாளிகளாகவோ இருக்கலாம் இல்லையா? ஒன்றுமே இல்லை என்றாலும் வேலை நிமித்தம், பணி நிமித்தம் வெளியே செல்ல நேரிடும். எப்போதும் வயதான தாய், தந்தையைக் கவனிப்பது என்பது இயலாது என்பதே யதார்த்தம்! குறைந்த பட்சமாக சாமான்கள் வாங்கவானும் வெளியே செல்ல வேண்டி இருக்கும். ஆகவே வீட்டோடு இருக்கும்படி நம்பிக்கையான ஆள் கிடைத்தால் போடுவதில் தவறில்லை என்பது என் கருத்து. வீட்டில் இருப்பவர்கள் அவங்க வீட்டு வேலையை முடிச்சுட்டு வந்து தான் வயதான பெற்றோரின் கழிவுகளை அகற்ற முடியும். அதே ஆளைப் போட்டு விட்டால் உடனடியாகச் சுத்தம் செய்வார்கள். பிரச்னைகளும் வராது இல்லையா! //

இது தான் நான் ஶ்ரீராமுக்கு இந்தக் கதை குறித்து அனுப்பிய கருத்து! நீங்களே சொல்லுங்கனு ஶ்ரீராம் சொன்னதாலே இங்கே கொடுத்திருக்கேன். ஆனால் இதைச் சொல்லும் முன்னர் ரொம்பவே தயங்கினேன். :)
Geetha Sambasivam said...
அநாயாசமான மரணமே அனைவரும் எதிர்பார்ப்பது! ஆனால் அதுக்கும் அதிர்ஷ்டம் பண்ணி இருக்கணும். மற்றபடி சிராத்தம் செய்வதோ, தானங்கள் செய்வதோ அவரவர் மனோநிலையையும் குடும்ப நிலையையும் பொறுத்தது. இந்தக் கதையில் வரும் பிள்ளை/பெண் தாயிடம் பற்று இருந்ததால் தான் தாயின் நிலை அலங்கோலமாக இருக்க வேண்டாம் என்று ஆளைப் போட்டாவது கவனிக்கச் சொல்லி இருக்கார். என்ன ஒரு குறைனால் அம்மாவிடம் அருகே அமர்ந்து தினம் பத்து நிமிஷமாவது செலவிட்டிருக்கலாம். அதற்கு அவருக்கு நேரமில்லை போலும்! அல்லது மனசு வரலையோ! எதுவோ தெரியலை. ஆனாலும் பெற்ற தாய் கடைசியில் இப்படிச் சொல்லிட்டுச் செத்திருக்கவும் வேண்டாம். நம் பிள்ளைகளுக்கு நாம் செய்துவிட்டு அதைத் தியாகம் என்று சொல்வது சரியில்லை. பிள்ளை நன்றாக இருக்கணும்னு தானே பாடுபட்டுப் பிள்ளையை வளர்க்கிறோம். நாம் மட்டுமா? எல்லாப் பெற்றோரும் செய்வது தான் இது! பிள்ளை ஒண்ணும் தெருவிலே விட்டுடலையே! தன்னோடு வைத்துக் கொண்டு ஆளைப் போட்டுத் தானே பார்த்துக்கொள்ளச் செய்தார். அதுக்கும் பணம் செலவு செய்யணும் இல்லையா? அந்த மனசு பிள்ளைக்கு இருந்திருக்கு இல்லையா?
Geetha Sambasivam said...
ஆகவே தானங்கள் செய்வதோ, சிராத்தத்தை விமரிசையாகச் செய்வதோ அவரவர் வசதிப்படி. ஒண்ணுமே கொடுக்க முடியாதவங்க சிராத்தம் செய்யாமலே இருக்காங்களா என்ன? அதுக்குத் தகுந்தாற்போல் நம் சாஸ்திர சம்பிரதாயங்கள் வளைந்து கொடுக்கிறதே தவிர கட்டாயப்படுத்த வில்லை. செய்யாமலே இருப்பவர்களை வற்புறுத்திச் செய்ய வைப்பதும் இல்லை. அவரவர் மன விருப்பம், பண வசதி பொறுத்தே தானங்கள் கொடுப்பது எல்லாம் நடைபெறும். ஒரு சில இடங்களில் புரோகிதர்கள் கேட்பதாகச் சொல்கின்றனர். ஆனால் எனக்குத் தெரிந்து புரோகிதர்கள் வசதி இல்லாதவங்களுக்குக் குறைவான செலவிலேயே முடித்துத் தருவதையும் பார்த்திருக்கேன்.
Geetha Sambasivam said...
//மனைவி இருந்தால் தான் சாமவேதம் சார்ந்தோருக்கு தன் முன்னோர்களூக்கு
சிரார்த்தம் செய்யும் யோக்கியதையே இருக்கிறது என்று அந்த வேத்ததில் வரையறுத்து வைத்திருக்கிறது.
மருமகளுக்கு அவ்வளவு உரிமை. தாம்பாளத்தில் தணல் கொண்டு வந்து ஹோமத்தையே ஆரம்பித்து வைப்பவள் அவள் தான்.//

எல்லா வேதங்களிலும் ஔபாசனம் சிராத்தம் செய்யும் குடும்பத் தலைவரின் மனைவியால் தான் ஆரம்பித்து வைக்கப்படும். அதைத் தொடர்ந்து சிராத்தம் ஆரம்பிக்கும் முன்னும் கணவன் மனைவியின் அனுமதி வாங்கித் தான் செய்ய ஆரம்பிப்பார். இது பொதுவானது. ஆனால் சாமவேதத்தில் மனைவி உயிருடன் இல்லை என்றாலோ, உடல்நலமின்றிப் படுத்த படுக்கையாக இருந்தாலோ, வீட்டுக்கு விலக்காக இருந்தாலோ, வெளிஊர் சென்றிருந்தாலோ கணவனுக்கு ஹோமம் வளர்த்து சிராத்தம் செய்யும் அருகதை கிடையாது. ஹோமம் இல்லாமல் வெறும் சிராத்தம் மட்டுமே நடக்கும். அதே போல் இரு பிராமணர்கள் பிதுர்க்களாகவும், ஒரு மஹாவிஷ்ணுவும் உண்டு. சமையலும் சிராத்த சமையல் தான் செய்யணும். ஆனால் ஹோமம் மட்டும் இருக்காது. இது நான் இல்லாத சமயங்களில் என் கணவர் செய்திருக்கார். என் கடைசி மைத்துனர் அவர் மனைவிக்கும், தந்தைக்கும் செய்து வரும் சிராத்தத்தில் ஹோமம் இல்லாமலேயே செய்து வருகிறார். இரணிய சிராத்தம் எனப்படும் சிராத்தத்தில் தான் யார் செய்தாலும் எந்த வேதக்காரர்களாக இருந்தாலும் ஹோமம் இல்லை. சிராத்த மந்திரங்களும் அதற்குத் தனியாக உண்டு.
Geetha Sambasivam said...
சாமவேதத்தில் மனைவி இல்லைனா கணவன் சிராத்தமே செய்யக் கூடாது என்றெல்லாம் சொல்லபப்டவில்லை! சிராத்தம் செய்! ஆனால் மனைவி இல்லாமல் ஹோமம் வளர்க்காதே! என்பது தான் சொல்லப்பட்டிருக்கிறது.
ஞா. கலையரசி said...
எத்தனை நாளுக்குத்தான் இப்படி இழுத்துக்கொண்டு இருக்கப்போகுதோ

தெரியல? வேலைக்குப் போக முடியல, நிறைய செலவு, எப்பதான் முடியுமோ தெரியல”. இப்படிப்பட்ட வார்த்தைகளை அம்மா காதுபட மகன் பேசுவது தான் தவறு. முதுமையில் படுக்கையில் விழுந்தால் நமக்குமே இதே கதிதான். திரு கோபு சார் சொல்லியிருப்பது போல பெற்றோர் நன்றிக்கடனைப் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் தான். பல வீடுகளில் இது தான் இன்றைய நிலைமை. யதார்த்தமான கதைக்குப் பாராட்டுக்கள் வெங்கட்!
RAVIJI RAVI said...
அம்மா செய்தவற்றிற்கு பிரதி பலன் எவராலும் செய்துவிடமுடியுமா? ஒரு விழுக்காடாவது...? சுத்தம் செய்யவாவது ஒரு ஆளை ஏற்பாடு செய்தவரையில்...சரிதான். ஒருவரின் மறைவிற்குப்பிறகு இதை செய்திருக்கலாமே ...விட்டுவிட்டோமே என்ற எண்ணம் மேலிடுவதும் இயல்புதான். பெத்த மனம் பித்து...பிள்ளை மனம் கல்லு...ஒத்துக்கொள்ளத்தானே வேண்டும்! சற்றே உணர்ச்சிகரமான பதிவுதான். நன்றி!!!
Geetha Sambasivam said...
அதே போல் சாம வேதத்தில் மூத்த பிள்ளைக்கு மனைவி இல்லை என்றாலோ அல்லது மனைவியால் சிராத்தத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனாலோ அடுத்த பிள்ளையின் மனைவி இருந்தால் கூட ஹோமம் பண்ணி சிராத்தம் என்பது இல்லை. மூத்த பிள்ளையின் மனைவி இருந்தால் மட்டுமே மூத்த பிள்ளை செய்யும் சிராத்தத்தில் ஹோமம் உண்டு. தம்பி மனைவி இருந்தால் கூட ஹோமம் இல்லை. மூத்த பிள்ளை, மூத்த மருமகள் இருவருமே இல்லை என்றால் மட்டுமே அடுத்த பிள்ளை தன் மனைவியுடன் சேர்ந்து ஹோமம் வளர்த்துப் பெற்றோரின் சிராத்தம் செய்யலாம்.
ஜீவி said...
கீதாம்மா, வேதங்களில் கூட யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதைச் சொல்வதற்காக நான் அழுத்தமாக எடுத்துக்காட்டிய ஒரு விஷயத்தை ரொம்பவே dilute பண்ணி விட்டீர்கள்.
வெங்கட் நாகராஜ் said...
கதையல்ல நிஜம்.....

சில விஷயங்கள் நம்மைப் பாதிக்கும் விதமாகவே இருக்கின்றன. ஆள் வைத்து பார்த்துக் கொள்வதில் தவறில்லை - இருந்தாலும் பெற்ற குழந்தைகளும் கொஞ்சம் அனுசரணையாக இருக்கலாமே என்பதைச் சொல்லத்தான் இந்தப் பகிர்வு.

தங்களது கருத்துகளைச் சொன்ன அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி. எனது பகிர்வையும் இங்கே வெளியிட்ட “எங்கள் பிளாக்” ஆசிரியர் குழுவிற்கு மனம் நிறைந்த நன்றி.

அலுவலக வேலைகள், தமிழகப் பயணம் என சில நாட்களாக பதிவுலகம் பக்கம் வர இயலாத சூழல்..... கருத்துச் சொன்ன அனைவருக்கும் தனித்தனியாக பதில் சொல்ல முடியவில்லை. அனைவருக்கும் மீண்டும் நன்றி!
Thulasidharan V Thillaiakathu said...
ஹை நம்ம வெங்கட்ஜி! அவர்களின் கதை! அருமையான கதை. ஜிக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்.

துளசி, கீதா...

கீதா: பொதுவாக கருத்திடும் முன்னர் பிற பின்னூட்டங்களைப் பார்ப்பது இல்லை. கருத்திட கீழே அழுத்திக் கொண்டே வரும் போது சுப்புத்தாத்தாவின் கருத்தில் ஒரு வரி கண்ணில் படவும் உடனே வாசித்தேன்.அப்படியே நான் அடிக்கடிச் சொல்லும் கருத்து. நானும் எனது மகனுக்குச்சொல்லியிருப்பது அதுதான்..தாத்தாவின் அம்மா சொல்லியிருப்பது போல். அந்தத் தினம் என்றில்லாமல் எப்போதுமே...

அருமையான கருத்துடனான கதை. முடிவும் கண்ணில் கண்ணீஈர் வரவஹைத்துவிட்ட்து. எங்கள் ப்ளாகிற்கு மிக்க நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் said...
இந்தப்பதிவினில் நான் எழுதியுள்ள பின்னூட்டத்தைப் படித்து, மகிழ்ந்து, வியந்து, பாராட்டி ‘வாழ்வியல்’ என்ற தலைப்பினில் இன்று நம் பெரியவர் .. முனைவர் கந்தசாமி ஐயா அவர்கள் தனது ‘மன அலைகள்’ என்ற வலைத்தளத்தினில் தனிப்பதிவே வெளியிட்டுள்ளார்கள்.

இதோ அதற்கான இணைப்பு:

http://swamysmusings.blogspot.com/2016/11/blog-post.html

இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
Anonymous said...
//அவை என்னுடைய தியாகங்களுக்கு
ஈடாகுமா//

பெற்றோருடைய அன்பு, பாசம், தியாகம் என்பது அரித்தால் சொரிந்துகொள்வது போல. Basic instinct. அடுத்த வீட்டு குழந்தைக்கு செய்தால்கூட கொஞ்சம் ஒத்துக்கொள்ளலாம். ஆனால் அதுவும் Basic instinct தான். சுயநலத்துடன் குழந்தையை வளர்த்தால், குழந்தைகளும் வளர்ந்த பிறகு சுயநலத்துடன்தான் இருக்கும். முற்பகல் செய்யின்.