செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

சூரியாஸ்தமனக்கூத்து - தொடர்ச்சி

“ஆஹா, சூரியன் மறைய ஆரம்பித்துவிட்டான் ................................................................ அனைவரும் இப்போதுதான் மூச்சை விட்டார்கள்.”

இப்படி எழுத எனக்கும் ரொம்ப ஆசைதான். பாஞ்சாலி சபதத்தில் பாரதியாரின் சூரியாஸ்தமனக்காட்சியின் வர்ணணை பத்தாம் வகுப்பில் படித்தது இன்னும் மறக்கவில்லை. ஆனால் நாங்கள் கொடுத்து வைத்திருக்கவில்லை.

சூரியாஸ்தமனத்திற்கு இன்னும் 15 நிமிடமே இருக்கும்போது மெள்ள மெள்ள மேகங்கள் சூரியனை மறைக்க ஆரம்பித்தன. சிறிது நேரத்திற்குள் சூரியன் முழுவதுமாக மறைந்துவிட்டது. அவ்வப்போது சூரியனின் கதிர்கள் மேகங்களின் இடைவெளியில் எட்டிப்பார்த்தன. பிறகு முற்றிலுமாக மறைந்து போனான். எல்லோருமாக இந்த பாழாய்ப்போன மேகங்களைத்திட்டி விட்டு ரூமுக்கு திரும்பினோம்.

வரும் வழியில் ஒரு ஓட்டலில் 37 ரூபாய் வீதம் ஆளுக்கு ஒரு மசால் தோசை சாப்பிட்டு விட்டு பக்கத்திலுள்ள ஆவின் பூத்தில் ஒரு டம்ளர் பால் குடித்தோம். அங்கு பார்த்தால் ஒரு தட்டி விலாஸ் ஓட்டலில் சுடச்சுட ஊத்தப்பமும் பரோட்டாவும் சுட்டுக்கொண்டிருந்தாரகள். சும்மா விலை கேட்போமென்று விலை கேட்டேன். நாலு ஊத்தப்பம் அல்லது நாலு பரோட்டாவின் விலை சட்னி, குருமாவுடன் 10 ரூபாய் என்று சொன்னார்கள். வட இந்திய டூரிஸ்ட்டுகள் வெளுத்துக்கட்டிக்கொண்டு இருந்தார்கள். அடடா, முன்னால் இதைப்பார்த்திருந்தால் பார்சல் வாங்கிக்கொண்டு ரூமில் போய் சாப்பிட்டிருக்கலாமே என்று நினைத்துக்கொண்டோம்.

ரூமில் நன்றாகத் தூங்கினோம். காலையில் எழுந்து குளித்துவிட்டு அங்குள்ள கேன்டீனில் சாப்பிடலாம் என்று முடிவு செய்து ரிசப்ஷனில் விலை விசாரித்தோம். ரிசப்ஷனிஸட் சொன்னார், “சார் காலை டிபன் கெஸட் ஹவுஸின் காம்ப்ளிமென்டரி ட்ரீட் சார், அதுவும் பஃபே சிஸடம் சார் ” என்றார். ஆஹா பழம் நழுவி பாலில் விழுந்தது போல் ஆயிற்று என்று சந்தோஷமாகப்போய் இரவு சரியாக சாப்பிடாததையும் சேர்த்து ஒரு வெட்டு வெட்டினோம்.



பிறகு விவேகானந்தர் பாறையையும் திருவள்ளுவர் சிலையையும் பார்க்கலாம், அதற்குள் (திருச்செந்தூரில் இளைத்த பர்ஸை சரி செய்வதற்காக) அருகில் இருந்த ஒரு ஏ.டி.எம்மில் பணம் எடுக்கலாம் என்று போனேன்.. கார்டைப்போட்டு பின் நெம்பரை அழுத்தினால் ‘இன்று நீங்கள் பணம் எடுத்துக்கொள்வதற்கான கோட்டா’ முடிந்து விட்டது’ என்று பதில் வந்தது. எனக்கு மயக்கம் வராத குறைதான். போச்சு, நம்ம பணம் ‘ஹோகயா’ தான் என்ற முடிவுக்கு வந்தேன். அப்போது காலை 81/2 மணி. பக்கத்திலுள்ள பேங்கில் விசாரிக்கலாம் என்றால் பேங்க் 10 மணிக்கு மேல்தான் திறப்பார்கள். சரி ஆனது ஆகட்டும், நம்ம புரொகிராமை முடிக்கலாம் என்று படகுத்துறைக்கு போனாம். எல்லோருக்கும் டிக்கட் வாங்கினேன். டிக்கட் விலை 20 ரூபாய் என்றார்கள். இரண்டு வருடத்திற்கு முன்பு போனபோது அதிக விலை கொடுத்த்தாக ஞாபகம். சரி, சர்க்காருக்கு கருணை பிறந்து டூரிஸ்டுகளுக்கு சலுகை காட்டுகறார்கள் போலும் என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்த்து, திருவள்ளுவர் சிலைக்கு படகு போவதில்லை என்று.



விவேகானந்தர் பாறைக்கு போய்விட்டு 91/2 மணிக்கெல்லாம் கரைக்கு திரும்பிவிட்டோம். வரும்போதே யோசித்தேன். இனி பார்க்கவேண்டியது சுசீந்திரம் கோவில் மட்டுமே. அதற்கு ஒரு முக்கால் மணி நேரம் ஆகும். பிறகு ஊருக்குப்போய் விடலாமே என்று தோன்றியது. மேலும் பர்ஸும் பிழைக்கும். ஆகவே கன்னியாகுமரியில் இரண்டு நாள் தங்கலாம் என்று போட்ட பிளானைக் கேன்சல் செய்து விட்டு ரூமைக்காலி செய்தோம்.

சரியாக 10 மணிக்கு புறப்பட்டு சுசீந்திரம் சென்று தரிசனம் செய்தோம். அங்கிருந்து 11 மணிக்கு புறப்பட்டோம். எங்கும் நிற்காமல் 2 மணிக்கு கோவில்பட்டி வந்து சேர்ந்தோம். நல்ல சாப்பாடு எங்கு கிடைக்கும் என்று விசாரித்ததில் ‘லக்ஷ்மி மெஸ்ஸில்’ சாப்பாடு நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். நிஜமாகவே அங்கு சாப்பாடு நன்றாகவே இருந்தது.
சாப்பிட்டுவிட்டு கோவில்பட்டியில் கடலை மிட்டாய் நன்றாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருந்தேன். எந்த கடையில் நன்றாக இருக்கும் என்று விசாரித்ததில் மார்க்கெட் ரோட்டில் கே.டி.ஆர். என்கிற கடையில் நன்றாக இருக்கும் என்றார்கள். அந்தக்கடையை தேடிக்கண்டு பிடித்து போனால் அந்தக்கடை பார்ப்பதற்கு ரொம்ப சாதாரணமாகத்தான் இருந்த்து. கடலை மிட்டாய் வேண்டும் என்று கேட்டதற்கு கடைக்காரர் ‘சார், ஆட்கள் எல்லாம் சாப்பிடப் போயிருக்கிறார்கள். அவர்கள் வந்து மிட்டாய் போட்டபிறகுதான் கிடைக்கும்’ என்றார். ஆஹா, திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாக்கடைக்காரருக்கு அண்ணன் போலிருக்கு என்று முடிவு செய்து, சரி இப்போதைக்கு கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு கொடுப்பினை இல்லை என்று நினைத்துக்கொண்டு நேராக கோவையை நோக்கி புறப்பட்டோம்.

டிரைவர் எங்கும் சாப்பிடவில்லை. ஒரே சீராக வண்டி ஓட்டினார். மாலை 8 மணிக்கு சுகமாக வீடு வந்து சேர்ந்தோம். மகள் சூடாக சாதம் செய்து வைத்திருந்தாள். சாப்பிட்டுவிட்டு செந்திலாண்டவனுக்கு நன்றி சொல்லிவிட்டுத்தூங்கினோம்.

திங்கள், 22 பிப்ரவரி, 2010

கன்னியாகுமரி... தொடர்ச்சி

(மூன்றாம் நாள்)
திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வந்து சேர்ந்து ரெஸ்ட் எடுத்தபின் மாலை 5 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி அம்மனைத்தரிசிக்க சென்றோம். கூட்டம் அதிகமாக இல்லை. ஒரு அரை மணி நேரத்தில் தரிசனம் முடிந்த்து. அடுத்த வேலைதான் இந்த டுரிலேயே முக்கியமான வேலை. அதாவது சூரியாஸ்தமனம் பார்ப்பது.
இந்தியா முழுவதுமிலிருந்து டூரிஸ்ட்டுகள் கன்னியாகுமரி வருவது இதற்காகத்தான். அன்று கன்னியாகுமரியிலிருந்த அத்தனை டூரிஸ்ட்டுகளும் அந்த பீச் ரோட்டில் மேற்கு நோக்கி போய்க்கொண்டிருந்தார்கள். நாங்களும்தான். நீல வானமும் கடலும் சேரும் அடிவானம் நன்கு தெரியும்வரை மேற்கே சென்றோம். அந்த இடத்தில் உயரமாகச்சென்று அஸ்தமனத்தைப் பார்ப்பதற்காக ஒரு டவர் கட்டிவைத்திருக்கிறார்கள். அதனுடைய உயரத்தைப் பார்த்தவுடன் அதன் மேல் ஏறும் ஆசையை மூட்டைகட்டி வைத்துவிட்டோம்.
ரோடு ஓரமாக சிமெண்ட்டு தளம் போட்டு வைத்திருக்கிறார்கள். அங்கே உட்கார்ந்து சூரியனை சௌகரியமாக பார்த்து ரசிக்கலாம். ஆனால் ஒரு அசௌகரியம். நமது மக்கள் எங்கும் அவர்களது காலைக்கடன்களை முடித்து வைத்திருக்கிறார்கள். உள்ளூர் ஜனங்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். மூன்று நாளில் முப்பது க்ஷேத்திரங்கள் என்று நம் மக்களை பஸ்களில் புறிமூட்டை போல் அடைத்துக்கொண்டு வரும் நம் டூரிஸ்ட் ஆபரேட்டர்கள் பண்ணும் சமூகசேவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

எப்படியோ ஒரு மாதிரி ஒரு இடத்தைக்கண்டுபிடித்து நின்றுகொண்டோம். சூரியன் மறைவதற்கு இன்னும் அரை மணி நேரம் இருந்த்து. நாங்களும் சூரியனைப்பார்ப்பதும் கண் ரொம்ப கூசினால் வேறு பக்கம் பார்ப்பதுமாக இருந்தோம்.


இந்தப்படம் கோவையில் என் வீட்டில் இருந்து எடுத்தது. பழைய படங்கள் கம்ப்யூட்டர் வைரஸ சூறாவளியில் அடித்துச்செல்லப்பட்டு விட்டன.

“ஆஹா, சூரியன் மறைய ஆரம்பித்துவிட்டான். எங்கும் செவ்வானம். இதோ சூரியன் கடலைத்தொட்டு விட்டான். தகதகவென்று கண்ணைக்கூச வைத்துக்கொண்டிருந்த சூரியன் இப்போது கண்ணுக்கு மிகவும் இதமாக செக்கச்செவப்பாக தெரிகிறான். கால்வாசி கடலுக்குள் முழுகிவிட்டான். இப்போது பாதி சூரியன் கடலுக்குள்ளும் பாசி வெளியேயுமாக காணக்கிடைக்காத அபூர்வக்காட்சி. முக்கால் சூரியன் கடலுக்குள். ஒரு கீற்றுதான் இப்போது தெரிகிறது. ஓஓஓ சூரியன் முழுவதுமாக கடலுக்குள் போய்விட்டான். மூச்சு விடாமல் பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் இப்போதுதான் மூச்சை விட்டார்கள்.”
தொடரும்.....

சனி, 20 பிப்ரவரி, 2010

கன்னியாகுமரியும் சூரியாஸ்தமனமும்.

(மூன்றாம் நாள்)
திருச்செந்தூரில் காலை 10 மணிக்கு புறப்பட்டு 111/2 மணிக்கு நெல்லையப்பர் கோவில் வந்து சேர்ந்தோம். நெல்லையப்பரையும் காந்திமதி அம்மனையும் தரிசித்து விட்டு வெளியில் வந்தோம்.

கோயமுத்தூரிலிருந்து புறப்படும்போதே எனது மகள் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா வாங்கிக்கொண்டு வருமாறு சொல்லியிருந்தாள். விசாரித்ததில் அந்த அல்வா கடை நெல்லையப்பர் கோவில் எதிரில் இருப்பதாக சொல்லியிருந்தார்கள். சரி, அந்த கடையைப்பார்க்கலாம் என்று விசாரித்து கடையைக்கண்டு பிடித்தோம். கடை மூடியிருந்த்து. அக்கம் பக்கம் விசாரித்த்தில் அந்த கடை காலையில் இரண்டு மணி நேரம் மாலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே திறப்பார்கள் என்றும் அந்த சமயங்களிலும் கூட்டமாக இருக்கும் என்றும் சொன்னார்கள். ஆஹா, இந்த அல்வா நமக்கு உதவாது என்று முடிவு செய்து அங்கிருந்து பஸ் ஸ்டேண்ட் வந்தோம். அங்கு இரண்டு மூன்று கடைகள் இருந்தன. அதில் கூட்டம் அதிகமாக இருக்கும் கடைக்குப்போய் (கூட்டம் அதிகமாக இருக்கும் கடையில்தான் சரக்கு புதிதாகவும் நன்றாகவும் இருக்குமாம்-என் இல்லத்தரசியின் அபிப்பிராயம்) 5 கிலோ அல்வா வாங்கினோம். எதற்கு இவ்வளவு என்று கேட்காதீர்கள். ஊரில் எல்லோருக்கும் அல்வா (?) கொடுக்கவேண்டுமல்லவா!

இதற்குள் பகல் ஒரு மணி ஆகிவிட்டது. எங்கேயாவது சாப்பிடலாம் என்று முடிவு செய்தவுடன் எங்கள் டிரைவர் கன்னியாகுமரி போகும் பைபாஸ் ரோட்டில் ஆர்யபவன் இருக்கிறது, அங்கேயே சாப்பிடலாம் என்றார். சரி என்று அங்கே சென்று சாப்பிட்டோம். சாதம் வெள்ளை வெளேர் என்று கண்ணைப்பறித்த்து. சரி ஒரு வெட்டு வெட்டிவிட வேண்டியதுதான் என்று உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தோம். அப்போதுதான் தெரிந்தது அது சாதம் அல்ல, அரிசியை வெந்நீரில் ஊறவைத்து இலையில் போட்டிருக்கிறார்கள் என்று.

என்ன செய்யமுடியும். எப்படியோ சாப்பிட்டோம் என்று பெயர் பண்ணிவிட்டு கன்னியாகுமரி புறப்பட்டோம். சாதாரணமாக சாப்பிட்டு விட்டு காரில் போனால் தூக்கம் சுகமாக வரும். ஆனால் அன்று வயிறு நிரம்பாததால் யாருக்கும் தூக்கம் வரவில்லை.

மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி அடைந்தோம். தமிழ்நாடு சுற்றுலாக்கழகம் நடத்தும் ரெஸ்ட் ஹவுஸில் ரூம் ரிசர்வ் செய்திருந்தோம். ரூம் வாங்கி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு வெளியில் புறப்பட்டோம். கன்னியாகுமரி அம்மனையும் சூரிய அஸ்தமனத்தையும் பார்ப்பதாக பிளான்.
மிகுதி தொடரும்....

புதன், 17 பிப்ரவரி, 2010

திருச்செந்தூரில் ஆட்சி புரிவது யார்?

(மூன்றாம் நாள்)
[இந்த தலைப்பிலுள்ள விஷயத்திற்கு போவதற்கு முன்பாக இந்த பதிவை தொடர்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் பின்னூட்டம் இட்டவர்களுக்கும் இடப்போகிறவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை சொல்லிக்கொள்ளுகிறேன். இந்த பதிவுலகத்தில் நான் நுழைய காரணமாய் இருந்த என் நண்பர் டாக்டர் நாராயணனுக்கு என் தனியான நன்றி.
இந்த பதிவுலகத்தில் வேடிக்கை பார்க்கத்தான் நுழைந்தேன். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இதிலேயே மூழ்கிவிட்டேன். என்னுடைய பதிவுலக அனுபவம் ரொம்பவும் கம்மி. ஒரு வருடம் கூட முடியவில்லை. யாரையும் கேட்காமல் நானே கற்றுக்கொள்ளவேண்டும் என்ற கொள்கையைக்  (மண்டைக்கனம்!) கடைப்படிப்பதால் நான் கற்றுக்கொள்ள வேண்டியவை இன்னும் நிறைய இருக்கின்றன. ]
காலையில் எழுந்து ரூமிலேயே குளித்துவிட்டு கோயிலுக்கு சென்றோம். ஊரிலிருந்து புறப்படும்போதே என் மாப்பிள்ளை ஒரு அர்ச்சகரின் போன் நெம்பரைக்கொடுத்து திருச்செந்தூர் போன்வுடன் அவரை தொடர்பு கொண்டால் அவர் தரிசனத்திற்கு உதவி செய்வார் என்று சொல்லியிருந்தார்.
நாங்களும் முன்தினம் பகலிலிருந்தே அவரிடம் தொடர்பு கொண்டிருந்தோம். அவரும் திருச்செந்தூர் வந்தவுடன் பேசச்சொன்னார். அப்படியே நாங்கள் தொடர்பு கொண்டவுடன் மறுநாள் காலையில் 81/2 மணிக்கு கோவிலின் முன் மண்டபத்திற்கு வரச்சொன்னார். வந்தபிறகு அவரை செல்போனில் கூப்பிட்டால் வந்து எங்களை தரிசனத்திற்கு அழைத்துப்போவதாகவும் சொன்னார்.

அதன்படியே நாங்கள் சரியாக 81/2 மணிக்கு கோவில் முன் மண்டபத்தில ஆஜரானோம். அங்கே டஜன் கணக்கில் அர்ச்சகர்கள் எங்களை முற்றுகையிட்டு ஒவ்வொருவரும் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறினார்கள். நாங்கள் முன்பே ஏற்பாடு செய்து விட்டோம் என்று சொல்லி அந்த அர்ச்சகரின் பெயரைச்சொன்னவுடன் எல்லோரும் பயபக்தியுடன் ஒதுங்கி வழி விட்டார்கள். அப்போதுதான் எங்கள் அர்ச்சகரின் பிரதாபம் எங்களுக்குப்புரிந்தது. கூடவே என் பர்ஸ் கணிசமாக இளைக்கப்போகிறது என்கிற உண்மையும் புரிந்தது.
முன் மண்டபம்

கோவில் முழுவதும் ஜே ஜே என்று கூட்டம். எங்கு பார்த்தாலும் மனித தலைகளைத்தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை. இந்தக்கூட்டத்தில் நம் அர்ச்சகர் நமக்கு எப்படி தரிசனம் செய்து வைக்கப்போகிறார் என்கிற பயம் வேறு சேர்ந்துகொண்டது. அர்சகருக்கு போன் போட்டோம். அவர் மூலகர்ப்பக்ரகத்தினுள் இருந்திருக்கிறார். நான் பேசுவது அவருக்கு புரியவில்லை. அவர் சொல்வது எனக்குப் புரியவில்லை. அவரை நாங்கள் முன்பின் பார்த்ததில்லை. ஆனாலும் அந்த அர்ச்சகர் எங்களைப்போல் எத்தனை இளச்சவாயன்களைப் பார்த்திருப்பார். நான் போன் பண்ணின 5வது நிமிடத்தில் எங்கள் முன்னே வந்து நீங்கதானே கோயமுத்தூர் பார்ட்டி என்று எங்களைப் பிடித்துவிட்டார். (எங்கள் நெற்றியிலேயே எழுதி ஒட்டியிருக்கும் போல).
எங்களிடம் அவர் ‘என் பின்னாலேயே வாங்கோ, கூட்டம், நெரிசல் அதையெல்லாம் கண்டுக்கப்படாது. யார் என்ன சொன்னாலும் காதிலே வாங்கிக்காம ஒருத்தருக்கொருத்தர் இடைவெளி விடாம என் பின்னாலயே வாங்க இப்படி சொல்லிவிட்டு விருவிரு என்று முன்னால் போனார். நாங்களும் அவர் சொல்லிக்கொடுத்தபடியே ‘கருமமே கண்ணாகஎல்லோருடைய திட்டுகளைப்பொருட்படுத்தாது அவர் பின்னாலேயே போனாம். போனால் சிறிது நேரத்தில் கர்ப்பக்ரக வாசலில் நிற்கறோம். அர்ச்சகர் என் சம்பந்தி கையில் ஒரு அர்ச்சனைத்தட்டைக்கொடுத்துவிட்டு எல்லோர் பேர், நட்சத்திரம் சொல்லுங்கோங்கிறார். எங்களுக்கு இருந்த பதட்டத்தில் எப்படியே தட்டுத்தடுமாறி எல்லோருடைய பெயர் நட்சத்திரம் சொன்னோம்.
அர்ச்சகர் நாங்கள் சொல்லச்சொல்ல அந்தப்பெயர் நட்சத்திரங்களைத் திருப்பிச்சொன்னார். அதுதான் அர்ச்சனை. ஒரு குரூப் உட்கார்ந்து கொண்டிருந்ததை ‘போதும் எழுந்திருங்கோ என்று கிளப்பிவிட்டு அந்த இடத்தில் எங்களை உட்காரவைத்தார். நன்னா சாமிதரிசனம் செய்துக்கோங்க என்று மூன்று முறை சொல்லிவிட்டு எங்களை எழுப்பி விட்டார். ஆனாலும் சும்மா சொல்லப்படாது. அர்ச்சகருக்கு கோயிலுக்கு உள்ளே செம இன்பளூயென்ஸ். கர்ப்பக்ரகத்திலிருந்து வெளியே வந்தவுடன் ஆளுக்கு ஒரு மாலையைக்கொடுத்து (எங்கேயிருந்து எப்படி புடிச்சாருன்னு தெரியல) போட்டுக் கொள்ளச்சொன்னார். எனக்கு இந்த மாதிரி, கோயிலில் மாலை போட்டுக்கொள்வதில் விருப்பமில்லை. காரணம், சாமிக்கு போட்டமாலை புனிதமானது. அதை நாம் போட்டுக்கொண்டால் பிற்பாடு அதை என்ன செய்வது? அதை பத்திரமாக ஊருக்கு எடுத்துவந்து அது காய்ந்து சருகாகும் வரை காத்திருந்து பிற்பாடு அதை ஆறு குளம் கிணறு ஆகிய நீர்நிலைகளில் விடவேண்டும். இந்த சமாசாரமெல்லாம் நமக்கு கட்டுபடியாகாது. ஆகவே இப்படி மாலைகளைத் தவிர்த்து விடுவது என் வழக்கம்.
பிறகு நீங்கள் எல்லாம் வெளியில் சென்று நாம் புறப்பட்ட இடத்தில் இருங்கள். யான் பிரசாதம் எல்லாம் வாங்கிக்கொண்டு வருகிறேன் என்று எங்களை அனுப்பினார். நாங்கள் வெளியில் வந்த 15 நிமிஷத்தில் அவரும் வந்து பிரசாதம் எல்லாம் கொடுத்துவிட்டு எப்படி எல்லாம் திருப்திதானே என்றார். நாங்கள் என்ன சொல்லமுடியும், ஆஹா பரமதிருப்தி என்று சொல்லிவைத்தோம். அவருக்கு வேண்டியது அந்த வார்த்தைதானே.
சரி, நாங்கள் உத்திரவு வாங்கிக்கொள்கிறோம் என்று சொல்லிவிட்டு ஒரு தொகையைக்கொடுத்தோம். அவர் அதை வாங்கிக்கொண்டு,  இத பாருங்கோ, நீங்க 5 பேர், உள்ளே போக ஆளுக்கு 100 ரூபாய், அப்புறம் செக்யூரிட்டி. தேவஸ்தானம் ஆபீஸ் இதெல்லாம் இருக்கு என்றார். சரி ஸ்வாமி, இன்னும் எவ்வளவு வேண்டும் என்றேன். முதலில் கொடுத்ததைப்போல் இன்னொரு பங்கு வேண்டும் என்றார். இந்தாங்கோ என்று அவர் கேட்டதைக் கொடுத்துவிட்டு தலை தப்பியது தம்பிரான் (செந்திலாண்டவன்) புண்ணியம் என்று ரூமுக்கு திரும்பினோம். ஆகவே எல்லோருக்கும் சொல்லிக்கொள்ள வேண்டியது என்னவென்றால் திருச்செந்தூரில் செந்திலாண்டவன் ஆட்சி செய்கிறான் என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள். செந்திலாண்டவன் அர்ச்சகர்கள் கைப்பிள்ளை. (அப்பாடா, எப்படியோ தலைப்பிற்கு சம்பந்தம் கொடுத்தாகிவிட்டது)
அன்றே கன்னியாகுமரி சேரவேண்டியிருந்த்தால் ரூமைக்காலி செய்து விட்டு கன்னியாகுமரி புறப்பட்டோம்.
தொடரும்....  

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்



11 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சேர்ந்தோம். ஆண்டாள் சந்நிதியில் கூட்டமே இல்லை. திவ்யமான தரிசனம். ஆண்டாள் திருவுருவம் அலங்காரத்தில் அழகாக காட்சியளித்தாள். பொதுவாகவே தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் தவிர மற்ற பெருமாள் கோவில்களுக்கு மவுசு கொஞ்சம் கம்மிதான்.
பிறகு ஆண்டாள் அவதரித்த ஸ்தலத்திற்குப் போனோம். போன தடவை பார்த்ததற்கு இப்போது பரவாயில்லை. கொஞ்சம் சுத்தம் செய்திருக்கிறார்கள். ஆனாலும் ஆண்டாளுக்கு பெருமை சேர்க்கிறார்ப்போல் இல்லை.
பெருமாளைச்சேவித்து துளசி தீர்த்தமும் சடாரியும் வாங்கிவிட்டு புறப்படும்போது மணி 12½ ஆகிவிட்டது. பசியும் வந்துவிட்டது. பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இராஜபாளையத்தில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று புறப்பட்டோம்.

இராஜபாளையம் கொஞ்சம் பெரிய ஊர் என்றுதான் அங்கு சாப்பிடலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் ஊர்தான் நீளமாக இருந்ததே தவிர ஒரு ஹோட்டல் கூட கண்ணில் படவில்லை. எல்லா ஹோட்டல்களையும் மெயின் ரோட்டிலிருந்து மறைத்து வைத்திருக்கிறார்கள் போல் இருக்கிறது. கையில் எடுத்துக்கொண்டு போன முறுக்கு இத்தியாதிகளை மென்றுகொண்டே போனால் வழியில் எந்த ஹோட்டலும் கண்ணில் படவில்லை. ஏறக்குறைய இரண்டு மணி ஆகிவிட்டது. பசி வந்துவிட்டு போய்விட்டது.

இப்படியே போய்க்கொண்டிருக்கும்போது தென்காசி 5 கி.மீ. என்ற மைல்கல் தெரிந்தது. சரி, தென்காசியில்தான் நமக்கு மதிய உணவுக்கு ஆண்டாள் ஏற்பாடு செய்திருக்கிறாள் போல என்று மனதைத்தேற்றிக்கோண்டோம். அங்கு விசாரித்து ஒரு நல்ல ஹோட்டலைக்கண்டு பிடித்து சாப்பிட்டோம். நிஜமாகவே உணவு நன்றாக இருந்த்து. ஆண்டாளுக்கு மனசிலே நன்றி  சொல்லிவிட்டு குற்றாலம் சென்றோம்.

நாம் எல்லோருமே பல விஷயங்களைப்பற்றி, ஊர்களைப்பற்றி ஒரு விதமான கற்பனை பண்ணி வைத்திருப்போம். ஆனால் நேரில் பார்க்கும்போது நம் கற்பனைக்கும் நிஜத்திற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு இருக்கும். நான் குற்றாலத்திற்குப் போய் பல வருடங்கள் ஆகின்றன. என் மனதிற்குள் ஒரு ரம்யமான அருவியும் இயற்கைக்காட்சிகளும் நிறைந்த ஒரு கற்பனை இருந்தது. ஆனால் நான் நேரில் கண்டதோ முற்றிலும் மாறுபட்டு  இருந்தது. எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக், பழைய துணிகள், காலி ஷாம்பு பாக்கெட்டுகள் இறைந்து கிடந்தன.


நாங்கள் போன கோவில்களிலும் இப்படித்தான் இருந்தது. நம் மதத்தலைவர்கள் மத மாற்றம் பற்றி பிரமாதமாகப் பேசுவார்கள். ஒரு மதத்தலைவர் இன்னும் ஒரு படி மேலே போய் ‘ மதமாற்றம் ஒரு கிரிமினல் குற்றம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஆனால் மற்ற மதத்தினரின் வழிபாட்டு இடங்களையும் இந்து வழிபாட்டு இடங்களையும் ஒப்பிட்டு பார்த்து இந்து வழிபாட்டு இடங்களையும் சுத்தமாக வைப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? தவிர இந்து தலித் மக்களை இந்த மத குருக்கள் எப்படி நடத்துகிறார்கள் என்று பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.

குற்றாலம் வந்துவிட்டு குளிக்காமல் போகக்கூடாது என்று நான் மட்டும் அருவியில் குளித்தேன். என் கூட வந்த மற்றவர்கள் குளிக்கவில்லை. பிறகு அங்கிருந்து கிளம்பி நேராக நெல்லை வந்து சேர்ந்தோம். நெல்லையில் நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த ஓட்டலில் போய்க்கேட்டால் ரூம் இன்னும் காலியாகவில்லை, இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் என்று சொல்லிவிட்டார்கள். எங்களுக்கோ அலுப்பும் களைப்பும். எங்காவது உடம்பைக்கிடத்தவேண்டும் போல் இருந்தது. எப்படியும் அடுத்த நாள் திருச்செந்தூர் போவதாகத்தான் பிளான். இன்றே திருச்செந்தூர் போய்விட்டால் என்ன என்று முடிவு செய்து திருச்செந்தூர் சென்றோம். டாக்சி டிரைவர் ஒரு லாட்ஜுக்கு கூட்டிக்கொண்டு போனார் (சிவமுருகன் லாட்ஜ்). ரூம்கள் நன்றாக இருந்தன. வாடகையும் அதிகமில்லை. ஆகவே அங்கேயே ரூம் எடுத்து தங்கினோம். பக்கத்திலேயே மணிஅய்யர் ஓட்டல். டிபன் நன்றாகவே இருந்தது. சாப்பிட்டுவிட்டு படுத்தோம். பயண அலுப்பில் உடனே தூங்கி விட்டோம்.

 
பார்க்காமல் விட்ட தென்காசி விஸ்வநாதர் கோவில்


தொடரும்.....

புதன், 10 பிப்ரவரி, 2010

திருச்செந்தூர் பயணம்-2


தமிழ்நாடு சுற்றுலாத்துறை தங்கும் விடுதிகள்.
மதுரையில் நாங்கள் தமிழக சுற்றுலாத்துறை தங்கும் விடுதியில் தங்கினோம். இது ஒரு அரசுத்துறை நிறுவனம். அந்தத் துறைக்கே உரிய மெத்தனமும் அலட்சியமும் வெளிப்படையாகத் தெரிகிறது. வாடகையும் தனியார் விடுதிகளைக்காட்டிலும் அதிகமே. வேறு வழியில்லாமல் தங்க வேண்டியிருந்தது. இங்கே வாடகை வசூலில் முதியோர்களுக்கு ஒரு சலுகை கொடுக்கிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாடகையில் 20 விழுக்காடு சலுகை தருகிறார்கள். வாடகைக்கான வரிக்கு இந்த சலுகை கிடையாது.
நாள் இரண்டு: காலையில் 7 ½ மணிக்கே புறப்பட்டு மீனாட்சி  கோவிலுக்கு சென்றோம்.
பொற்றாமரைக்குளம் தண்ணீர் இல்லாமல் வற்றி இருந்தது. அதுவும் ஒரு விதத்தில் நல்லதாகத்தான் போனது. இல்லாவிட்டால் அந்த தண்ணீரில் கைகால் கழுவ வேண்டியதாக இருக்கும்.
காலை 7 மணிக்கே கூட்டம் அலைமோதிக்கொண்டு இருந்தது. வடநாட்டு யாத்திரீகர்கள் கூட்டம் கூட்டமாக க்யூவில் நின்று கொண்டிருந்தார்கள். உடனே ஸ்பெஷல் தரிசன டிக்கட் வாங்கி சென்றால் அதிலும் கூட்டம். எப்படியோ ஒரு முக்கால் மணி நேரத்தில் மீனாட்சியைத் தரிசித்து விட்டு கால் மணி நேரத்தில் ஈஸவரனைத் தரிசித்து விட்டு வெளியில் வந்தோம்.
ஈஸ்வரன் சந்நிதிக்கு எதிரே ஒரு தூணில் அனுமார் புடைப்பு சிற்பமாக இருக்கிறார். நானும் அதை ஏறக்குறைய 35 ஆண்டுகளாகப் பார்த்துக்கொண்டு வருகிறேன். அந்த சிற்பம் வளர்ந்து கொண்டு வருவதாகத் தோன்றுகிறது.
வெளியில் (மேற்கு சித்திரை வீதியில்) தெரு ஓரத்தில் 10 ரூபாய்க்கு 4 இட்லி என்று விற்றுக்கொண்டிருந்தார்கள். ஆளுக்கு 4 இட்லி வாங்கி சாப்பிட்டுவிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசிக்க புறப்பட்டோம்.
தொடரும்....





புதன், 27 ஜனவரி, 2010

திருச்செந்தூர் பயணம்-1

(முதல் நாள்)
முருகன் பேரில் எனக்கு ஒரு விசுவாசம் – பக்தி. ஆகவே என்னுடைய சம்பந்தி திருச்செந்தூர் போய்விட்டு அப்படியே கன்யாகுமரியும் போய்விட்டு வரலாமே என்றவுடன் சரியென்று சொல்லிவிட்டேன்.
ஒரு நல்ல நாளில் ஒரு வாடகைக்கார் பேசி 

நாங்கள் ஐந்து பேர்கள் புறப்பட்டோம். முதலில் மதுரை சென்று ஒரு நாள் தங்கினோம். அன்று மாலை அழகர் கோவில் சென்று கல்லழகரை தரிசித்து விட்டு
பின்பு பழமுதிர்சோலை சென்றோம். முன்பு பழமுதிர்சோலைக்கு நடந்துதான் போகவேண்டும். இப்போது அழகான தார்ச்சாலை போடப்பட்டு இருக்கிறது. நாங்கள் சென்றபோது சாயரட்சை நடந்துகொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து திரை விலக்கியபின் முருகனைத்தரிசித்தோம்.
அறைக்கு திரும்புவதற்குள் மீனாட்சியையும் தரிசிக்கலாம் என்ற திட்டம் இருட்டிவிட்டதால் கைவிடப்பட்டது.
தொடரும்...





வெள்ளி, 1 ஜனவரி, 2010

விவாதத்திற்கு உரிய விஷயங்கள்


விவாதத்திற்கு உரிய விஷயங்கள்
பட்டிமன்ற தலைப்புகளை பார்த்திருப்பீர்கள். எப்படி வேண்டுமானாலும் பேசக்கூடிய தலைப்புகளைத்தான் வைப்பார்கள்.
ராமன் வாலியை மறைந்திருந்து கொன்றது சரியா தவறா?
கற்பில் சிறந்தவள் மாதவியா கண்ணகியா?
இவை பழைய கால தலைப்புகள்-
தற்கால தலைப்புகள் சில-
சிறந்த சைட் டிஷ் ஊறுகாயா அல்லது சிப்ஸா?
வருங்கால சூபர் ஸ்டார் யார்-விஜய்யா சிம்புவா?
ஆனால்
மதங்களில் சிறந்தது இந்து மதமா இஸ்லாமிய மதமா?
என்று தலைப்பு வைத்தால் என்ன ஆகும்? வீணான கலவரம் உண்டாகும். விவாதம் செய்வது ஒரு தத்துவத்தைப்பற்றி ஒரு தெளிவு ஏற்படுவதற்காக. அதை விட்டு விட்டு ஒரு பிரச்சினைக்குரிய பொருள் பற்றி விவாதம் செய்தால் வீண் சண்டையும் மோசமான கருத்து வேறுபாடும்தான் மிஞ்சும்.
சமீபத்தில் ஒரு பதிவர் அந்த மாதிரியான ஒரு பொருளைப்பற்றிய விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். சிறிய நெருப்புப்பொறியாக ஆரம்பித்தது சக பதிவர்கள் விசிறி விட பெருந்தீயாக உருவெடுத்தது.
இதற்கு காரணம் விவாதத்திற்கு உள்ளான பொருள் மத நம்பிக்கை சார்ந்தது. நல்ல பெயருடன் வலம் வந்து கொண்டிருந்த அந்த பதிவரின் நிலை பரிதாபத்திற்கு ஆளாகியுள்ளது. நடுநிலையில் இருந்த பதிவர்கள் கூட வார்த்தைகளினால் காயப்பட்டு நிற்கிறார்கள்.
எது விவாதத்திற்கு உரிய சரியான பொருள் என்ற விவேகம் இல்லாமல் போனால் இந்த நிலை எவருக்கும் வரும்.
பெயர்கள் குறிப்பிடாததற்கு காரணம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச வேண்டாம் என்பதால்தான்.

புதன், 30 டிசம்பர், 2009

புது வருட தீர்மானங்கள்







மனிதன் எப்பொழுதும் தன்னை உயர்த்திக்கொள்ளவே அல்லது உயர்ந்தவனாகவோ காட்டிக்கொள்ளவே விரும்புகிறான். இதில் உள்ள முரண்நகை என்னவென்றால் அவன் மற்றவர்களுடைய அபிப்ராயங்களுக்கு அதிகம் மதிப்பு கொடுத்து தன்னைத்தாழ்த்திக் கொள்கிறான். ஒருவனுடைய மனச்சாட்சிதான் அவன் உயர்ந்தவனா இல்லையா என்று கூற முடியும். அடுத்தவர்கள் பல காரணங்களுக்காக ஒருவனைப் புகழ்ந்து ‘உன்னைப்போல் உலகில் உண்டா! ‘ என்று சொல்லி தங்கள் காரியத்தை சாதித்துக்கொண்டு போய்விடுவார்கள். இந்த புகழ்ச்சியில் ஒருவன் மயங்குகிறானென்றால் அவன் தன் நிலையிலிருந்து கீழே செல்கிறான் என்றுதான் கொள்ளவேண்டும்.
அதேபோல் ஒருவன் ஒரு நியாயமான கருத்தைச் சொன்னாலும் பலர் அதை வெவ்வேறு காரணங்களுக்காக எதிர்க்கலாம். ஆனால் தன்னுடைய கருத்து நேர்மையானதாக இருந்தால் அடுத்தவர்களின் எதிர்ப்பை பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால் பெரும்பாலான சமயங்களில் உணர்ச்சிகள் மேலோங்கி அறிவை மழுங்கச்செய்து விடுகின்றன. அச்சமயங்களில் தெறித்து விழும் வார்த்தைகள் மிகவும் காரமாக இருக்கின்றன. சொல்லாத வார்த்தைகளுக்கு நாம் எஜமான், சொல்லிவிட்ட வார்த்தைகள் நமக்கு எஜமான். பின்னால் எவ்வளவு வருந்தினாலும் கொட்டின வார்த்தைகளை அள்ள முடியாது. ஆனாலும் பல நேரங்களில் வார்த்தைகளை கொட்டிவிட்டு பின்பு வருந்துகிறோம்.
பதிவுலகில் இந்த சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கின்றன. நான் என்னுடைய பதிவிற்கு ஒருவரும் வரக்காணோமே என்று வருத்தப்பட்ட நாட்கள் உண்டு. ஆனால் இப்போதோ யாரும் நம் பதிவிற்கு வந்து பின்னூட்டம் போடாமலிருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துள்ளேன். நானும் யாருடைய பதிவிற்கும் சென்று பின்னூட்டம் போடப்போவதுமில்லை.
இதுவே 2010 ல் என் புது வருடத்தீர்மானம்.

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

மொழிக்கொலை!





Obsessive & Compulsive Disorder (OCD)  என்று ஒரு வகை வியாதி உண்டு. இந்த வியாதியின் வகைகளை லிஸ்ட் போட்டால் ஒரு நான்கைந்து பக்கமாவது வரும். அதில் ஒன்று-எதிலும் ஒரு ஒழுங்கை எதிர்பார்ப்பது. அவர்களுக்கு வீட்டில் அந்தந்த பொருள்கள் அந்தந்த இடங்களில் இருக்க வேண்டும். நாட்காட்டி, படங்கள் ஆகியவை சரியாக செங்குத்தாக தொங்கிக்கொண்டு இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் பயங்கர கோபம் வந்து காச்மூச்சென்று கத்தி வீட்டையே இரண்டு பண்ணிவிடுவார்கள்.
இந்த வியாதி எனக்கு இருக்கிறது. என்ன, இப்போது வயதாகிவிட்டதால் சத்தம் போடுவதில்லை. நேற்று ஒரு உறவினர் வீட்டுக்கு போயிருந்தபோது அங்கு ஒரு படம் சாய்வாக தொங்கிக்கொண்டு இருந்தது. அதை நேர்செய்த பிறகுதான் என் மனம் சமாதானமடைந்தது.
அதேபோல் புத்தகங்களைப் படிக்கும்போது எழுத்துப்பிழைகள் இருந்தால் அதைத்திருத்திய பிறகுதான் மேலே படிக்கமுடியும். இப்படியான நான் ஆசிரியராக வேலை பார்த்தால் எப்படியிருக்கும?
விவசாயக்கல்லூரியில் உதவி விரிவுரையாளனாக (வேதியல் பிரிவு) பணிபுரிந்தபோது மாணவர்களின் செய்முறை குறிப்பேடுகளை திருத்துவது ஒரு முக்கியப்பணியாகும். மாணவர்கள் எழுத்துப்பிழைகள் செய்வது சகஜம். ஆங்கிலத்தில் எழுத்துப்பிழைகளை பொருத்துக்கொள்வேன். ஆனால் வேதியல் கனிமங்களின் பெயர்களில் தவறு செய்தால் என்னால் பொறுக்கமுடியாது. குறிப்பாக பொட்டாசியம் என்ற கனிமத்தை பலர் Pottassium  என்று எழுதுவார்கள். Potassium என்பதுதான் சரியானது.  அப்படி எழுதியிருந்தால் அந்த மாணவனிடம் –தம்பி நாளைக்கு ஒரு 40 பக்க நோட்டு வாங்கி அது முழுவதும் Potassium என்று எழுதிக்கொண்டு வந்துவிடு- என்று கூறிவிடுவேன். அப்படி கொண்டுவராவிட்டால் அடுத்த வகுப்பில் அவனுக்கு அனுமதி இல்லை. கல்லூரியில் இந்த மாதிரி தண்டனை கொடுப்பதற்கு 60 களில் முடிந்தது. இன்று அதை நினைத்துக்கூட பார்க்க முடியாது.
நேற்று புதுகைத்தென்றல் என்ற பதிவில் Magnesioum என்று எழுதியிருந்தது. அதைப்பார்த்த்தும் எனக்கு என்னுடைய ஆசிரியப்பணி காலங்கள் நினைவுக்கு வந்த்து. அந்த பதிவு எழுதுவது ஒரு சகோதரி என்று நினைக்கிறேன. எப்போதாவது நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் ஒரு 40 பக்கநோட்டு நானே வாங்கிக்கொடுத்து இந்த Magnesioum என்பதை Magnesium என்று சரியாக அந்த நோட்டு முழுவதும் (நானும் கூடவே இருந்து) எழுதச்சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.
இந்த பதிவைப்படிக்கும் யாருக்காவது அந்த பெண்மணியைத் தெரியுமானால் என்னைச்சந்திப்பதை தவிர்க்கச்சொல்லுங்கள்.
தொடரும்....

வியாழன், 17 டிசம்பர், 2009

பதிவுலக நுணுக்கங்கள்



நான் ஒரு 38 வருடங்கள், ஒரு ஆராய்ச்சியாளனும் ஆசிரியனுமாக இருந்து ஓய்வு பெற்றவன். இவ்வளவு நீண்ட காலம் பணி புரிவது அரசுத்துறையில் மட்டுமே சாத்தியம் என்பது அரசுப்பணியில் இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றாகத்தெரியும். ஓய்வு பெற்ற பின்பும் பழகின ஆராய்ச்சி மனப்பான்மை இருந்து கொண்டே இருக்கிறது. அதனால்தான் இந்த பதிவுலகத்தின் பக்கம் வந்தேன்.
யாருக்குமே தெருச்சண்டையை ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்ப்பது பிடிக்கும். அப்படி ஒரு சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் ஒரு உண்மை புலப்பட்டது. சில பதிவுகள் மட்டும் எப்படி பிரபலமாகின்றன என்றால் அவைகளில் மக்கள் இடும் பின்னூட்டங்கள்தான் காரணம் என்ற அரிய உண்மையை கண்டுபிடித்தேன். அதிலும் பதிவைப்பற்றிய வெறும் பின்னூட்டங்கள் போதாது. பதிவின் கருத்தை விட்டு விட வேண்டும். பதிவூட்டங்களில் வரும் கருத்துக்களை எடுத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் ஏசிக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஆரிய-திராவிட வகுப்பு வாதம்தான் சீக்கிரம் சூடு பிடிக்க நல்ல விஷயம்.
ஒரு பள்ளிக்கூட கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். வாத்தியார் ஒரு மரத்தைப்பற்றி கட்டுரை எழுதச்சொன்னார். பையன் பால்காரரின் பையன். அவனுக்கு மாட்டைப்பற்றிதான் தெரியும். என்ன செய்தானென்றால் கட்டுரையை இப்படி ஆரம்பித்தான். ஒரு காட்டில் ஒரு மரம் இருந்தது. அந்த மரத்தில் ஒரு மாடு கட்டியிருந்த்து என்று ஆரம்பித்து இரண்டு பக்கம் மாட்டைப்பற்றியே எழுதி கட்டுரையை முடித்து விட்டான்.
இப்படி பதிவில் எழுதப்பட்டிருக்கும் விஷயமே வேறாக இருக்கும். ஆனாலும் எப்படியாவது நமது சமாசாரத்திற்கு (மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு) விவாதத்தை இழுத்து நம் கும்மியை போட்டுவிட வேண்டும். இப்படி ஒரு பதிவில், பதிவு 4 பக்கம், கும்மிகள் 80 பக்கம். இப்படி போடச்சொல்லி அந்த பதிவரே சொன்னாலும் சொல்லியிருக்கலாம். இப்படித்தான் பதிவுகளைப்பிரபலப்படுத்த வேண்டும்.
தொடரும்.....

செவ்வாய், 15 டிசம்பர், 2009

வணக்கம்






வணக்கம். உலகம் நன்றாகவே போயக்கொண்டு இருக்கிறது. என்ன, நீண்ட நாட்களாக பதிவு எழுதவில்லை என்ற குற்ற உணர்வு மேலோங்கி நிற்கிறது. இந்த குற்ற உணர்வுகள்தான் நம்முடைய பெரிய தடைக்கல். முதலில் சோம்பல் படாமல் பதிவு எழுதியிருக்க வேண்டும். சரி, அது முடியலையா, எப்போது முடிகிறதோ அப்போது பதிவு எழுதவேண்டியதுதான். அதை விட்டு விட்டு குற்ற உணர்வால் பதிவு எழுதுவதை மேலும் மேலும் ஒத்திப்போடுவதுதான் மிகவும் மோசமான மனப்போக்கு. அதிலிருந்து மீள முயற்சிக்கிறேன்.
பதிவு எழுதத்தான் சோம்பலாக இருந்தேனே தவிர பதிவலகத்தை விட்டு விலகிவிடவில்லை. தினமும் ஒரு மணி நேரமாவது பதிவுலகத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். இந்த அனுபவத்திலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், என்னைத்தவிர மற்ற பதிவர்கள் எல்லோரும் மிக மிக சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள் என்பதுதான். அவர்கள் எழுதும் அளவைப்பார்த்தால் இந்த பதிவு எழுதுவதைத்தவிர அவர்கள் வேறு எந்த வேலையையும் (தூங்குவது உட்பட) பார்க்க முடியாது என்பது என் கணிப்பு. அப்படியானால் அவர்கள் வாழ்க்கைக்கு வேண்டிய பொருளாதாரத்திற்கு என்ன செய்வார்கள் என்று பல இரவுகளில் தூக்கம் வராத சமயங்களில் யோசித்திருக்கிறேன்.  75 வயதில் என்ன தூக்கம் வரப்போகிறது !
பதிவுலகத்திலிருந்து பெரிய வருமானம் வருமென்று தோணவில்லை. ஆகவே அவர்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக ஏதோவொரு வேலை பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். அப்படி ஒரு வேலையில் இருந்து கொண்டு இவ்வளவு பதிவுகள் எழுதுகிறார்கள் என்றால் அவர்களுடைய அபரிமிதமான ஆர்வத்தை மனமாரப்பாராட்ட வேண்டும். பாராட்டுகிறேன்.
அடுத்த பதிவு சீக்கரத்தில்.....