வெளிநாட்டுச் சுற்றுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெளிநாட்டுச் சுற்றுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 அக்டோபர், 2011

வெளிநாட்டின் நடைமுறைகள்



வெளிநாட்டில் இருக்கும்போது நமது பாஸ்போர்ட், ரிடர்ன் விமான டிக்கெட், பணம், ஆகிய இந்த மூன்றும் உயிர் போன்றவை. எக்காரணத்தைக்கொண்டும் இவைகளைத் தவற விடக்கூடாது. தவற விட்டால் மிகமிக கஷ்டப்பட வேண்டி வரும். அதிகக் கவனம் தேவை.

வெளிநாட்டில் போய் இறங்கினதுமே நமக்கு செலவு செய்ய அந்த ஊர்ப் பணம் தேவை. இந்திய ரூபாயை வெளிநாட்டில் யாரும் மதிக்க மாட்டார்கள். அமெரிக்க டாலருக்கும் பிரிட்டிஷ் பவுண்ட்டுக்கும்தான் உலக முழுவதும் மதிப்பு உண்டு. ஆகவே வெளிநாடு செல்பவர்கள் தங்கள் டூர் ஏஜென்ட் மூலமாக தங்கள் தேவைக்குண்டான டாலரை வாங்கிக்கொண்டு செல்லவேண்டும். இந்த டாலரை வெளிநாட்டில் இறங்கியதுமே, அங்கு ஏர்போர்ட்டில் இருக்கும் பணபரிமாற்ற ஏஜெண்டுகள் மூலமாக உள்நாட்டுப்பணமாக மாற்றிக் கொள்ளவேண்டும்.

மலேயாவின் நாணயம் “ரிங்கெட்” என்பதாகும். ஒரு ரிங்கெட் 16 ரூபாய்க்கு சமம். ஒரு அமெரிக்க டாலர் 50 ரூபாய்க்கு சமம். அந்தந்த நாடுகளில் அவர்கள் நாணயத்தை நாம் ரூபாயைச் செலவு செய்வது போல்தான் செய்வார்கள். உதாரணத்திற்கு நம் நாட்டில் ஒரு சாப்பாடு 25 ரூபாய் என்றால் அந்த ஊரில் 25 ரிங்கெட் இருக்கும். நாம் உடனே ஒரு சாப்பாட்டுக்கு 25 x 16 = 400 ரூபாயா என்று மலைத்துப் போகக்கூடாது. எல்லா நாடுகளிலும் ஏறக்குறைய இவ்வாறுதான் இருக்கும்.

அடுத்ததாக நாம் எடுத்துச்செல்லும் சாமான்கள். வெளிநாட்டில் எங்கும் போர்ட்டர்கள் கிடையாது. அவரவர்கள் லக்கேஜை அவரவர்களேதான் சுமக்க வேண்டும். ஏர்போர்ட்டுகளில் டிராலி இருந்தாலும் மற்ற இடங்களில் நம் லக்கேஜை நாம்தான் தூக்கவேண்டும். தவிர போகும் இடங்களில் ஏதாவது பொருட்கள் வாங்குவோம். அதில் எடை கூடும். இவைகளை மனதில் வைத்து புறப்படும்போதே அளவாகப் பொருட்களையும் துணிமணிகளையும் எடுத்துக்கொள்வது நலம். குறிப்பாக பழய உள்ளாடைகளை எடுத்துக்கொண்டால் அவைகளை ஆங்காங்கே கழித்து விட்டால் அவைகளின் எடை குறையும்.

ஓட்டல்களில் தங்கும்போது சில குறிப்புகளை கவனத்தில் கொள்ளவேண்டும். எங்கும் துணி துவைக்க அனுமதி இல்லை. படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் இவற்றில் கறைகள் ஏற்பட்டால் அவற்றிற்கு தனியாக சார்ஜ் செய்வார்கள். எல்லா ஓட்டல்களிலும் வெந்நீர் 24 மணி நேரமும் கிடைக்கும். ஆனால் ஒவ்வொரு ஓட்டலிலும் பைப்புகள் ஒவ்வொரு மாதிரி இருக்கும். விவரம் தெரியாமல் வெந்நீர்ப் பைப்பைத் திறந்துவிட்டு கீழே நின்றால் உங்கள் உடல் வெந்துபோகும் வாய்ப்பு உண்டு. ஆகவே பைப்புகள் எப்படி வேலை செய்கின்றன என்று பார்த்து விட்டு உபயோகிக்கவேண்டும். புரியாவிட்டால் ரூம்-பாயைக் கூப்பிட்டுத் தெரிந்து கொள்ளவும். இதில் கூச்சம் வேண்டியதில்லை.

மிக முக்கியமான குறிப்பு. எந்த ஒட்டலில் ரூம் போட்டாலும் ரூமுக்கு சாவி கொடுப்பார்கள். நாம் சாதாரண சாவிகளுக்கே பழகியவர்கள். இப்போது வெளிநாடுகளில் இந்த பூட்டு சாவி விஷயத்தில் மிக அதிக மாற்றங்கள் வந்துள்ளன. பூட்டுகள் கம்ப்யூட்டரால் இயக்கப்படுகின்றன. சாவிகள் நம் ஊர் பேங்க் கிரெடிட் கார்டு போல் இருக்கின்றன. அதை ரூம் கதவில் இருக்கும் ஒரு ஸ்லாட்டில் நுழைத்து எடுத்தால் கதவு திறந்து கொள்கிறது. ரூமுக்குள் போனவுடன் அதே கார்டை உள்ளே இருக்கும் ஒரு ஸ்லாட்டில் போட்டால் எல்லா மின்சாதனங்களும் வேலை செய்கின்றன.

ஒரு அதிமுக்கியமான ஜாக்கிரதைக் குறிப்பு. இந்த கம்ப்யூட்டர் சாவி அல்லது வேறு எந்த சாவியானாலும் கதவைப் பூட்டுவதற்கு அவை தேவையில்லை. எனவே வெளியில் செல்லும்போது சாவியை அறைக்குள் வைத்துவிட்டு அறையை சாத்திவிட்டால் அவ்வளவுதான். நீங்கள் அறைக்குள் மறுபடி செல்ல முடியாது. ரிசப்ஷனில் சொல்லி, அபராதம் கட்டி வேறு சாவி வாங்குவதற்குள் தாவு தீர்ந்து விடும்.

நம் தமிழ்நாட்டுப் பெண்மணிகளுக்கு கழுத்து நிறைய நகைகள் போடாவிட்டால் ஏதோ மூளியாக இருப்பதாக உணர்வார்கள். அவர்கள் வெளிநாட்டில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அவர்களைப் பார்த்தால் அந்த ஊர் பிக்பாக்கெட்காரர்களுக்கு அல்வாவைப் பார்த்த மாதிரி.


அடுத்து வெளிநாட்டு ஓட்டல்கள் அனைத்திலும் சாப்பாடு பஃபே முறைதான். எல்லாப் பண்டங்களும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அவரவர்களுக்குப் பிடித்தவைகளை, தேவையான அளவு எடுத்துக்கொண்டு போய் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடவேண்டும். இரண்டு மூன்று முறைகள் எடுத்துக்கொண்டாலும் தவறாகப் பார்க்கமாட்டார்கள். ஆனால் ஓசியாகக் கிடைக்கிறது என்று அளவுக்கு மீறி சாப்பிட்டுவிட்டு வயிற்றுத் தொந்திரவுக்கு ஆளாகக்கூடாது. பொதுவாக வெளிநாட்டில் உணவினால் வரும் வியாதிகள் இல்லை. ஆனாலும் நாம் வலியப் போய் தொந்திரவுகளை வரவழைத்துக் கொள்ளக்கூடாது. அது எல்லோருக்கும் தொந்திரவு தரும்.

உடல் தாங்கும் அளவிற்கே வேலை தரவேண்டும்.  கண்டபடி சாப்பிட்டுவிட்டு அனாவசியமாக அலைந்தால் உடல் களைப்புற்று உங்களுடன் ஒத்துழைக்க மறுத்துவிடும். ஆகவே உங்கள் உடலைக் களைப்புறச் செய்துவிடாதீர்கள்.

வெளிநாட்டு சுற்றுலா அதிக பொருட்செலவில் மேற்கொள்ளுகிறோம். சிறுசிறு தவறுகளினால் சுற்றுலாவின் இனிமையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.